Thiruvempaavai - திருவெம்பாவை



சமணர் திருவெம்பாவை




அவிரோதி நாதர் அருளியது



Jain United News Centre வாட்ஸ் அப் குழுவில் திரு. ரவிச்சந்திரன் , போளூர் அவர்களால் தினமும் அஞ்சல் செய்யப்பட்டதின் தொகுப்பு.



மயிலையில் கோயில் கொண்டுள்ள நேமிநாத தீர்த்தங்கரர் மீது அவிரோதி நாதர் பாடிய தீந்தமிழ் பாடல்கள் திருவெம்பாவை என்று விளிக்கப் பெறுகிறது. இப்பாடல்களில் சமண தீர்த்தங்கரர்கள் பெருமையும் அறமும் உரைக்கப் பெறுகிறது.

மார்கழி மாதம் பிறக்கிறது, பெண்கள் கூடி புனலாடி அருகனை ஏத்தி நோன்பு நோற்க்க முடிவெடுக்கின்றனர், அதிகாலையில் துயில் நீங்கிய பெண்கள் தங்கள் சகிமாரை துயில் எழுப்பி நீராட அழைக்கும் முதல் பாடல்


மார்கழி # 1

மூவா முதல்வன் உலகம்முழுதுணர்ந்த
தேவாதி தேவன் திருநாமம் யாம்பாடப்
பாவாய்நீ கேட்டிலையோ பைங்கண் துயிலுதியோ
பூவாரு மென்கழல்வள் போற்றியபொங்கு ஒலிபோய்த்
தேவாயிற் கேட்டலுமே தேர்ந்துநெஞ்சு சோர்ந்தயர்ந்து
பூவார் அமளிப் புலம்பப் புரண்டிங்கன்
ஓவா மனத்தில் உணர்விலா ஓவியம்போல்
ஆஆ!யென் தோழி பரிசேலோர் எம்பாவாய்.


மூப்பும் பிணியும் இல்லாத முக்காலமும் அறிந்த தேவர்களும் பணியும் அருகனை போற்றி நாங்கள் பாடும் பாடல் உன் செவிகளில் விழவில்லையா ? இப்படி உறங்குகின்றாயே...எங்கும் போற்றி துதிகள் ஒலி எழும்ப இப்படி பஞ்சணைமேல் பாசம் வைத்து உணர்வு இல்லாத ஓவியம் போல் கிடக்கின்றாயே...எழுந்து வா அருகன் தாள் பணிந்து நீராடலாம் என்பதாய் அமைந்த பாடல்

---------------

மார்கழி # 2


கோபங் கடிந்துஎண் குணத்தானுக்கு அன்பாகிப்

பாபங்கள் நீங்கப் பணிந்தே இராப்பகலும்

சாபத் துணவிழியாய்! தாதவிழ் பூவணைமேல்

சோபங்கள் வைத்துனையோ சொல்லாய் துடியிடையாய்

லோபத் தடமிதுவோ உம்பரெல்லாம் ஏத்தரிய

தூயமலர்ப் பொற்பாதந் துன்பறத் தந்துருளும்

தீபங் குடியமர்ந்த செல்வன் சிறந்தபுகழ்

தாபந் தணிந்தோத வாரேலோர் எம்பாவாய்



வில்லையொத்த புருவத்தோடு கூடிய இரண்டு கண்களை உடைய பெண்ணே, மலர்தலால் மகரந்தப் பொடிகளை அவிழ்க்கும் மலர்களைப் பரப்பியுள்ள படுக்கையில் உன்னுடைய இரக்கங்கள வைத்தனையோ? இந் பூம்படுக்கை கடும் பற்று வைத்தற்குரிய இடமோ? சொல்வாயாக: கோபத்தை விலக்கி எட்டு குணங்களையும் தனக்கு உடைமைப்பொருளாக ஆக்கிக் கொண்ட இறைவன்பால் இரவும் பகலும் அன்புடையவர்களாகிப் பணிந்து, தேவர்கள் எல்லோரும் துதித்தற்கு அரிய பரிசுத்தமான் மலர் போன்ற அழகிய பாதங்களைப் பிறப்பு இறப்புகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கத் தந்தருளுகின்றவனாகிய தீபங்குடியென்னும் திருப்பதியின்கண் எழுந்தருளியுள்ள செல்வனாகிய ஸ்ரீரிஷப தீர்த்தங்கரது சிறந்த புகழை மனத்தின் வெப்பம் தணிந்து பாடுவதற்கு வருக.

--------------

மார்கழி # 3


பள்ளி உணர்ந்திலையோ பாவாய்நீ முன்வந்தென்

வள்ளல் அறவாழி நாதன் மலரடியை

உள்ளமருளி உகந்தே கடைதிறவாய்

கள்அவிழ் பூம்பிண்டிக் கடவுள் பழவடியீர்

தெள்ளிய்சீர்ப் புத்தடியோம் தேரும் திறம் அருளீர்

ஒள்ளியீர் அன்பாலுடையீர் அறியோமோ

வெள்ளியசீர் மனத்தார் வீரன் அடிபரவி

எள்ளிமையும் இல்லாது எமக்கேலோர் எம்பாவாய்


தேன் பெருகும் மலர்களையுடைய அசோக மரத்தின் கீழ் வீற்றிருக்கும் இறைவனுடைய பழமையாகிய அடியீர் (அவ்விறைவனிடத்தில் வைத்த) அன்பினால் நீர் எல்லா நலன்களையும் உடையீராய் இருக்கின்றீர்: உமது மேன்மையை அறிந்திலமோ? (அறிந்துள்ளோம்) புதிய அடியவர்களாகிய எமக்குத் தூய்மையையுடைய சிறந்த மனத்தினையுடையவர்களுக்கே உரிய அவ்வீரனுடைய அடிகளக் குறைவின்றி (முறைப்படி) துதித்து உள்ளம் தெளியும் வகையை அருள்வீராக. பாவாய் ( நீ இன்னும்) துயில் உணர்ந்திலையோ? என் வள்ளலாகிய அறவாழி நாதனுடைய மலர் போன்ற அடிகளை உள்ளத்தில் கொண்டு விரும்பி முன் வந்து கடைதிறவாய். 


---------------------


மார்கழி # 4


நன்நித் திலநகையாய் நாணாத் துயிலுதியோ

மின்னொத்த இடைமடவார் வீதிதொறும் வந்தாரோ

உன்னிக்கொண்டு உள்ளவாறு ஓதுவோம் அவ்வளவும்

பன்னித் துயின்றவமே பல்காலும் போக்காதே

பொன்னுக்கு ஒளியானைப் போத விழுப்பொருளைச்

சென்னிக் குறவணங்கிச் சேவித்து அறம்பாடி

வன்னித்து உளமுருகி வாழ்த்துகைக்கு நீயேவந்து

என்னைப்பரிசு பரிசேலோர் எம்பாவாய்!


நல்ல முத்துக்களைப் போன்ற பற்களை உடையாய் (நாங்கள் வந்து நின்றும்) நாணாமல் துயில்கின்றாயோ? என்று முன்நின்று எழுப்புகின்றவள் கூறப்படுக்கையில் இருப்பவள் நான் துயிலவில்லை: மின்னலைப் போன்ற இடையையுடைய மடவார்கள் ஒவ்வொரு வீதியினின்றும் வந்தார்களோ சொல் என்று வினவ எழுப்புகின்றவள்.ஒவ்வொரு வீதியினின்றும் பெண்கள் வந்தார்களோ என்பதனை நன்றாய்ப் பார்த்துத் தெளிந்து உள்ளபடி சொல்லுவோம்: அதுவரையும் நீ துயின்று பயன் உறுதற்குரிய உன் நெடுங்காலத்தைப் பயனின்றிப் போகவிடாது. பொன்னின்கண் ஒளிபோற் நிறந்தவனைக் கேவலஞானம் என்னும் மேன்மையாகிய பொருளாய் இருப்பவனைச் சேவித்துச் சென்னியினால் பொருந்த வணங்கி, அக்கடவுள் அருளிய ஒழுக்க நெறியை பாடி அவற்றைச் சிறப்பித்து (அக்கடவுளை) வாழ்த்துதற்கு எம்பால் நீயே வர உரிய தன்மை ஏன்?

------------

மார்கழி # 5


வானவர்கள் ஏத்தரிய நான்மறையின் மெய்ப்பொருளை

தானறிவோம் என்னுந் தறுகண்மைத் தான்பேசில்

தேனூறு செவ்வாய்த் திருவே கடையறிவாய்

வானே நிலனே வளியே எரிபுனலே

தானே உணரும் தனையளித்து ஆட் கொண்டருளும்

ஆனந்தன் ஆகும் அருகா வருகவென்று

ஊனே உருக உளமுருக ஓதியபின்

ஏரார் பதம்பெற்று உயிரேலோர் எம்பாவாய்!


வானவர்களால் (இத்தன்மயன் என்று கூறித்) துதித்தற்கு அருமையான நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாய் இருப்பவனை நாமறிவோம் என்னும் அஞ்சுதலில்லாத சொற்களை நீ தானே பேசின். தேன்சுரக்கும் சிவந்த வாயினையுடைய திருமகள் போலும் அழகையுடைய மாதே. முடிவாக நாம் செய்தற்குரியதை நீ அறிவாயாக: வானும், நிலனும், காற்றும், நெருப்பும் புனலுமாகிய ஐந்து பூதங்களயும் தானே உணரும் அவன் தன்னை, உன் வடிவத்தை எங்களுக்கு கொடுத்து எங்களை ஆட்கொண்டு அருளும் ஆனந்த வடிவனாகிய அருக தேவனே எங்கள் பால் வருக. என்று உடல் உருகவும், மனம் உருகவும் ஓதியதின் உயிரானது அழகு பொருந்திய பதத்தைப் பெற்று (இன்பமுறும்).

-----------

மார்கழி # 6


வாளனைய கண்மடவாய் வந்து நீஎங்களை

நாளை எழுப்புவது என்றலும் நாணாதே

மீளவும் மெய்ம்மறந்து

வீணே துயிலுதியோ

வேளை முனிந்தானை விண்ணோர் பெருமானுக்கு

ஆளாகி நாமிங்கு அடியிணைகள் தாம்பாட

நாளாயும் நீமறந்து நண்ணாது உறங்குதியோ

கேளாய் உனக்குக் கிடையாத கேவலியை

ஏளாய் எமக்கும் இறைஞ்சேலோர் எம்பாவாய்


வாள்போன்ற கண்களையுடைய மாதே (நேற்றுவந்து) நாளை உம்மிடம் வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும் நாணமடையாமல், மீண்டும் மெய்மறந்து காலம் வீணாகும்படி துயில்கின்றாயோ? மன்மதனை வெறுத்து, தேவர்களுக்குப் பெருமானாகிய நமது இனிய இறைவனுக்கு நாம் இங்கு ஆட்செய்பவர்களாய் பாத சேவை செய்து பாடுவதற்கேற்ற மார்கழி மாத முதல் தேதி வந்துள்ளதால் அதனை மறந்து நீ எம்பால் வராமல் துயில்கின்றனையோ? நாங்கள் சொல்வது கேட்பாயாக. கிடைப்பதற்கரிய கேவல ஞானத்தையுடைய அருகப் பெருமானை நீ வந்து உன் பொருட்டு மட்டும் அன்றி எங்கள் பொருட்டும் வணங்குவாயாக.
---------------

மார்கழி # 7


அனாதி நீதனை ஆகமத்தின் மெய்ப்பொருளைச்

சிநாலயம்போல் எங்கும் சிறந்த சிநவரனை

மனாலயங்கள் எங்கும் மகிழ்ந்த மறைப்பொருளைக்

கனாவினுநா மறவா காரணற்கே ஆளாவோம்

அநோகமும் தானாய் அணுவுக்கு அணுவாகி

முனீந்திரனாய் நின்றார்க்கு முன்னே உரைசெய்வோம்

வினாசங் கொடுத்து விரதங்கள் தேறுவோம்

நீனாகங்கள் தீரும் பரிசேலோர் எம்பாவாய்


மடமாதே, ஆதியும் அந்தமுமில்லாதவனும், ஆகமங்கள் கூறும் உண்மைப் பொருளானவனும் சிநாலயம்போல் எங்கும் சிறந்து விளங்கும் சிநவரனும், அன்பர்களுடைய மனக்கோயில்களில் எல்லாம் மகிழ்ந்து வீற்றிருக்கும் மறைப்பொருளாய் இருப்பவனும், நாம் கனவிலும் மறவாத காரணனாய் இருப்பவனும் ஆக்ய இறைவனுக்கு அடியார்களாவோம் எல்லாப் பொருளும் தானேயாகி அணுவுக்கும் அணுவாய் நின்ற அந்த இறைவனுக்கு முன்னே சென்று நம் கருத்தைச் சொல்வோம். நமது உயிர்களின் நலங்கள் அழிதற்கு காரணமாயுள்ள பாவச்செயல்களை ஒழித்து நாம் ஏற்று செய்வதற்குரிய விரதங்களைத் தெளிந்து அறிவோம். உன்னுடைய பாவங்கள் நீங்குவதற்கு இவை உரிய பண்புகளாகும்.

--------------
மார்கழி # 8


வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்

பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்

தாரிணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த

வீரியனார் பாடலோ வீதிதொறும் கேட்டிலையோ

காரிகையாய் நீஇன்னும் கண்கள் விழித்திலையோ

பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ

மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த

ஈரேழ் புவிக்கு இறையைப் பாடலோர் எம்பாவாய்.


கோழிகள் கூவவும், வரிகளை உடைய வண்டுகள் இசையை பாடவும் முரசமும் சங்கமும், மற்றைய வாத்தியங்கள் முழக்கம் செய்யவும், மலர்கள் உள்ள அசோக மரத்தின் நிழலில் தாமரை மலரின் மேல் நடந்தருளிய வீரியனாயரைப் பற்றிய பாடல்கள் வீதிகள் தோறும் பாடுவதால் உண்டாகும். ஒலியை, அழகிய பெண்ணே, நீ கேட்கிலையோ? அந்த பார்சுவப்படரிடத்து உனக்குள்ள அன்பும் இவ்வளவுதானோ? மன்மதனுடனே எமனையும் தன் முன்பு வராமல் இருக்கும்படி கோபித்துத் தடுத்து பதினான்கு உலகங்களுக்கு இறைவராகியவரை எழுந்த்து வந்து பாடுவாய்.
--------------


மார்கழி # 9


வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்

பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்

தாரிணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த

வீரியனார் பாடலோ வீதிதொறும் கேட்டிலையோ

காரிகையாய் நீஇன்னும் கண்கள் விழித்திலையோ

பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ

மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த

ஈரேழ் புவிக்கு இறையைப் பாடலோர் எம்பாவாய்.



கோழிகள் கூவவும், வரிகளை உடைய வண்டுகள் இசையை பாடவும் முரசமும் சங்கமும், மற்றைய வாத்தியங்கள் முழக்கம் செய்யவும், மலர்கள் உள்ள அசோக மரத்தின் நிழலில் தாமரை மலரின் மேல் நடந்தருளிய வீரியனாயரைப் பற்றிய பாடல்கள் வீதிகள் தோறும் பாடுவதால் உண்டாகும். ஒலியை, அழகிய பெண்ணே, நீ கேட்கிலையோ? அந்த பார்சுவப்படரிடத்து உனக்குள்ள அன்பும் இவ்வளவுதானோ? மன்மதனுடனே எமனையும் தன் முன்பு வராமல் இருக்கும்படி கோபித்துத் தடுத்து பதினான்கு உலகங்களுக்கு இறைவராகியவரை எழுந்த்து வந்து பாடுவாய்.                       

------------

மார்கழி # 10


உம்பர் பெருமான் உலகம் முழுதுணர்ந்தான்

செம்பொன் எயில்மூன்று உடைய சிநவரனார்

வெம்பு வினையகற்றி வேதம் பொழிந்தருளும்

சம்பு அருகன் சகல செனன் அனந்தன்

விம்ப வடிவன் உயர்வீரன் அசோகத்தான்

நம்பெருமான் கோயில் நயந்த பிணாப்பிளைகாள்

தம்பேரேது ஊரேது தமரார் அயலார்

எம்பரிசால் பாடும் பரிசேலோர் எம்பாவாய்


தேவர்கட்குத் தலைவனும், உலகம் எல்லாம் உணர்ந்தவனும், செம்பொன்னாலானதைப் போன்ற அரண்களாகிய நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மூன்றையுடைய சினவரனும், கொடிய வினைகளப் போக்கி வேதங்களை மொழிந்தருளிய நித்திய சுகமளிக்கும் அருகனும் சகலசெனனும் முடிவில்லாதவனும், ஒளிவடிவனும், சிறந்த வீரமுடையவனும், அசோகமரத்தின் நிழலில் வீற்றிருப்பவனும், நம்பெருமானுடைய கோயிலை விரும்பிய பெண்மணிகளே, அப்பெருமானுக்கு ஊர் ஏது? சுற்றத்தார் யார்? அயலார் யார்? ஆகையால் அவனை எங்கனம் பாடுவது? நம் முன்னோர் கொண்ட விதமேயாகும்.

--------------

மார்கழி # 11


தண்ணென்ற பொய்கை புகுந்து சலசலென

வண்ண மலர்க்கையால் குடைந்து குடைந்தாடி

நண்ணு மலர்ச்சேவடியை நாவார நாம்பாடி

மண்ணுலகில் வந்து பிறவா வகையளிப்பாய்

கண்ணே கருத்தே கடவுளே நாரணனே

எண்ணே எழுத்தே இசையே இயல்மொழியே

விண்ணோர் பிரானே விதியே வினைபயனே

எண்ணும் வகைபாடி ஆடேலோர் எம்பாவாய்


பெண்ணே குளிர்ந்த பொய்கையில் புகுந்து அழகிய வண்ணங்களாலாகிய மலர் போன்ற கைகளால் சலசல என்னும் ஒலி எழுப்பி, குடைந்து குடைந்து நீராடி அடியார்கள் கூடும் மலர்போன்ற சேவடிகளை நாங்கள் பாட, மண்ணுலகில் வந்து இனிபிறவாத வகையை எங்களுக்கு அளிப்பவனே, கண் போன்றவனே, எங்கள் கருத்தாய் இருப்பவனே. கடவுளே, நாரணனே, கணித நூலாயிருப்பவனே, இயல் தமிழாயிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, வாழ்வுக்கு வழிவகுத்தவனே வினைகளின் பயனை அறிந்தவனே என்று அடியவர்கள் எண்ணும்படி, அவனுடைய குணங்களைப்பாடி ஆடுவோம்.

-------------



மார்கழி # 12


நீத்திப் பிறப்பறுக்கும் நேசத் துடன்பாடிப்

பூத்தபொழில் சூழ்கச்சிப் புங்கவனைப் புண்ணியனை

ஏத்தும் குவலயமும் எந்திசையும் அண்டர்களும்

பாத்துய்யு மாறு படைத்தளித்துப் பற்றழித்து

நாத்தழும்ப ஏத்தி நடஞ்செய் சிலம்பலம்பக்

கோத்த மணிமுத்தும் குழலும் மணங்கமழ

வாய்த்த மலர்ப்பொய்கை மறுகக் குடைந்தாடி

ஏத்தும் வகைபாடி ஆலேலோர் எம்பாவாய்,


யான், எனது என்னும் பற்று அறுத்து தியாக உணர்வினால் இப்பிறப்பறுக்கும் ஆசையோடு, மலர்ந்த பூக்களைக் கொண்ட மரங்களால் சூழ்ந்த காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் நந்தியுடையவனை, புண்ணியனை பூமியும், எட்டு திக்குகளும், தேவர்களும், தாம் உய்யுமாறு ஏத்தும், ஆகையால் நாமும் நாக்கில் தழும்பேற இவ்விறைவனை ஏத்தி நடனம் செய்யும் பாதச்சிலம்புகள் ஒலிக்கவும், மாலையாக கோத்த அழகிய முத்துக்களும், கூந்தல்கள் வாசனை வீசவும், நன்கமைந்த தாமரைத் தடாகம் கலங்கவும், நீரில் குடைந்தாடி மெய்யன்பர்கள் ஏத்தும் விதம் பாடி ஆடுவோம்.

----------

மார்கழி # 13


எங்கோன் அருகன் அசலன் நெறியமலன்

செங்கோ(ல்) நடத்தும்இறை சேமத் துணையரங்கன்

வங்கார வண்ணன் வரதன் அகிலகுணன்

சங்கார காலன் சகல வினையறுக்கம்

சிங்கா சனத்திருந்த செல்வன் திருந்தடியைப்

பொங்கார்வம் தீரப் புலம்பிப் புகழ்பாடிக்

கெங்கா சலமுதித்த கேவலமாம் பொய்கைதனில்

பங்கே ருகப்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்


நமக்கு தலைவனாகிய அருகனும், சலிப்பற்றவனும் நன்னெறியின் கண் நின்றவனும், மலங்கள் அற்றவனும், எங்கும் செங்கோல் செலுத்தும் இறைவனும், உயிர்கள் இன்பம் அடைவதற்கு துணையாயிருப்பவனும், ஞான சபையில் இருப்பவனும், பொன் போன்ற நிறத்தையுடையவனும், முக்தி அளிப்பவனும், எல்லாவித நற்குணங்களைய் டையவனும், அழிக்கும் தொழிலுக்கு எமனாய் இருப்பவனும், எல்லா வினைகளையும் நீக்கி அருளும் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் செல்வனும் ஆகிய உயிர்கள் திருந்துதற்கு காரணமாகிய அருகனுடைய அடிகளின் புகழை மேன்மேலும் பெருகும் ஆசையானது தணியும்படி பாடி அவ்வன்பின் பெருக்கால் அழுது. ஞானமாகிய கங்கையினின்றும் தோன்றிய கேவல ஞானமாகிய தாமரைப் பொய்கையின் புனலில் (பாவாய் நீ) பாய்ந்து ஆடுக.


-----------------


மார்கழி # 14


மகரக் குழலாட மாணிக்கப் பூணாடச்

சிகரக் குழலாடச் செறிவண்டு இசைபாட

முகரப் புலனாடி முக்குடையான் தாள்பாடி

விகலக் கவிபாடி வேதப் பொருள்பாடிச்

சகசச் சிநத்திறைவன் தன்னனைய தாள்பாடிப்

புகலாம் பதியருகன் பொற்றா மரைபாடி

இகலார்ந்ந்து எனையளித்த எந்தையான் தாள்பாடிப்

பகரும் பிறப்பறவே பாடேலோர் எம்பாவாய்


நங்காய் மகரந்தப் பொடியுடைய கூந்தல் ஆடவும், மாணிக்ககங்களைப் பதித்த அணிகள் ஆடவும், தலையிலுள்ள குழல் அவிழ்ந்து ஆடவும், மலர்களில் மொய்த்திருக்கும் வண்டுகள் ஒலிக்கும்படி சங்குகளையுடைய பொய்கையில் நீராடி மூன்று குடைகளையுடைய இறைவனுடைய திருவடியைப் பாடி, நமது குறைப்பாட்டைக் கூறும் கவிகளைப் பாடி, வேதப் பொருள்களைப் புகழ்ந்து பாடி, சகல சிநர்களாகிய தீர்த்தங்கரர்களுக்கு முதல்வாரம் ஆதிபகவனைத் தனக்குத் தானே ஒப்பாகிய பாதத்தைப் பாடி எல்லா உயிர்களுக்குக் புகலிடமாகிய அவ்வருகனது அழகிய தாமரையைப் பாடி தன் ஞானமாகிய வன்மையால் என் மனத்திண் கண் பொருந்தி என்னைத் தீவினை அணுகாமல் காத்தருளிய எனது நலத்தினை விரும்புவதால் என் தந்தை போன்றவனாகிய எப்பொருமானுடைய பாதங்களின் புகழைப் பாடி, யாவர்க்கும் துன்பத்தைக் கொடுக்கும் பிறப்பாகிய கட்டை அறத்தற்கு அப்பிரானைப் பாடுவோமாக.

-------------- 

மார்கழி # 15


அருளால் ஒருகால் அறவாழி ஆன்ற

பொருளான சோதி புலம்பி மிகப்பொங்கி

உருகீர் பிராணென்று உணர்வீர் கண்ணீர்மலர்

சொரியார் உறவனையார், வானவரைத் தாள்பணியார்

குருநாதற்கு அன்பாய்க் குழுழைந்து வசமாகி

மருளாம் பிறப்பறுத்து வாழ்விப் பவர் அவரோ

இருளார்ந்த பூங்குழலீர் இசையார் அவிரோதி

பரிசார்ந்த பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

இருள் போன்ற கருநிறம் பொருந்திய அழகிய கூந்தலை உடைய மாதர்களே, இந்திரன் முதலிய தேவர்களுடைய அடிகளை வணங்காதவர்களாயிருக்கும் அவர்கள, அத்தேவர்களுக்கு அன்பாய்க் கண்களினின்றும் நீரைச் சொரியார்கள். அவர்களுக்கு மலர்களைச் சொரியார்கள். அவர்களுடைய குருநாதராகிய அருகர்பால் அன்புடையவர்களாய் மனம் குழைந்து அவ்விறைவனுடைய வசத்தினராய் மயக்கம் பொருந்திய பிறப்பாகிய தளையை அறுத்து நம்மையும் வாழ்விப்பவர்கள் ஆவார்கள். அத்தன்மையை நீங்களும் அடைதற் பொருட்டு அருளாலும் அறவழியாலும் நிறைந்த பொருளான ஒளிவடிவையுடைய அவ்விறைவனே நம்பெருமான் என்று உணர்ந்து ஒரு போதாயினும் அன்பு மிகப் பொங்கி வளரப்பெற்று மனம் உருகிப் புலம்பிப் புகழ் அமைந்த அவிரோதி (பகைமை இல்லாதவர்) என்பவருடைய குளிர்ந்த தன்மை நிறைந்த மலர்களை உடைய பொய்கையில் நீராடுவீர்களாக.


--------------------------


மார்கழி # 16


பிறவிப் பெருங்கடலை நீந்திய பெய்வளையாய்

உறவுத் தமர்வாழும் உச்சந்த வாழ்மலைமேல்

அறமிக வுஞ்செய்யும் அம்மை அடியிணைகள்

நறைமிக்க பூவணயால் நல்கிப் பொழிந்தேத்திக்

கறவைத் திரள்காத்த கார்வண்ண னுக்குஇளையான்

நிறமிக்க நேமிசிநன் நீள்பதங்கள் தான்பாடித்

திறமுற்ற மாமுனிவன் சீரருளால் எங்கும்

நிறையப் பொழியும் மழையேலோர் எம்பாவாய்


கையில் வளைகள் அணிந்த மாதே, பிறவியாகியப் பெரும் கடலைக் கடந்தவனும், உறவினராகிய உத்தமர்கள் வாழும் ஊர் ஜயந்தமலை மேல். அறவுரையை மிகுதியாகச் செய்பவனும், கோவர்த்தனமலையேந்தி பசுக்களைக் காத்த மேகம் போன்ற கரிய மேனியுடைய கண்ணனுக்கு இளைய சகோதரனான நேமிநாத சின்னனுடைய அம்மை போன்ற புகழ்மிக்க பாதங்களை மணமிக்க பூவணையால் பொழுந்து ஏத்திப்பாடினால். ஞானவன்மை பொருந்திய அம்முனிவனது சிறந்த அருளாலே மேகம் மழையினால் ஆறு, ஏரி, நீர் நிறையும்படி பெய்யும். ஆதலால் நீ பாடுவாயாக.

----------------- 

மார்கழி # 17


இந்திரர்கள் பாலும் இருடிகள் தம்பாலும்
அந்தவர்கள் தம்மில் அடியோங்கட்கு அன்பாகி
கொந்தலவரும் பூங்குழலாய் கோமான் நமையாள
வந்துநம் வாய்கள்தோறும் வாழ்த்தி மகிழ்ந்தருளீர்
அந்தமில் ஆகமங்கள் ஆராய வந்தருளும்
விந்தை பரனருகன் வீரனடி பரவிச்
சுந்தர மாகத் துதித்துத் தொழுதுஏத்தி
நைந்துருகிப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்*


கொத்துகளில் மலரும் பூக்களையணிந்த பெண்ணே, இந்திரர்களுள்ளும் முனிவர்களுள்ளும், சிறந்த தவத்தினையுடையவர்களைக் காட்டிலும், அடியவர்களாகிய நமக்கு அன்புடையவனாகிய, நமது தலைவனாம் அருகன் நம்மை ஆட்கொள்ளும் பொருட்டு நாம் படுக்கைவிட்டு எழுந்து வந்து நம் வீடுதோறும் வாழ்த்தி மகிழ்ந்தருளுவாயாக முடிவிலாத ஆகமங்களை நாம் ஆராய்வதற்கு அருள் புரியும் அற்புதத்தையுடைய பரனும், அருகனும், மகாவீரனுமாகிய அவ்விறைவனுடைய பாதங்களை துதித்து வணங்கி ஏத்துதல் செய்து மனங்கரைந்து மலர்களுடைய பொய்கையில் புகுந்து நீராடுவாயாக
------------- 


மார்கழி # 18


ஆதி அருகன் அடியிணகள் தான்பரவச்

சோதி எரிமெளலித் தொன்மணிகள் தூற்றினபோல்

ஓதத்து எழுகதிரோன் ஒளிவந்து மிக்கெறிப்பச்

சீதத்த வண்ணமலர்ச் செதாமரை சிதறப்

பேதித் துலகெங்கும் பெண் ஆண் அலி பிறவாய்

மேதினியாய் நீராய் வியனாய் எரிவளியாய்

ஓதிய நேதத்து உறைகின்ற உம்பர்பிரான்

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

உலகின்கண் எல்லா இடங்களிலும், பெண்ணும், ஆணும், அலியும் பிறவும் பஞ்சபூதங்களாகிய பூமியும், நீரும், ஆகாயமும், நெருப்பும், காற்றும், ஆகிய பேதங்களை உணர்ந்து, ஓதிய வேதத்தின் உறைகின்ற தேவர் பிரானாகிய ஆதிபகவன் தன்பாதத்தின் அருள் வன்மையைப்பாடி, அவனது இரண்டு திருவடிகளும் பரவும் பொருட்டு, ஒளிவீசும் கிரீடத்தின் கண் அமைந்த பழைமையாகிய மணிகள் பல வண்ணங்களைத் தூற்றினபோல், தன்னுடைய கிரணங்களைப் பரப்பிக் கடலினின்றும் தோன்றும் சூரியனது ஒளியானது வந்து பெருகி வீச, நல்ல நிறம்பெற்ற குளிர்ச்சியுடைய பொய்கையிலுள்ள செந்தாமரைகள் சிதறும்படி பொய்கையில் கடைந்து நீராடுவீராக


-------------- 

மார்கழி # 19


பக்திகள் செய்ய அறியோர் பலகாலும்

சித்தம் ஒன்றாகித் திருநாமங் கொண்டாடிக்

கொத்தலரி பூம்பிண்டிக் கோமானுக்க ஆளாகிப்

பொற் றாமரையில் புகுந்து துளைந்தாடி

எத்திசையும் போற்றும் இறைவன் அடிவணங்கி

உத்தமனை ஓதி உணராது உறங்குதியோ

ஒத்தொழுகி நற்பிறப்பை ஓர்ந்து மனமார

நித்திலம்சேர் பொய்கை ஆடேலோர் எம்பாவாய்.


எல்லா திக்குகளிலுமுள்ள பெரியோர்களும், கொத்துகளில் மலரும் மலர்களை உடைய அசோக மரத்தின் நிழலிலே வீற்றிருக்கும் இறைவனுக்கு அடியார்களாய் மனம் ஒருமகித்து அவன் திருநாமங்களைப் புகழ்ந்துரைத்துப் பொய்கையில் உள்ள தாமரை மலர்களுடன் கலந்து நீராடி வணங்கி பலகாலு பக்திபுரியும் விதத்தை நாம் அறியோம். பாவாய், அவ்விறைவன் தன் குணங்களைக் கூறும் நூல்களைக் கற்றும் உனர்ந்திடாமல் உறங்குகின்றாயோ? எங்களோடு சேர்ந்து ஒத்து ஒழுகிச் சிறந்ததாகிய மனித நற்பிறப்பின் இயல்பை உணர்ந்து முத்துக்கள் பிறக்கும் பொய்கையைல் மனமார ஆசையானது தணியும்படி நீராடுக.

-------------------- 


மார்கழி # 20


வாழி அருகன் மலர்த்தா மரையிரண்டும்

வாழியா மாகில் பலரிணைகள் தானாகும்

வாழியா மந்த மலர்ச்சே வடியிணைகள்

வாழிஎல்லா உயிர்க்கும் வண்ண மலரடிகள்

வாழிஎல்லா உயிர்க்கும் வாழ்வா மலர்த்தாள்கள்

வாழிய வானோர்கள் வணங்கு மலர்ப்பதங்கள்

வாழிஎமை ஆட்கொண்டு அருளுகின்ற புண்டிரிகம்

வாழி மலர்க்கழல் நீராடேலோர் எம்பாவாய்


அருக தேவனுடைய தாமரை மலர் போன்ற பாதங்கள் இரண்டும் வாழ்வனவாக. நீ வாழ வேண்டுமானால் அவ்வருக தேவன் மலர்ப்பாதங்கள் வாழ்ந்திடல் வேண்டும். எந்த மலர் போன்ற செம்மையான பாதங்கள் இரண்டும் வாழ்வு பெறுவனவாகும். எல்லா உயிர்களுக்கும் வீடாகிய வாழ்வுக்குக் காரணமாகிய மலர்போன்ற அவன் பாதங்கள் வாழ்வனவாகுக. தேவர்கள் வணக்கம் செய்யும் அவன் மலர்ப்பாதங்கள் வாழ்வானவாக. எங்களை ஆட்கொண்டு அருள்புரியும் அத்தேவனது தாமரை மலர்ப்பாதங்கள் வாழ்வனவாக. அவ்வருகனுடைய மலர்ப்பாதங்கள் வாழ மார்கழி நீராடுவாயாக.

---------------- 

மார்கழி # 21


முத்தன்ன வெண்ணகையாய் இன்னம் உறங்குதயோ

அத்தன் அமலன் அறிவன் அசோகத்தான்

சுத்தன் சுகதன் சுரர்மகிழும் எம்பிரான்

சித்தன் சிநவரந்தன் சேவடியை வாழ்த்துதற்கு

நத்தமர்கள் எல்ல நயந்துதி ஓதும்இசை

எத்திசையும் ஆர்க்கும் இசையும் உணர்ந்திலையோ

மைத்தடம் சேர்பொய்கை மறுகக் குடைந்தாடிப்

பத்துடைய நெஞ்சால் பாடேலோர் எம்பாவாய்



அத்தன், அமலன், அறிவன், அசோகத்தான், சுத்தன், தேவன் மகிழும் எம்பிரான், சித்தன் சிநவரன் என்று நாமங்கள் போற்றப்படும், அருகபிரானைத் துதியாமல் முத்தைப் போன்ற வெண்மையான பற்கள் உடையோய் இன்னம் தூங்கலாமோ? நமது தோழிகள் காரிய சித்திபெற நயந்து துதி செய்வதை உணர்ந்திலையோ? அழகு பொருந்திய பொய்கை கலங்க குடைந்தாடி, பக்தியுடைய நெஞ்சால் புகழ்ந்து பாடி நீராடுவாயாக.

----------------- 

மார்கழி # 22


மூவாத கோபங்கள் பள்ளியுணர் நன்னிலத்தில்

பாவாய் கேள்ஞானவர்கள் வாளனைய கண்மாதே

மேவும் அனாதி வாரணங்கள் உம்பர்பிரான்

தாவு கண்ணீர்நீத்த பிறப்பறுக்கும் எங்கோனைத்

தேவி மகரக் குழையால் அருளாலே

சேவி பிறவிப்போர் இந்திராதி அருகன்

பாவனையின் பக்திகள்செய் முத்தன்ன வாழியதாம்

தேவன் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்



தணியாத கோபங்களின் இயல்பை கற்று உணர்ந்த சினபள்ளி உள்ள நன்னிலத்தில் பிறந்த பாவையே! கவனமாய் கேள்: நன்ஞான முடையவர்களின் கூரிய கண் உடையமாதே: அனாதி வாகனமாகிய ஐராவத யானை மேவும் தேவர் தலைவன் வணங்கும் தியாகப் பண்புடன் கூடிய பிறப்பறுக்கும் நமது அருகனை, மகா குழையணிந்த ஸாஸன தேவிகள் அருளாலே, இந்திராதி தேவர்கள் எப்படி எல்லாம் தொழுது ஏத்துகிறார்களோ அதே முறையில் முத்தன்ன வாயால் துதி செய்து பக்தி பூசனை செய்து அருகனது திறம்பாடி நீராடுவாயாக.

---------------------- 


யாப்பங்கல விருத்தி எடுத்துக்காட்டுச் செய்யுள்)



கோழியுங் கூவின குக்கி லழைத்தன

தாழியும் ந்ணீலத் தடங்கணீர் போதுமினோ

ஆழிசூழ் வையத் தறிவ நட்யேத்தி

கூழை நனையக் குடைந்துங் குளிர்புனல்

ஊழியுண் மண்ணுவோ மென்றேலோர் எம்பாவாய்



கோழியும் கூவி, காக்கயினமும் அழைத்தன. குடங்களில் நீர் கொள்ள, நீலக் கண்ணுடைய பெண்ணே உடனே வா, கடல் சூழ்ந்த பூமியின் அறிவனை அடியேத்தி குளிர்ந்த புனலில் கூந்தல் நனைய குடைந்தாடி ஊழிகாலமாய் மண்ணுளோர் போற்றியவனைப் பாடி நீராடுவாய்.

No comments:

Post a Comment