பொதியா புதையலா


பொதியா புதையலா



கடவுளை மிகவும் நேசிக்கும் ஒருவன் ஒரு நாள் அவரிடம் சென்று, ங்கள் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்? என்றான்.

அடிப்படையில் இவன் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது.

கடவுள் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித் தான் அவன் கேட்டான்.

ஆனால் கடவுள் அவனிடம் அதிர்ச்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது! என்கிறார்.


வேறு எதையோ எதிர்பார்த்த அந்த அவனுக்கு கடும் அதிர்ச்சி. கடவுள் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று எதிர்பார்க்கவில்லை.

அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அவனுக்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப்பட்டிருந்தது.

எனவே தாம் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க கடவுள் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்கிறான். திறந்து பார்க்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கடவுளின் கட்டளைப்படி அதை தூக்கி சுமந்து அவர் செல்லுமிடங்கள் எல்லாம் செல்கிறான்.

நேரம் செல்ல செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அந்த மூட்டையை தூக்க முடியவில்லை.

கடவுள் உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீ என்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாயேகருணை கடலுக்கு இது அடுக்குமா?? என்று கோபித்துகொள்கிறான்.

உன் பலவீனத்தில் என் பலம் அடங்கியிருக்கிறது. கவலைப்படாதே உன் பக்கம் நானிருக்கிறேன். தைரியமாக நான் கூறும் வரை சுமந்துவா என்கிறார் கடவுள்.

மேலும் சில காலம் சென்றது.

சில இடங்களில் அவனால் தூக்க முடியாத போது கடவுள் தானும் தன் பங்கிற்கு ஒரு கை பிடித்து தூக்கி அந்த சுமையை பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர்கள் போய் சேரவேண்டிய இடம் வந்தது.

போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையை இறக்கி வை!! என்று கடவுள் கட்டளையிட, அந்த மூட்டையை பகவானின் முன் கீழே வைக்கிறான் .

மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா? என்று பகவான் புன்முறுவல் செய்தபடி கேட்க, அதற்காகவே காத்திருந்த அந்த அவன் ஆமாம், சீக்கிரம் கடவுளே என்கிறான் உரக்க.
கடவுள் அசைக்க முடிச்சுக்கள் தானே அவிழ்தும் மூட்டை தானே பிரிந்து கொள்கிறது. முதலில் கண்ணில் தெரிவது வைக்கோல் தான். ஆனால் வைக்கோல்களுக்கிடையே அரிய மாணிக்கங்களும் வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அது!!

இத்தனை காலம் பொறுமையுடன் நீ காத்திருந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!

அவனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. இன்ப அதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடவுளே……. என்னை மன்னித்துவிடுங்கள் என்று அவர் காலில் விழுகிறான்.

அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே என்று அவன் உருக கடவுள் அமைதியாக சிரிப்பை உதிர்க்கிறார்.

ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே கடவுளரால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது

மனிதனால் எதை சுமக்க முடியும் என்று கடவுளுக்கு தெரியும். அந்த அளவு சுமை மட்டுமே கடவுள் தருவார்.


அச் சுமையே ஒழுக்கம்.  இது  ஒவ்வொரு  மதத்தின் கடவுளுக்கும் பக்தனுக்கும் பொருந்தும்.


எனவே அவனை நம்புங்கள் முழுமையாக.




No comments:

Post a Comment