saamaayiga paadam - சாமாயிக பாடம்

சாமாயிக பாடம்

(தூய வந்தனை)



ஸ்ரீ அமிதகதி ஆசார்யர்  அருளியது

      (மூலமும் உரையும்)









  பொழிப்புரை தமிழாக்கம் :


(லேட்) A.V. வர்த்தமான    நைனார்



       பத உரை தமிழாக்கம்:



      T. S. பரதசக்ரவர்த்தி        ஜைன் சாஸ்திரி

           

              வெளியீடு

    V. தேவேந்திரன்,
            ஆரணி
                 (1970)





 ஆசார்யர் பாத கமலங்களுக்கு  நமோஸ்து! நமோஸ்து!
               


அழகிய தமிழில் வழங்கிய அற சான்றோரை நினைவில் நிறுத்தி வணங்குகிறேன்.

               ****







----------------------

திரு. துரைராஜ் கம்பீரம் அவர்களால் வாட்ஸ் அப் குழுவில் 

தினமும் பகிர்ந்து வந்ததின் தொகுப்பு. 

-------------------------  





ஆசார்ய அமிதகதி.
            
      
    ஜைன ஆசார்ய அமிதகதி என்பவர் ஆழ்ந்த புலமை பெற்றவர். அவரது கவித்திறன் ஒப்பற்றது. அவர் அக்காலத்தில் சிறந்த அறிவாளியாகவும் கவிஞராகவும் திகழ்ந்தவர்.


அறிமுகம் :

      துரதிஷ்டவசமாக இவரது பிறப்பிடம் பற்றியோ தாய்தந்தையரைப் பற்றியோ ஒன்றுமே தகவல் தெரியவில்லை. இவர் மாதுர ஸங்கத்தைச் சேர்ந்த மிகச்சிறந்த ஆசார்யராக விளங்கினார். இவரது ஆசாரியர் மாதவஸேனர் ஆவார். வாக்பதி ராஜனாக விளங்கிய முஞ்ஜ ராஜன் சபையில் இவரும் ஒரு சிறந்த கவிமணியாகத் திகழ்ந்தார்.


காலம் :

       விக்ரமசகாப்தம் 1020ல் இவரது காலம் என கொள்ளத்தக்கது. இவர் விக்ரமசபாப்தம் 1050- ல்  "ஸுபாஷித ரத்ன ஸந்தோஹம்" என்ற நூலை இயற்றியுள்ளார். அதை இயற்றியபோது இவருக்கு 30 வயது இருக்கும். இதைக் கொண்டு இவர் விக்ரமசகாப்தம் 11-ஆம் நூற்றாண்டில்  பிறந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம்


புலமையும் செல்வாக்கும் :

       ஆசார்ய அமிதகதி வடமொழியில் அபாரமான புலமை பெற்றவராகத் திகழ்ந்தவர். இவர் பற்பல சமய நூல்களையும் புராணங்களையும் ஆழ்ந்து பயின்றவர். இவரது ஆராய்ச்சியும் ஆழ்ந்த்தோடு அகன்றும் இருந்தது. இவர் ஒரு சீர்திருத்தவாதியாவார். வெவ்வேறு சமயங்களிலும் புகுந்துள்ள கற்பனைக் கதைகளை இவர் அறவே நம்பமாட்டார். இவர் இவருடைய காப்பியத்திறன் வினோதமானது. "தர்மபரீஷை" போன்ற அழகிய எளிய நூல்களை இரண்டே மாதங்களில் எழுதி முடித்துள்ளார். இவரது அசாதாரணப் புலமையைக் கண்டு மற்றுமுள்ள புலவர்களைக் கவரப்பட்டதும் உண்டு. முன் சொன்னபடி வாக்பதி ராஜனாகிய முஞ்சன் சபையில் இவருக்கு மிக உயர்ந்த ஸ்தானம் உண்டு. ராஜ்ய சபையில் இவருக்கு பெருமதிப்பு இருந்து வந்தது.


      ராஜா முஞ்சனுடைய தலைநகராகிய உஜ்ஜயினியில் இருந்து கொண்டு இவர் பல நூல்களை எழுதியுள்ளார். பல விஷயங்களைக் குறித்து இவர் புத்தகம் எழுதியுள்ளார். எல்லா நூல்களுமே வடமொழியில்தான் உள்ளன. இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் மிக எளிய நடையில் அமைந்திருப்பினும் ஆழ்ந்த கருத்துள்ளவை. இனிமை வாய்ந்தவை. வடமொழியில் இவரது தேர்ச்சி வியக்கத்தக்கதாய் இருந்தது.


        இவர் இயற்றிய நூல்களைப்பற்றி இப்பொழுதுதான் தகவல் கிட்டியுள்ளது. ஆயினும் இன்னும் பல நூல்களைப் பற்றி முடிவான தீர்மானம் ஆகவில்லை.


         " ஸுபாஷிதரத்ன ஸந்தோஹம் " என்ற நூல் பழமொழிகளின் இனிய தொகுப்பாகும்.


      இந்நூலின் நடை எளியது. மொழி அலங்காரம் நிரம்பியது. இந்த நூலில், " உலக விஷயங்களைக் கட்டுப்படுத்துதல், மாயையும் ஆணவத்தையும் அடக்குதல், புலனடக்கம், பெண்களின் தொடர்பால் வரும் துன்பம், 


வேண்டுதல் வேண்டாமை இல்லாமை, ஏழு வகையான கெட்ட பழக்கங்களினின்றும் விடுபடுதல்  முதலிய விஷயங்களும், வயிற்றுப்பூசை, கிழத்தன்மை பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இவையனைத்தும் படிக்கும்போது அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் உள்ளன. ஒவ்வொரு சுலோகமும் படிக்கும்போது மனதில் பதிகிறது. புலவனும் பாமரனும் ஆணும், பெண்ணும் இதைப்படித்து ஒப்புயர்வற்ற இன்பத்தைப் பெறுகின்றனர். இந்த நூல் விக்ரம சகாப்தம் 1050 தைமீ சுக்லபக்ஷ பஞ்சமியில் முற்று பெற்றது. ஹிந்தி மொழி பெயர்ப்புடன் இது வெளியாகியிருக்கிறது.


தர்ம பரீஷா :

     இது வடமொழி இலக்கியத்தில் ஒப்பற்ற காப்பியமாகும். இது ஹிந்து சமயத்திலிருக்கும் கற்பனைக் கதைகளை விளக்குவதோடு கற்பனையிலுள்ள குறைபாட்டினை நாசூகாகக் கேலி செய்யவும் முற்படுகிறது. இந்த நூல் முழுதும் கதைப்போக்கில் அமைந்து சுவையாக விஷயங்களை எடுத்துக் காட்டுகிறது. இதில் இராமாயணம், மகாபாரதம் முதலிய பிரசித்தமான ஹிந்து புராணங்களைப்பற்றி ஆராய்ந்து நாவல்போல் விஷயங்கள் படிப்பவர் மனதைக் கவர்கின்றது. வேறு பொருள் வைப்பணி  நீதித்துணுக்குகள் போன்ற பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் இவரது அபாரமான புலமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஹிந்தி மொழியிலும் இது பெயர்க்கப்பட்டுள்ளது. 1070-ல் இது இயற்றப்பட்டதாகும்.


பஞ்ச ஸங்கிரஹம் :

       இந்த நூலில் கோம்மட ஸாரத்திலுள்ள எல்லா விஷயங்களும் வடமொழியில் இயற்றப்பட்டுள்ளன. சமய சித்தாந்தங்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. இது போற்றத்தக்க செயலாகும். 1073-ல் இது இயற்றப்பட்டதாகும். இது வேற்று மொழியில் இன்னும் பெயர்க்கப் படவில்லை.


உபாஸகாசாரம் :

       இதில் சிராவகர்களின் ஆசாரங்கள் எளிய சுலோகங்களில் விளக்கப்பட்டுள்ளன. இதில் 1352 சுலோகங்கள் உள்ளன. இதற்கு ஹிந்தி மொழி பெயர்ப்பும் உண்டு.


பாவனாத் வாத்ரிம்சதிகா (பாவனை 32)

         இதற்கு ஸாமாயிக பாடம் என்றும் வேறு பெயர் உண்டு. இதைப் படித்தால் மனம் சாந்தி அடையும். ஆன்ம திருப்தி உண்டாகும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதைப் படித்து மனப்பாடமும் செய்வர். இதில் 32 சுலோகங்கள் உள.


ஸாமாயிக பாடம் :

       இதிலும் பாவனைகளைப் பற்றிய விஷயம்தான் உள்ளது. 120 அழகிய சுலோகங்கள் இதில் உள்ளன. ஹிந்தி மொழி பெயர்ப்பும் இதற்கு உண்டு.





தூய வந்தனை



** 1 **


ஸத்வேஷு மைத்ரீம் குணிஷு பிரமோதம்,


      க்லிஷ்டேஷு ஜீவேஷு க்ருபா பரத்வம்,


மாத்யஸ்த பாவம் விபரீத வ்ருத்தௌ,


     ஸதா மமாத்மா வித்தாது தேவ.    




ஹே தேவ ! = ஜினேஸ்வரனே
மம ஆத்மா = என் ஆன்மா
ஸத்வேஷு மைத்ரீம் = எல்லா உயிர்களிடத்து நட்பும்
குணிஷு ப்ரமோதம் = நற்குண பெரியோர்களிடத்து மன மகிழ்ச்சியும்
க்லிஷ்டேஷு ஜீவேஷு = துன்பங்களால் துன்புறும் உயிர்களிடத்து
க்ருபா பரத்வம் = மேலான கருணையும்
விபரீத வ்ருத்தௌ = அறநெறிக்கு மாறான செயல்களையும், கொள்கைகளையும் கொண்ட ஜீவனிடத்தில்
மாத்யஸ்த பாவம் = விருப்பு, வெறுப்பு இல்லாத நடுநிலைமையையும் (ஸமதாபாவம்)
ஸதா வித்தாது = ஒவ்வொரு பிறவியிலும் கொண்டிருக்கட்டும்.


(க - ரை.)

ஜிநேஸ்வரனே ! என் ஆன்மா பிறவிதோறும் எவ்வுயிரிடத்தும் அன்பும், நற்குணமுள்ளோர்பால் மகிழ்ச்சியும், துன்புறும் உயிர்களிடத்து கருணையும், அறநெறிக்கு மாறான கொள்கையுடையவரிடம் விருப்பு, வெறுப்புக் கொள்ளாத நடுநிலைமையும் கொண்டு என்றும் விளங்க விழைகிறேன்.
             

** 2 **

சரீரத : கர்த்துமனந்த சக்திம்,

            விபின்ன மாத்மானம்பாஸ்த தோஷம்.

ஜினேந்த்ர ! கோஷாதிவ கட்கயஷ்டிம்,

       தவப்ரசாதேன




மமாஸ்து சக்தி.  (2)

ஹே ஜினேந்திர ! = ஜினேஸ்வரனே !
கோஷாத் கட்க யஷ்டிம் இவ = உறையினின்றும் வாளை உருவிய பின்னர், உறை, வாள் ஆகிய இரண்டையும் வெவ்வேறாக கருதுவது போல்
அனந்த சக்திம் = வரம்பில் ஆற்றல் (அனந்த சக்தியை) உடைய
அபாஸ்த தோஷம் = குற்றங்களினின்றும் நீங்கிய
ஆத்மானம் = ஆத்மாவை
சரீரத : = உடலினின்றும்
விபின்னம் கர்த்தும் =தனிப்படுத்திப் (பிரித்து) பார்க்கும்
சக்தி :  = வலிமை (ஆற்றல்)
தவ ப்ரசாதாத் = தங்கள் அருளால்
மம = எனக்கு
அஸ்து = இருக்கட்டும் (உண்டாகட்டும்).


(க - ரை)

ஜினேஸ்வரனே ! உறையினின்றும் வாளை உருவிய பின்னர், உறை வேறு, வாள் வேறு என்பதை உணர்வது போல உடல் முழுவதும் நிறைந்திருக்கும் உயிரும் உடலும் வெவ்வேறானது என்ற உண்மையை உமதருளால் அறிந்துகொள்ளும் ஆற்றல் எனக்கு உண்டாகுக.




 ** 3 **

துக்கே சுகே வைரிணி பந்து வர்கே,
     யோகே வியோகே  பவனே வனே வா.

நிராக் ருதா சேஷ மமத்வ புத்தே : .
       சமம் மனோ  மேஸ்து சதாபி நாத. 



ஹே நாத ! = ஸ்வாமி
துக்கே = துன்பம் வந்த விடத்தும்
சுகே = இன்பம் கிட்டிய போதும்
வைரிணி = பகைவர்களிடத்தும்
பந்து வர்கே = உறவினர்களிடத்தும்
யோகே = விரும்பாத பொருள் வந்தடைந்த போதும்
வியோகே = விரும்பிய பொருள் விட்டு அகன்றபோதும்
பவனே = அரண்மனைக்கு ஒப்பான மாளிகையில் வசிக்கும் போதும்
வனே = காடுகளில் வசிக்க நேரிட்ட போதும்
நிராக்ருதா சேஷ மமத்வபுத்தே : = மேற்கண்ட எல்லா நிலைகளிலும் விருப்பு வெறுப்பின்றிருக்கும்
மே மன : = என் உள்ளம்
சமம் அஸ்து = அவைகளைச் சமமாக கருதட்டும்.


(க -  ரை.)

ஏ ஜினேஸ்வரனே ! என் மனம் இன்பமடைந்த போதும், துன்பமுற்றபோதும், பகைவர்களிடத்தும், உறவினர்களிடத்தும், வலிந்து வந்தடையும் பொருளிடத்தும், கைப்பொருள் இழந்த காலத்தும், அரண்மனை போன்ற மாளிகையில் வாழுங்காலத்தும், வன வாசியாக வாழ நேரிட்ட நிலையிலும், மகிழ்ச்சியும் வேதனையும் கொள்ளாது அவைகளைச் சமமாகக் கொண்டாடி வரவேற்பதாக விளங்குக.



 ** 4 **


முனீச ! லீனாவிவ கிலீ தாவிவ,
      ஸ்திரௌ நிகாதா  விவ  பிம்பிதா விவ.


பாதௌ த்வதீயௌ மம திஷ்டதாம் சதா,
       தமோது நா நௌ   ஹ்ருதி தீபிகாவிவ. (4)



முனீச = முனிவர் தலைவனே !
த்வதீயௌ பாதௌ = உன்னுடைய இரு பாதங்கள்
தமோதுநா நௌ = மித்யாத்வம் (தீக்காட்சி) என்னும் அகத்திருளைப் போக்க வல்லவைகள். ஆகவே அவைகள்
மமஹ்ருதி = என் உள்ளத்தில்
தீபிகாவிவ = தீபங்களைப் போன்றும்
லீனாவிவ = இரண்டறக் கலந்தவை போன்றும்
கீலிதாவிவ = என் உள்ளத்தில் பதித்து வைக்கப்பட்டவை போன்றும்
ஸ்திரௌநிகாதாவிவ = நிலை நிறுத்தப்பட்டது போன்றும்
பிம்பிதாவிவ = உன் திருவடிகளில் என் உள்ளமும், என் உள்ளத்தில் உன் திருவடிகள் பிரிதிபலிப்பது போன்றும்
ஸதா திஷ்டதாம் = எஞ்ஞான்றும் நிலைத்திருக்கட்டும்.


(க -  ரை.)

முனிவர் தம் தலைவா !  உன் திருவடிகள் என் உள்ளத்தில் உள்ள மித்யாத்வம் (மயக்கம்) என்னும் இருளைப் போக்கவல்ல ஒளி வீசும்  விளக்குகளாகும். ஆகவே அத்திருவடிகள் என் உள்ளத்தே என்றும் நிலைத்திருத்தல் வேண்டும் எனப்  பிரார்த்திக்கிறேன்.


 ** 5 **


ஏகேந்த்ரியாத்யா யதி தேவ தேஹின : ,
      ப்ரமாதத: ஸஞ்சரதா       இதஸ்தத: !

க்ஷதா விபின்னா மிலிதா நிபீடிதா:
       ததஸ்து மித்யா       துரனுஷ்டிதம் ததா.




ஹே தேவ ! = தேவனே !
இதஸ்தத: = இங்குமங்கும்
ப்ரமாதத: = போதிய கவனமின்றி (அஜாக்கிரதையாக)
ஸஞ்சரதா = உலாவக்கூடிய என்னால்
ஏகேந்த்ரியாத்யா: தேஹின : = ஓரறிவு முதல் ஐந்தறிவு படைத்த உயிர்கள்
க்ஷதா = நசுக்கப்பட்டிருப்பினும்
விபின்னா: = உறுப்புக்கள் சிதைக்கப்பட்டிருப்பினும்
மிலிதா: = ஒன்றோடொன்று மோதப்பட்டிருப்பினும்
நிபீடிதா: = மீண்டும் உயிர் பெறாவண்ணம் துன்புறுத்திருப்பினும்
தத்துரனுஷ்டிதம் = மேற்கூறிய அக்கொடிய செயல்கள் அனைத்தும்
ததா = அவ்வப்போது
மித்யா அஸ்து = தங்கள் அருளால் என்னை விட்டு அகலட்டும்.


(க - ரை.)


 வாழ்க்கையில் இங்குமங்கும் செல்லும்போது கவனக் குறைவின் காரணமாக சிற்றுயிர்களுக்குத் துன்பம் விளைவித்திருப்பேன். அவை அனைத்தும் என் உள்ள உணர்வால் ஏற்படாததால் ஜினேஸ்வரனே ! அத்தீவினைகள் என்னை அடையாதிருப்பதாக.


 ** 6 **

விமுக்தி மார்க ப்ரதிகூலவர்தினா,
 மயா  கஷாயாக்ஷவசேன துர்தியா

சாரித்ர சுத்தே : யதகாரி லோபனம்,
       ததஸ்து மித்யா மம  துஷ்க்ருதம் பிரபோ. (6)



ப்ரபோ = ஸ்வாமி
விமுக்தி மார்க ப்ரதிகூலவர்தினா = மோக்ஷ மார்கத்திற்கு மாறான கொள்கைகளை பின்பற்றிய
துர்தியா = தீய புத்தியை உடைய
மயா = என்னால்
கஷாயாக்ஷவசேன = கோபம், கர்வம், மாயை (கபடம்) லோபம் ஆகிய கஷாயங்களுக்கும், ஐம்புலன்களுக்கும் அடிமையாகி
சாரித்ர சுத்தே: லோபனம் யதகாரி = நல்லொழுக்கத்தை விட்டு தீயொழுக்கத்தைப் பின்பற்றியதன் காரணமாக உண்டான
மம துஷ்கிருதம் = என் தீவினைகள் அனைத்தும்
மித்யா அஸ்து = மறைந்து ஒழியட்டும்.


(க - ரை.)

   அருகப் பெருமானே ! நான்கு கஷாயங்கட்கும், ஐம்புலன்கட்கும் யான் அடிமையாகி, மோக்ஷ மார்கத்திற்கு மாறான தீயொழுக்கங்களை மேற்கொண்டதனால் உண்டான தீவினைகள் அனைத்தும் இனி மறைந்து நீங்குக.


 ** 7  **

விநிந்த நாலோசன கர்ஹணை ரஹம்,
     மனோவச: காய  கஷாய   நிர்மிதம்.

நிஹன்மி பாபம் பவதுக்க காரணம்,
     பிஷக்விஷம் மந்த்ர குணைரிவா கிலம்.



பிஷக்  =  மந்திரவாதி
மந்த்ர குணை:  = மந்திர சக்தியால்
அகிலம் விஷம்இவ  = விஷமனத்தையும் போக்குவது போல
அஹம்  = நான்
மனோ வச: காய கஷாய நிமிர்தம்  = கோபம் முதலிய நால்வகை கஷாயத்துடன் கூடிய உள்ளம், சொல், செயல்களால் தேடிய
பவதுக்க காரணம்  = நாற்கதி பிறவிக்குக் காரணமான எல்லாத் தீவினைகளையும்
விநிந்தனை: = தன்னைத் தானே நொந்துகொள்வதினாலும்
ஆலோசனை : = பன்முறை அவற்றைச் சிந்தித்து ஆராய்வதாலும்
கர்ஹணை : = தன்னைத்தானே வெறுத்துக் கொள்வதனாலும்
நிஹன்மி = போக்கிக்கொள்ளுகிறேன்.



(க - ரை.)

         மந்திரவாதி மந்திரத்தால் விஷங்களை போக்குவது போன்று, யான் நாற்கதிக்குக் காரணமாகிய கோபம் முதலிய நால்வகை கஷாயங்கட்கு உட்பட்டு மனம், வாக்கு, செயல்களால் வந்தடைந்த பாவங்களை ஆராய்ந்தும், என்னை யானே நிந்தித்துக்கொண்டும், அவைகளின் சேர்க்கைக்காக வருத்தங்கொண்டும், வெறுத்துக்கொண்டும் தீவினைகளைப் போக்கிக்கொள்ளுகிறேன்.


**  8  **

அதிக்ரமம் யம் விமதேர் வ்யதிக்ரமம்,
     ஜினாதிசாரம்  சுசரித்ர கர்மண: .

வ்யதா மனாசாரமபி ப்ரமாதத: ,
     ப்ரதிக்ரமம் தஸ்ய  கரோமி சுத்தயே.



ஹே வின்! = ஜினேஸ்வரனே !
விமதே: , =அஞ்ஞானியாகிய என்னால்
ப்ரமாதத: = கவனக் குறைவின் காரணமாக
சுசரித்ர கர்மண: = நல்லொழுக்கத்திற்கு மாறாக
அதிக்ரமம் = அதிக்ரமம் என்னும் தோஷம்
அதிசாரம் = அதிசார தோஷம்
அனாசாரம் = அனாசார தோஷம்
வ்யதாத் = செய்யப்பட்டது
தஸ்ய சுத்தயே = மேற்கூறப்பட்ட தோஷங்களின் நிவர்த்திக்காக
ப்ரதிக்ரமம் கரோமி = பிராயச்சித்தம் (கழுவாய்) செய்துக்கொள்ளுகிறேன்.


(க - ரை.)

    அறிவிலியாகிய யான் கவனக்குறைவால் நல்லொழுக்கத்திற்கு மாறாக தீயொழுக்கங்களாகிய நால்வகைக் குற்றங்களைச் செய்துள்ளேன். அக்குற்றங்களுக்காக இப்பொழுது கழுவாய்(ச்) செய்து(க்)கொள்ளுகிறேன்.



 ** 9 **

க்ஷதிம் மன : சுத்தி விதேரதிக்ரமம்,
     வ்யதிக்ரமம் சில   வ்ரதேர் விலங்கனம்.

பிரபோதிசாரம் விஷயேஷு வர்த்தனம்,
     வதந்தி அனாசார   மிஹாதி சக்த்தாம்.



ஹே பிரபோ = பிரபுவே !
மன: சுத்தி விதே: க்ஷதிம் = நல்லொழுக்கத்தினின்றும் மனம் மாற்றமடைவதை
அதிக்ரமம் = அதிக்கிரம தோஷம் என்றும்
சீலவ்ரதே: விலங்கனம் = பிரம்மச்சரிய விரதத்தினின்றும் நழுகுவதை
வ்யதிக்ரமம் = வியதிக்ரம தோஷம் என்றும்
விஷயயேஷு வர்த்தனம் = ஐம்புலன்கள் தத்தம் நுகர்ச்சிகளில் ஈடுபடுவதை
அதிசாரம் = அதிசார தோஷம் என்றும்
அதி ஆசக்ததாம் = மேற்கண்ட எல்லாவற்றிலும் அளவு கடந்து மனம் ஈடுபடுவதை
அனாசாரம் = அனாசார தோஷம் என்றும்
வதந்தி = கூறுகிறார்கள்.


(க - ரை.)

 பிரபுவே ! நல்லொழுக்கத்தின்பால் உள்ளம் செல்லாது மாசுறுவதை அதிக்ரம தோஷம் என்றும், பிறர்மனை நயவாமையினின்றும் நழுகுவதை வ்யதிக்ரம தோஷம் என்றும், ஐம்பொறிவழி சென்று அழிவதை அதிசார தோஷம் என்றும், மேற்கண்ட எல்லாவற்றிலும் அளவு கடந்து மூழ்கி இருப்பதை அநாசார தோஷம் என்றும் நல்லோர் கூறுவர்.



** 10 **

யதர்த்த மாத்ரா பதவாக்ய ஹீனம்,
     மயா ப்ரமாதாத்யதி   கிஞ்ச னேக்தம்.

தன்மே க்ஷமித்வா விததாது தேவீ,
     ஸரஸ்வதீ ! கேவல  போத லப்திம்.



ஹே ஸரஸ்வதீ ! = ஜின வாணியே !
மயா = என்னால்
ப்ரமாதத : = உதாசீனத்தாலோ அல்லது கர்வம், தற்புகழ்ச்சி, பெருமை முதலிய காரணங்களாலோ வின் ஆகமத்திற்கு முரணாக
அர்த்த, மாத்ரா, பத, வாக்கிய ஹீனம் = தவறான பொருள் கற்பித்தோ, மாத்திரைகளை குறைத்தோ, கூட்டியோ, பதங்களைத் தவறாகப் பிரித்து, வாக்கியங்களைச் சிதைத்தோ
கிஞ்சித் உக்தம் சேத் = கூறுதல் ஏதேனும் நிகழ்ந்திருந்தால்
ஹே தேவி = ஜின வாணியே
தன்மே க்ஷமித்வா = அவைகளுக்காக என்னை மன்னித்து
கேவல போதி லப்திம் = கேவலஞானம் என்னும் முழுதுணர் ஞானத்தை
வித தாது = கொடுத்தருளுவாயாக.


(க - ரை.)

  ஜின  வாணியே ! உதாசீனத்தாலோ, தற்பெருமை போன்ற காரணமாகவோ, அருகப் பெருமான் அறவுரைகளுக்கு மாறாக தவறான பொருள் கற்பித்தோ, மாத்திரைகளைக் குறைத்தோ, கூட்டியோ, பதங்களைத் தவறாகப் பிரித்தோ, வாக்கியங்களைச் சிதைத்தோ கூறி இருப்பின் அவைகளுக்காக என்னை மன்னித்து கேவல ஞானமெனும் முழுதுணர் ஞானத்தை எனக்கு அருள்வாயாக.


** 11 **

போதி : ஸமாதி: பரிணாம சுத்தி,
     ஸ்வாத்மோப லப்தி:  சிவ சௌக்ய சித்தி.

சிந்தா மணிம் சிந்தித வஸ்து தானே,
     த்வாம் வந்த்ய   மானஸ்ய மமாஸ்து  தேவி.  



ஹே தேவி ! =ஸரஸ்வதியே!
சிந்தித வஸ்துதானே = (மதம், மொழி, ஜாதி, போன்ற பாகுபாடின்றி) நினைத்ததைக் கொடுக்கவல்ல
சிந்தாமணிம் த்வாம் = சிந்தாமணி இரத்தினத்திற்கு ஒப்பான உன்னை (ஜின வாணியை)
வந்த்யமானஸ்ய மம = வணங்கும் எனக்கு
போதி: = கேவல ஞானம்
ஸமாதி = ஆத்ம சமாதி
பரிணாம சுத்தி: = குற்றமற்ற எண்ணங்கள்
ஸ்வாத் மோபலப்தி: = தன் ஆன்மாவை உணரும் தன்மை (ஸ்வானுபவம்)
சிவ சௌக்ய சித்தி: = வீடு பேறு அடையும் வலிமை
அஸ்து = உன் அருளால் உண்டாகட்டும்.


(க - ரை.)

சரஸ்வதியே ! யார் எதனை நினைக்கிறார்களோ அதனை அவர்களுக்கு அருளும் சிந்தாமணி என்னும் இரத்தினம் போன்றவளே ! உன்னை வணங்கும் எனக்கு கேவல ஞானம், ஆத்ம இறுதி, குற்றமற்ற எண்ணங்கள், தன் ஆன்மாவைத் தானே அறியும் ஆற்றல், வீடுபேறு அடையும் வலிமை ஆகியவைகள் உன் அருளால் உண்டாகட்டும்.



** 12 **


ய: ஸ்மர்யதே ஸர்வ முனீந்த்ர வ்ருந்தை: ,
     ய:  ஸ்தூயதே ஸர்வ  நரா மரேந்திரை: .


யோ கீயதே வேத புராண சாஸ்த்ரை: , 
     ஸ தேவ தேவோ  ஹ்ருதயே  மாஸ்தாம்.


ஸர்வ முனீந்த்ர விருந்தை: = துறவி சமூகங்களால்
ய:  ஸ்மர்யதே = எந்த ஜினேஸ்வரன் தியானிக்கப்படுகிறானோ
ஸர்வ நராமரேந்திரை: = எல்லா மக்களாலும், தேவர்களாலும், இந்திரர்களாலும்
ய: ஸ்தூயதே = எவன் துதிக்கப்படுகிறானோ
வேத புராண சாஸ்த்ரை: = வேதம், புராணம், சாத்திரங்கள் முதலியவைகளால்
ய: கீயதே = எவன் போற்றப்படுகிறானோ
ஸ: தேவ தேவ: = அந்த தேவாதி தேவனான ஜினேஸ்வரன்
மமஹ்ருதயே = என் உள்ளத்தில்
ஆஸ்தாம் = குடிகொண்டிருக்கட்டும்.


(க - ரை.)


  முனிவர்களாலும், மக்களாலும், தேவர்களாலும், இந்திரர்களாலும், வேத, புராண, சாத்திரங்களாலும் இடைவிடாது போற்றப்படும் தேவாதி தேவனான ஜினேஸ்வரன் என் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருப்பாராக.





** 13 **

யோ தர்சன ஞான ஸுக ஸ்வபாவ: ,
     ஸமஸ்த ஸம்ஸார  விகார பாஹ்ய: ,

ஸாமாதி கம்ய: பரமாத்ம ஸஞ்ஜ: ,
     ஸ தேவ தேவோ  ஹ்ருதயே  மமாஸ்தாம்.  



ய: = ஜினேஸ்வரன்
தர்சன ஞான சுக ஸ்வபாவ: = கடையிலா காட்சி, கடையிலா ஞானம், கடையிலா இன்பம், கடையிலா சக்தி முதலிய எண்குணங்களை உடையவன்
ஸமஸ்த ஸம்சார விகார பாஹ்ய: = பிறவிச் சுழலுக்குக் காரணமான விஷய விகாரங்களை வென்றவன்
ஸாமாதி கம்ய: = தியானத்தால் அறியக்கூடியவன்.
பரமாத்ம ஸஞ்ஜ: = பரமாத்மன் என்ற பெயரைப் பெற்றவன். (இத்தன்மையனாகிய)
ஸ: தேவ தேவ: = அந்த தேவாதி தேவன்
மம ஹ்ருதயே = என் உள்ளத்தில்
ஆஸ்தாம் = வீற்றிருக்கட்டும்.


(க - ரை.)

  கடையிலா ஞானம், கடையிலாக் காட்சி, கடையிலா இன்பம் முதலிய எண் குணங்களையுடையவனும்,  பிறப்பு இறப்புக்குக் காரணமான உலகியல் சம்பந்தப்பட்ட இருவினைகளை வென்றவனும், சிந்தனையின் ஆற்றலால் அறியக்கூடியவனுமாகிய தேவாதி தேவன் 'ஜினேஸ்வரன்' என் உள்ளத்தில் அகலாது வீற்றிருக்கட்டும்.



** 14 **

நிஷூததே  யோ  பவதுக்க ஜாலம்,
     நிரீக்ஷதே  யோ      ஜகதந்த ராலம்.

யோந்தர் கதோ யோகி நிரீக்ஷணீய,
     ஸ தேவ தேவோ ஹ்ருதயே   மமாஸ்தாம்.



ய: = எந்த ஜினேஸ்வரன்
பவதுக்கஜாலம் = பிறப்பு இறப்பு என்னும் துன்பத்திற்கு இருப்பிடமான சம்சார துக்கத்தை
நிஷூததே = கெடுத்திருக்கிறானோ
ய : = எவன்
ஜகதந்தராலம் = உலகிலுள்ள அசையும், மற்றும் அசையாப் பொருள்களின் மாறுதல்கள் அனைத்தையும்
நிரீக்ஷதே = கேவல ஞானத்தின் மூலம் அறிகிறானோ
ய : = எவன்
அந்தர்கத: யோகிநிரீக்ஷணீய: = மாபெரும் யோகிகள் தமது த்யானத்தின் வாயிலாக பார்க்கப்படுகிறானோ
ஸ: தேவ தேவ: = அந்த தேவாதி தேவன்
மம ஹ்ருதயே = என் உள்ளத்தே
ஆஸ்தாம் = வசிக்கட்டும்.


(க - ரை.)

   எவன் உலக வாழ்க்கையில் உண்டாகும் பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம் ஆகியவற்றைக் கெடுத்தவனோ, உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும், அவைகளின் தன்மைகளையும், ஒரே சமயத்தில் அறியும் கேவல ஞானத்தை உடையவனோ, மகாமுனிகளின் தியானத்தின் ஆற்றலால் அறியக் கூடியவனோ, அந்த தேவாதிதேவனான ஜினேஸ்வரன் என் மாசற்ற மனத்திலே தங்கியிருப்பானாக.


 ** 15 **

விமுக்தி மார்க ப்ரதி பாதகோ யோ,
     யோ ஜன்ம ம்ருத்யு  வ்யசனாத் வ்யதீத: ,

த்ரி லோக லோகீ விகலோ கலங்க:
     ஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.  



ய: = எவன்
விமுக்திமார்க ப்ரதிபாதக: = மோக்ஷ மார்கத்தை உபதேசித்தவனோ
ய := எவன்
ஜன்ம ம்ருத்யு வ்யசனாத் வ்யதீத: = பிறப்பு இறப்பு என்னும் துன்பத்தைக் கடந்தவனோ
த்ரிலோக லோகீ = மூவுலகப் பொருளனைத்தும் அறிபவனோ
விகல : , = விருப்பு, வெறுப்பு முதலிய விவகாரங்களினின்றும் நீங்கியவனோ
அகலங்க: = குற்றமற்றவனோ
ஸ: தேவ தேவ: = அந்த தேவாதி தேவன் (விருஷப தேவர்)
மம ஹ்ருதயே = என் உள்ளத்தே
ஆஸ்தாம் = இருக்கட்டும்.



(க - ரை.)

   மோக்ஷ மார்க்கத்திற்குரிய வழியை  அறிவித்தவரும், பிறப்பு, இறப்புத் துன்பங்களைக் கடந்தவரும், வேண்டுதல், வேண்டாமையில்லாதவரும்,  முழுதுணர் ஞானத்தைப் பெற்றவரும், குற்றமற்றவரும் ஆகிய தேவாதி தேவரான  'விருஷபதேவர்' என் மனத்துக்கண் அகலாது இருக்கட்டும்.


** 16  **

க்ரோடீக்ருதா சேஷ சரீரி வர்கா: ,
     ராகாதயோ யஸ்ய ந   ஸந்தி தோஷா; .

நிரிந்திரியோ ஞான மயோந பாய:,
       ஸ தேவ தேவோ  ஹ்ருதயே   மமாஸ்தாம்.  



க்ரோடீ க்ருதா சேஷ சரீரி வர்கா: = தன்னலமற்ற அன்பினால் ஜீவராசிகள் அனைத்தையும் எவன் ஆட்கொண்டானோ
யஸ்ய = எவனுக்கு
ராகாதய: தோஷா: = ஆசை, துவேஷம் முதலிய குற்றங்கள்
ந ஸந்தி = இல்லையோ
நிரிந்திரிய: = ஐம்புலனற்றவனோ
ஞானமய: = கேவலஞானம் என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவனோ
அநபாய: = அச்சமற்றவனோ
ஸ: தேவ தேவ: = அந்த தேவாதி தேவன் ஜினேஸ்வரன்
மம ஹ்ருதயே = என் மனத்துக் கண்
ஆஸ்தாம் = வீற்றிருக்கட்டும்.


(க - ரை.)

    அன்பினால் எவ்வுயிரையும் ஆட்கொண்டவனும், ஆசை முதலான பதினெண் குற்றங்கள் இல்லாதவனும்,   முழுதுணர் அறிவனும், வினைகளின் அச்சம் நீங்கி விளங்கியவனும் ஆகிய தேவாதி தேவன் ஜினேஸ்வரன் என் உள்ளத்தே நீங்காது வீற்றிருக்கட்டும்.


 ** 17 **

யோ வ்யாபகோ விஸ்வ ஜனீன வருத்தே: ,
     ஸித்தோ விபுத்தோ   துத கர்ம பந்த: .

த்யாதோ துனீதே ஸகலம் விகாரம் ,
     ஸ தேவ தேவோ ஹ்ருதயே  மமாஸ்தாம்.  



ய: = எவன்
விஸ்வ ஜனீன வ்ருத்தே; வ்யாபக: = அறிவாற்றலால் எல்லா உயிர்களிலும் பரவி இருப்பவனும்
ஸித்த: = எண் வினைகளைக் கெடுத்து சித்த நிலையை அடைந்தவனும்
விபுத்த: = சர்வக்ஞனும்
துத கர்ம பந்த: = வினைகளினின்றும் நீங்கியவனும்
த்யாத: = தியானிப்பவனின்
ஸகலம் விகாரம் = எல்லாக் குற்றங்களையும்
துனீதே = போக்கக்கூடியவனும் ஆன
ஸ: தேவ தேவ: = அந்த தேவாதி தேவன் (சித்த பரமாத்மா)
மம ஹ்ருதயே = என் மனத்தே
ஆஸ்தாம் = இருக்கட்டும்.


(க -ரை.)

    அறிவாற்றலால் எல்லா உயிர்களிலும் பரவி இருப்பவனும், எண் வினைகளையும் கெடுத்து சித்த நிலையை அடைந்தவனும், சர்வக்ஞனும், வினைகளினின்றும் நீங்கி விளங்குபவனும் ; அப்பெருமகனின் குணங்களைச் சிந்திப்பவர்களின் குற்றங்களைப் போக்கும் தன்மை வாய்ந்தவனும் ஆகிய தேவாதி தேவன் ஜினேஸ்வரன் என் மனத்தே என்றும் நிலைத்திருக்கட்டும்.


** 18 ** 

ந ஸ்ப்ருஸ்யதே கர்ம கலங்க தோஷை: ,
     யோ  த்வாந்த   ஸங்கைரிவ    திக்மரஸ்மி : .


நிரஞ்சனம் நித்யமனேக மேகம்,
     தம் தேவ மாப்தம்  சரணம் ப்ரபத்யே.  




திக்மரஸ்மி: = சூரியன்
த்வந்த சங்கை: இவா  = இருள் சமூகத்தால் மறைக்கப்பட இயலாதது போல
ய: = எந்த ஜினேஸ்வரன்
கர்மகலங்க தோஷை: = வினைகளாகிற குற்றங்களால்
நஸ்ப்ருஸ்யதே = தொட்டுக்கூட பார்க்கமுடியாதபடி இருக்கின்றவனும்
நிரஞ்சனம் = குற்றமற்றவனும்
நித்யம் = (வஸ்து ரூபத்தில்) அழிவில்லாதவனும்
அநேகம் = அனந்தஞானம், அனந்த சுகம் போன்ற எண் குணங்களால் அநேகஸ்வரூபனும்
ஏகம் = ஜீவத்ரவ்யத்தால் நோக்கும்போது ஒருவனும் ஆகிய
தேவ தேவம் தம் = தேவாதி தேவனாகிய ஜினேஸ்வரனை
சரணம் = அடைக்கலம்
ப்ரபத்யே = அடைகிறேன்.


(க - ரை.)

சூரியனை எத்தகைய சூழ்   இருளும் மறைக்க இயலாதது போல, கேவல ஞான ஒளியையுடைய அருகப்பெருமானை இருவினைகளாகிய கார் இருள் அருகிலும் அணுக வியலாது. அத்தகைய குற்றமற்றவனும், அழிவில்லாதவனும், அனந்த ஞானாதி குணங்களால் நோக்கும்போது அநேக ஸ்வரூபனும், த்ரவ்யரூபத்தால் ஏக ஸ்வரூபனும் ஆன அருகப்பெருமானின் திருவடி கமலங்களை சரணமாக அடைகிறேன்.


** 19 **

விபாஸதே யத்ர மரீசி மாலீ,
     ந வித்யமானே  புவநாவ பாசீ. 

ஸ்வாத்ம ஸ்திதம் போதமய ப்ரகாசம்,
     தம் தேவ மாப்தம்  சரணம் ப்ரபத்யே.  



புவனாபாசீ = சூரியன்
நவித்யமானே சதி = இல்லாதபோது (சூரிய ஒளி புகமுடியாத இடங்களில் கூட)
யத்ர மரீசி மாலீ விபாஸதே = எங்கு ஜினேஸ்வரனின் ஞான ஒளி பிரகாசிக்கின்றதோ அத்தகைய
ஸ்வாத்ம ஸ்திதம் = தன்னகத்தே நிலைபெற்ற
போதமய ப்ரகாசம் = ஞான ஒளி உடைய
தம் தேவம் ஆப்தம் = அந்த முழுதுணர் ஞானியை
சரணம் = அடைக்கலம்
ப்ரபத்யே = அடைகிறேன்.



(க - ரை.)

   கதிரவன் ஒளி செல்லவியலாத இடங்களிலும் ஜின பகவானின் அனந்தஞான ஒளி பரந்து விரிந்துள்ளது. இத்தகைய கேவல ஞானப் பெருமானை அடைக்கலம் அடைகிறேன்.


** 20  **

விலோக்ய மானே ஸதி யத்ர விஸ்வம்,
     விலோக்யதே    ஸ்பஷ்ட மிதம்    விவிக்தம்.

சுத்தம் சிவம் சாந்த மனாத் யனந்தம்,
     தம் தேவ மாப்தம்  சரணம் ப்ரபத்யே.  



யத்ர விலோக்யமானே சதி = எந்த சுத்த ஸ்வரூபனான ஜினேஸ்வரனைத் தியானத்தின் மூலம் அறியுமிடத்து
இதம் விவிக்தம் விஸ்வம் = பலதரப்பட்ட பொருள்களைக் கொண்ட இவ்வுலகம்
ஸ்பஷ்டம் விலோக்யதே = உள்ளங்கை நெல்லிக்கனி போல் காணப்படுகிறதோ அப்படிப்பட்ட
சுத்தம் = வினைகளினின்றும் நீங்கிய சுத்தஸ்வரூபனும்
சிவம் = மங்கள ஸ்வரூபனும்
சாந்தம் = அமைதியே உருவாகக் கொண்டவனும்
அநாத்யனந்தம் = ஆதி, அந்தம் இல்லாதவனுமாகிய
தம் தேவம் ஆப்தம் =  அக்கடவுள் தன்மை வாய்ந்த ஜினேஸ்வரனை
சரணம் ப்ரபத்யே= அடைக்கலம் அடைகிறேன்.



(க - ரை.)

         வினையின் நீங்கி விளங்கும் தூய, மங்கள, சாந்தமயமான ஜினேஸ்வரனைத் தியானத்தின் மூலம் அறியுமிடத்து, பல்வேறு பொருள்களைக் கொண்ட இவ்வுலகம் விளக்கமாக அறியப்படுகிறது. ஆகவே ஆதி, அந்தமற்ற ஜினனின் பாதகமலங்களைச் சரணம் அடைகிறேன்.

   


** 21 **

யேன க்ஷதா மன்மத மானமூர்ச்சா.
      விஷாத நித்ரா  பயசோக சிந்தா.

க்ஷயானலே னேவ தருப்ரபஞ்ச,
      ஸ்தம் தேவமாப்தம்   சரணம் ப்ரபத்யே. 


அனலேன = நெருப்பினால்
தருப்ரபஞ்ச: க்ஷய: இவ = விருக்ஷ சமூகங்கள் (தாவரங்கள்) எரிக்கப்படுவது போல
யேன = ஜினேஸ்வரனால் (தியானம் என்னும் அக்னியால்)
மன்மத மானமூர்ச்சா = காமம், வெகுளி, மயக்கம்
விஷாத நித்ரா பயசோக சிந்தா = துக்கம், நித்திரை, பயம், சோகம், சிந்தை முதலியவைகள்
க்ஷதா = நாசம் செய்யப்பட்டதோ
தம் தேவம் ஆப்தம் =  அப்படிப்பட்ட கடவுள்  தன்மை அடைந்த ஜினேந்திரனை
சரணம் ப்ரபத்யே= அடைக்கலம் அடைகிறேன்.


(க - ரை.)

         தாவரங்கள் நெருப்பினால் எரிக்கப்படுவது போன்று  காமம் முதலிய பதினெண் குற்றங்களை யும் தியானம் என்னும் தீயினால் எரித்தகற்றிய ஜினேந்திர பகவானின் திருவடிகளை சரணம் அடைகிறேன்.


   
** 22 **

ந ஸம்ஸ்தரோ ந ஸ்மா ந த்ருணம்  ந மேதினி,
     விதானதோ நோ பலகோ  வினிர்மிதம்.

யதோ நிரஸ்தாக்ஷ கஷாய வித்விஷ:,
    சுதீபிராத்மைவ சுநிர்  மலோ மத: .



ஸம்ஸ்தர: = (வீடுபேறு விரும்பி தவமியற்றுவோருக்கு) விரிப்பு
ந அஸ்மா = கற்களால் ஆன விரிப்பு (அமரும் ஆசனம் தேவை இல்லை)
ந த்ருணம் = தர்ப்பாசனமும் அவசியமில்லை
ந மேதினீ = பூமி ஆசனமும் வேண்டுவதில்லை.
விதானத: நிர்மித: பலக: ந = முறைப்படி மரத்தால் ஆக்கப்பட்ட மணை முதலியவையும் தேவையில்லை.
யத: = எதனால் (எந்த ஆசனத்தால்)
நிரஸ்தாக்ஷ கஷாய வித்விஷ: = ஆத்ம சாந்திக்கு பகைவர்களான  நான்கு காஷாயங்கள் ஐம்புலன் நுகர்ச்சி ஆகியவைகள் வெல்லப்படுகின்றனவோ அதை
சுதீபி: = அறிஞர்களால்
சுநிர்மல: = தூய
ஆத்மா ஏவ = ஆத்மனே (ஆசனமாக)
மத: = கருதப்பட்டது (அங்கீகரிக்கப்பட்டது).


(க - ரை.)

    வீடுபேறு விரும்பி தவமியற்றுவோருக்கு ஆசனம் தர்ப்பை, மணை ஆகியவைகள் அவசியமில்லை. ஆன்ம விடுதலைக்குப் பகையாகிய கோபம், கர்வம், மயக்கம், லோபம் முதலியவற்றோடு  ஐம்புல வேட்கைகளை வெல்லக்கூடிய தியானம் ஒன்றையே ஆசனமாகக் கொள்வார் அறிவான் மிக்க அறவோர்கள்.



** 23 **

ந ஸம்ஸ்தரோ பத்ர ஸமாதி சாதனம்,
     ந லோகபூஜா ந ச   சங்கமேலனம்.

யதஸ்தோ தோ ந த்யாத்மரதோ பவானிசம்,
     விமுச்ய ஸர்வாமபி  பாஹ்யவாசனாம்.  
  


ஹே பத்ர = பவ்ய புருஷனே!
ஸமாதி சாதனம் = முக்தி மார்க்கம் என்பது
ந ஸம்ஸ்த்ர: = மணை, பாறை போன்றவைகள் அல்ல
ந லோகபூ ஜா = உலக மக்கள் போற்றக்கூடிய ஆடம்பரச் செயல்களும் அல்ல
ந ச சங்க மேலனம் = ஸ்ராவகன், பிரம்மச்சாரி, முனி, ஆர்யிகை போன்ற நால்வகை சங்கங்களைக் கூட்டுவதும் அல்ல (பின் என்னை)
ஸர்வாம் அபி = எல்லாவிதமான
பாஹ்ய வாசனாம் = புலனாசைகளுக்குக் காரணமாக உள்ள வெளிப்பொருள்கள்பால் உள்ள பற்றினை
விமுச்ய = விட்டு (நீக்கி)
யதஸ்தத: = எவ்விடத்தும்
அனிசம் = சதா சர்வ காலமும் (என்றும்)
ஆத்மரத: பவ = ஆத்ம சிந்தனையில் ஈடுபடுவாயாக.


(க - ரை)

     முக்தி மார்க்கம் என்பது ஆசனமோ, ஆடம்பரச் செயல்களோ அல்ல. நால்வகை சங்கங்களைக் கூட்டுவதும் அல்ல. ஆகவே புறப்பற்று அகப்பற்று ஆகியவற்றை நீக்கி ஆத்ம சிந்தனையில் ஆழ்ந்திருப்பதே வீடு பேற்றிற்குரிய வழி என அறிந்து நடப்பாயாக. 



** 24 **

ந ஸந்தி பாஹ்யா மம கேசனார்த்தா,
     பவாமி தேஷாம் ந   கதாச னாஹம்.

இத்தம் விநிஸ்சித்ய விமுச்ய பாஹயம்,
     ஸ்வஸ்த: ஸதா த்வம்   பவ பத்ர முக்த்யை: 



ஹே பத்ர = பவ்ய புருஷனே!
பாஹ்யா மம கேசநார்த்தா: = என் ஆன்மாவைத் தவிர்த்து உலகிலுள்ள உயிர்ப்பொருள், ஜடப்பொருள் யாவும்
மம ந சந்தி = என்னுடையது அல்ல
அஹம் = யான்
தேஷாம் = அவைகளுக்குச் சொந்தமானவனும்
ந பவாமி = ஆகமாட்டேன்  (அவைகளின் பண்பும் தன்மையும்) வேறுபட்டவை.
இத்தம் = இவ்வாறு
வினிஸ்சித்ய = உறுதிப்படுத்தி
பாஹ்யம் விமுச்சய = பிற பொருள்களை மனம், வாக்கு, செயல் ஆகிய மூவகையாலும் விட்டு
த்வம் = நீ
முக்த்யை = முக்தியை எய்தும் பொருட்டு
ஸதா ஸ்வஸ்த: பவ = எப்பொழுதும் ஆத்ம பாவனையில் ஈடுபடுவாயாக.


( க - ரை )

   பவ்ய ஜீவனே ! எனது ஆன்மாவையன்றி வேறு எந்த உயிருள்ள பொருள்களும் உயிரற்ற பொருள்களும் என்னுடையவையல்ல, யான் அவைகளுக்கு உரியவனுமாகமாட்டேன். ஏனெனில் அவைகளின் தன்மையும் என் பண்பும் தனிப்பட்டவை. எனவே இவ்வுறுதியோடு பிற பொருள்களை எனது மனம், வாக்கு, செயல்களால் மறந்து, வீடுபேறு அடையும் குறிக்கோளுடன் எந்நேரமும் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுவேனாக.



** 25 **

ஆத்மான மாத்யமன்யவலோக மான,
    ஸ்த்வம்  தர்சனஞான  யோ விசுத்த: .

ஏகாக்ர சித்த: கலு யத்ர தத்ர,
       ஸ்திதிதோபி சாதுர்  லபதே ஸமாதிம்.  



ஆத்மனி = ஆத்மாவில்
ஆத்மானம் = ஆத்மாவை
அவலோகமான = தியாக சிந்தனை வாயிலாக காணுமிடத்து
த்வம் = நீ
விசுத்த = குற்றமற்ற (மாசற்ற)
தர்சன ஞானமய: = அனந்த தர்சன, ஞானரூபனாக விளங்குகின்றாய்
யத்ர கலு = எங்கு
ஏகாக்ரசித்த: ஸ்தித: = சஞ்சலமின்றி ஒருமனப்பட்டு இருக்கும்
சாது = துறவி
தத்ர சமாதிம் லபதே = அங்கு பரமசமாதியை அடைகிறான்.


( க - ரை)

     ஆன்மாவில் ஆன்மாவை தியான சிந்தனையிலாழ்ந்து காணுமிடத்து நீ மாசற்ற அனந்தகுண உருவத்தோடு விளங்குகிறாய். அங்கு ஓருள்ளத்துடன் உன்னை நோக்கி சிந்திக்கும் துறவி சாந்தியை அடைகிறார்.


** 26 **

ஏக: ஸதா சரஸ்திகோ மமாத்மா,
     விநிர்மல:   ஸாதிகமஸ்வ பாவ: .

பஹிர் பவா: ஸந்த்யபரே ஸமஸ்தா,
      ந சாஸ்வதா :   கர்மபவா: ஸ்வகீயா..



ஹே பவ்ய = பவ்யனே
மம ஆத்மா = என்னுடைய ஆன்மா
ஏக: = ஒருவனே
ஸதா சாஸ்வதிக்: = என்றும் அழியாது நிலைத்திருப்பவன்
விநிர்மல: = குற்றங்களினின்றும் நீங்கித் தூய்மையானவன்
ஸாதிகம்: ஸ்வபாவ: = ஞான ஸ்வரூபன்
பஹிர் பவா: = உலகில் காணக்கூடிய
அபரே ஸமஸ்தா = உயிர்ப்பொருள் மற்று, உயிரற்ற பொருள்கள் யாவும்
சாஸ்வதா ந ஸந்தி = என்றும் நம்முடன் நிலைத்திருக்கக்கூடியவை அல்ல. (நல்வினை நீங்கியதும் இவைகள் அனைத்தும் நம்மை விட்டு அகன்றுவிடும் எனத் தெளிக.)



(க -ரை.)

     பவ்யனே! நமது ஆன்மா ஒருவனே ; என்றும், அழியாதவன் ; குற்றமேதுமின்றி தூய்மையானவன், அறிவுமயமானவன். உலகில் காணக்கூடிய உடல் ஈறாக உள்ள உயிரற்ற பொருள்கள் யாவும் நம்முடன் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல என்பதை உணர்வாயாக.


** 27 **

யஸ்யாஸ்தி நைக்யம் வபுஷாபி சார்த்தம்.
     தஸ்யாஸ்தி கிம் புத்ர  கலத்ர மித்ரை: .

ப்ருதக்க்ருதே சர்மணி ரோம கூபா: ,
     குதோ ஹி திஷ்டந்தி     சரீர மத்யே.  



யஸ்ய = எந்த ஞானஸ்வரூபனான ஆன்மாவிற்கு
வபுஷாபி சார்த்தம் = சரீரத்துடன் கூடவும்
ஐக்யம் ந = உறவு இல்லையோ
தஸ்ய = அந்த ஆன்மாவிற்கு
புத்ர கலத்ர மித்ரை = பிள்ளை, மனைவி, நண்பர் முதலியவர்களுடனகிம் அஸ்தி = என்ன உறவு இருக்கிறது ?
ப்ருதக்க்ருதே சர்மணி = உடலினின்றும் தோலை வேறுபடுத்திய பிறகு
சரீரமத்யே = உடலில்
ரோம கூபா: குத : = கேசத்வாரங்கள் எங்ஙனம் இருக்கமுடியும் ?



(க - ரை.)

   அறிவுமயமான ஆன்மாவுக்கு தன்னுடைய உறைவிடமாகிய உடலுடனும் உறவு இல்லை எனில், அந்த ஆன்மாவுக்கு மனைவி, மக்கள், நண்பர்களுடன் உறவு ஏது ? உடலினின்று தோலை உரித்து வேறுபடுத்தியவுடன் அவ்வுடலில் கேசத்வாரங்கள் எங்ஙனம் இருக்க முடியும் ? முடியாது என அறிக.


** 28 **

ஸம்யோகதோ துக்கமனேக பேதம்,
    யதோ ஸநுதே  ஜன்மவனே சரீரீ.

ததஸ்த்ரிதா ஸௌ பரிவர்ஜனீயோ,
    யியாசுனா நிர்வ்ருதி மாத்மனீனாம. 



ஜன்மவனே = பிறப்பு இறப்பு என்னும் பிறவிக் காட்டில்
யத : ஸம்யோகத : = எந்த ராகத்வேஷங்களால் (விருப்பு, வெறுப்பு) சம்பாதிக்கப்பட்ட வினையின் பயனால்
அநேக பேதம் துக்கம் = பலவிதமான துன்பங்களை
அஸ்நுதே = அனுபவிக்கிறதோ
தத: = அதனால்
ஆத்மனீனாம் நிர்வ்ருதிம் யியாசுனா = தனக்கு இதமான மோக்ஷ சுகத்தை அடைய விரும்பும் ஜீவனால்
த்ரிதா = மனம், வாக்கு ; செயல் ஆகிய மூவகையாலும்
அசௌ = பிறப்பு, இறப்பு என்னும் பிறவிக்காடு
பரிவர்ஜனீய :  = விடத்தக்கது என்பதாம்.


(க - ரை.)

   பிறப்பு இறப்பு என்னும் வனத்தில் எந்த உயிர் தனது செயல்கள் வாயிலாக ஈட்டப்பட்ட வினைகளின் சூழலால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறதோ, அவ்வுயிர் தன்னை அத்துன்பங்களினின்றும் விடுவித்துக்கொள்ள விரும்பினால் மனம் வாக்கு செயல்களால் பிறப்பு இறப்பு என்னும் பிறவிக்காடு விடத்தக்கது என்பதாம்.



** 29 **

ஸர்வம் நிராக்ருத்ய விகல்ப ஜாலம்,
       ஸம்சார காந்தார   நிபாத ஹேதும்.

விவிக்த மாத்மான மவேக்ஷ்ய மாணோ,
       நிலீயசே த்வம்  பரமாத்ம தத்வே.  




ஹே ஆத்மன் = ஆன்மாவே !
ஸம்ஸார காந்தாரநிபாத ஹேதும் =  பிறப்பு, இறப்பு என்னும் சம்சார காட்டில் உழலுவதற்குக் காரணமாகிய
விகல்பஜாலம் = ராகம், த்வேஷம், மோகம் முதலான விகல்பங்கள்
ஸர்வம் = அனைத்தையும்
நிராக்ருத்ய = நீக்கி
ஆத்மானம் = ஆன்மாவை
விவிக்தம் அவேக்ஷ்யமான: = பற்றற்ற நிலையில் தனித்து நோக்கும்
த்வம் = நீ
பரமாத்ம தத்வே = பரமாத்ம ஸ்வரூபத்தில்
நிலீயசே = நிற்கிறாய் (எனக் கொள்க).



(க - ரை.)


   ஆத்மனே ! பிறப்பு இறப்புக்குக் காரணம் கோபம் முதலான தீய குணங்களேயாகும். அவைகளை அறவே அகற்றி ஆன்ம சிந்தனையை மேற்கொள்ளும்போது நீ பரமாத்ம நிலையை அடைவாய்.



** 30 **

ஸ்வயம் க்ருதம் கர்ம யதாத்மனா புரா,
    பலம் ததீயம் லபதே   சுபா சுபம்,

பரேண தத்தம் யதி லப்யதே ஸ்புடம்,
    ஸ்வயம் க்ருதம் கர்ம   நிரர்த்தகம் ததா. 



ஹே பவ்ய!  = பவ்யனே!
புரா = முற்பிறவியில்
ஆத்மனா = ஆன்மாவினால்
ஸ்வயம் = தனக்குத்தானே
யத் கர்ம க்ருதம் = எந்த நல்வினை தீவினைகள் செய்யப்பட்டதோ
ததீயம் = அதனுடைய
சுபா சுபம் பலம் = இன்ப துன்பங்களாகிற பலனை
லபதே = அடைகிறாய்
யதி = அவ்வாறின்றிப் பிறர் கூறுவதுபோல்
பரேண தத்தம் = வினைப்பயனை பிறரால் கொடுக்கப்பட்டு
லபதே = அடைவதாகில்
ததா = அப்போது
ஸ்வயம் க்ருதம் கர்ம = தான் செய்த நல்வினைத் தீவினைகள்
நிரர்த்தம் = வீணாகும் என்பது
ஸ்புடம் = சொல்லாமலே விளங்கும்.


(க - ரை.)

     பவ்யனே ! முற்பிறவியில் ஆன்மாவினால் செய்யப்பட்ட நல்வினை, தீவினைக்கேற்ப அவ்வான்மா இன்ப துன்பங்களை அடைகிறது. இவ்வியற்கைக்கு மாறாக நமக்குரிய இன்பதுன்பங்கள் பிறசக்தியால் அளிக்கப்பட்டவையெனில், ஒரு ஆன்மா தான் செய்த நல்வினை தீவினை வீணே என்பது சொல்லாமலே விளங்கும்.



** 31 **

நிஜார்ஜிதம் கர்ம விஹாய தேஹினோ,
      ந கோபி கஸ்யாபி ததாதி கிஞ்சன.

விசாரயந்நேவ மனன்ய மானஸ:,
      பரோ ததாதீதி  விமுச்ய சேமுஷீம்.  


தேஹின: = ஜீவனுக்கு
நிஜார்ஜிதம் கர்ம விஹாய = தான் செய்த நல்வினை தீவினைகளேயன்றி
கோபி = யாரும்
கஸ்யாபி = எவருக்கும்
கிஞ்சன ந ததாதி = நல்வினை தீவினை பலன்களைக் கொடுக்கமுடியாது. (ஆகவே)
பர: ததாதி இதி = பிறர் கொடுப்பதாக்க் கருதும்
சேமுஷீம் = எண்ணத்தை
விமுச்ய = விட்டு
அநன்யமானஸ: = ஒருமித்த மனமுடையவனாகி
விசாயன்னேவம் = இவ்வாறு தியானிப்பதன் மூலமே நற்பயனைப் பெறுவாய் எனக்கொள்க.


(க - ரை.)

     ஒவ்வொரு ஜீவனும் தான் செய்த நல்வினை தீவினைக்கேற்ப பயனை அடைகின்றது. இப்பயனை பிறர் கொடுக்கமுடியாது என்ற உண்மையை அறிந்து தனித்த மனதுடன் தூய எண்ணத்தோடு ஆன்மாவை தியானிப்பதன் மூலமே இருவினைகளின் தொடர்பு நீங்கி நற்பயனைப் பெருவாய்.


**  32  **

யை: பரமாத்மா அமித கதிவந்த்ய:,
      ஸர்வ விவிக்தோ  ப்ருசமனவத்ய: .

சஸ்வததீதோ மனசி லபந்தே,
       முக்தி நிகேதம்  விபவவரம் தே.  




அமிதகதிவந்திய: = ஸ்ரீ அமிதகதி ஆசாரியரால் வணங்கப்படுபவரும்
ஸர்வ விவிக்த: = அகப்பற்று, புறப்பற்று அனைத்தையும் விட்டவரும்
ப்ருசம் அனவத்ய: = முற்றிலும் குற்றமற்றவரான
பரமாத்மா = (பரமாத்ம ஸ்வரூபத்தை அடைந்த) ஜினேஸ்வரன்
யை: = எந்த பவ்ய ஜீவன்களால்
சஸ்வத் = எக்காலும் (என்றும்)
மனசி அதீத: = மனதில் தியானிக்கப்படுகிறானோ
தே = அவர்கள்
முக்தி நிகேதம் = வீடுபேறு என்னும்
விபவரம் = உயர்ந்த செல்வத்தை
லபந்தே = அடைகிறார்கள்.


(க - ரை.)

     எல்லா பற்றின்றும் நீங்கியவனும், குற்றங்களில்லாதவனும், வீடுபேறு பெற்றுயர்ந்தவனுமாகிய ஜினேஸ்வரனை, முனி அமிதகதி ஆசாரியரால் துதிக்கப்பட்ட இத்தோத்திரப் பாக்களால் எவர் பாடி வணங்குகிறார்களோ அவர்கள் வீடுபேற்றைப் பெறுவார்கள்.



** 33  **

இதி த்வாத்ரிஸதா வ்ருத்தை:
    பரமாத்மான மீக்ஷதே


யோsநன்ய கத சேதஸ்கோ,
    யாத்யஸௌ  பதமவ்யயம்.  


இதி = இவ்வாறு
த்வாத்ரிம்சதா = முப்பத்திரண்டு
வ்ருத்தை: = பாடல்களால்
ய:  = எவர்
அனன்யசேதஸ்க: = ஒருமனப்பட்டு
பரமாத்மானம் = ஜினேஸ்வரனை
ஈக்ஷதே = காண்கிறானோ
அந்த ஜீவன்
அவ்யயம் பதம் = அழியாத முக்தி உலகை
யாதி = அடைகிறான்.



(க - ரை.)

     எவர் இந்த 32 பரிசுத்த வேண்டுகோளையும் பாராயணம் செய்து அருகப்பெருமானை தினந்தோறும் துதிக்கின்றார்களோ, அவர்கள் என்றும் அழியாத இன்பம் நிறைந்த வீடுபேற்றைப் பெறுவார்கள்.



                 சுபம்.

No comments:

Post a Comment