பார்ஸ்வநாதர் தாலாட்டு



பார்ஸ்வநாதர் தாலாட்டு







ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


காசி நகர் கண்மணியை தாலாட்ட
கண்மணியாம் ஜினவரனை தாலாட்ட
ஜினவரனாம் பீராம்மீணியின் மைந்தன் தனை
பாலகனாம் விஸ்வஸேன்ன் ஸுதனை தாலாட்ட
பாவையரே வாருங்கள் அணிஅணியாய்
பாலகனை தாலாட்டி புண்யத்தை பெற்றிடுவோம்.


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


பெளதனாபுரந்தனிலே அரவிந்தன் ஆட்டியிலே அந்தணனாய் வந்துதித்தாய்
மருபூதியெனும் பெயர் பெற்று மக்களிடை மகிழ்ச்சியொடு வாழ்ந்து வந்தாய்.


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


இரண்டாம் பவமதனில் ஸல்லகீவன மத்தியிலே
வஜ்ரகோஷம் என்ற யானையாய் பிறந்திட்டாய்
முனிவரனாம் அரவிந்தன் அவர்பால் அறங்கேட்டாய்
அஹிம்சை யெனும் விரதமதனை ஏற்றுக் கொண்ட பலமதனால்
மூன்றாம் பவமதிலே பதினோராம் ஸ்வர்க்கமதில் அமரனாய் அவதரித்தாய்
பதினெட்டு கடற்காலம் அமரசுகம் அனுபவித்தாய்


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


நான்காம் பவமதனில் ரச்மிய வேகனாய் பிறந்தாய்
வித்யாதர லோகத்திலே விமலனாய் இருந்திட்டாய்
ஸமாதி குப்த முனிவரன் பால் ஜினதர்மம் கைக்கொண்டாய்
வினையதனை வென்றிடவே விரதமதனை ஏற்றுக் கொண்டாய்
ஹிமகிரியின்  பார்வத்தே நின்று வினையதனை கழித்திட்டாய்
ஐந்தாம் பவமதிலே அச்சுதனாய்  வந்துதித்தாய்
அச்சுத கல்பமதில் முப்பத்திரண்டு கடற்காலம்  இன்பசுகம் அனுபவித்தாய்


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


ஆறாம் பவமிதிலே அஸ்வபுர மன்னன் மகனாய் வந்துதித்தாய்
வஜ்ரஜாபியெனும் பெயர்பெற்று ஷட்கண்டங்களை ஜெயித்து சக்ரவர்த்தி பதம் அடைந்தாய்
ஸாம்ராஜ்ய சுகம் அனுபவிக்கும் நாள் தனிலே
க்ஷேமங்கர கேவலி சமீபத்தே தர்மாம்ருதம்தனை அனுபவித்தாய்
ராஜ்ய போகந்தனை மனமுவந்து விட்டு விட்டாய்
தபச்சரணம் செய்கின்ற வேளையிலே குரங்கினால் வதிக்கப்பட்டாய்
சித்த சலனமின்றி தைர்யத்துடன் தானிருந்தாய்
உடல் மீது பற்றுதனை விட்டு அஹமிந்திர தேவனாய்
இருபத்தேழு  கடற்காலம் அஹமிந்திர சுகம் அனுபவித்தாய்


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


ஏழாம் பவமதிலே அயோத்யா நகர் தனிலே
இக்ஷவாகு வம்சமதில் காஸ்யப  கோத்திரத்தில்
வஜ்ரபாகு மன்னன் மைந்தனாய்  வந்துதித்தாய்
ஆனந்தன் எனும் பெயர் பெற்று மண்டலீகன் ஆனாய்
வெகுகாலம் ராஜ்ய சுகம் அனுபவித்தாய்


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


நந்தீஸ்வர தீவுதனில் விபுலமதி முனிவரிடம் அறங்கேட்டு அகமகிழ்ந்தாய்
ஸர்வதோ பத்ர நோன்பினையும் விதியுடனே நோற்றுவந்தாய்
ஆதித்ய மண்டலம்தனை அமைத்து அதிலிருக்கும் ஜின பிம்பமதை பூஜித்தாய்
வித்யாதரன் ஆனந்தனாய் விரத மேற்று தியானத்தில் ஆழ்ந்திருந்தாய்
அவ்வேளைதனில் மிருகராஜன் உபத்ரவத்தால் உயிர் நீத்தாய்
எட்டாம் பவமதிலே ஆனத  ஸ்வர்க்கத்திலே அமரனாய் பிறந்து அமரசுகம் அனுபவித்தாய்


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


நாவலன் தீவுதனில் பாரத நாட்டினிலே
காசி நகர் விஸ்வசேனன் இல்லத்திலே வந்துதித்தாய்
பாலோடு தேன்கலந்த பான்மையுடன்
அரசனும் அரசியும் இல்லறத்தி நடத்தி வந்தார்
சீலமும் ஒழுக்கமும் செவ்வியதாய் பெற்று வந்தார்
விஸ்வஸேனன் அரசி விடியற்காலந் தனில் பதினாறு கனவு கண்டு
அரசனிடம் பலனறிந்து மகிழ்ச்சி தனை


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


தேவ கன்னியர்கள் தொண்டு செய்ய கர்ப்பமதில்
வைகாசி தேய்பிறையில் இரண்டாம் திதி தனிலே
விசாகா நட்சத்திர நாள்தனிலே வந்தடைந்தாய்
தை மாதம் தேய்பிறையில் பதினோராம் திதி தனில்
விசாகா நக்ஷத்திரந்தனில்  கர்ப்ந்தினின்றும் அவதரித்தாய்


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


நால்வகை  தேவர்கள் வாரணாசிபுரம் வந்து
பாலகனை கையிலேந்தி பாண்டுக சிலையில் வைத்து
பால கடல் ஜலம் தந்து வரிசையாய் நின்று
ஜன்மாபிஷேகம் மகிழ்ச்சியுடன் செய்தார்கள்
ஜெய ஜெய  வென கோஷமிட்டு தேவர்கள் ஆனந்த நர்த்தனம் ஆடினார்கள்


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


ஸெளதர்மன் பாலகனை காண்பதற்கு ஆயிரம் கண்களை அமைத்து கொண்டான்
சுற்றி சுற்றி வலம்  வந்து வணங்கினான் கல் பேந்திரன் தன்னகத்தில்
அமரர்கள் அனைவரும் கூடி அன்புடனே பார்ஸ்சுவனாதன் என பெயர்  வைத்தனராம்


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


அரண்மனையில்  பாலகனும் இன்பமுடன்  தான் வளர்ந்து
முப்பது ஆண்டுகள் யுவராஜ்ய பதம் பெற்று
ராஜ்ய சுகம் அனுபவிக்கும் வேளையில்
ஸாகேத புர வைபவத்தை ஜயஸேனனாலறிந்து
வைராக்ய மதை அடைந்து விட்டாய்
மனத்திலே பற்றறுத்து ஜின தீக்ஷையினை கைக்கொண்டாய்
தவஞ் செய்யும் காலத்திலே கமடசர தேவனாலே உபசர்க்க மடைந்தாய்
காதி கர்மங் கெடுத்து கேவலி பதம் பெற்றாய்
நிர்வாண பதமதனை சீக்கிரத்தில் அடைந்து விட்டாய்


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


……….  கிராமந்தனில் ஜினபிம்பம் பிரதிஷ்டை செய்ய
பஞ்ச கல்யாண வைபவத்தைக் காண நாமனைவரும் பக்தியுடன் வந்திட்டோம்.


ஆராரோ ஆரிராரோ, ஆராரோ ஆரிராரோ


------------------- 

இயற்றியவர்: ஸ்ரீ ஸ்வாமியார் அவர்கள், மேல்சித்தாமூர் - 1980. 

No comments:

Post a Comment