பொங்கல் விழா


   # இந்திய விவசாயிகள் திருவிழா!








உள்ளே உறைந்துள்ள ஆனந்தம் பொங்கி எழ வாழும் முறையை நினைவூட்டவதே பொங்கல் விழாவின் தாத்பர்யம்.


அது மனதில் மகிழ்ச்சியாக, உடலில் சந்தோஷ உணர்ச்சியாக வெளிவர அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்.


உழவர்களே உடலுக்கான் உணவளிப்பவர்கள்.  அதனால் உழவுத்தொழிலுக்கும் , உழவர்களுக்குமான திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.


-------------------------- 


** அள்ளி கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விழா!


** சூரியன் பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையான பொங்கல் தேதியில் மட்டும் பெரும்பாலும் மாற்றம் இன்றி, அது சரியாக ஜனவரி 14 / 15 அன்றே வருகிறது.  இது, இந்தியாவில் அறுவடைத் திருநாளாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது.


**  பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.


**  போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.


** பொங்கல்: தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

**  மாட்டுப் பொங்கல்: உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. *'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக'* என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.


** காணும் பொங்கல்: இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும். சில ஆலயங்களில் திருவிழா கொண்டாட்டமும் ஏற்பாடு செய்வர்.


** இதன் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது. சங்க இலக்கியங்களில்  பொங்கல் பண்டிகை குறித்து பல குறிப்புகள் உள்ளதால், இது சங்ககாலம் முதல் கொண்டாடப்பட்டு வருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

தைஇத் திங்கள் தண்கயம் படியும் என்று நற்றிணை
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் என்று குறுந்தொகை
தைஇத் திங்கள் தண்கயம் போல் என்று புறநானூறு
தைஇத் திங்கள் தண்கயம் போல என்று ஐங்குறுநூறு
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ என்று கலித்தொகை


**  பரிபாடல் எனப்படும் சங்க இலக்கியத்தில், பொங்கல் குறித்த பல பாடல்கள், குறிப்புகள் உள்ளன. வேத காலத்திற்கும் முன்பிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது, அத்திருநாளின் தொன்மையை விளக்குவதோடு, தமிழர்களின் பண்பாடு எவ்வளவு ஆழமானது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களின் தனிப் பெரும் திருநாளான  பொங்கல், மதச் சார்பற்ற ஒரு பண்டிகை, தமிழ் இனத்தின் திருநாள்.


** தை மாதப் பிறப்பில் அறிவியலும் ஒளிந்துள்ளது. சூரியனுடைய முழுச் சுழற்சியும் தென் கோடியில் முடிந்து, திரும்பவும் வடக்குநோக்கி நகரும் காலத்தை உத்தராயணம் என்பார்கள். அந்த உத்தராயணத்தின் தொடக்கம்தான் தை மாதம்.



** தமிழகத்தின் பொங்கலை, வட மற்றும் மத்திய இந்தியாவில் 'மகர சங்ராந்தி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.


** சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது.


** இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள்.


** இந்த நாளில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு வலுக்கும் என்றும், குடும்பப் பொறுப்பை மகன் ஏற்று நடத்தும் நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது.


   # மற்ற மாநிலங்களில் ஓரளவுக்கு தமிழகத்தை போல் இருப்பினும்


** உபி, பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் : ஆகிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தம் பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிடைக்கும் என அருகிலுள்ள கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளித்து முடிப்பதே தலையாய கடமையாகக் கருதுகிறார்கள்.


** ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் : மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும்.


** மகராஷ்டிராவில் : இந்தப் பண்டிகையின் போது; சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்வார்கள். நகரவாசிகள் மாலையில் பூஜை செய்து வெல்லம், எள்ளு மற்றும் கரும்புத் துண்டுகளை ஒரு சிறிய பானையில் போட்டு பூஜை செய்வார்கள்.


** குஜராத் : இந்த மாநிலத்திலும் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடினாலும், பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டவர்களும் பட்டம் விடுவதற்காகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பங்கேற்பது உண்டு.


** பஞ்சாப்பில் : 'லொஹரி' என்றழைக்கிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து பிரிந்த இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா, பஞ்சாபிகள் அதிகம் வாழும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இதை லொஹரி என்றே கொண்டாடுகிறார்கள். ஆனால், இது பஞ்சாபிகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை முன்நிறுத்தும் பண்டிகையாக இருப்பதால், அங்குள்ள அனைத்து மதத்தவர்களும் இதைக் கொண்டாடுகிறார்கள்.


** அசாம் : இம் மாநிலத்தில் 'போஹாலி பிஹு' (உணவுப் பண்டிகை) என்ற பெயரில், அந்த நாளில் சொந்தபந்தங்கள் அனைவரும் அல்லது குடும்பத்துடன் ஒரே இடத்தில் கூடி இரவு விருந்தை உண்டு மகிழ்வார்கள். இரண்டாவது நாள், விடியலில் குளித்து மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள்.


** ஆந்திரா : இந்தப் பண்டிகையில் முக்கியமாக முன்னிறுத்தப்படுவது பலவர்ணக் கோலங்கள். இங்கும் மகர சங்ராந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலும் அது நம் பொங்கல் திருநாளைப் போல்தான்.


** கர்நாடகா : மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் கிடைக்கும் இது விவசாயிகள் இடையே மிகவும் பிரபலம். அன்றைய தினத்தில் விவசாயிகள் குளித்துவிட்டு அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக் கருவிகளையும் வைத்து பூஜை செய்வார்கள்.

** கேரளா : கேரளாவில் பொங்கல் தமிழக எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மற்ற இடங்களின் கோயில்களில் அன்றைய தினத்தில் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும்.


** இவற்றில் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கியக் காரணம்.


** இந்தப் பண்டிகையில் செய்யப்படும் இனிப்புகளின் பெயர் சிக்கி (வேர்க்கடலை மற்றும் வெல்லம்), கஜக் (வெள்ளை எள் மற்றும் வெல்லம்), தில்கா லட்டு (வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம்).


சமணத்தில் பொங்கல்…..





** நிகழ்கால ஜிநர்களில் முதல்வரான ஸ்ரீரிஷபநாதர் போக பூமி முடிந்து, கர்ம பூமியாக தொடங்கிய போது அனைவருக்கும் உழைப்பதை தெரிவிக்கும் முகமாக உழவுத் தொழிலை முதன்மையாக பயிற்றுவித்தார் என முன்னோர்கள் வாயிலாக அறிய முடிகிறது.


** அவ்வாறு நோக்கின் உழவர் திருநாளை அவரே அளித்திருக்கவும் வாய்ப்புண்டு!


** அவரால் முக்கியத்வம் பெற்ற உழவுத் தொழிலும், இயற்கை சக்திகளுக்கு நன்றி செலுத்துவதுமான தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, சமணர்களிடமும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவது றிந்ததே. 



சமண மதத்தில் பொங்கல் விழாவில் வணங்கப்படும் தெய்வங்கள் எவை?



பொங்கலன்று நல்ல நேரத்தில் தமிழர்கள் அனைவருமே பொங்கலிட்டு சூரியனுக்கும் பிற தெய்வங்களுக்கும் படைப்பது வழக்கம். அதே போன்று சமண மரபிலும் பொங்கல் விழா மற்ற தமிழர்களைப்போன்ற கலாச்சாரத்தில் தான் நடைபெற்று வருகிறது. வீடுகளை தூய்மை செய்து, வண்ணங்கள் பூசி, பொங்கல் பொங்கச் செய்து உழவுத்தொழிலைக் கற்றுதந்த  ஸ்ரீரிஷபநாத தீர்த்தங்கரருக்கு படைப்பது வழக்கம். மேலும் சூரியனுக்கும் படைக்கும் வழக்கமும் பல இடத்திலுண்டு. அதன் தாத்பர்யம் என்ன வெனில் சூரியனை ஜோதிஷ்க தேவனாக ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. அந்த சூரிய கிரஹத்திலுள்ள அக்கிருத்திம ஜினாலயத்தில் உறைந்துள்ள ஸ்ரீபத்மப்பிரபு தீர்த்தங்கருக்கான பூஜையாக சூரியனுக்கு படைக்கும் வழக்கம் கர்நாடகம், தமிழகத்தில் நீண்ட காலமாக உள்ளது.
(அதே வழிமுறையில் நவக்கிரஹ தீர்த்தங்கரர்களுக்கும் வழிபாடு செய்யும் முறையும் தமிழகத்தில் உள்ளது.)


மேலும் மாட்டுப்பொங்கலன்று …


மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கழுத்தில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். சந்தனம் குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள்.


அன்றைய தினமும் பொங்கலிட்டு ஸ்ரீ ரிஷபநாதருக்கும் அவருடைய சாசன தேவனான ஸ்ரீ கோமுக யக்ஷனுக்கும் விசேஷ பூஜை செய்துவிட்டு அந்த பொங்கலை கால்நடைகளுக்கு வைப்பது வழக்கம்.


கன்னிப் பொங்கல் / காணும் பொங்கலன்று….

அந்த ஊரிலுள்ள மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது வழக்கம். சில ஸ்தலங்களில் வீதியுலாவும் நடத்துவது வழமையாக கொண்டுள்ளனர்.

(மன்னார்குடியில்  மூலவர் ஸ்ரீமல்லிநாதருக்கும், ஸ்ரீ சந்திரப்பிரபு நாதருக்கும் பூஜைகள் செய்த பின் சாசன தேவி ஸ்ரீஜ்வாலாமாலினி அம்மன் வீதியுலா 70 ஆண்டுகளுக்கும் மேலாக விமரிசையாக நடைபெற்று வருகிறது.)


இந்த வழிபாட்டு கலாச்சாரம் அந்தந்த பகுதியில் வாழும் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெறுவது சிறப்பாகும். மற்றபடி எந்த ஒரு நூலிலும் பிரத்யேகக் குறிப்புகள் இருப்பதாக தெரியவில்லை. 








-----------------------------

No comments:

Post a Comment