ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்


ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்





பழமையான அறநூல்கள் பல, தற்போது புதுபொலிவுடன் கிடைக்கப் பெற்றாலும், பழமையையும் எதிர்காலத்தில் வரும் தலைமுறையினர் அறியவேண்டும் என்ற சீரிய சிந்தனையுடன் "Jain united news centre" வாட்ஸ் அப் குழுவில்  பகிர்வு செய்வதையும், மற்றும் பல நூல்களை நேரடியாகவும் தமது இணையதளத்தில் சேமித்து அரும்பணியாற்றும் மன்னை. திரு.பத்மராஜ் ராமசாமி அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

         
அவ்வகையில் 1956 ஆம் ஆண்டு மோட்டூரைச் சேர்ந்த திரு. யசோதர நயினார் தம் தந்தையின் நினைவாக வெளியிட்ட ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்எனும் சிற்றிலக்கிய நூலை நாளை முதல் இக் குழுவில்  பதிவு செய்கிறேன். 


நூலாசிரியர், மற்றும் நூன்முகம் வழங்கியவர், நூலை வெளியிட்டவர் அனைவரையும் வணங்குகிறேன்.

         
அற உள்ளங்கள் இவ்வற அமுதத்தை பருகி ஆன்மநலன் அடைய வேண்டுகிறேன்.


***** 

ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் மயிலாப்பூர்ப் பகுதியைக் கடல்கொண்ட கி. பி. 1600-ஆம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 


தமிழ்ச்சமணர் தமிழர்க்கு அறமும், தமிழுக்கு இலக்கணமும் தருவதில் கவனம் செலுத்திவந்தனர். சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி போன்ற காப்பியங்களையும் பாடினர். அவர்கள் சிற்றிலக்கியங்களில் அதிக நாட்டம் காட்டவில்லை. என்றாலும், திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்ற நூல்களும் பாடியுள்ளனர். அந்த வகையில் பாடப்பட்ட சிற்றிலக்கியமே இந்தப் பிள்ளைத்தமிழ்.

ஆதிநாதர் விருஷபதேவர் என்பவர் விதனாபுரி என்னும் அயோத்தியில் இருந்துகொண்டு ஆண்ட மன்னர். சமணர். இந்தப் பிள்ளைத்தமிழ் இவர்மீது பாடப்பட்டது.



குறிப்புகள்


நூல் பிள்ளைத்தமிழ் இலக்கண மரபுப்படி 10 பருவம், 100 பாடல் என்று அமைந்துள்ளது.

சந்தப்பாடல்கள் பருவந்தோறும் மாறி வருகின்றன.

ஆதிநாதரைப் பிரமன், விஷ்ணு, சிவன் என்றே நூல் குறிப்பிடுகிறது.

ஆர்ப்பாகை, தஞ்சை, வாழைப்பந்தல், திருமலை, திருமயிலை, பறம்பாபுரி, திருக்கோயில் (தில்லை) ஆகிய ஊர்களைச் சமணத் திருப்பதிகளாகக் குறிப்பிடுகிறது.

சிறுதேர்ப் பருவத்தில் தேரின் உறுப்புகள் தருமச் சக்கரங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளன.


-------------------


நூன்முகம்


     தமிழகத்தின் தொன்மைச் சமயமாகிய ஜைனசமயம் தமிழ் மொழிக்கும், தமிழ் ஆக்கத்திற்கும், தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டுத் தமிழ்மொழியைச் சிறப்புறச் செய்துள்ளது என்பது வரலாற்றுலகம் அறிந்த உண்மை. அச்சமய அறிஞர் பெருமக்கள் இயற்றிய நூல்கள் அனைத்தும் அறிவிற்கு விருந்தளிப்பவனவாகும். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் வளர்த்தவர்கள் அவர்களே! அன்றியும் அவை மக்கள் நல மேம்பாட்டிற்கும், பண்பாட்டிற்கும் அடிப்படையாக விளங்குவன. இவ்வுண்மையை அறிந்த மேல்நாட்டறிஞர் 'கால்டுவெல்' துரைமகனார்  தம் நூலின் " சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கியது அரசியலில் அன்று; கல்வித்துறையிலும், அறிவுத்துறையிலுமேயாம். உண்மையில் அவர்கள் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் எனலாம் " எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.


      இவ்வளவு சிறப்பு வாய்ந்த அறிவுக் களஞ்சியங்களாகிய அறநூல்கள் அச்சிட்டு வெளிக்கொணர்வாரின்றி ஏட்டுப் பிரதிகளிலேயே மங்கிக் கிடப்பனவும், மறைந்து போயினவும் பலவாகும். இவ்வாறு ஏட்டுப் பிரதியாகக் கிடந்த நூல்களில் ஒன்றுதான் "ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்" என்னும் அரும்பெரும் நூலாகும். இந்நூலை ஏறத்தாழ இருபது ஆண்டுகட்குமுன் என் நண்பர் உயர்திரு மேல்மின்னல் சக்கரவர்த்தி நயினார் அவர்களிடம் ஓலைச்சுவடியும், அதன் கையெழுத்துப் பிரதியும் இருக்கக் கண்டேன்.

      ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் என்பது பகவான் ஸ்ரீ விருஷபதேவர் வரலாற்றைக் குறிப்பதாகும். பகவான் விருஷபதேவர் இவ்வுலகத்தின் முதல் தலைவராகவும், முதல் ஆசிரியராகவும், முதல் அறிவராகவும், முதல் முனிவராகவும், முதல் கலைஞராகவும் விளங்கினார் என்பது ஜைன நூல்களாலேயன்றி, ஏனைய ரிக்வேதம், பாகவதம், சிவபுராணம், ஸ்காந்தம் போன்ற வைதிக சமய நூல்கள் பலவற்றானும் அறியலாம். இவ்வரலாற்றுச் செய்தியை நீலகேசி ஆசிரியர், பகவான் விருஷபதேவரைத் தமது நூலில் வாழ்த்துகையில் "தலைவர்தம் தலைவர்க்கும் தலைவா"  "புலவர்தம் புலவர்க்கும் புலவா" "முனைவர் தம் முனைவர்க்கும் முனைவா"   " இறைவர்தம் இறைவர்க்கும் இறைவா" எனப் பலவாறாகப் போற்றியிருப்பதாலும் காண்க.


    பகவான் விருஷபதேவரே அகர முதலாகிய எழுத்துக்களையும், ஒன்று முதலாகிய எண்களையும் தோற்றுவித்த முதலாசிரியர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கின் திறன்களைத் தெளிவுற உலகுக்கு அறிவித்த முதல் அறிவன். எனவே அப்பெருமகனை ஆதிபகவன், ஆதிநாதர், ஆதிமூர்த்தி, ஆதிதேவர், ஆதிபிரம்மா, கைலாசநாதர் என்றெல்லாம் தமிழ் நூல்கள் போற்றுகின்றன. திருக்குறள் ஆசிரியர் 'ஆதிபகவன்' எனப்போற்றும் 'வாலறிவனும்' இவரே என சிறப்புத்துள்ளார்., இம்மாபெரும் தலைவரைப் போற்றுவதே இந்நூலின் குறிக்கோளாகும். இந்நூலாசிரியரின் காலம், இடம், பெயர் ஆகியவற்றை அறிந்துகொள்ள இயலவில்லை. எனினும் மிகத்தொன்மை வாய்ந்த ஜைனத் திருப்பதிகளான ஆர்ப்பாகை, தஞ்சை, வாழைப்பந்தல், திருமலை, திருமயிலை, பறம்பாபுரி, திறக்கோவில் ஆகியவற்றைப் பற்றித் தமது பாக்களில் குறிப்பிடுவதால் மயிலாப்பூரில் விளங்கிய மிகப்பழமை வாய்ந்த நேமிநாதர் கோயிலைக் கடல் கொள்ளும் முன்னர் இந்நூல் இயற்றப்பட்டிருக்க  வேண்டும். எனவே இந்நூலாசிரியரின் காலம் கி.பி. 14 அல்லது 15 -ஆம் நாற்றாண்டாகக் கருதலாம்.

        பிள்ளைத் தமிழின் பா வளத்தை நோக்கும் பொழுது இந்நூலாசிரியர் பெரும்புலவர் என்பது தெளிவாகிறது. இந்நூல் வெளிவரின் பகவான் விருஷபதேவரின் வரலாற்றுச் செய்தியைத் தமிழகம் நன்கு உணரும் என்ற அவாவால் அச்சிட்டு வெளியிட வேண்டுமெனப் பலரிடம் ஆராய்ந்தேன். பலன் ஏற்படவில்லை. கடைசியாக என் அன்பிற்குரிய நாவல் நண்பர் N.சாந்தகுமார் ஜெயின் அவர்களிடம் அதுகுறித்துப் பேசினேன். அவர் சமயப்பற்றும், தமிழ் நூல்களை அச்சிட்டு உதவவேண்டும் என்னும் ஆர்வமுடையவராதலால் இதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வதாக உறுதி கூறினார். பின்னர் ஒருநாள் மோட்டூர் உயர்திரு. M.N. யசோதர நயினார் அவர்களை என்னிடம் அழைத்துவந்து, "இவர் என் நெருங்கிய உறவினர், ஆதிநாதர் பிள்ளைத்தமிழைஅச்சிட விரும்புகிறார்" என்று அறிமுகப்படுத்தினார்.



    அப்பெரியார், தம் தந்தையின் நினைவு நூலாக ஒரு நூல் வெளியிட வேண்டுமெனத் தமது குடும்பத்தினர் பன்னாட்களாக எண்ணிவருவதாகவும், அவ்வெண்ணம் நிறைவேற 'ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்' கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். மேலும் தம் தந்தை தம்முடைய வாழ்நாளில் "திரிலோக்கிய நாதர் சதகம்" என்னும் தெலுங்குப் பிரதியை வடமொழியில் எழுதி அச்சிட்டு வெளியிடக் கருதி இருந்தார் எனவும், அந்நூலை வடமொழியில் எழுதத் தொடங்கிய முயற்சி அவர் காலத்திற்குள் பலனளிக்கவில்லை எனவும் கூறினார். தம் தந்தையார் விரும்பிய அதே "திரிலோக்கிய நாதர்"  (மூன்று உலகத்திற்கும் நாதர்) பெயருடைய ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் நூல் கிடைத்தது பற்றியும், அந்நூலக அச்சிட்டு வெளியிடும் பேற்றைத் தாம் பெற்றதையும் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுவதாக ஆர்வத்துடன் கூறினார்.


       இந்நூல் உயர்திரு. M.P.நல்லத்தம்பி நயினார் அவர்கள் நினைவு நூலாக வெளிவருவதில் நமக்கும் பெருமகிழ்ச்சியே. அப்பெரியார் தமிழிலும் வடமொழியிலும் நல்ல பாண்டித்தியம் உடையவர்.சோதிடத்திலும் நல்ல புலமை பெற்றவர். இத்தகைய சிறந்த கல்வியறிவுடன் வள்ளலாகவும் விளங்கினார். தம்மை நாடி வரும் ஏழை குடும்பத்தினற்கு தக்க உதவிகள் புரிந்து வந்தார். ஏழை குடும்ப திருமணங்களுக்கு உதவி அளித்து மகிழ்விப்பார். ஏழைக் குழந்தைகளுக்கு நடுப்பகலில் அன்னம் அளித்துப் பசியாற்றி வந்தார். இவைமட்டுமல்ல, தம்மை நாடிவரும் மக்களுக்குச் சோதிடமும் இலவசமாகக் கூறியதுடன் அவர்களுக்கும் விருந்து அளித்து அனுப்புவார். இப்பெரும் வள்ளலாரின் திருமகனாய் விளங்கும் உயர்திரு; M.N. யசோதர நயினார் அவர்களும் சோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். தம் தந்தையைப் போலவே எதையும் எதிர்பாராது தம்மிடம் வரும் மக்களுக்கு அவர்கள் பிறப்பிலக்கிணங்களை ( ஜாதகங்களை) நன்கு ஆராய்ந்து கூறும் பண்புடையவர். இப்பெரியாரும், இவர்தம் தம்பி உயர்திரு. M.N. சின்னசாமி நயினார் அவர்களும் சமயப் பற்றும், சமய நூல்களில் ஆர்வமும் உடையவர்களாதலால் இந்நூலை அச்சிட முன்வந்தார்கள். இதனைக்கேட்ட யான் அளவிலா உவகையெய்தி அவர்தம் கலை ஆர்வத்தைப் பாராட்டி அச்சிடுவதற்கான பணியில் இறங்கினேன். இப்பெருந்தகைகள் போன்று பல ஜைனப் பெருமக்கள் பண்டைய நூல்களை அச்சிடுவதில் அக்கறை கொண்டார்களானால் இன்னும் பல நூல்களை அச்சுக்குக் கொண்டுவருவதுடன், சூடாமணி  நிகண்டு போன்ற ஜைன நூல்களில் விளங்கும் பாக்களின் சிலவற்றைப் பிறரால் மாற்றியும், திருத்தியும் வெளியிட்டுள்ளவற்றைச் செம்மை சான்ற பதிப்பாக கொண்டுவரலாம். இத்துறையில் பணியாற்ற மோட்டூர் ஆதிநாதர் பதிப்பகம் முன்வந்துள்ளதைக் கண்டு  அளவிலா மகிழ்வெய்துகிறேன்...



ஆதிநாதர் பிள்ளைத் தமிழின் கையெழுத்துப் பிரதி தவிர, உயர்திரு தச்சாம்பாடி J. சின்னசாமி நயினார் அவர்களிடம் இந்நூலின் ஏட்டுப் பிரதி ஒன்றிருப்பதாக அறிந்து, இக்கையெழுத்துப் பிரதியை அனுப்பி இரண்டையும் ஒப்பிட்டுக் கருத்துரைகள் எழுதி அனுப்புமாறு வேண்டினேன். அவர் தமிழ் நூல்களில் நல்ல பயிற்சியும், சமய நூல்களில் நிறைந்த அறிவும் பெற்றவராதலால், கருத்துரையும், அரும்பத வுரையும் விளக்கமுற எழுதி அனுப்பினார். அன்னார் அறிவாற்றலையும், உரையின் சிறப்பையும் இந்நூலிற் பரக்கக் காணலாம். இந்நூலின் மாண்பு சிறப்புற விளங்கப் பெரும்பணியாற்றிய உயர்திரு. J.சின்னசாமி நயினார் அவர்களுக்கும், இந்நூல் அச்சிட முன்வந்த உயர்திரு. M.N. யசோதர நயினார், M.N. சின்னசாமி நயினார் அவர்கட்கும் இப்பணிக்கெல்லாம் காரணமாயிருந்த நாவல் நண்பர் N. சாந்தகுமார் அவர்களுக்கும் இந்நூலின் கையெழுத்துப் பிரதியைத் தந்து உதவிய மேல்மின்னல் உயர்திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி எஞ்ஞான்றும் உரித்தாகுக.

    இந்நூலின் பாக்களை ஓசை தவறாத வண்ணம் சந்தங்களைப் பிரித்தமைத்தும், எழுத்துப் பிழைகளை (Proof) திருத்தியும் உதவிய உயர்திரு, A.S. சண்முகசுந்தரனார், M.A., அவர்களுக்கும் எனது நன்றி.

       எனது வேண்டுகோளுக்கருளி, பாரத நாட்டு ஜைனப் பெருமக்களின் தலைவர் தம் தலைவரும், பஞ்சாஸ்திகாயம், சமயசாரம், திருக்குறள் ஆகிய மாபெரும் நூல்களுக்கு ஆங்கில மெய்யுரை கண்ட மேதையும், என் அன்பிற்கலந்த பெரியாருமாகிய தத்துவ சூடாமணி, ராவ்பகதூர்  A. சக்கரவர்த்தி நயினார் M.A.,  I.E.S. (RETD) அவர்கள் இந்நூலிற்கு ஓர்  அறிவு சான்ற ஆங்கில அணிந்துரை வழங்கியமைக்கு, எனது உளங்கனிந்த நன்றியறிதலையும், வணக்கத்தையும் அப்பெரியாருக்கு அளிக்கின்றேன்.

     இந்நூல் ஏட்டுப் பிரதியினின்றும் முதன்முதல் எடுத்து அச்சிடுவதால் இந்நூலின்கண் பிற்கால ஏடு எழுதுவோரின் கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கும் பிழைகளையும், அச்சுக் கோப்பில் ஏற்பட்டிருக்கும் பிழைகளையும் அறிஞர் பெருமக்கள் ஆய்ந்தறிந்து விளக்குவாராயின் அவைகளை நன்றியறிதலுடன் ஏற்று, அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடக் கூடிய கடப்பாடுடையேன்.

திருத்தக்க தேவர், 
இலக்கிய மன்றம்,
சென்னை,  26-1-56.

                       அன்பன்,
                  T. S. ஸ்ரீபால்




FORE WORD


   by  Thathvartha Choodamani

Sri Rao Bahadur A. Chakravarthi Nainar, M.A., I.E.S.,(RETD.)


     This book deals with the Childhood of Lord Vrishabha, the founder of Jainisam, the religion of Ahimsa. Lord Vrishabha according to Jaina traditions is the first of the twenty-four Thirthankaras the last of whom was Mahavira, a Contemporary of Gouthama Buddha, the founder of Buddhism. According to the Original Scholars, Mahavira was only the revivor of Jainism revealed by his predecessor Parsva who is recognized to be a historical personage. According to Jaina tradition this Parsva was preceded by Nemi or Arishta Nemi. This Nemi was a cousin of Sri Krishna of Maha Bharata fame. Both Nemi & Krishna were princes belonging to Hari Vamsa. Of those two, Nemi was the heir to the throne but he renounced his claim and adopted asceticism. He retired to the forest to perform 'thapas' and finally attained 'NIRVANA' on the top of Mount Girnar. This is palace of pilgrimage for the Jains. There is every reason to believe that Arishta Nemi also was a historical personage. He is the twenty-second of the series of  Thirthankaras led by Lord Vrishabha.

      Lord Vrishabha certainly belongs to a very ancient period. He is considered to be not only a revealer of Ahimsa Dharma but also the first organisor of Human society. Just after the disappearance of the mythical Golden Age during which period people had all that they wanted with the help of Kalpa tree, people found themselves absolutely helpless when these wish fulfilling trees disappeared. They appealed to Lord Vrishabha who was then the ruling chief for help. He consoled them and taught them how they can produce food for themselves by means of Agriculture. People followed his advice and obtained their food by cultivating the land. The food grains thus cultivated were distributed throughout the country by some people who were the first of the merchant class. To secure the protection of these agriculturists and traders some able bodied men were set  apart as soldiers. Thus arose the different classes of people according to their different professions. Thus the social organisation based upon occupation owes its origin to Lord Vrishabha. Having established the elaborate social organisation, Lord Vrishabha also revealed to them the principle of Ahimsa for their spiritual welfare. This principle of Ahimsa is intended to promote peace and prosperity in the world, and also to lead the people to spiritual perfection and bliss in the future. Thus arose the religion of Jainism.



    This Lord Vrishabha was of the Ikshvaku clan. This Ikshvaku clan is mentioned in the Ric Vedic hymns as a very ancient one. Probably the Ikshvakus were important ruling chiefs in the Gangetic plain when the Aryans first settled down in the Indus Valley. Hence they must be considered Pre-Aryan inhabitants of the land. This fact is supported by the account given in the Hindu Bhagavatha Purana. According to this account, Lord Vrishabha was born as an Avathara of Vishnu long long before Vishnu appeared in his usual ten avatharas. This clearly shows that Vrishabha was long prior to the period of the ten avatharas of Vishnu. Further Sri Krishna in his Bhagavad Gita says that he first revealed the yoga Dharma to Ikshvaku and through him it was revealed to the world through successive leaders. From this also it is clear that the Dharma revealed by Lord Vrishabha of the Ikshvaku clan is the earliest of the religious teachings in the world.


This religion of Ahimsa was distinctly Pre-Aryan, is indicated by the excavations of  Mohen-Jo-Daro and Harappa. Of the various objects discovered in these excavations, two are very significant. One the figure of a yogi absorbed in yogic contemplation and the other is the figure of the bull. One who is acquainted with the life history of Vrishabha will easily recognise these two things to be symbolic of Vrishabha Cult. The figure of a Yogi probably was an object of worship by the people of Indus Valley civilization. The bull is always associated with the symbol  of Lord Vrishabha, which name itself suggests the bull. From these facts we can easily establish that the religion associated with Lord Vrishabha is the earliest one in the world.


The Vedic religion which was the religion of the Aryans was mainly based upon vedic sacrifice of animals in the name of the vedic deities such as Indira, Agni, etc. But the religion of Ahimsa revealed by Lord Vrishabha is quite opposed to the vedic religion. This fact is implicitly accepted by the Bhagavatha Purana which says that Maha-Vishnu in the avatara of Vrishabha preached the Ahimsa Dharma which is opposed to the vedic Dharma with the purpose of sending the opponents of vedic religion to hell. The Ahimsa religion remained throughout the history of Indian thought as independent and separate from and also opposed to vedic religion based upon animal sacrifice. Later in the history of thought, the Aryan leaders were forced to recognise the importance of Ahimsa. Hence it is incorporated in their religion also.

At present the Indian culture in general has, as its central doctrine, the principle of Ahimsa or Universal love extending to all living beings. Independent India through the influence of Mahatma Gandhi has adopted this principle of Ahimsa as its ideal, Attempts are made by leaders of modern India to make this principle as the ideal of the whole world.


     The author of this book proposing to describe the child life of Lord Vrishabha suceessfully  describes various ethical and religious principles associated with Jainism.


     This book is published through the efforts of Jeevabandhu Sri T.S. Sripal. He must be  congratulated for his enthusiasm and untiring effort to serve the Jain community by publishing books like these, bringing out Jaina Culture and showing its importance to theu society at large.

--------------------------------------------------------







ஆதிபகவன் துணை

ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

     1.காப்புப் பருவம்

பார்மேவும் பொழில் மேவும் பனிவரைசேர் நெடுமாடம்
    பலமேவு மயோத்திநகர் பணியவளர் பெருமான்
ஏர்மேவு மிட்சுவாகு குலத்திலத பெருவாழ்வை
   இமையவர்கள் சிகாமணியாம் இடபேசர் தன்மேல்
தார்மேவு மியல்பிள்ளைத் திருநாமந் தனைப்பாட
   சகலகலை  யுணர்விக்குஞ் சரசுவதி முன்னடக்கச்
சீர்மேவுஞ் சித்திநகர் தனில்மேவுஞ் செயமருவெண்
குணமேவி யொளிமேவுஞ் சித்தர் காப்பே.  (1)



   " காப்புப் பருவம்" என்பது தாய்மார்கள் பிள்ளையை வழிபடு தெய்வங்காப்பதாக வெனக் கூறுவதாகப் பாடுவது. 

இஃது இரண்டாமாதப் பருவம். பெருவாழ்வு -- தேவேந்திராதியோர்கள் போற்றிப் பஞ்ச கலியாணச் சிறப்புயர, புருடாத்தங்களை யடைந்த வாழ்வு. சித்தி நகர் - சித்தியடைந்தோரிடம். (சிவகதி)



பனகநிழற் பவணமுதல் சதுர்வித வமர ரீட்டிக்கூட்டிப்
   பருதிமதிபல்லொளி யழகினிலொப் பிலனைப் பார்த்துப் பார்த்து
பவவினையற்றுவிடு தவமுனிவர்க்கிறைவனார்ப்பக்கேட்பப்
   பதினெண்பாடைக் கொருமொழி பகர்தத்துவனைப் போற்றிப் போற்றி
கனக்கிரித்தடநன் முடிமிசையிற் சுரர்கள் வாய்க்கச் சேர்க்க
   கடகையிற் பலரு மபிடேகார்ச் சனைச் சேர்த்திச் சேர்த்திக்
கடவுளெனப்பல வியவகையிற்றொனிகளார்ப்பக் கூட்டிக்
    கடலுருமோவென வதிரத்திசையிற் குலவிக் கேட்பக் கேட்ப
அனகர் திருப் பணிகளமருலகத்திலகர் பூட்டிப் பூட்டி
    அணிமதிமுக் குடையுங் கவரிகொடிப் பலவு மேற்கச்  சேர்க்க
அவனிதனிற் பணிவர் பிறவி தவிர்க்குமெனக் காட்டிக் காட்டி
    அலைபிறவிக் கடலைச்சுவறவறக் கடையுந் தீர்த்தர்க் கேற்கத்
தினகரனைக் குலவுகுலமலையிற் சுனையுள் நீர்க்குள் பூத்த
    மலரையெடுத் தினிதுச்சியமாற் கிறைவனேற்றிப் போற்றி
திரிவுலகத்திறமும் வசியமெனத் திலக மனாத்தி சேர்க்க
    செயமிகுவொத்து வளர்சிறு பிறைநெற்றி தனில் சாற்றுக்காப்பே.  (2)




     பனகம் - பனாமுடி. தேவேந்திரன் ஆணையால் நால்வகைத் தேவர்களும் திரண்டு கூடுதலால் 'ஈட்டிக்கூட்டி' யெனப் பிறவினையாற் கூறினார். 

பதினெண்பாடைக்கொரு மொழி - உலக மொழிகட்கெல்லாம் பொதுத் தாய்மொழியாகிய அருகன் திருமொழி. (திவ்வியத்தொனி.) மொழிகள் பலவும் பதினெண் மாபெரு மொழிகளுள்ளடங்குதலால் பதினெண்பாடை என்றார். 


பல இயவகை - பலவாச்சிய வகைகள். திருத்தொண்டு - திருப்பணி. அமருலகத்திலவர்  - அமரருலகத்திலுள்ள தேவர்கள், சுவற - வற்ற. மனாத்தி - மனுவின் தேவி, மனாஅத்தி - அரைப்பட்டிகை இருபெயரொட்டு என்றலுமொன்று.





மண்மீதில் வெள்ளிமலை நூற்றெழுபத் தொருநூறு வக்காரம்
    மந்தரத்தி லெண்பதான மானுடோத்தர நான்காம்
குண்டல ருசகர் மருவு மிட்சுவாகாரத்திற் பதினாறாகும்
     நன்றாகுங் குலமலையின்முப்பானோடு நலந்தரு செம்பூசான்
நன்மலையிற்பத்தா நந்தீச்சுரத் திரண்டோடொன்பது மாகப்
    பார்மேல், நலமேவு மீரிரு நூற்றைம்பத்தெட்டாகும்
பணநாகமுடி பவணத்தேழு கோடிபலர் மகிழுமெண்ணோன்
    பானிலக்கம் நாகர் பகரரியகற் பத்தெண்ணான் கிலக்கத்
தொண்ணூற்றடனேழா யிரச்சின்னம்தான்
   விண்ணோங்கு சோதிடர்வியந் தரருலகிலெண்ண வெண்ணாச்
சேதியங்க ளமரர்தினம் வேள்வியினால் வந்திறைஞ்ச
    வெயில்வீச மணியிலங்கும் விமலர் திருநிலைக்காப்பே. (3)


வக்காரம் - வட்சாரம். சின்னந்தான் - சிறுதொகைதான். எண்பத்து நான்கு லட்சத்துத் தொண்ணூற்றேழாயிரத்து இருபத்து மூன்று என்பதாம்.



ஒருமூன்று குலத்தினுக்கும் ஒருமூன்று  பொருளுரைத்தும்
   உயர்ஞானக் கடலான ஒருமூன்று சோதியினில்
உயர்வானச் சுடரொளியாய் ஒருமூன்று குற்றமுடன்
     உயர் குரோதத்தினையகற்றி ஒருமூன்று பிரபாவலயம்
ஒளிர்மணி மண்டலமிலங்க ஒருமூன்று மூர்த்தியாகும்
      ஒருபெயராய் வழங்கிமிகும் ஒருமூன்றிவ்  வுலகினுக்கும்
உடையரிவரெனப் போற்றி ஒருமூன்றிந்திரர் செய்த நிழல் காப்பே.  (4)

               
      அரசர், வணிகர், வேளாளர் என்னும் மூன்று குலங்கள் ஆதிபகவானால் தோற்றுவிக்கப்பட்டமையின் 'ஒரு மூன்று குலத்தினுக்கும்' என்றார்.  திருமூர்த்தி - பரமௌதாரிக திருவுடலுடைய அருகன். ஈண்டுக் கூறிய ஒரு மூன்று மூர்த்தியர்கள், இந்து மதத்தினர் வெவ்வேறு வாழ்க்கைத் தொழில்களையுடைய வெவ்வேறாகிய ஆட்களின் உருவகமெனக் கருதிப் பிரம்மா, விஷ்ணு, சிவன் எனப் பிறழக்கூறிய திரிமூர்த்திகள். ஆனால் பிரம்மா என்பது வாழ்க்கையில் தோன்றும் ஆன்மாவின் அறிவின் மாற்றம். விஷ்ணு -  ஆன்மாவால் பாதுகாக்கப்படும் அறம். சிவம் - ஆன்மாவாலழிக்கப்படும் உலகப்பற்று.

      "பிரம்மா படைப்பு என்பது உண்மையாய் மனிதனிடத்துள்ள எல்லா உலகப்பற்றின் அழிவையும், அதனாலுண்டாகும் தெய்வீக வழிபாட்டுக்குரிய காரணத் தோற்றத்தையுமுணர்த்தும். விஷ்ணு பிரம்மாவால் படைக்கப்பட்ட புத்தியை பாதுகாக்கிறது.  வேறெந்த நியாய  விரோதங்களையும் பாதுகாக்கிறதில்லை. சிவம் உலகப்பற்றை யழிக்கிறதால் பிரம்மாவின் படைப்பிற்கு ஆதிகாரணமாயுளது. கடைசியாய் அது சமயப் பக்திப் பயிற்சியின் நற்செயலை யொழிக்கிறதால், விடுதலையின் காரணமாயுள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவம் என்ற பண்புகள் மனிதன் கடைத்தேறுஞ் சமயத்திற்குரிய குறிக்கோளை அமைக்கிறது". (Permanent History of Baratavarsha. Vol.1. P. 395 Mr K.N. lyar.) எனவே திரு மூர்த்தி என்பது அருகன் பெயராதலால், " ஒரு மூன்று மூர்த்தியர்க்கும் ஒரு பெயராய் வழங்கி" என்றார் உடையர் - இறைமையுடையவர்.


உக நான்கு மறைநான்கும் உரைத்தருளி
முக நான்காய் வகை நான்கு சுரர் பரவ
மயல் நான்குகதிகடந்தோய் யுகநான்கும் புகழ் பரவும்
பூநான்கும் பொ துளிவெறி திசைநான்கும் பரிமளிக்கும்
திருப்பிண்டி நிழல்காப்பே      (5)


உகம் - யுகம். கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம்,கலியுகம் என நான்கு அவசர்ப்பிணியின் மூன்றாங்காலத்து முடிவில் தொடங்கி ஆறாங்காலத்தோடு முடிவுறும். கிரேதாயுகம் - கிருதயுகம், பல்வேறு தொழிற்சாலைகள் யாவும் ஆதிபகவனால் படைக்கப்பட்ட யுகம்: இதனால் யுகாதிப் பிரம்மா எனப்படுகிறார். உலகில் முதல் திருவுளத்தே உருவாகிக்கிடந்த எழுத்துக்களை வரிவடிவில் படைத்தவராதலால் பிரம்மா படைப்பு எனப்படுகிறது. கலைகளைக் கலைமகள் என்றல் மரபு. ஆகவே கலைமகள் பிரம்மாவின் நாவில் வசிக்கிறாள் என்றும், பிரம்மா உலகைப் படைத்தார் என்றும் உருவகஞ் செய்துவிட்டனர் பிறர்.



அருவினையை யழித்தானை பிறவி யொழித்தானை
  அன்பர்க் கெளியானை ஆகமங்க ளுரைத்தானை
 அழகுற நின்றானை பாவ உரியானை
   கூற்றை புதைத்தானை திருநெறி தந்தானை
 தேவர்க் கரியானை திரிவுல களந்தானை
   காட்சி கொடுத்தானை கருணை புரிந்தானை - சேய்
 பசியகலப் பாத்தானை -- துறக்கத் திருவிலொளிவானவர்,
  அனகநக ராதிபன் செயலினான் வந்துகூடி
 செயதுந்து பித்தொனிகளெவரு முழக்கிவர
  சீராயிரக் கண்களும் திருப்புயமா யிரங்கொண்டு
கரங்கூப் பியுமன்னு பலகுணமோதியும்
   வாமனுருவப்படி பாலவடிவால்கூடி -- வளர் வைகை வந்தபடியே. (6)



அன்பர்க்கு எளியானை- அடியார்க்கு எளிய முறையில் காட்சியளிப்பவனை, அழகுற நின்றானை- பழிப்பின்றி மூவுலகமும் புகழ கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நின்றவனை,  பாவுரியானை-- ஒரு பெருங் கடவுளெனப் போற்றத்தக்க முழு உரிமையுடைய அருகனை, கூற்றை யுதைத்தானை-- கூற்றுவன் எல்லையைத் தாண்டி பிறவாப் பதவியடைந்த அருகனை,  இதைத்தான் சிவன் மார்க்கண்டேயனுக்காகக் கூற்றுவனைக் காலாலுதைத்துச் சாவாவரந் தந்த்தாக உருவகஞ் செய்துவிட்டனர். திருநெறி-- இல்லற துறவறமாகிய அழகிய வீட்டுப்பாதை, திரிவுலகளந்தானை - கேவலஞானத்தால் மூன்று உலகங்களையும் அளந்தவனை, இதைத்தான் விஷ்ணு திரிவிக்கிரமனாகிக் காலால் மூன்று லோகங்களையும் அளந்ததாக உருவகஞ் செய்துவிட்டனர். காட்சி-- இலட்சியக்கல்வி; நற்காட்சி, கற்றதுடைமைக் காட்சியினறிப (முதுமொழிக் காஞ்சி) சேய்--மக்கள், பாத்தானை-- பிழைப்புக்குரிய பல்வேறாகிய உழைப்புகளைப் பகுத்துக் காட்டினவனை, பலகுணமோதியும்-- பல குணங்களை நினைப்பூட்டும் சகஸ்ர நாமங்களால் உச்சரித்தும்.




அளிசேர் பிண்டி நிழல்வாழும் ஆதிபரமற்கமரர் குழாம்
  அடைந்து மேருகிரிமீதில் அப்பாண்டுக நற்சிலை தன்னில்
 வெளியாயிரத்தின வொளிஎரிக்கும் வெற்றியரியாசனஞ் சமைத்து
  வெளிதாம் பால்நற்கடல்முகந்து வீறு சென்மாபி டேகத்தின்
 களியானந்தத் தமரேசன் கடக கேயூர குண்டலமும்
  கற்பத் துயருமணி யிழையுங் கமழ்மந்தா ரமாலையுடன்
 ஒளிசேர் பதினாறாபரண முத்தே யணிந்து தாம்பரவி
   உலகங் காப்பார் மணிக்கழலின் உம்பரிட்ட திருக்காப்பே.  (7)


     *அளி - வண்டு, மந்தாரமாலை - கற்பகமாலை, உலகங்காப்பார் - பகை, பசி, பிணிகளால் உலகம் பாதிக்கப்படாவண்ணம் பாதுகாக்கும் அருகன். பசியைப் போக்க அகிம்சா தருமமும், பசியைப் போக்கத் தொழிற்சாலைகளும், விருந்தோம்பல், மிகுபொருள் விரும்பாமை முதலிய நோன்புகளும், பிணியைப்போக்க எளிய உண்டி கொள்ளலும், இல்லற துறவற உண்ணாவிரதங்களும் போதித்தவர் அருகனாதலால், மணிக்கழலின்....... திருக்காப்பு - இஃது  இன்று 'ஏழாங்காப்பு' என வழங்குகிறது.


முருகுசெறி பிண்டியின் கீழ்க்குடைகள் மூன்று
  முடனிழற்ற மொய்ம்மணி சேர்கவரி  வீச
 திருமருவுந் தேவதுந்துபி முழங்கத்
  திசைகளெலா மாணிக்கச் சோதி நீட
அரியவையர்க ளானந்த நடன மாட
   அண்டர் பிரான் பொன்மழைபூ மழைகள் தூவ
 கருதரிய நரர்சுரர்விஞ் சையர்கள் கூடிக்
   காப்புச் செயுந்திரு ஆதிகாப்புத் தானே.  (8)

  முருகு - வாசனை, மாணிக்கச் சோதி -- இரத்தின தீபங்களின் ஒளிகள்.


உலகனைத்து  முள்ளடங்கி ஓலியடங்கா மூவெயிலி
  னுயர்மானத்தம்ப முடனொளிதரபை மணிதிகழ்
 தலைமுனிவர் கற்பத்தையல் தவமாதர்தென்கீழ்பால்
   தரணர்சோதிடர் வந்தரத் தேவியர் தென்கீழ்பால்
பல பவணர் வந்தரர்சோதிடத்தேவர் வடமேற்பால்
  பாங்கினிய கற்பமரர் நரர் விலங்கு வடகீழ்பால்
கலபமணி வெயில் வீசுங்கந்தகுடி மண்டபஞ் சேர்
    கணபதிசூ ழீராறு காவலர்கள் தாம்காப்பே. (9)


  தலைமுனிவர் - கணதர பரமேட்டி முதலியோர், கலபமணி - பலவண்ணமணிகள், கணபதி - பன்னிருங்கணங்கட்குத் தலைவராகிய அருகன், இஃது பொருட்சிறப்பின்றி ஆனைமுகத்தோனுக்கு வழங்குகிறது. உயிர்களை  நன்னெறியிலுய்த்துக் காப்பவர் என்ற காரணத்தால் " அருகன் விநாயகர் " எனவும் அழைக்கப்படுதலும் சிந்திக்கத்தக்கது.


சினகஞ்சி பருத்திக்குன்றங் கரந்தை பூண்டி
  சிங்கை வைகை திருப்பறம்பை யருகை தாசை
 சினகிரி வண்தீபை சித்தை வீரை கூடல்
   செஞ்சிமுத லூர்பேரை விழுக்கம் வேலை
  கனகபுரி யிளங்காடு துறக்கோல் வளத்தி
  கன்னலந் தச்சூர்குழசை வாழை பாகை
 வினி விருதூர் வெண்குணமோ டாலையாமூர்
   வீடை யெய்யில் குறக்கோட்டை விளங்குங் காப்பே.  (10)


    சினகாஞ்சி -- ஜைனர்களின் தலைநகராகிய காஞ்சிபுரம். பருத்திக்குன்றம் - திருப்பருத்திக்குன்றம், சிங்கை -- வைகை திருமலை போலும், திருப்பறம்பை -- திருப்பணமூர், அருகை -- அருகாவூர், தாசை -- தீபை- தீபங்குடி, சித்தை - சித்தாமூர், வீரை -- வீரணாமூர், கூடல் -- கூடலூர் மதுரை பேரை -- பேராவூர், வேலை -- வேலூர், கனகபுரி -- பொன்னூர், குழசை - குழப்பலூர், பாகை - ஆர்ப்பாகை, ஆலை ஆமூர் - வைலாமூர், காப்புப் பருவம் முற்றும்.



2. செங்கீரைப் பருவம்

செங்கையர் நாடொறுஞ் சீர்மணி களைந்திடச்
  செல்லுமோ  துன்னி விரகால்
 சீர்காலினால் மடையிட றிவரும் வயல்தனில்
  செழுமலர்க் கழனிகளை வார்
சிங்கமெனுமாடவர் செந்நெல்களை யக்கதிர்
   செஞ்சாமரைகள் வீசச்
செறியுமுத்துதிரவே நீர்தனில் பாய்ந்திடச்
    செழுநீர் கொழிக்கு முற்றம்
துங்கமுகில் மேய்ந்துவளர் சூழ்மணக் காவுமிகுந்
    துய்யபொன் னிஞ்சிசிகரம்
துலங்குமணிமாடமண்டபநெருங்குந் துசம்
   சோதிமின் னொத்துவீசும்
செங்கமல மாதியல் அயோத்தியம் பதியாளி
   செங்கீரை யாடியருளே
திருமா மறைத்தலைவமுனி நாயகற்கதிப
 செங்கீரையாடியருளே.  (11)


        செங்கீரைப் பருவம் -- பிள்ளை முட்டி போட்டுத்தவழும் பருவம், ஐந்தாம் மாதம். செங்கையர் - களை பறித்தலால் சிவந்த கைகளையுடைய கடைசியர்கள், விரகால் - உற்சாகத்தால், துங்கம் - உயர்ச்சி, முனி நாயகர்க்கு - முனிகணங்கட்கு நாயகராகிய கணதரர்கள், செங்கீரையாடுதல் - முட்டி போட்டுத் தவழ்ந்து விளையாடுதல்.


திகிரி வட்டக்குடைச் செல்வர் பரவச் செலும்
   சினமுனிகள் மனமகிழவே
 தேடுவார் தனமெனத்திகழ்பொன் னெயிற்கிறைவ
     தெய்வங்கள் தம்பிரானே
 பகரவெட்டுத் திசையுந்துதைகள் மலர்களவிழ்
    பங்கேரு கத்தின்மிசையே
 பாடுஞ் சுரும்புவண்டோடுங் கிடங்கிடை
   பகலிரவு தெரியாமலே
 நிகரி லச்சத்தமோடசோகு  பலவும் பலர்
     நெருங்குதேமா மலர்களும்
 நெடியபூ கங்கழை வாழைபல தாழையும்
   நெருங்கிவளர் நீள்கைலையின்
 சிகரவட்டத் தைநிழ விடுவினிதை வருகுரிசில்
    செங்கீரை யாடியருளே
திருமா மறைத் தலைமுனிநாகற் கதிப
   செங்கீரை யாடியருளே. (12)


    திகிரி - சக்கரம், பிரான் - இறைவன், துதை - மிகுதி, பங்கேருகம் - தாமரை , அச்சத்தம் - அச்சுவத்தம் - அரசமரம்.



கஞ்சா சனத்திலுறை நான்முகக் கடவுள் நீ
     கயிலையம்பதியாளு நீ
   கருதரிய உலகினை யளந்த திருமாலுநீ
      கருத்தினைப் புகல வல்லார்
அஞ்சான தலையிலொன் றறுத்த பிரமற்கு மக 
    ளாகுந் திலோத்தமை தன்மேல்
 ஆசையாய் மோகித் தழிந்ததும் மலைமகட்
   கரனர்த்த பாகமீந்தான்
 மஞ்சாடுங் கன்னிகையர் துகில் கொடுகுருந்தேறி
     மாயனு மோகவலையால்
 மன்னுமுலகிற்பழிய தாகும்வரைத் தொழுவர்
    மதியென்ன சொல்லுகதிர் நீள்
 செஞ்சாலி யொடுமுகடு தொடுவினிதை வருகுரிசில்
   செங்கீரை யாடியருளே
திருமா மறைத் தலைவ முனிநாயகற்கதிப
  செங்கீரை யாடியருளே. (13)


  இதில் பிரம்மா, சிவன், விஷ்ணு என்பவர் தனிப்பட்டவர்களல்லர். எல்லாம் அருகனாகிய நீயேதான். நின் பரியாயத் திருநாமங்களின் உட்கருத்தைப் புகல வல்லவர்கள் அங்ஙனமின்றி வெறுங்கட்டுக்கதைகளை நம்பி அத்தேவர்களைத் தொழுகின்ற அறிவுதான் என்னே? பிரம்மா, விஷ்ணு, சிவன்களுடைய கசைகளைச் சீவகசிந்தாமணியில், 207, 208, 209 ஆம் கவிகளிலும் காண்க.

                 மஞ்சாடும் - நீர்விளையாடுதல் காமம், வெகுளி, மயக்கங்களைக் கடந்தவர் கடவுள்.
\

பிறைகா ணெனப்பெருகு நிறையா யிரத்தி னொளி
    பேராயிரக் கடவுளே
பிறர் தார நச்சுக்கொலை களவாடல் பொய்ச்சொலல்
     பேராசை யிற்றுய்கவே
 குறுகா வறத்திறமை இறையா யெவர்க்குமருள்
     குணமா மதிக்குரிசிலே
 குளிர்கா வெனச்செலுவர்  வழிகாணு தற்குதவுங்
    குடைமூன் றுடைப்பரமனே
 குறுகா வடக்கின்வரு படியால் நடத்தினிடை
    யுயர் தாழையம் போதுபின்
 குளிர் புண்ட ரீகமதியோதி மங்குழவிதனை
     யோடிக்குலாவி வருதன்
 சிறகா லணைத்து வளர்வினிதா நகர்த்திப
     செங்கீரை யாடியருளே
 திருமாமறைத் தலைவ முனிநாய கற்கதிப
     செங்கீரை யாடியருளே.  (14)




    பேராயிரக் கடவுள் : ஆயிரத்தெட்டு திருநாமங்களையுடைய அருகன். எல்லாப் பொருள்கட்கும் பல பரியாயப் பெயர்கள் இருக்கின்றன. அப்பெயர்களைப் பதச்சேதம் செய்து பார்த்தலால் அதன் பல பண்புகளைக் காணும் பஃறலை யுணர்ச்சி தோன்றுகிறது. அருகன் திருநாமங்களை உச்சரிப்போன் உட்கருத்தால் தூண்டப்படுகிறான். அது குறைபாடுடையவனைப் பரிபூரணமாக்கும் தன் இயற்கைத் தன்மையின் பல பண்புகளை உள்ளறியச் செய்கிறது. அதன் தூண்டலால் பௌதிக ஆற்றலினின்றும் நெடுந்தூரம் விலகித் தன்னுயிரின் இயற்கையாகிய தெய்வீகத் தன்மையடைகிறான்.

  "தன்னுயிர்த் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும்"


   அப்பரியாயப் பெயர்களின் தொகை மனித அறிவின் ஆற்றல் பெருக்கத்தைப் பொருத்ததாகும். இங்ஙனமின்றி அருகன் வேறு, புத்தன் வேறு, சிவன் வேறென அருகன் பரியாயப் பெயர்கள் ஆயிரத்தெட்டையும் ஆயிரத்தெட்டுக் கடவுள் எனக் கொள்ளுதல் பொருட் சிறப்பில்லை. சுட்டறிவின் குற்றம். இதனால் இன்றைய உலகம் தன் குறிக்கோளாகிய புருடார்த்த சித்தியுறுதலில் பெருத்த ஏமாற்றமடைந்து வருகிறது. அஷ்டசகசிரநாம உச்சரிப்பு - ஆழ்ந்த சிந்தனையாகும். திடமான அப்பெயரின் உட்பொருள் அறியும் முயற்சியாகும். ஒருவகை அணுச்சிதைவாகும். பேராசை இற்று உய்கவே - அவாவற்றுப் பிறவாமல் இயற்கைத்தன்மையில் பிழைத்துப்போகவேண்டி, "ஆராவியற்கையவா நீப்பினந் நிலையே, பேராவியற்கைதரும்",  குறுகா அறத்திறமை - குறுகிய மனப்பான்மையோடு கூறாத, பரந்த நோக்கத்தோடு கூறிய, அற ஒழுக்கங்களுக்கு இறையா - இறைவனாக. வழி காணுதற்குதவும் பரமனே - பிறவிக்கடலில் திகைப்போர்கள் வழி தெரிந்து போதற்குக் கலங்கரை விளக்காக உதவும் கடவுளே. தெய்வங் காட்டும், ஊட்டுமா என்னும் முதுமொழிக்கு இலக்கியமானவர் அருகன். "ஆதிபகவன் சோதிநாதன் விருஷபதேவன் புருஷ நாயகன்.  அவனே ஈசன், அவனே மாயன், அவனே நான்முகன், அவனே அருகன், அருகே யணைந்தால், விடுதலை வழியைக் கடிதிற் பெறலாம்."  திரு.வி.க.



சசிளாதித் தரொளிகோடி  வந்தோருருக்
   கொண்டபடி கண்ட பரமனே
சமவசர ணேசனே யிமையவர் களீசனே
    சார்ந்தவர்க் கைந்தாருவே
இசையினா லெண்ணெழுத் தியம்புவித்தாயுநீ
     இவ்வுலகுகற் றுமுற்றும்
ஏழையர்கள் நின்பெருமை  யோர்கிலா தெவ்வகை
    யிரவிகாணாப் புள்ளென
வசையுலாவிடப் பேசிச் சுற்றிடு மக்கள் தம்
    தந்தைசொல் லறியவசமோ
வான வாவியுள்ளலரும் ஆயிரத் தெட்டிதழ்
      மலர்ந்தபூச் சுமந்த பதனே
திசைகள் நான்கும் புகழ் அயோத்தியம் பதியாளி
      செங்கீரை யாடியருளே
 திருமாமறைத் தலைவமுனிநாயகற் கதிப
     செங்கீரை யாடியருளே.  (15)


    சசிகள் ஆதித்தர் - சந்திர சூரியர். இசையினால்... இயம்புவித்தாயுநீ,  ஆதிபகவன் பிராமி, சுந்தரி என்னும் பெண்களுக்கும் பரதன் முதலாகிய பிள்ளைகட்கும் முதன்முதலில் அகரமுதலாகிய எழுத்துக்களைப் போதித்தார்.

      "செல்வனம் பிண்டிவேந்தன் சிநேந்திரன் ஆதிகாலம் பல்வளம் பெற்ற ஆதிப்பரதனே முதல்வராகச் சொல்லிய நூற்றுவர்க்குத்துறை வழாக்கலைகள்யாவும், கல்வியே பயில்களப்பேர் கழகம் கல்லூரியாமே"
         
          "இதனை திருக்கிளர் தேவர் கோமான் ஏவலிற் குபேரன் செய்த விருப்புறு பொன்னெயிற்குள் விளங்கவெண்ணெழுத்திரண்டும் பரப்பிய ஆதிமூர்த்தி....." எனவும் இவர் கல்வி போதித்த இடம் கழகம், கல்லூரி எனவும் வழங்கியதை (சூடாமணி நிகண்டு) கூறுகிறது.

அகரமுதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.


        ஆகவே, முதலில் கற்பிக்கத் தொடங்கும்போது "சித்தன் நம" என்று கூறுதல் மரபாய் வந்தது. சித்தர் என்பவர் புருடார்த்த சித்தியடைந்தவர். " இந்தியாவில் இடைக்காலச் சரித்திரத்தை உற்று நோக்கினால், ஒரு காலத்தே ஆசிரியர்கள் சமணர்களாக இருந்திருக்கின்றனர் " என்கிறார் ஆசார்ய விநோபாவே. பள்ளிக்கூடம் என்பதும் நினைவு கூரத் தக்கது. சமணமுனிவர்கள் தங்கும் பள்ளி என்பது பொருள். ஆதலால் " சித்தன் நம " என்னும் வழக்காறு ஜைன சமயத்திலும், ஜைனசமயஞ் செல்வாக்குடைய கன்னட நாட்டிலும் இன்றும் அப்படியே வழங்குகிறது. வைணவர்கள் 'அரிநமோத்து சித்தம்' என வழங்குகின்றனர். சைவம் ' 'நமஸ்ஸிவாய சித்தம்' எனவும், முதலில் திரித்துக் கூறுகின்றனர். (ஸ்ரீ புராணம் நூன்முகம்) 'கணேச சித்தம்' என மராத்தியேத்தில் வழங்குகிறது. ( Vinoba on gain contribution to Humanity) பள்ளிக்கூடம், கழகம், கல்லூரி என்ற பெயர்களும், சித்த வணக்கமுறையும், போதனா முறையும் ஆதிபகவனால் படைக்கப்பட்டமை விளங்குகிறது இவ்வுலகுகற்று..... ஓர்கிலார் ஆதிபகவனால் போதிக்கப்பட்டமை விளங்குகிறது. ஆதிபகவனால் போதிக்கப்பட்ட வரிவடிவங்களாய கலைகளைக் கற்றுணர்ந்தோர் ஆசிரியரை வழிபடுதல் கடமையன்றோ ? அதனாற்றான் ' 'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்  நற்றாள் தொழாஅர் எனின்' என பொய்யாமொழித் தேவர் புகல்கின்றார்.


இவ்வுலகில் முற்றும் கற்றும் நடுநிலையிலா ஏழையர் சூரியனைக் காணாத பறவைபோல உன்னை அறிந்துகொள்ள முடியவில்லை. வசையே நிறைந்த உரைகளைப் பேசிக் காலம் கடத்தும் மக்கள் அறிவின் தந்தையாகிய நின்னை யறிவாரோ ?

      பகவான் ஆதிநாதரே (விருஷப தேவர்) இந்த உலகின் முதல் ஆசிரியரும் முதல் அறிவரும் முதல் தலைவரும் என்பதை, 

"புலவர் தம் புலவர்க்கும் புலவா "

" அறிவர் தம் அறிவர்க்கும் அறிவா"

" தலைவர் தம் தலைவர்க்கும் தலைவா "

எனப் போற்றும் நீலகேசிச் செய்யுட்களாலும் அறிக.

   எனவே ஜைன சமயத்தினின்றே வெவ்வேறு கொள்கைகளுடன் பல்வேறு சமயங்கள் பிரிந்தவை என்பது பொருள். அறிவன் காதற் பெருங்கிழத்தி யகிலமீன்றதாய் என்று மழியாக்கன்னி அறம் வளர்த்த அன்னை ஆறு சமயத்தின் பிரிவு தன்பால் தோன்றியவள்" என்றார் உதீசித்தேவர்.

    அவ்வுண்மைகளைப் பல சமயத்தலைவர்களும் வெளிப்படையாகக் கூறியுள்ளனர். ஆகவே, தந்தையாகிய ஆதிபகவனையும் அவர் போதித்த ஆகமங்களையும் காணும் பகுத்தறிவுத் திறவுகோல் உலக மக்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது. காண்க,  "வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூலாதலால், திருமாமறைத்தலைவ " என்றார்.

விரிமலர் நான்கினுமளிஞிமிறார்ந்தெழ
   வண்டே சஞ்சாறு
விரைவினிலோர்ந்துளங்களிகொள முண்டது
   சங்கோ சங்கீதம்
வரிசையி னோங்கிய குயில்களி கூர்ந்தொலி
   கொண்டே பண்பாட
வகையினி லாம்படி திசைகளெலாந்தொழும்
    பிண்டியின்கீழ் வாழ
அரியயரிதாம் பிரமனுமுனிவேந்திரர்
    வந்தே கொண்டாடி
அடியிணை தாம்தொழ சுரர் பவணேந்திர
   ரும்பேர் தன்பாகத்
தெரிமறைநான்கினு மொழிபகராண்டகை
    செங்கோ  செங்கீரை
செருவினி லெண்வினை விழவுதை வேந்த
    செங்கோ செங்கீரை.  (16)

   அரியயரிதாம்.... கொண்டாடி -- விஷ்ணு பிரமன் முனிகணங்கள் உலக மன்னர்களனைவரும் ஆதிபகவனை கொண்டாடினமை கூறினார். விஷ்ணு எதிர்கால தீர்த்தங்கராகப் போகிறார் என்பதுங் கவனிக்கத் தக்கது. செருவினில் -- இயற்கைப் போரில், நடைமுறை உண்மைச் சுட்டறிவாலாகிய ஊழ்வினைப் போரில்.


அருவினைபோம்படி திரிமணியீந்தரு
   ளுங்கோ னன்பாக
அகிலமெலாந்தொழ வருகருணாம் பதி
   கஞ் சாருஞ்சால
பருவமதாம்படி யமரர்கள் சேர்ந்தினி
    தன்பாய் நின்தாளின்
பணிய வுகந்தருள் வரும் வைவேந்திரர்
    மைந்தா வந்தாளா
முருகினமாந்தெழு மலர துதை பூம்பொழி
    லும்போ தன்பாக
முள ரிகளாம்பல் லமளியினாற்றிசை
    பண் பாய்வண்டூதுந்
திருமகள் சேர்ந்துறை வினிதையராண்டகை
    செங்கோ செங்கீரை
செருவினிலெண்வினை விழவுதை வேந்த
    செங்கோ செங்கீரை. (17)



   திரிமணி - மும்மணி, நற்காட்சி, ஞான, ஒழுக்கங்கள், கல்வி, அறிவு, ஒழுக்கம் என்ற சொற்றொடர் வழக்கால் பழந்தமிழர் ஒழுக்கம் இது எனப் புலனாகிறது. கல்வி விளக்கு; அறிவு வெளிச்சம், ஒழுக்கம் அவ்வெளிச்சத்தில் புலப்படும் அறநெறிப் போக்கு.


அருமறையாந்திரி வருடநெலாம்படி
    யும்பேர் தன்பாக
அசமென வோர்ந்திட அறிவிலர் தாங்களும்
     அஞ்சா தஞ்சாதே
குறுமறியாங்கவர் தழலிடை வேம்படி
      பண்பாய் வண்போதி
குடிகெட வூன் தினும் வாளரங் காந்தமும்
     உண்டே பண்டேயும்
வெறியவர் போந்திடும் வரி யென மாந்தரை
      யுங்கெடுங் கேடாய்
வினைபல தாஞ்செயுமுருடர்கள் தாங்கெட
     வும் பேர் தன்பாக
திரிவுல கேந்திரர் அடிபரவும் பரண்
       செங்கோ செங்கீரை
செருவினிலெண்வினை விழவுதை வேந்த
     செங்கோ செங்கீரை.  (18)

அருமறை - அருமையாகிய வேதம், திரிவருட நெல்லின்பேர் - அசம், அசமூவாண்டுறுநெல்  இடம் (சூடாமணி நிகண்டு) இருபொருள் குறிக்குந்திரிசொல், மூன்றாண்டுக்குட்பட்ட நெல் முளைக்குஞ் சக்தியது. ஆதலின் அஹிம்சையின் விதிப்படி அதைப் பொறிக்கவுமுண்ணவுங்கூடாது. 'வித்துக்குற்றுண்ணா விழுப்பமிகவினிதே' என்றார்.(இனியவை நாற்பது) எனவே முன்னோர்கள் மூன்றாண்டு கடந்த நெல்லைப் பொரித்து வேள்வி செய்து வந்தனர். பிற்காலத்தே ஒரு சமயம் நாரதன், பருவதன் என்னும் இரண்டு பிராமணர்களும், வசு என்னும் அரச குமாரனும் ஒரு சாலை மாணக்கர்கள். பருவதன் குருவின் புத்திரன்; மந்தன். நாரதன் நுண்ணறிவாளி. இவர்களுக்குள்ளே 'அசம்' என்ற திரிசொல்லைப் பற்றிய பொருள்களில் வாதமூண்டது. நாரதன் 'மூவாண்டு கடந்த நெல்' என வாதித்தான். பருவதனோ 'ஆடு' என வழக்காடினான். வசுராசன் குருவின் மகன் என்ற தாட்சணியத்தால் பருவதன் பக்கம் ஆடேதான் எனப் பொய்ச்சான்று கூறினான். அத்தீவினையால் இடிவீழ்ந்து மாண்டு நரகம் புக்கான். அன்று முதல் ஆடுகளை யாகஞ் செய்யத் தலைப்பட்டனர் என்று ஜைனங் கூறுகிறது. இவ்வாறே இந்துக்களின் மகாபாரதக் கதையும் கூறுகிறது. ஆனால் ஆடு என வாதித்தோர்களைத் 'தேவர்கள்' எனவும், 'மூன்றாண்டு நெல்' என வாதித்தோர்களை  'அசுரர்' எனவுங் கூறுகிறது. வேறு வித்தியாசமொன்றுமில்லை. அன்றுமுதல் யாகங்களில் இருவகை பிளவேற்பட்டன. இயற்கையாக மூவாண்டு கடந்த நெல்லைப் பொரித்துச் செய்யப்படும் யாகம் 'வேள்வி' யெனவே வழங்கலாயிற்று. ஆடுகளைக் கொன்று செய்யப்படும் யாகம் 'வேதவேள்வி' என வழங்குகிறது.


தலையள வாஞ்சிவன் பிரமனும் வாங்கள
     வுண்டே திண்டோள்மார்
பன்வரி யான்பாடி நிலையில மாந்தர்கள்
    நின்போல் வண்பாரின்
புலமதி லோங்கிய மோவ வளநீந்திய
      ருண்டோ பண்பாகப்
புகழரி தாங்கிய வணைமிசை யோங்கிய
    பண்பாய் வண்பா வின்
கலைக ளெலாந்திரு மொழிபக ராண்டகை
      கண்டார் கொண்டாட
கதியொரு நான்குடன் வினைக ளெலாங்கெட
     வந்தே நண்பாகுஞ்
சிலையஞூ றோங்கிய கனகநல் காந்திய
    செங்கோ செங்கீரை
செருவினி லெண்வினை விழவுதை வேந்த
    செங்கோ செங்கீரை.   (19)


தலையளவாஞ்சிவன் 

.....படி -- இது சிவன் பிரம்மா முதலியோர் களவாடி கட்டுண்ட செய்தியைக் கூறுகிறது. நிலையிலாமாந்தர்கள் --  புத்திதிறமில்லா மனிதர்கள்  மோவவள நீந்திய - மோகனீய கருமங்களின் சக்தியைக் கடந்த மோழைமோவத்தினுக்கும் (வாமனமுனிவர்) சிலையஞூறு ஓங்கிய...காந்திய - ஆதிபகவன் ஐந்நூறு வில்லுயரம், வயது எண்பத்து நான்கு லட்சம் பூர்வம். உடலுயரத்தைப் பொறுத்தது நீண்ட ஆயுள். இது இயற்கை விதிக்கு மாறுபட்டதெனக் கருதி நவீன  வரலாற்றாசிரியர்கள்  ஒப்புக்கொள்ளவில்லை. இது இயற்கை விதியாகும். காலத்தின் இயல்பு. ஊழிக்காலம் ஏறுங்காலம், இறங்குங்காலம் எனச் சுழன்று கீழது மேலதாய், மேலது கீழதாய் மாற்றிடுந் தோற்றமாகும். ஏறுங்காலத்தில் உயரம், வயது முதலியன ஏறுகிறது. மற்றதி்லிறங்குகிறது. இக்காலங்களை உத்சர்பிணி, அவசர்ப்பிணி எனப் பரிமேலழகருங் கூறுகிறார். இயற்கையிலுங் காண்கிறோம். ஆண்டின் முதலில் சித்திரைப் பட்டத்தில் செய்யப்படும் நெல், கேழ்வரகு முதலிய பயிர்கள் நீண்ட வயதும் உயரமும் பருமனுமுடையவையாயிருக்கின்றன. அதுவே மிகப் பிந்திய பட்டத்தில் மிகக் குறைந்தவையாக இருக்கின்றன. காரணம் என்ன ? காலத்தின் கோலம். விஞ்ஞான பரிசோதனைகளும் இதை மெய்ப்பிக்கின்றன. 1929ல் இத்தாலிய விஞ்ஞானியால் பல பூர்வீக மனிதர்களின் பாறையில் பதிந்துள்ள அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவை சரித்திர காலங்கட்கு மிகமிக முற்பட்டவை. பேராசிரியர் சிப்ரியானி என்பவர் அவற்றைச் சரித்திர காலத்திற்கும் பல ஆயிரமாண்டுகள் முற்பட்டவை என்கிறார். (Indian statesman) அலகாபாத்தில் புராதன எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உயரம் 31 அடியாம். கால்கள் 10 அடி உயரமாம். இருநூறு வயதும் எட்டு அடி உயரமுள்ள மனிதர்களைச் சீன யாத்திரைக்காரர் தாம் கண்டதாகக் கூறுகிறார். 1935 ல் இந்திய பட்டாளங்கள் பாதையமைத்த போது எட்டு மனித எலும்புக் கூடுகளை கண்டுபிடித்தனர். உயரம் 8 1/2 அடி. கன்னத் தெலும்பளவு 3 அடி. 1935 ல் டெல்லி தர்பார் காஷ்மீர் படை வீட்டில் இருந்த மெய்க்காப்பளர்களின் உயரம் 9 அடியாம். ஆகவே பல்லாயிரமாண்டு முற்பட்ட காலத்திய மக்கள் இன்னும் மிக உயரமும் நீண்ட ஆயுளும் உடையவராயிருந்தனர் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

வசையற வோங்கிய கனமணி தாஞ்சில
     செஞ்சே செஞ்சேயன்
மணியொளி காந்திநல் குறடனை யாஞ்செய்ய
    தண்பாய் வண்பாவின்
இசைகளி லாஞ்சுரர்  மகளிர்கள் தாந்தெய்வ
     சங்கீ தம்பாட
இலைபெறு பூந்தொடை யிமையவர் தாம்பலர்
   பைந்தா ளம்போட
நசைகளெலாங்கெட  நரவரர் தாந்தொழ
    வந்தே கந்தாரும்
நறுமலர் தாங்கிய வடியிணை சேர்ந்திய
      லுங்கோ னன்பாக
திசைகளெலாந் தொழ வருபவ ராண்டகை
     செங்கோ செங்கீரை
செருவினி  லெண்வினை விழவுதை வேந்த
    செங்கோ செங்கீரை.  (20)


   நசைகளெலாங்கெட...தொழ - அவாமுற்றுமறுத்து வீடுபேறடைவதற்கு வழிகாட்டு மாதிரிபுருடனாகக் கருதித் தொழ.

பற்றுக பற்றற்றான் பற்றினையப் பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

ஆதலால், கந்தாரும் - வாசனை நிறைந்த.


செங்கீரைப் பருவமுற்றும்.



3. தாலப் பருவம்

இனிதலரும் வானவாவி யூடேதே னூதும்
    இதழோரா யிரத்தெட்டின் மேலே தானேக
மனிதரருந் தவர்களுடன் வானோர் தா னோரும்
   வந்துருவக் குணங்கள் தானேபா டோத
குனிசிலையங் கணைமதனை நீறாய்வே றாக
   கொடிய வினைப்பகைவர் கூறாய் நீராடுந்
தனி ஞானச்சுடரொளியே தாலோ தாலேலோ
   தற்புருடப் பெருமானே தாலோ தாலேலோ.  (21)


     தால் - தாலாட்டு, எட்டாம் மாதப் பருவத்தில் நிகழ்வதாம்.  உருவக் குணங்கள்...ஓத - ஆயிரத்தெட்டுத் திருநாமங்களின் குணங்களை உருப்போட,  தற்புருடன் - தன்னுடைய புருடார்த்த சித்தியையடைந்தவன், கிருத கிருத்தியன்.


வண்டரற்றும் பிண்டியின் கீழ்வானோரே  னோரும்
    வந்திறைஞ்சி யடிபரவுங் கோனே மானேமாக்
கொண்டாற்றும் வீட்டிறைவி கோலமா மாணம்
     குலவிவருந் துந்துபியி னோசை மாறாமே
புண்டரிக மலர்மீது மாதோடே நாமாதும்
    புவிமாது மிகப்புகழும் பாதா வேதாவே
தண்டரள முக்குடையாய் தாலோ தாலேலோ

     தற்புருடப் பெருமானே தாலோ தாலேலோ.  (22)


அவ் வினையில் மெலியாமே ஆரா ரீடேற
     அறுபொறு ளெழுநயமுரைத்த வாதா போதாவே
  பவரோக வைத்திய னெனப்பாரோர் வானோரும்
     பணிந்து துதி பலவோதும் பாடேவீ டாள
 திவதொனியா லருள்புரியுந் தேவாதி தேவா
    திகழ்தரும சக்கரனே தீராகோ ராமா
  தவமுனிவர் மனோன்மணியே தாலோ தாலேலோ
    தற்புருடப் பெருமானே தாலோ தாலேலோ.  (23)


     ஆரார் - நிரம்பாப் பேராசைக்காரர். பவ ரோக வைத்தியன், பிறவிப்பிணி மருத்துவன். பிணியால் பீடிக்கப்பட்டவன் அதைப் போக்க முயற்சித்தல் இயல்பு - பிறப்பிறப்பு மூப்புகளாகிய பெரும் பிணியுடையவர்கள் அதைப் போக்கிய அருகனை நாடுகிறார்கள் வேண்டிய விதியும் சாதனங்களும் உடையவராதலின்,


திக்கனைத்துந் தொனிபரவும் பேரி தூரியம்
     திகழ்பஞ்ச வாத்தியமுந் தோதோதா தாவென்
 றோக்கசுரர் நரர்விஞ்சைத் தோகைமா ராடத்
   தொத்துலவு மணிக்குடைகள் வானே நீடாகச்
 சக்கரர் வந்தடிபா வித்தானேமா லாகும்
     சகசிரபத் திரகமலத் தேர்மேலூ  ரீசா
 தக்க புகழ்க் குணக்கடலே தாலோ தாலேலோ
   தற்புருடப் பெருமானே தாலோ தாலேலோ.  (24)


முத்துலவு முக்குடைக்கீழ் வாமா  மா சேனா
   முனிவரர்கள் துதிபரவும் போதாநால் வேதா
 சத்துமன மிரங்காமல் தனேநா ரீசன்
    தலைமாலை யிடுஞ்சமயர் தானே வா ராமே
 பத்திமணி வெயிலெறிக்கப் பன்னூறா யிரமாம்
     பலகவரி வருடவரும் பாடே வீ டாளுந்
 தத்துவநல் லொளிவிதனே தாலோ தாலேலோ
    தற்புருடப் பெருமானே தாலோ தாலேலோ.  (25)


   சத்து மனம் - பாவ மனம். நாரீசன் - அர்த்த நாரீச்சுவரன்.

தலைகளு டனக்குரக மலரினி லெருக்குமணி
    வடமென வுரத்தணியு மேறேறிச்
 சகமுழுது முற்றபலி யழிதலையில் வைத்துவுணிச்
    சமயர் மிகு பொய்ச் சொல்வகை வாராமே
 உலகினி லறத் துழவை உயர்முனி வருக்கருளி
     உகமையினில்  முற்றிவிளை வேளாள
 ஒரு நெறியில் பத்தறமும் மருவிய வதத்தறமும்
   உவரெழு தலத்தைநிறை வியாபார
 அலைபிறவி யில்கடலைக் கரையேற விடற்குரிய
   அவனியின் விரதகப்பலின் மீகாமா
 அகிலபுவ னத்திரயமு நின தடுமை யிற்கொள்வகை
    அறிவினில் மிகுந்த திரு நாடாள
 விலையின் மணிபொற்கல சமொளிர் புரிசை யிட்டநிரை
    வினிதைநக ருக்கதிப தாலேலோ
 விரகினிசை பத்தறமு நெறிமுறை வளர்க்கவரும்
      விமலனெனு மெய்ப்புனித தாலேலோ.   (26)


   அக்கு - சங்குமணி, உரகம் - பாம்பு,  உரத்தணியும் - மார்பிலணிகின்ற கபாலி, ஏறு - எருது,   அறத்து உழவை - அறமாகிய வேளாண்மையை, உகமை - உட்பொருளறியு நுட்பம்.  அவணியின் விரதம் - உலக நோன்பு என்பர் இளங்கோவடிகள், சாவக நோன்பு எனவுங் கூறுகிறார். உலகப் பொதுவாகிய இச்சாவகநோன்பு ஜைனத்தின் நோன்பாகக் கருதப்படுகிறது.


அரியுழுவை மத்தகரி கலினமயி லக்குரக
     கமலமன மிக்கரத மேறேறி
அழகணிசெய் பத்தின்மிசை யுலவியற முத்துமொழி
    அறிவனெனு மெய்ப்புனித தாலேலோ
 தெரியலரி பொற்கமல விடபமுருள் கற்களுறழ்
    கரிணமன மிக்கமயில் வானோடே
 திகழுமணி பத்தினோடு ஒளிபரவு மத்துநிழல்
     எயிலினுறை தற்பரம தாலேலோ
 பரிபுரமு ழக்கவிசை கலைகளை நிரப்பியியல்
     அமரர்கள் துதிப்பயிடர் வாராமே
 பணிபவர்கள் உற்ற வினை யிடறியடுமைக் கொள்வகை
    யுடையசிந தற்புருட தாலேலோ
 விரிமலரெ னத்தெரியல் மணியொளிசெய் முக்குடையி
       னிழலினுரை தற்பரம தாலேலோ
 விரகினிசை பத்தறமு நெறிமுறை வளர்க்கவரும்
     விமலனெனு மெய்ப்புனிதா தாலேலோ.  (27)


     அரி உழுவை முதலாகிய பகைவிலங்குகளும் தம்முள் நட்பு கொண்டு ஒற்றுமையாய் அறங்கேட்கின்றன.  இஃது அகிம்சையின் ஆற்றல். அறிவன் திருமொழி மாட்சிமை.  பரிபுரம் - சிலம்பு.


மயிலின நடிக்கவளர் குயிலின மொலிக்கவளி
     ஞிமிறின மிழற்றவதன் ஓர்பாலே
 மதகினி டைகுத்துவன வழையட விமொத் துவன
    வயலில ணைதத்து நீர் ஓர் பாலே
 கயலினம் வெறித்துமது வுடையவிட றிற்பருகி
   மடுவிலு ளறிப்புகுவ தோர் பாலே
  கமுகினி டையிற்பலவின் சுளையினை யெடுத்தெருமை
     கவியின மளிப்பவத னோர் பாலே
 சயிலமிசை யுற்றசுனை யருவிதவ ழரத்தினொளி
   யருணகி ரணத்தொளிர்வ தோர் பாலே
 சதுர்மறை முழக்கமொடு கலைகளின் விசித்ரமொழி
     மதுரவிசையிற் புகல்வ தோர் பாலே
 வெயில்விடு மணித் தளர வனிதையர் நிருத்தமிடும்
     வினிதைந கருக்கதிப தாலேலோ
 விரகினிசை பத்தறமு நெறிமுறை முறை வளர்க்க வரும்
     விமலனெனு மெய்ப்புனித தாலேலோ.  (28)

     வழை - சுரபுன்னை, கமுகு - பாக்குமரம். கவியினம் - குரங்குக் கூட்டம். சயிலம் - மலை. அரத்தம் - சிவப்பு. அருணகிரணம் - சூரிய கிரகணம்.

சமவச ரணத்தினிடை யமரர்கள் துதிப்பயியல்
   சமரர்கள் படிப்பவதன் ஓர்பாலே
 சதுர்மறை விரிப்பக்கொடி மதிகரை துடைப்பவது
   சகலரு மதிப்பவதன் ஓர்பாலே
 கமழ்மலர் பறிப்பச்சிலர் வலம்வர நடப்பமுடம்
    செவிடர்செவி கேட்பவதன் ஓர்பாலே
 கடும்பகை விலங்குநரர் உடம்படு மியல்பினொடுங்
     கருணையுறும் பெருமைய தனோர் பாலே
 சுமனவ தத்துவமும் முனிவர்க ளியற்றிபதி
    சுகிர்தவ முற்றவர்கள் ஓர்பாலே
 சுககர னெனப்பல்லிய வகைவகை தொனிப்பயியல்
      சுமரர்கள் படிப்பவத னோர்பாலே
  விமலமணி போன்றொளிரு முயர்புரி சையிட்டநிரை
    வினிதைந கருக்கதிப தாலேலோ
 விரகினிசை பத்தறமும் நெறிமுறை வளர்க்கவரு
    விமலனெனு மெய்ப்புனித தாலேலோ.  (29)

   சமரர்கள் - கல்வித் திறமைசாலிகள். கடும்பகை விலங்குகளும் ஒன்றுக்கொன்று கருணை காட்டுமியல்பு அகிம்சா மூர்த்தியைச் சார்ந்த தன்மையாயது. உயிர்கள் சார்ந்ததன் வண்ணமாக மாறுபடுதல் இயல்பு. சுமனவதம் - மனதைப் பண்படுத்தும் விரதம். சுகிர்தம் - நன்மை. சுககரன்- எவ்வுயிர்க்குஞ் சுகஞ்செய்பவன். 

கழிவளர் கயற்கண்ணியர் துணைவருட னெத்தினிய
    கமழ்மண மிகுத்தொளிரு நீர்வாவி
 கரையினி லடர்த்துமிகு படையென வகுத்து மலர்க்
     கணையென விடுப்பச்சிலர் நீர் தூவி
 மழையென விடுப்பவது துகிலினை நனைப்பவல்
    மகளிர்கள் நகைப்பமட மானார்கள்
 மருமண மிகுந்தநல் பொடிதனை யிரைப்பவது
     பருதியை மறைப்பச்சிலர் நீராடி
 முழுமதி முகத்தியர்கள் உயர்புரிசையிற் றிகழுமொளிர்
     மணிசெய் சப்பிரவணை மீதேறி
 ஒளிர்விடய முன்கனவில் துணைவருட னெத்தியல
       ஒளிகல னிரைப்பச்சிலர் தாம்கூடி
 விழிகய லெனப்பிறழும் வனிதையர்கள் நிருத்தமிடும்
   வினிதைந கருக்கதிப தாலேலோ
 விரகினிசை பத்தறமு நெறிமுறை வளர்க்கவரும்
    விமலனெனு மெய்ப்புனித தாலேலோ.   (30)


    கழி - கடலடுத்த உவர் நீர்ப்பரப்பு. சப்பிரவணை - சப்பிரமஞ்சம். மேற்கட்டுள்ள அழகிய கட்டில். விடயம் உன் கவினில் - விடயபோகமாகிய அகப்பொருளின்பத்தில்.

சப்பாணிப் பருவம்

சிங்கவா கன மிசையின் பொங்குசா மரையமரர்
    செங்கையால் வருடவினிதாய்
 திங்கள் நே ரணிகுடையி னீழல்வீ றருகசிந
    கிரிபருத் திக்குன்றி னும்
 சிங்கமா புரிமயிலை சிங்கை தீபையினினிய
    செயல்பறம் பாபுரியினும்
 செழியுமா தவர்ப்பரவும் பழியில்நா யகன் மருவும்
    திருப்பெண்ணா யகன் சிவகதி
  மங்கைநா யகன்மரர் தங்கள் நா யகன்கைலை
     சயிலைநா யகன்வினைகடல்
 வங்கநா யகனுலக மெங்குநா யகன்வழுவில்
    சங்கநா யகன் முனிவரர்
 தங்கள்நா யகன் தலைவ வயோத்திநா யகனினிது
    சப்பாணி கொட்டியருளே
 தலமுழுது நொடியில்நவ மணிகையென உணர்முனைவ
    சப்பாணி கொட்டியருளே.  (31)

   சப்பாணி - கைகொட்டல். பிள்ளை கால்மடித்துட்கார்ந்துகொண்டு கைகொட்டியாடும் ஒன்பதாம்மாதப் பருவம். திருப்பெண் நாயகன் - மோட்ச இலக்குமித் தலைவன். வினைகடல் வங்கநாயகன் - ஊழ்வினைக்கடலின் பிரயாணிகளுடைய கப்பலோட்டுந் தலைவன். வழுவில் சங்கநாயகன் - குற்றமில்லா மூலசங்க முதலாகிய சங்கங்கள் எல்லாவற்றிற்குந் தலைவன். முனி, ஆரியாங்கனை, சாவக, சாவகி சங்கங்களுக்கு நாயகன் அருகனே.  இச்சங்கங்கள் ஆதிபகவன் காலத்தே தொடங்கி 11 ஆம் நூற்றாண்டளவுஞ் சிறந்த அறத்தொண்டுகள் புரிந்து உலகைப் பண்படுத்தி வந்திருக்கின்றன. இதனை---

"வானமு நிலனும் தாமுழு துணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை
   .... ..... ...... ...... ......
   .... ...... ....... ..... .......
ஞெமன் கோ லென்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்"

   (மதுரைக் காஞ்சி 475 -- 492 வரிகளில்) இதனால் மதுரைச் சங்கத்து முனிவர்கள் மூவுலகத்து முக்கால நிகழ்ச்சிகளையும் நன்கறிந்து கூறக்கூடிய அவ்வளவு அறிவாற்றலுடையவர்களாகவும், விருப்பு வெறுப்பின்றி சமன்கோலைப்போல் நடுநிலையாகத் திருவறங்கூறி உலகை நன்னெறியிலுய்த்துப் பாதுகாக்கும் நேர்மையுடையவர்களாகவும் இருந்தனர் என்பதும், அவர்களை உலக நோன்பின் கடவுள்களாகக் கருதிப் போற்றினர் என்பதும் விளங்கும். எனவேதான் இன்றும் ஓர் சங்கத் தலைமை தாங்கும் அறிஞர்கள், நான் இதற்குச் சற்றும் "அருகன் அல்லேன்" என்று கூறுதல் மரபாயுள்ளது. ஆகவே சங்கத்தின் தலைமைப் பதவி உரிமையுடையவன் "அருகன்" என்பது புலனாகும். ஆதிபகவான் சங்கத்தில் கேவிலிகள் 20,000. மனப்பரிய ஞானிகள் 12,700. அவதி ஞானிகள் 9,000. அங்கமுணந்தவர் 4,750. ரித்தி பெற்றவர் 20,600. ஆரியாங்கனைகள் 50,300. சாவகர் 3,00,000. சாவகிகர் 5,00,000.

தங்குபல விற்கனியை மந்தியின மொத்திடறித்
   துங்கபல வின்சுளையினைத்
 தாவிப்பரிந் துயிலை வொடிப் பிடுங்கிக் சில
     பேடைக்குளங் குளிரவே
 பொங்குகிளை யிற்றழுவி யோடக் கிடங்கிலியல்
வாளைக்குலங்கள் வெருவிப்
 பூனேச்சு வைத்தஞிமி றோடத் தடம் புகுது
     மோடுமுகில் கீறியொளிரும்
 திங்கள் சிகை வைத்துவளர் தெங்குநிழ லிற்கமுகு
    நீழலடி யிற்கனி கொளத்
 தேமாநிழற் றழையும் வாழையடி யிற்பெரிய
   தாழைநிழ லிற்குலவியே
 சங்குசொரி முத்துலவ யோத்தியம் பதியாளி
    சப்பாணி கொட்டியருளே
 தலமுழுது நொடியில்நவ மணிகையென வுணர்முனைவ
     சப்பாணி கொட்டியருளே.  (32)

துக்கம் - உயர்ச்சி.

மஞ்சுலா வியபொழில்செய் பந்தர்மேல் விரிமலர்கள்
    மகிழ்கொன்றை மாலைநாறும்
 வந்ததோ ரணவாழை யம்பினா லருகியதும்
    அம்மரத்தளி ரினிலைமேல்
 விஞ்சுதே னாகுதிநெய் புங்கமே பொரிகளென
     வேள்வியின் பூக் கள்சிதறும்
 வேதியர்கள் மாமறைக ளோதுவது போற்குயில்க
    ளொலிக்க மயில் நடனமிடவே
 கஞ்சா சனத்தின்மிசை யோதிமஞ் சேவல்மேல்
     கவ்வியிதழ் மாலை சூட்டக்
 கலகலெனப் புள்ளினம் வகைதொனிப்பவும்
    கருதுபல் லியங்களெனவே
 தஞ்சொல்மா றாமல்வா ழயோத்தியம் பதியாளி
     சப்பாணி கொட்டியருளே
தலமுழுது நொடியில் நவமணிகையென உணர்முனைவ
       சப்பாணி கொட்டியருளே. (33)


அம்பினால்- நீர்த்துளிகளால். புங்கமேபொரி - மூவாண்டு கடந்த நெல்லால் பொரித்த உயர்ந்தபொரி. வேள்வியின் -- பெரு நெல் வேள்வி.



அம்பொளி னரம்பைதே மாபலா தெங்குடன்
   ஆன கனிசேர் பண்டியும்
 அரிவையர்கள் மனமகிழும் ஆணிமுத்துப் பவழம்
    ஆனவணிசேர் பண்டியும்
 செம்பொனன் னிறச்செநெல் கள்சேர் பண்டியுங் கமழ்
   செழுமாமலர்ப் பண்டியும்
 சிறுசந்தனங் காக துண்டநற்பண்டியும்
   செய்யதுகில் சேர்பண்டியும்
 உம்பர் புகழ் செம்பொனொடு உலோக நற்பண்டியும்
   உடனிலங்கிய வீதியில்
 ஒளிசெயும் பலசனமும் இடைநெருங்கிய மணிகள்
   ஒளிதிகழு மாடநிரையின்
 தம்பலக் கொடிதவழ் அயோத்தியம் பதியாளி
     சப்பாணி கொட்டியருளே
 தலமுழுது நொடியில்நவ மணிகையென யுணர்முனைவ
    சப்பாணி கொட்டியருளே.  (34)

   அரம்பை- வாழை. ஆணி - கெட்டி. காக துண்டம் - அகில்.

திங்களொளி முக்குடை யிலங்குபிரபை யுற்றநிழல்
     செம்பதும மிக்கவிதழ்மேல்
 செங்கதிரு தித்தவென வந்துலக முற்றுமடி
   வந்தனை சிறப்பியலவே
 தங்கமணி ரத்னவொளி பொங்குமுடி யிற்றிகழச்
    சம்பிரமுடன் மிக்கமரர்
  தஞ்சமென வுந்தனடி அஞ்சலிசெய் தருச்சனையின்
    சங்கரனெனப் புகழவே
 பொங்குபொழி லகத் துவயற் றெங்கு பல வின் கமுகு
     சண்பக முதற் கதலி சேர்
 புண்டரிக நற்குவளை விஞ்சுமடுவிற் றிகழும்
    பொங்கமுட னற்பதுமமே
 சங்கநிதியே யுதவும் அயோத்தியம் பதியாளி
   சப்பாணி கொட்டியருளே
 தலமுழுது நொடியில் நவமணிகையென வுணர்முனைவ
    சப்பாணி கொட்டியருளே. (35)


      செம்பதும - செவ்வியபதுமராகம்.  சம்பிரமம் - களிப்பு. பதுமம் - பதுமநிதி.


அலையிடுந் திரணமென வினைகளின் படுமுயிர்கள்
    அச்சமகலப் பாரின்மேல்
 அறமொழிந் துயர்கதியின் அடையமந் திரமருளும்
    முக்குடை நிழற்போதனே
 தலையெலும் புரகமோடு சரமணிந் திடுபவனை
    எப்பொழுது மெய்ப்பாகவே
 சரணமுன் சரணமென அடைபவர் புன் சமயமொழி
    பற்றிவரு நிட்டூரர் தாம்
 உலையின்வெங் கனல்மெழு கெனவடைந் திழிகதியின்
    உற்றமதி கொட்டோடவே
 உழையினந் தகற்பறவை முயல்களும் படவலையின்
     நடப்போர்கள் விட்டோடவே
 கொலைபுரிந் தறமொழி முருடர் வஞ்சகமல
     கொட்டியருள் சப்பாணியே
 குறியில்புன் சமயவிருள் எறியுநன் கதிருதய
    கொட்டியருள் சப்பாணியே. (36)

   மந்திரம் - அரகந்தர், சித்தர், ஆச்சாரியார், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐம்பதங்களை உச்சரித்து உருப்போடுதல். ஒவ்வொருவனும் புருடார்த்த சித்தியடையவேண்டியதே கல்வியின் நோக்கம். கற்றவன் காட்சி நிலை முதலாகிய சாவக நிலைகளில், இவ்வைம்பதவி நோக்கத்தோடு முன்னேறித் துறவுபூண்டு முறையே சாதுக்கள், உபாத்தியாயர், ஆசாரியர், அரகந்தர் சித்தர் பதவிகளையடைய வேண்டிய உள்ளுணர்ச்சியைத் தூண்டுவது இம்மந்திரம். வீட்டுலகை நோக்கிப் புறப்பட்டு இம்மாற்றில் போகின்ற யாத்திரை வாசிகளுக்கு இம்மந்திரம் பெருந் துணையென்பது மனநூல் முடிபு. ஆதலால் 'மொழிப்பொருள் தெய்வம் வழித்துணையாகென' என்றார் இளங்கோவடிகள். இவ்வைம்பதங்களும் வாழ்க்கையின் இரகசியத்தைப் பூரணமாக்குதலால், 'மந்திரம்' எனப்படுகிறது. தீர்த்தங்க்ரர்கள் திருவறங்கேட்ட கபாலிகள் முதலிய கொடியவர்களும் அறத்தின் பெருமையால் முரட்டுப்பிடிவாதமகன்று பண்படுதலால்  "தலையெலும் புரக.......வஞ்சகமகல" வென்றார்.


      'மான் கன்றும் புலியின் கன்றுமாறியே முலையையுண்ணும்,  ஆன் கன்று மானைக்கன்றும் சிங்கத்தின் கன்றோடும், ஊன்தின்று வாழுஞ் சாதியத்தொழிலொழிந்த வுள்ளம், தான் சென்ற சாந்தியார்க்கு மாதவன் தன்மையாலே',--- மேருமந்திரம் -- கொலைபுரிந்.... முரடர் - கொலை செய்துகொண்டே அறங்கூறு பிடிவாதக்காரர்கள்.



அடியகன் றிடவுமெழு கயிறகன் றிடையளவு
   உத்தொரு கயிற்றாகவே
 அமரர்தம் பிரமருல களவுமைங் கயிறுமுடி
   விற்கொரு கயிற்றாகவே
 படிபகர்ந் திடவுமீரேழ் கயிறுயர்ந் தடியிலெழு
    கயிற்றளவு வித்தாரமாய்ப்
 பகரரும் படியழிவில் லுலகனந் தம்பலவும்
    உற்றவுயிர் பற்றாமென
 நொடியிலங் கையில்மலக மெனவுமந் தரவுலகின்
    உற்றபொருள் வித்தாரமாய்
 நூவலுபுங் கவர்முனிவர் அகமகிழ்ந் திடவுமருள்
    அட்டகுண மிக்காதனே
 கொடியவெம் பிணியகல வருள்செயும் பெருமுனைவ
    கொட்டியருள் சப்பாணியே
 குறியில்புன் சமயவிருள் எறியுநன் கதிருதய
     கொட்டியருள் சப்பாணியே. (37)

  பற்றாம்என - வினைப் பற்றுடையவையாகுமென. கையில் மலகம் - அகங்கை நெல்லிக்கனி. மிக்காதன் - மிக்க அருகன். குறியில் - குறிக்கோளில்லாத.


கணமலிந் திடுமெயிலின் அமரர்விஞ் சையர் கள்தொழ
   உற்றவிரு பொற்றாளினன்
 கருதியயெண் டிசையுலவி அறமொழிந் திடுகடவுள்
     காதிவினை கெட்டோடவே
 மணமலிந் திடுமசோக நிழலமர்ந் தினிதினியல்
    நற்றவர்கள் மிக்கோதவே
 மனையறமுந் துறவறமும் மருவமந் திரமருளும்
     மட்டவிழ் மலர்ப்பாதனே
 வினைமலிந் திடுமுருடர் தொழமறந் தவவினையின்
    உற்றுமிக வித்தாரமாய்
 வகைகளும் பிணியுமிக இடர்களும் படுவர்மெலி
    வுற்றவர்களைப் போற்றவே
 குணமலிந் தருள் புரியும் இறைவவெம் பகையகல
     கொட்டியருள் சப்பாணியே
 குறியில் புன் சமயவிருள் எறியுநன் கதிருதய
    கொட்டியருள் சப்பாணியே. (38)


  கணம் - பன்னிரு கணங்கள். ஒருவன் இல்லற துறவற நெறியால் நோற்றுயர்ந்து தன் இயற்கைத்தன்மை யடைதலே பஞ்சமந்திரத்தின் குறிக்கோள் என்பார் மனையறமுந்..... மந்திரம் என்றார். "உயர்கதியினையடைய மந்திரம்" என்றார். முன்னும் (36) இப்பஞ்ச மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு வந்தவர்கள் ஊழால் வேற்றுச் சமயிகளாய்க் குறிக்கோளில்லாத பஞ்சமந்திரங்களை யுச்சரித்துக்கொண்டு, அருகனைத் தொழமறந்து, மெலிவடைந்தவர்களைப் போற்றவேண்டியே - "இன்னா செய்தார்க்கு மினியவே செய்யாக்கால், என்ன பயத்தோ சால்பு"என்னும் விதியையும், "இழுக்கலுடையுழி ஊற்றுக்கோலற்றே ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்" என்னும் விதியையும் விளக்கக் 'குணமலிந்தருள் புரியும் இறைவன் அருகன்' என்றாராயிற்று.


அருகிலங் கியகவரி வருடவும் பரர் கணமும்
   மிக்கதிறல் விச்சாதரர்
 அவனியம் பதிமனிதர் சினநெருங் கியமுனிவர்
    தத்துவமும் வித்தாரமாய்
 மருமங் கலமொழிகள் துதிகளின் புறமொழியும்
    மட்டவிழ் மலர்ப்பாதனே
 மணமலிந் திடுமொழிகள் கனியுதிர்ந் திடுதருவின்
  மிக்கரச மொத்தோதநீர்
 பெருகுசெஞ் செநெல்வயலில் உழவர்சென் றிடவெருவி
     யுற்றகயல் மேற்றாவியே
 பிறழரம் பையின் மடலின் இலையிற்றுஞ் சிடமடுவில்
     உற்றகம லத்தேமிகும்
 குருகுவண் மணமுரலும் வினிதையம் பதியிறைவ
     கொட்டியருள் சப்பாணியே
  குறியில்புன் சமயவிருள் எறியுநன் கதிருதய
   கொட்டியருள் சப்பாணியே. (39)

  அம்பை - வாழை. குருகு - நீர்வாழ் பறவை.

சிவலையம் பரமுடையர் உயிர்க்கணம் பெறுவர் சிலர்
    புத்தரெனும் நிட்டூரர்
 தினுவர்செம் பிசிதவகை இலையெனும் படிமொழிவர்
   கெட்டறிவு விட்டோடவே
 திவலையங் கருவுப பதமுசனை யிறங்குப்பதமு
   முப்பிறவி யுற்றேகியே
 தெரிவிலங் கிடைநரகர்க் கதிகளின் துயருழல்வர்
    சித்தமெலி வுற்றேகுவார்
 முவலையந் திகழ்பிரபையின் நிழலமர்ந் துயர்கதிகள்
   உய்க்குமிகு நற்றாளினான்
 முனிவருஞ் சுரர்மகளிர் வனிதையர்விஞ் சையர்பரவ
    வித்தையரு ளுத்தாகவே
 குவலயந் தொழவளரும் வினிதையம் பதிதலைவ
   கொட்டியருள் சப்பாணியே
 குறியில்புன் சமயவிருள் எறியுநன் கதிருதய
   கொட்டியருள் சப்பாணியே. (40)


    சிவலை அம்பரமுடையர் - செங்காவியுடையவர்.  செம்படர்கள் - பௌத்தர்.  பிரசித்தம் - இறைச்சி. இலையெனும்படி - உயிர் இல்லை என்னும்படியாக. தில்லை - துளி, சுக்கிலம். கரு உபபதம் முசனை -கருப்ப உபபாதசம் மூர்ச்சனை.


5. முத்தப் பருவம்

செழிவிஞ் சியபொன் மணிமகுடத்
   தேவர் குழாம்வந் தியைந்தீண்டிச்
 சீரா ரயிரா வதமீதில்
  செம்பொற் கனக கிரிசேர்த்திப்
 பொழிய நுகர்ந்து மழைமாரி
  போலக் கடலின் பால்முகந்து
 போற்றிச் சென்ம அபிடேகம்
   புனைந்து புனிதா வென்றேத்தும்
  பழுதி லமரர் தம்பெருமான்
   பரமா முலக மூன்றிறைஞ்சப்
  பருதி மதிபோ லொளியுடையான்
    பதினெண் பாடை யோர்மொழியாய்
    மொழியும் பவளக் கனிவாயால்
    முத்தம் தருக முத்தமே
   முத்தின் குடைமூன் றுடையபிரான்
  முத்தந் தருக முத்தமே.  (41)

    முத்தம் - முத்தங்கொடுத்தல். பருவம் - பதினொன்றாம் மாதம் பருவம் என்பர். செழு விஞ்சிய- வளமிகுந்த. அயிராவதம் - தேவேந்திரனுடைய யானை.


மதனூல் பிடித்து வழிதவறி
  வழிபா டறியா மாமூடர்.
 மருவுஞ் சீவ தயவுமிலார்
  கதிநான் குழல்வரென வருள்வாய்
  சுதனூற் றுவரில் பரதேசன்
  சோர்வில் மகுடம் பெற்றனர்கள்
  சூழ்முப் பத்தீ ராயிரவர்
   சொரிந்து மலர்கள் கொடுபரவப்
 பதநூ புரத்தி னளகேசன்
   நாடித் தேடிப் பாட எயில்
  பரமா முனிநா யகர்தமக்கும்
    பாரில் மனித ரனைவோர்க்கும்
  முதனூ லுரைத்த கனிவாயால்
  முத்தந் தருக முத்தமே
  முத்தின் குடைமூன் றுடையபிரான்
    முத்தந் தருக முத்தமே.  (42)

 மதனூல் பிடித்து - காமசாத்திரங்களைக் கடைபிடித்து, வழி தவறி - இல்லற துறவற நெறி. சுதன் நூற்றுவரில்.... பிள்ளைகள் நூறு பேர்களில் பரதேசுவர சக்கரவர்த்தி முப்பத்திரண்டாயிரம் மகுடவர்த்தனர்கள் புடைசூழ. 32,000 முடியரசர்களுக்கதிபதியாகிய பரதன் ஆறு கண்டங்களுக்கும் அதிபதியாக ஆண்ட முதற் சக்கரவர்த்தியாதலின் அந்நிலப் பரப்பே, "பரதகண்டம்" எனவாயிற்று. 


    "இடப தேவர்க்குப் பிறந்தவன் பரத சக்கரவர்த்தி. இவன் இமவான் பர்வதத்திற்குத் தெற்கேயுள்ள மகாபரத ஷேத்திரத்தை ஆட்சி புரிந்தானாதலால் "பரதகண்டம்" எனப் பெயராயிற்று. (அக்னி புராணம்). 'நாரத புராணத்திலும், 'ஓ' அரசனே இந்நிலம் முதன்முதல் இடபதேவர் குமாரன் பரதனால் ஆளப்பட்டமையால் "பரத கண்டம்" எனப் பெயராயிற்று' என்று அறிகிறோம். (Permenant History of Baratha Varsha Vol.1.p.p.205,207,210 and 213) இதற்கு, கே.எ.ஐயர் என்பவர், "பரதனுடைய தந்தை" என மாறுபாடில்லாமல் குறிப்பிடப்பட்டுள்ள இடப தேவரின் பெயர் அறத்தைக் குறிக்கிறது என்றார்; அதுவே வழக்கமாகப் புராணங்களில் நந்தியாக விளக்கிக் கூறப்படுகிறது." எனத் தெளிவுரை கூறுகிறார்(213); பாகவதமும் இங்ஙனமே விளங்கக் கூறுகிறது. (ஐந்தாவது ஸ்கந்தம்) நூபுரம் - சிலம்பு. "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூலாகும்" (தொல்காப்பியம்) என்பது இயற்கை விதியாதலால், முதல் நூலுரைத்த கனிவாயால் என்றார்.

கொலைகொண் டிடுமக் கரடி புலி
    கொடிய சிங்க மொடாளிகளுங் 
குரல்தன் தொனியிற் குஞ்சரமுங்
    கொல்லச் சீறு மலைநாகம்
அலையுண் டமுத கற்பகமும்
   அடைவே மறைந்தி ருள்பரவ
அப்போ காற்று மழைபனியும்
   அருவிச் சுனைநீ ராறோட
மலையுண் டெவருந் துயருழல
   மருவுங் காலத் திடரகற்றி
மன்னு நாபி மனுராசன்
   மணவா ளன்றன் மனையாட்டி
முலையுண் டமுதக் கனிவாயால்
    முத்தந் தருக முத்தமே
முத்தின் குடைமூன் றுடையபிரான்
    முத்தந் தருக முத்தமே.  (45)


     கொடிய விலங்குகளும் பாம்புகளும் கொல்லச்சீறிய ஆதிநாள், கற்பக மறைந்தநாள், முதன்முதல், காற்றுமழை பனிதோன்றிய நாள், சுனைகள் அருவியாக ஓடியநாள், எந்நாளோ அந்நாளே   ஆதிபகவன் தோன்றிய திருநாள் ஆகும். அந்நாளிலே அப்புதுமையான காட்சிகளைக் கண்டு திகைப்புற்ற மக்களின் இடரைப் போக்கி வழிகாட்டின மகான் ஆதிபகவன் எனப்படுதலால்,

மழைம லர்க்கண் மகளிரத்ன
   கலச முற்று முலையின்மேல்
மருவி நித்தம் பெருகியுற்று
    மயலின் மெத்த மருகியோர்
குழவி கொன்றின் கறியெனத்தின்
    றுலவு மிக்கோ ரறிவிலாக்
குறியில் பொய்த்தே வதைதுதிக்குந்
   கொடிய பொய்ப்புன் சமயமாம்
அழலி னுக்கண் மழையெனப்பெய்
    யருள்வி சும்பி னகலமே
அமரர் நித்தம் பரவவுந்தண்
   ணதிச யப்பைங் குயில்கள் சேர்
தழைம லர்ப்பிண் டிநிழற்கண்
    தலைவ முத்தந் தருகவே
தருக முத்தம் அருகமுத்தம்
    தருக முத்தந் தருகவே.  (46)



    குழவி........பொய்த் தேவதை -- பிள்ளைக்கரி வேண்டித்தின்ற, அறிவில்லாத, குறிக்கோளில்லாத போலித் தெய்வத்தை.


 கனக முத்தம் நிலவெறிக்குங்
   கவரி பக்கம் வருடவே
கவிஞர் நித்தந் துதிதுவக்குங்
   கமல மொக்குங் கழலுலா
தனின ரற்றும் பதபுயத்தின்
   மணிமி ழற்றுங் திருவினால்
தனன தத்தந் தனன தந்தந்
   தனன தத்தந் தனனதா
வெனந டிக்கு மமரருத்துன்
   பருவ மொத்தண் ணிசையினால்
விமல நித்தம் பயில்தலத்தின்
    மிகவி டுக்கண் ணகலவே
தனம ணிக்கிண் கிணிதொனிச்செய்
     குழவி முத்தந் தருகவே
தருக முத்தம் அருகமுத்தம்
    தருக முத்தந் தருகவே.    (47)


பதபுயத்தின் - பாததாமரையின். அத்து-சாரியை.


அறிவில் பொய்ப்புன் சமயமிக்க
    விருள கற்றும் பருதியே
அகில முற்றுந் தொழமதித்தவ்
     வினைது ணிக்குங் கருவியே
வெறிம லர்ப்பிண் டியினிழற்கண்
    அறமளிக்குஞ் சுருதியே
விரிம ரைக்க ணிகை நிலத்தங்
    கருள்சு ரக்குஞ் சுரபியே
பொறிய விக்குந் தவர்சித்தத்
    துறையும் ரத்தி னகிரணமே
புவன முற்றுந் தொழமதிக்கப்
     பொருளு ரைக்குங் கடவுளே
தரைம கட்குத் திலதயோத்தித்
     தலைவ முத்தந் தருகவே
தருக முத்தம் அருகமுத்தம்
    தருக முத்தந் தருகவே.  (48)


  விரிமரைக்கு அணிகை நிலம் - விரிந்த பொற்றாமரை மலர்க்கு நான்கு அங்கு அண்மையாகிய மேல்நிலத்தே திரு உலாச்சென்று அறங்கூறல் அருகன் இயல்பு. மலரில் செல்லுதல் இல்லை. "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ்வார்". பொறியவிக்குந்....கிரணமெ - "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க, நெறிநின்றார் நீடு வாழ்வார்" அத்தகைய அருந்தவர்கள் சித்தத்தே நின்று ஒளிரும் மணிக்கதிராகிய பகவனே, பவனமுற்றுந்...கடவுளே.


"புகழ் நுவலமுக்காலமு நிகழ்பறிபவன் இயல்புரைத்தன்று" தன் கீர்த்தியைச் சொல்ல மூன்றுகால நிகழ்ச்சியையும் அறியுமவன் தன்மையைச் சொல்லியது,


இம்மூவுலகி னிருள் கடியுமாய் கதிர்போல்,
அம்மூன்று முற்ற வறிதலாய் - தம்மின்,
உறழா மயங்கி உறழினு மென்றும்,
பிறழா பெரியார்வாய்ச் சொல்.


நாகலோகம் பூலோகம் சுவர்க்கலோகமென்னும் மூன்று லோகத்திலுள்ள அந்தகாரத்தைப் போக்கும் அழகிய ஆதித்தனை யொப்ப இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலத்தையும் முடிய அறிதலால் தம்மில் தாம் மாறுபடாதன மாறுபட்டுப்பால் புளித்துப் பகலிருண்டு மாறுபடினும் எக் காலத்தினும் தப்பாச் சான்றோர் மெய்ம்மொழி" ஒருபாற்கிளவி எனைப்பாற்கண்ணும் வருமாதலால்'அறிபவன்'என்றார்." இஃதே தமிழ்கண்ட அறிவன் வாகை,(புறப்பொருள் வெண்பாமாலை 167.)    

                    
 அரண முற்றும் தவர்கள் செப்புங்
  கலையின் மெய்ச்சொல் வருடமூன்
லகல லுற்றஞ் செநெலையப்பன்
    அசமென் றிட்ட தறிகிலார்
முரண முற்றும் படிபிதற்றும்
    முழுமு ருட்டர் குறியெனா
முகம றிக்கொற் றசையினைச்செந்
     தழலி லிட்டுந் தயவிலார்
சரணெனப் புன்ச மயர்பொய்த்துன்
   பனிய கற்றும் பருதியே
சதக ணத்திந் திரர் சமைக்குங்
    குடைமு மைக்கண் கனகமே
தரணி முற்றும் புகழயோத்தித்
      தலைவ முத்தந் தருகவே
தருக முத்தந் தருகவே.      (49)


அரணம் முற்றுந்தவர்கள் - உயிரைப் பாதுகாக்குந் தவத்தில் முதிர்ந்த அறிவர்கள், முருட்டர்-- முரட்டுப் பிடிவாதகாக்காரர்கள். குறியெனா- தம் இலட்சியமென, கொற்றவை - கொன்றதசை, சரண் என - சரணாகதியென.


கரும முற்றுங் குடியெடுக்கும்
    படிது ரத்துங் கடவுளே
கலியி டுக்கண் பகையகற்றும்
    கருணை முற்றுங் கனகமே
அருவி னைப்புன் சமயிருட்டின்
   திரள்கு லைக்கும் பருதியே
அவனி முற்றும் படியளக்கும்
   படிசு ரக்கும் சுரபியே
ஒருமொ ழிப்பல் பொருளுரைக்கும்
     புலமைமிக்கும் பெரியமூ
வுலகி னுக்கு மிறையெனச்சென்
      றமரர் நித்தம் பணியுமோர்
தரும வித்தின் புறமுளைக்கும்
     தரும முத்தந் தருகவே
தருக முத்தம் அருகமுத்தம்
     தருக முத்தந் தருகவே.  (50)



  அவனிமுற்றும்..... சுரபியே - பல்வேறு பிழைப்புத் தொழிற்கலைகளையும், மிகுபொருள் விரும்பாமை, விருந்தோம்பல் முதலாகிய விரதங்களையுமளித்து உலகமுழுவதும் படி யளக்கும்படி சுரக்கின்ற சுரபியே. தருமவித்து - தீர்த்தங்கரநாம புண்ணியங்கட்டுதற்குரிய பதினாறு பாவனைகளாகிய விதை.


6. வருகைப் பருவம்

செயவர் மாவு மகாபலனாய்
  தேவ னான இலளிதாங்கன்
சீர்சேர் வச்ர சங்கரசன்
  செல்வக் குருவத் தாரியனாய்
இயலாஞ் சிரீத ரதேவனுடன்
   இன்சொற் சுவதி யச்சுதனாய்
ஏத்தும் புகழ்ம னுதர்ச்சனனாய்
    இன்பத் தனுத்த ரர்தேவன்
வியனா நாபி மனுராசன்
    விஞ்சு மருதே வியர் தமக்கும்
வீறும் விடப சுவாமியென
   வெளியா யுலகந் தொழவுலகில்
உயருந் தசாவ தாரத்தை
    உற்ற பெருமாள் வருகவே
உலகப் பெருமாள் மறைப்பொருள்
    உகாதிப் பெருமாள் வருகவே. (51)


   வருகைப்பருவம் - வாவென அழைக்கும் ஓராண்டுப்பருவம், வியன் - பெருமை. வீறும் - வேறோருவருக்குமில்லாச் சிறப்பும். வெளியாய் - வெளிப்படையாய். உகாதி- யுகங்கட்கெல்லா முந்தியதாகிய கிரேதாயுகம். பகவானால் பல்வேறு தொழிற்கலைகளையும் படைத்துப் பண்படுத்தப்பட்ட யுகமாதலின் கிரேதாயுகம் என்பதாயிற்று. கிருதம் - பண்படுத்தியது. ஆதிபகவனுடைய முற்பிறப்புகளுக்களவில்லை. "சுருங்கச் சொல்லல்" என்னும் அழகுபற்றி அவற்றுள் பத்து அவதாரமே எடுத்துக் கொள்ளப்பட்டது. இதைத்தான் விஷ்ணுவின் தசாவதாரமாகக் கற்பனை செய்துவிட்டனர். முன்பின் முடிவு யாதோ தெரியவில்லை.


ஆனை யேற ரிசீதேவி
   யழகு பூமா லைஇந்து
அலர்க திர்க யலும் பூர்ண
     கும்பமும் வனசப் பொய்கை
பானிடைக்க டலும் சிங்கா
     தனஞ் சுரர்விமானம் நாகர்
பனியியல் விமானம் இரத்தின
   இரரசி யக்கி னிக்கொழுந்து
தானியல் மனோக ரத்தின்
    கனாப்பதி னாறுங்கண்டு
தாய்மரு தேவி தானுங்
    தன்னுள மகிழ்ச்சி யெய்த
ஊனமில் கனவிற் றோற்றி
    உற்ற பெருமாள் வருகவே
 உலகம் பெருமாள் மறைப்பொருள்
     உகாதிப் பெருமாள் வருகவே. (52)



   ஏறு - எருது. இந்து - சந்திரன். மனோகரத்தின் - மனோகரயாமத்தில். கனாப்பதினாறு - சோடச சொர்ப்பனம்.

சலமுங் கந்தாட் சதைபுட்பம்
   சருவுந் தீப தூபமுடன்
சீர்சேர் பலமோ டட்டவிதார்ச்சனை
   செய்ய வுலகிற் இடங்கொடுத்து
நலமா முலோக கனகபுட்பம்
   பிரபா வலயம் பிரியமுடன்
நறுமா மலர்பெய் மழைதிவ்விய
   பாடை நவில்துந் துபிமுழங்க
நிலவுங் கவரி முக்குடையும்
   நிழற்செய் பிண்டி சிங்காநனமே
நீடு மட்ட மகாப்பிராதி
   காரிய நெருங்கு சிரீவிகாரத்தின்
உலவி யறமா மழை பொழியும்
    உபமா தீதன் வருகவே
உலகப் பெருமாள் மறைப்பெருமாள்
    உகாதிப் பெருமாள் வருகவே.  (53)


   அட்டவித அர்ச்சனை- எண்வகைக் கொடை. இது அருகனைப்போல வைராக்கிய பாவனையால் தம் தெய்வீகத் தன்மையடையவேண்டிய சாவகர்கள் அருகக்கடவுள் முன்னிலையில் செய்யப்படுவன...



  (1) ஜலம் - வினைமாசு போக்குவதற்கும், (2) சந்தனம் - பிறவித்தாபம் போக்குவதற்கும், (3) அட்சதை- உடையாமுழு அரிசி, அழியாப்பதவிப் பேற்றிற்கும், (பிறவி யொழித்ததற்கும்) (4) புட்பம்- புட்ப பாணமுடைய காமனை வெல்லுவதற்கும், (5) சரு- நைவேத்தியம், அநசனம், ஆவமோதரிய முதலிய விரதங்களால் பசி வேட்கையைப் போக்குவதற்கும், (6) தூபம்- வினைகளை எரித்ததற்கும், (7) தீபம் - கேவலஞான ஒளியடைவதற்கும், (8) பலம்- மோட்சபலம் பெறுவதற்கும் அறிகுறியாகச் செய்யப்படுவதாகும். கடவுள் முன் தாரை வார்த்து தத்தம் செய்யப்படுதலால் "நிர்மாலியப் பொருள்" எனப்படுகிறது. எவரும் உபயோகிக்கக் கூடாதென்பதும் கருதத்தக்கது. இங்ஙனம் ஒருவன் தன் இயற்கைத்தன்மை யடைய முன் வழிகாட்டு மாதிரி புருடனாக அருகக் கடவுளைப் பின்பற்றி யொழுகுதலால், அட்டவிதார்ச்சனை செய்ய உலகிற்கிடங் கொடுத்தும்" என இலக்கணையாகக் கூறினார். சீர்விகாரத்தின் உலவியறமா மழைபொழியும் அறிகுறியே திருவிழாக்கள். உபமாதீதன் - தனக்குவமையில்லாதவன்.


 சொர்க்கா வதரண கலியாணஞ்
  சொரிந்து மூன்றரைக் கோடிதனம்
சோர்வில் சக்தியோ சாதனெனச்
  சுரர்க ளியற்றித் திருநாமம்
திக்கோர் புகழ்சென் மாபிடேகத்
   தேவ ரியற்றிவா மனெனத்
தீட்சா கலியா ணத்தமரர்
   செயமா மகோர னெனப்போற்றிப்
பற்றற வியலுங் கேவலத்தின்
   பணிந்தீ சான னெனவேத்திப்
பரிநிரு வாண பதவிதனில்
   பாரோர் புகழ்தற் புருடனென
உற்றுப் பஞ்ச கலியாணம்
    உடைய பெருமாள் வருகவே
உலகப் பெருமாள் மறைப் பெருமாள்
   உகாதிப் பெருமாள் வருகவே. (54)

   ஆதிபகவனுடையபஞ்சகலியாணச் சிறப்பையொட்டித் தேவேந்திரன் ஐந்து வகைக் காரணப் பெயரிட்டான். சொர்க்கவாதரணத்தில், என்றுமில்லாத புதுமையாக அப்போதுதான் கருவடைந்தவராதலால், "சத்தயோசாதன்"எனவும், அவதிஞானத்தோடு செனித்தவராதலால், சென்மாபிடேகத்தில் "வாமன்" எனவும், அகோர தவம்புரிபுரிந்தவராதலால், தீட்சா கலியாணத்தில் "அகோரன்"எனவும், கேவல உற்பத்தியில் முற்றுமுணர்பவராதலால், "ஈசானன்" எனவும்' பரி நிர்வாணத்தில், தன்னுடைய புருடார்த்த சித்தியடைந்தவராதலால், "தற்புருடர்"எனவும் இட்டு வழங்கினான். இவ்வைந்து பெயர்களைத்தான் ஈசனுடைய ஐம்முகங்களின் பெயர்கள் என உருவகஞ் செய்துவிட்டனர். ஆனால் பொருட்சிறப்பின்றி யுள்ளன.

குழியை யெடுப்பார் மடையெடுப்பார்
    கூலி கொடுப்பார் செநெல்லறுப்பார்
குவளை களைவார் விதைவிடுவார்
    கூடி யுழுவார் போர்ப்படுப்பார்
கழிகள் கழிப்பார் கரும்பெடுப்பார்
    கதிர்சூ டெடுப்பார் கமுகிறைப்பார்
கதலிக் கடைப்பார் பழம்பறிப்பார்
    கலப்பை நிறைப்பார் நீர்மறிப்பார்
பழுதில் வயலில் பரம்படிப்பார்
   பாத்தி வகுப்பார் நீர்விடுவார்
பாகு சமைப்பார் வட்டறுப்பார்
    பாடி நடுவார் எருவிடுவார்
உழுதேர் விடுவார் ஒலியடங்கா
    அயோதிப் பெருமாள் வருகவே
உலகப் பெருமாள் மறைப்பெருமாள்
      உகாதிப் பெருமாள் வருகவே. (55)


  சூடு - அரிக்கட்டுகள், கமுகு - பாக்குமரம்                        


கனக கிரியின் மிசைசுரர்கள் பணியவருட்
   கழல்கள் கலகலென வருகவே
கவிஞர் துதிபரவி விசய சயவிருதின்
   கறுவில் நளினபதன் வருகவே
அனக னமலனென வகில முழுதுமறி
   அறிவர் பரவுபதன் வருகவே
அரிய கரிவயிரி யுறையு மணிகள் சுட
    ரணையின் மருவுபதன் வருகவே
சினவு மறலியொடு கரும வகைமதனுஞ்
   சிதற விடறுபதன் வருகவே
சைனநெறி வளர அறநன் மழையுஞ்சொரி
    செழிய முகிலொளியன் வருகவே
குனியு சிலைகருவி அயில்கள் இல துவகை
    குலவி யடிமைகொள வருகவே
குறியில் பரமசய விருளையெறி யுகதிர்
     உதய குரிசில்பதன் வருகவே.  (56)



சயவிருது- வெற்றிச்சின்னம். கறுவில்- செற்றமில்லாத, வேண்டுதல் வேண்டாமையிலான்.  கரிவயிரி- சிங்கம். ஜைனநெறி - வெற்றி மார்க்கம். குறிப்பிட்ட சமூகப் பெயரன்று. வெற்றி என்ற பண்புச்சொல் எவ்வளவு தொன்மையுடையதோ அவ்வளவு தொன்மையுடையவன் வெற்றியாளன் 'ஜினன்'. ஜைனசமயம்- தன்மயவெற்றி புருடார்த்த சித்தியாகிய தன்மய வெற்றிமார்க்கம் இயற்கைவழி. எனவேதான் "புத்தசமயம், சைவசமயம், வைணவ சமயங்களைப்போல் குறிப்பிட்ட ஒருவர் பேரால் 'மகாவீரசமயம்' இடபசமயம் என வழங்காமல் "ஜைனம்" என்னும் பொதுப்பண்புப் பெயரால் வழங்கப்படுகிறது. ஆதலின் இஃது "பாரதீயப் பொதுச்சமயம்" ஆகும். எனவேதான் சாவகர்களை "உலகநோன்பிகள்" என்பர் அடியார்க்கு நல்லார். இவர்கள் நோற்கும் விரதங்களை "அவனியின்விரதம்" என்பர் இந்த நூலாசிரியரும்.(26) "படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தோன்றன், உடல்சுவைதுண்டார் மனம்" ஆதலால் படைக்கலமேந்திய தெய்வங்களின் நெஞ்சம் பல்லுயிர்கட்கும் தீங்கிழைக்கவே கருதுமாதலால், குனியுசிலை........... வருக என்றார்.                        


முழுது மெரிகதிரின் விரியு முளரிமிசை
    முகரு கனகபதன் வருகவே
முனிவர் தவமுதலி விழியின் மறைமுதலி
   முழுது மறிமுதலி வருகவே
வழுவி லெழுநயமும் பொருளு முதலுதவும்
    வரிசை தெரிகுரிசில் வருகவே
வலியெண் வினைமலையைச் சரிய யிடறிவிழும்
    வளரே குளிநிகரன் வருகவே
பொழுது முழுதுமதி யளவி லொளிபரவும்
    புனித பரமபதன் வருகவே
பொறியி லெழுவிரக கனலை யவியவறம்
    பொழியு மழைபுயலன் வருகவே
குழுபன் னிருவர் துதி பொழிய வெயினுலுறை
    குணமென் கனகபுயன் வருகவே
குறியில் பரசமய விருளை எறியுகதிர்
     உதய குரிசில்பதன் வருகவே.   (57)


    முனிவர் தவமுதலி- முனிவர்களின் தவத்திற்கு முதல்வனே, விதியின் மறைமுதலி- விதிப்படி மறைகளைப் போதித்தற்குரிய அருகன் என்னும் பதவிக்கு முதல்வனே. வினைமுற்றும் விடுதலையடைந்த சித்த ஜீவனைக் கண்டவர் எவருமில்லை உடலின்மையால். உடலுடையவர்கள்தான் அறம் போதிக்க முடியும். எனவே காதிவினை மட்டுங்கொடுத்த அருகப் பதவியே விதிப்படி தருமம் போதித்ததற்கு முழு உரிமையுங் கடமையுமாதலால் விதியின் மறைமுதலி என்றார் அருகப் பதவிக்கு முதல்வனாதலின்.  "ரிஷதம் மாசமாநாநாம் ஸபந்நாம் விஷாஸஹீம், ஹந்தாரம் சத்ரூணாம் க்ருதி விராஜம் கோபிதம்கவாம்"  ருக்குவேதம் 12,166.



       "ஓ ருத்திரன் போன்ற தெய்வமே, நீ எங்கட்கிடையே உயர்ந்த வமிசவழியை; ஒரு சிறந்த கடவுளை; முதல் உலகப் பேராசிரியராதற்கு அருகன் எனுந் தகுதி வாய்ந்தவனை; ரிஷபதேவர் போன்றவரைச் சத்துருக்களை நாசஞ்செய்ய விடுவாயாக" இஃது இந்து பண்டிட் - பேராசிரியர்-விருபாட்ச பெரியார்; வேததீர்த்தா, எம்.ஏ. அவர்கள் ஆங்கில உரையின் மொழிபெயர்ப்பு. (Rishaba Deva The first world Teacher. P.74 மேற்கோள்) இதனால் உடல் தொடர்பின்றியே எஞ்ஞான்றும் சதாசிவமாய், பரப்பிரம்மமாயுள்ள தெய்வங்கள் விதிப்படி மறைகளை போதித்தற்குரிய தகுதியின்மையை உய்த்துணர்க.  ஏகுஉளி- எஃகு உளி,  அறம்- இல்லறம் துறவறம், சாவக நிலை யதியாசார நிலைகள். இந்நிலையினர் முறையே தன்னலந் துறந்து நோற்பவராதலின் "பொறியிலெழ.... அறம் என்றார்.  'தன்தெறல் வாழ்க்கைச் சாவகர், என்பர் இளங்கோவடிகள். " பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க, நெறிநின்றார் நீடு வாழ்வார்." ஆதலால்.


அருப சொரூபமுடன் அளவி லொளிபரவும்
    அமல விமலகுணன் வருகவே
 அருக சிநன்வருக அயில்களின வருக
    அமரர் பரவுபதன் வருகவே
 செருவில் விழமறலி மதனன் வினைகளுடன்
   சிதற இடறுபதன் வருகவே
 சிறைசெய் கொலைபொய்களை அகலு மெனமொழியுஞ்
     சுருதி மறைவழியன் வருகவே
 சொருப வனிதையர்கள் பரத நடனமிடச்
    சுரர்கள் தருவினிசை பயிலவே
 சுமுட ரறிவுபெற வனச மலர்பொழியச்
   சுதைகள் பிணியகல வொளியிலாக்
 குருடர் விழிகள்பெற முடவர் நடைகள்பெறக்
    குலவு மெயிலிறைவன் வருகவே
  குறியில் பரசமய விருளை யெறியுகதிர்
    உதய குரிசில்பதன் வருகவே.    (58)

  அருகசிநன்- அருகனாய் வெற்றியடைந்தவன், அயில்- அழகு, செருவில்- ஊழ்வினைப் போரில், சுருதி மறைவழியவன்- கேள்வி வழக்காய் வரும் பறைகளின் வழிகாட்டியானவன். சுதிமதியில்லையா? என்னும் வழக்காறு இக்கருத்தைக் கொண்டதாகும். பத்தியம் பிடித்த தாய்ப்பாலுண்ட குழவியின் பிணி நீங்குகிறது. "லங்கணம் பரம ஔடதம்; ஆகவே பூரணபத்தியமும் இலங்கணமும் பழகி வெற்றி பெற்றவனுடைய உடலின்காற்று வீசப்படுதலால் பிணியாளர் குணமடைகின்றனராதலால் "சுதைகள் பிணியகல" வென்றார். ஒளியிலா- பார்வையற்ற, தீர்த்தங்கரரின் வினைக் கேட்டினால் தோன்றும் அதிசயமாகிய மின்சார காந்த சக்தியால் குருடர்கள் விழி பெறுகிறார்கள். முடவர் நடக்கின்றனர். சுதைகள்- மக்கள்.

இமய மாலிமய நிடத நீலி்ருக்மி
   யினிய சிகரிகுல மலையின்மேல்
 இலகு கனககிரி யரத மலைகளுடன்
    இடப தரமனுடோத் தரமுடன்
 விமலரு சகரமுந் திகழக் குண்டலமுநந்
    தீசுர முடையிறைவன் வருகவே
 விரிபொன் னுலகமரர் பவணர் வியந்திரர்சோ
     திடர்களிட மிறைவன் வருகவே
 கமல மிசையுலவிக் கருணை புரிகடவுள்
     கழல்கள் கலகலென வருகவே
 கயிலை கிரியிறைவ எயிலி னினிதுறைவ
     கரும வினைதவிர வருகவே
 குமர வமரரொடு குலவி நிலவிவளர்
      குணமென் குரிசில்பதன் வருகவே
 குறியில் பரசமய விருளை யெறியுகதிர்
      உதய குரிசில்பதன் வருகவே.    (59)

     குமர அமரர்- பால வடிவம் கொண்ட தேவர்கள் "கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத்தலை" ஆதலால் 'குணம் எண்குரிசில்' என்றார்;⁠⁠⁠⁠

சமர வயிரோசனர் கவரி வருடமதி
    சுருதி வதிமனப் பரியயமோ
 டவனி முழுதுணர்கே வலமு மறிவுபெறு
   சமவ சரணபதி வருகவே
 திமிர வினையடவி முழுது மெரியிலிடு
    திறமை யுடைய பரன் வருகவே
 திகழு மணியின்வட மசைய வசையவருஞ்
     செகமும் மதிக்குடையன் வருகவே
 அமர ருலகினமிர் தயிலு மருதேவிதன்
    கலச முலையருவி பருகியே
 அணியி னணியழகும் அணியா தணியழகும்
    அழக திசயமுடையன் வருகவே
 குமர ரோடுகனக புரிசை மிசையுலவுங்
   குலவு நிலவுபதன் வருகவே
 குறியில் பரசமய விருளை யெறியுகதிர்
    உதய குரிசில்பதன் வருகவே.    (60)

      மதிசுதவதி மனப்பரியமோடு - மதிசுருதம் அவதி மனப் பரியாய ஞானமோடு; இல்லற துறவற நெறியின் குணத்தான முறையாக ஊழ்வினைகளை யுதிர்த்துக் கொண்டேகும் பதவி முன்னேற்றங்களில் பல்வேறாகிய அறிவொளி துலங்குமென்பது மனநூல் முடிபு. 
சமவசரணம் : சம - பொதுவான, சம உரிமையான, அல்லது பட்சபாதமற்ற, வெகுளியற்ற நிலை. அவசர வாய்ப்பு, எல்லாரும் தம் தெய்வீக ஞானம்பெறும் வாய்ப்புடைய பொதுஇடம். வேறுவகையாகக் கூறின் வெகுளியற்ற தன்மையடையும் வாய்ப்புடைய இடம். இதனை, "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி, கணமேயுங் காத்தலரிது" என்பதாலறிக. குணத்தானமென்னுங் குன்றேறி நிலையாய் நின்றவர்கள் அருகபரமேட்டிகள். "ஊழையுமுப்பக்கங் காண்பர். உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்" "ஆதலின்" திமிரவினை.... எரியிலிடு.... திறமையுடையபரன் எனவும், " இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன், பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு." என்பதும் வினைவென்ற தன்மையை யுணர்த்தும். விதியை மதியால் வெல்லலாம் என்பது மிதுவே. 

                       
7. அம்புலிப் பருவம்

உறுவர் நாயகனெனச் சரணமா யுன்பதம்
     உலகெலாமடி பணிந்திறைஞ்ச
 ஒளிர்திரு நாமமோ ராயிரத் தெட்டுடன்
      ஓங்கியதத் துவமுதலாய்ப்
 பெறுவதோர் குணங்க ளெட்டையு மடைந்து
    பிறங்குமூவுலக கத்திறையெனத்
 தெரியவந் தகிலத் திருச்சிறப் பியற்றுந்
     தேவதேவ னாற்செய்யும்
  மறுவிலாச் சமவ சரண்மிசை நிழற்றும்
      மும்மதிக்குடை யினன் நினக்கோ
 மறுவுண்டு மாசுசேர்நின் பால்மறுவினை யகற்றி
    மகிதலம் விளங்கவே
 அருளுவ னாதலாலறி வன்நாயக னுடனினிதா
     டுதற்கம்புலி வருவாயே
 அமரர் தேடுதற் கரிதவன் அழைத்தனன்
       அம்புலி வருவாய்.   (61)

     அம்புலி- நிலா, அம்புலி மா ஓடிவாவென நிலவை வெளித்துக் காட்டும் பருவம். உறுவர் நாயகன் - அறிவியல் முனிவர்க்குத் தலைவன்.

கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே யின்பம்
இடையுறு நாமமின்மை விதித்த  கோத்திரங்க ளின்மை
அடைவிலா வாயுவின் மையந்தரா யஙங்களின்மை
உடையவன் யாவன் மற்றிவ் வுலகினுக் கிறைவனாமே
      பழைய சூடாமணி நிகண்டு

அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த வீரிய,
மனந்த சுகியே, நாமமின்மை, கோத்திரமின்மை,
ஆயுவின்மை, யழியாஇயல்பென ஏயுங்கா
லிறைவன் எண் குணம்.  (திவாகரம்)

"ஐந்தவித்தா னாற்றலகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி" யாதவால், "மூவுலகத்து இறையென்..... தேவ தேவனால் செய்யும் மறுவிலாச் சமவசரண்" என்றார்.                        
[6:02 AM, 9/21/2017] Durairaj Gambiram Cheyyaru: "ஆண்டு முழுது நிலையாக நின்றான். தேவர்கள் அவனை நோக்கி, 'ஓ விரதீகனே!  ஏன் நின்று கொண்டிருக்கிறாய்?  என்றனர். அதற்கவன் பதிலிறுத்துக் கட்டளையிடுகிறான்; என்னுடைய விமானத்தைக் கொண்டு வரட்டும் என்கிறான். அவ்விரதீகனுக்காக அவர்கள் கொண்டு வருகின்றனர், விரதீகன் விமானம் ஏறினான். தேவகணங்கள் அவனுடைய பரிசாரகர்களானார்கள். பரி பாட்டையான விரதங்கள் தூதர்கள் மண்ணுயிரனைத்தும் அவனுடைய வழிபாட்டினவாயின.  (அதர்வ வேதம் அதிகாரம் 15).

     அதர்வ வேதத்தை "க்ரீப்பித்" என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இதைப் பற்றிய குறிப்புரையில், "நான் விரதீகனுடைய அ‌ல்லது வேதப் புரட்சிக்காரனாய் அலைந்தவனுடைய மிகு புகழையும், அகக்காட்சி யறிவையும் பற்றி விளக்கிக்கூற முடியவில்லை. அது புரிந்து கொள்ள மிகவும் கடினம். அவன் ஒரு காலத்தில் உணவுக்கும் விடுதிக்கும் அலைந்து திரிபவனாயும், ஒரு காலத்தில் எங்கும் நிறைந்த தெய்வீகப் பண்போடு ஒரு தெய்வீக போதனா முறைமைக்குரிமையாகிய மகாத்மாவாகவுங் காணப்படுகிறான்" என்றார். (Griffith's Translation of Atharva Vade - p- 199 Vol. ll) இது விருடப தேவனுடைய வாழ்க்கையைப் பொருத்தமாக இருக்கிறது. அவர் ஐயமின்றி முதலில் மனிதனாகவே முதலில் அலைந்திருந்தார். பிறகு விரதங்களை நோற்றதன் பயனால் எல்லா முணரும் உருவகமாய் எங்கும் நிறைந்த கடவுளாகவுமானார். அப்போது தேவர்களால் ஏவல் செய்யப்பட்டார். எல்லா உயிர்களாலும் தொழப்பட்டார். (Rishabha Deva Page 126)

      அறிவன் நாயகன் - பகுத்தறிவாளர்களின் தலைவன். இங்ஙனம் தேவர்கள் அறிவாளிகளைத் தேடுகிறார்கள். அருமையாகக் கண்டு வழிபடுகிறார்கள். ஆதலின் "அமரர் தேடுதற் கரிதவன்" என்றார்.

கமல மீதினி  லுலவியேயெழ
    வுலக ளந்து தன்னாணையால்
 ககன வாசிய ராதியோர் திரு
     வடிப ணிந்தி றைஞ்சச்செயும்
 நிமல நாயகன் செயுமிச்சே
     திகள்யா வர்க்குந் தெரியாதெனில்
 நீயுமோ வுணர்குவை விளங்கிட
       வுணர்கிலார் வினைக்கடல் வீழ்வார்
 விமல மாகநீ விளங்கலாமினி
     வியனு லுகதன் மீமிசை
விரிபணாமுடி யரவநின்னிடம்
     வராத கற்றுவ னாதலால்
அமல நாயக னுடனினிதாடுதற்
     கம்புலி வருவாயே
அமரர் தேடுதற் கரிதவ னழைத்தனன்
     அம்புலி வருவாயே.  (62)


          உலகளந்து-- உலகை கேவல ஞானத்தால் அளந்து, திரு அடி - வீட்டு நெறி காட்டும் அழகிய அடிகள், பின்பற்றிச் செல்வோர்கள் அடியார்கள். தெரியதெனின் - தெரியாதென்றாலும், நீயுமோ உணர்குவை - ஆகாயவாசி யாதலால் நீ அறிவாய். வியன் - பெருமை.

மானினங் களுமயில் குயில்கிளிகளும்
    வண்டு தேனினம் ஞிமிறுடன்
 மருவு மன்னுநா வல்வயல் பொழில்களு
    மலிந்திடப் புடை சூழ்ந்து
 வானிலங் குயர்மா மேருவின் மகபதி
     பூசனை யெனவே நீ
 வந்து தாரகைக் கணங்களோடுடன்
      வலம்வர வதுவுமோ வுணர்குவை
 தேனினங்களும் பாடியசோகின்
     செழுமலர்த் திருநீழல்
 தேவ தேவன்வந் தடியினை பரவிச்
    செல்வனுன் னன்பாகில்
 ஆன நின்கலை குறைவர நிரப்பலாம்
     அம்புலி வருவாயே
 அமரர் தேடுதற் கரிதவ னழைத்தனன்
    அம்புலி வருவாயே. (63)

மகபதி பூசனை - இந்திராதியோரால் செய்யப்படுஞ் சிறப்பு.

ஓது மோர்மொழி பல்பொரு ளுரைத்தனன்
   இரண்டற முயர்வாக
 ஒளிரு மூன்றருங் கலங்களு முலகுய
      அளித்தவ னுயர் ஞான
 வேத நான்கையு முரைத்தவ னஞ்செழுத்
   துடன் விரி பொருளாறு
 ஏழு தத்துவ நன்னயம் பகர்ந்தவன்
   இயல்முனி வரர்போற்ற
 காதி யொடகாதி யெட்டையுங் கடிந்தவன்
    கருதுமொன்பது பதார்த்தமே
 கலையருங் கலங்கரை விளக்களித்தவன்
     பத்தவதா ரமே திகழும்
 ஆதி நாயக னுனையினி தழைத்தனன்
   அம்புலி வருவாயே
 அமரர் தேடுதற் கரிதவ னழைத்தனன்
     அம்புலி வருவாயே.  (64)


ஓர் மொழி - ஒப்பற்ற திவ்வியதொனி, இரண்டறம் - இல்லற துறவறம்,  மூன்றருங் கலங்கள்.  நற்காட்சி, நன்ஞான, நல்லொழுக்கங்கள். உலகுய - உலகங் கடைத்தேற. அஞ்செழுத்து - அ. சி. யா. உ. சா. பஞ்ச பரமேட்டிகளின் முதல் எழுத்துக்கள். தத்துவம் - மெய்ப்பொருள். இயல் முனிவரர் - இயற்கையாகிய நிக்கந்தர், பற்றற்றவர். கலை.... விளக்கு - சாத்திரங்களாகிய அரிய பிறவிக்கடலில் செல்லும் வாழ்க்கையாகிய மரக்கலத்தைக் கரைகாண வழிகாட்டும் விளக்கு.

பெரிய மூவுல கெறிக்கும்நல் லொளியினன்
     பிதிர்பரந் தழகாகப்
 பிறங்கு மாயிரத் தெட்டிலக் கணத்தினன்
     பேருமவ் வதிசயனாகி
 கரிய மாமுகில் மழைபொழிவதென
       காசினி யொருமூன்றுங்
 கருதி நல்லற மாரியே பொழிகுவன்
      கருணையி னியல்பாகப்
 பெருமை யாவரு மறிவரி தந்தமில்
     பிறங்கிடுங் குணநான்மை
 பெருகு சோதியோர் மூன்றினுள் ளெழதரு
      பிரபையொடு திகழ்சோதி
 அரிய நாயக னுடனினி தாடுதற்
      கம்புலி வருவாயே
 அமரர் தேடுதற் கரிதவ னழைத்தனன்
     அம்புலி வருவாயே.    (65)

    பிதிர் - மருக்கள். இயல்பாக - பொறியறிவுகள் தத்தம் இயல்பாகவே தொழிற்படுமாறு போலவே கேவலஞானமும் அறமாரி பொழிதல் இயல்பாகவே நிகழும். அன்றியும் அவ்வறிவனாகிய அருகக் கடவுள் அறங்கூறுதற்கு உரிமையுடையவர் - கடமையுடையவர்.

தசைதினும் படிபலி யிடும்பர
    சமயர் புன்சொலின் னறமென
 தகர்நிணங் களுமடிய சண்டிகை
      வாசல் முன்கொலை வதைசெய்தே
 திசைகலங் கியபல விலங்கினுங்
     துயர ழுந்திடு நரகிலே
 தினமு வெந்துயர் களினழுந்துவர்
      திறமை யுங்கெடு பவர்களே
 பசைதவிர்ந் திடக்கொலை பொயுங்கள்
    வகலு தொல்பரி கிரகமே
 பகைவரும் பிறமனை துறந்திடு
    மெனவு மைம்பத மருளியே
 வசையிரண் டறமென மொழிந்திடு
     வகை பெறும்படி வினிதையான்
 வருக வம்புலி வருகவம்புலி
      வருக வென்றனன் வருகவே.  (66)


  பரசமயர் - புற்கல மயமானவர், பௌதிக மயமானவர். சுவசமயர் - தன்மயமானவர். புருடார்த்த சித்தியடையும் அறநெறியைச் சார்ந்தவர் சுவசமயர். அல்லாதார் பரசமயர்.  பசை - துவர்ப்பசை. பரிகிரகம் - மிகுபொருள் வேட்டல். இதுவும் பஞ்சமாபாதகங்களில் ஒன்றென ஆதிபகவன் அருளினார். அசை - இயங்கு நெறி.

குறுகு மைம்பொறி யரவநஞ்சினில்
    குலவி வஞ்சகர் உலவியே
 கொடுவிலங் கினும்நர கர்துன்பமுங்
     குவல யங்களின் வெருவியே
 உறுவர் தஞ்சமென் றடையவின்சொலின்
    உயரு மந்திர மருளியே
 ஒளிபெறும் பர்கள்கதி யடைந்திட
      உவகை யின்சுரர் பணிகுவார்
 குறைவு முண்டொளி நிறைவுமுண்ட
      ரவது விழுங்கவும் பெறுவைநீ
 குவல யங்களுமறிவர் கொண்டலின்
    மறைவு முண்டுக விருளிலா
 மறுவில் சந்திர ரொளிவிஞ்சிய
      வணியி ரண்டொரு கவிகையான்
 வருகவம் புலிவருக வென்றனன்
      வருக வம்புலி வருகவே.    (67)

     அற்பமான ஐம்பொறி வேட்கையை அரவ நஞ்சாக உருவகஞ் செய்தார். நாளடைவில் ஆயுளைக் குறைத்தலின் "குறுகும்" என்று அடைகொடுத்தார். ஐம்பொறிப் போகிகளும், நல்ல உரமுண்ட பயிர்களும் குறைந்த வயதுடையாவும், மிகுபொருள் விரும்பாமையும், போக உபயோக பரிமாண விரதங்களால் வேட்கையைக் கட்டுப்படுத்தி ஒழுகுவோறும், மிக வறியவரும், மழைவசதி உரவசதி குறைவுள்ள பயிர்கள் நீடித்த ஆயுளுடையவையாகவும் இருத்தலை அனுபவ அறிவு (Obeservation) மெய்ப்பிக்கிறது. இந்நுட்பங்கள் யாவும் பௌதிக விஞ்ஞானிகட்குப் புலனாகாது. பௌதிக விஞ்ஞானக் கருவிகளுக்கு அப்பாற்பட்டது ஆத்மா.  ஆதலால் ஆத்மீக விஞ்ஞானிகள் நன்குணர்ந்து எச்சரித்திருக்கின்றனர்.

    "யானை ஊற்றின், மீனது சுவையின், அசுணமிசையின், அளிநாற்றத்தின், ஏனைப்பதங்கமுருவங்கண்டு உயிரிழப்பாகுமென்மனார் புலவர், (திவாகராம்) ஐம்புல வேட்கையுமொருங்கே யுடைய மனிதர்கள் அடையும் அல்லலுக்கோர் அளவுண்டோ? இன்று இந்தியா மேல்மேலும் ஆஸ்பத்திரிகளையும், கோர்ட்டுகளையும் வக்கீல்களையும் வேண்டுகிறது. மிகுபொருள் விரும்பாமை, போக உபபோக பரிமாண விரத நோலாமையால், சின்க்ளேர் (Sinclair)என்பவர் வாழ்க்கையைப் புதுப்பிக்க உபவாசம் துணைபுரிகிறது என்றார். உடலுக்கு உண்ணாவிரதம் எப்படியோ அப்படியேதான் உயிர்களுக்குத் தவம் உரமாகும். நவீன உலகம் இன்பப் போக்கால் எல்லையற்ற துன்பம் நுகர்கிறது. நவீன வாழ்க்கையின் வியாதி போகத்தால் தொடர்ந்தவையாகும். அதற்கு மருந்து தவம்தான் என்கிறார். இந்திய வறுமைக்குக் காரணம் பெரும்பான்மையோர் அறநெறியில் விரதங்களைக் கொண்டு நோலாமையே என்பார். "இவர் பலராகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோலாதவர்"-- பொய்யாமொழியார். இவ்வைம்புல நுகர்ச்சியால் வருந் தீமையை நன்கு ஆராய்ந்து, அறநெறியில் விரதங்களைக்கொண்டு நோற்பான்கண் இவ்வுலகம் ஏவல் புரியும்.

  "சுவையொளி ஊறு ஓசை நாற்ற மென்றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. "


இணைகரங் களிற்கட கமுஞ்செறி
    இலய மும்பல நயமதாய்
 இவளரம் பையுமென மயங்கிட
   எவரு ளங்களு மகிழவே
 தினகரன் சொரிகதிர் செய்கொந்தள
    மசைய வுங்குழை யிசையவே
 திகழு மம்புய முகமலர்ந்திட
     விழியி ரண்டுசேல் புரள்வபோல்
 கனகமுஞ் சிலமணி களும்பல
    தரள மும்புரள் வடமெலாம்
 மகட கொப்புடன் பவழமுங்கிய
   கதிர்த னங்களு மசையவே
வனித மங்கையர் நடனமும்புரி
    வளமை தங்கிய வினிதையான்
 வருக வம்புலி வருக வென்றனன்
    வருக வம்புலி வருகவே.   (68)

கொந்தளம் - கூந்தல், முங்கிய - மூழ்கிய.

கிளைகுலுங் கியபல வினன்கனி
  கதலி யி்ன்கனி யுடனேமா
 துளையி னன்கனி யிடறிமந்திகள்
  பலவி ருந்துசெய் கிளையெலாம்
  முளைகளுஞ் செநெல்விதை களுந்தெளி
    முடிக ளுஞ்செறி நடவிலே
 முளரியும் பலகுமு தமுங்கொடி
    பிறழ விஞ்சிய வயலிலே
 களைகளுந் திடுவர வமிஞ்சிடக்
    கயலி னங்களும் வெருவியே
 கமுகரம் பையின்மடல் கள் துஞ்சியே
    கடுகி வந்தியல் மடுவிலே
 வளைகள் சங்கின மடையுழன்றிடு
     வளமை தங்கிய வினிதையான்
 வருக வம்புலி வருகவென்றனன்
     வருக வம்புலி வருகவே.   (69)

அயோத்திய நாட்டின் வளமை கூறினார்.

இணையிரண் டடிமறை யினன்புற
     எவர்க ளும்பணி பவர்வினை
 யிடறிவன் பகைபிணி கள் துன்பமோ
    டிருள்கெடும் படிய ருளுவோன்
கணமலிந் தியல்எயி லின்விஞ்சிய
   கனக முந்திகழ் சிகரமேல்
 ககன மண்டல மளாவி விஞ்சிய
     கவிகை யுங்கொடி திகழவே
 குணமலிந் தியலமரர் விஞ்சையர்
     கொடுவி லங்களு டனேமா
 குவலயங் களுமர சர்மங்கையர்
  குமர ரும்பலர் பணியவே
 மணமலிந் தியல்பொழில் கள்விஞ்சிய
     வரிசை தங்கிய வினிதையான்
 வருக வம்புலி வருகவென்றனன்
     வருக வம்புலி வருகவே.  (70)


கணம் - பன்னிருகணங்கள்.

சிறுபறைப் பருவம்

இருவினை துணிக்கு மியல்வேலே
   இமையவர் துதிக்க வருமாலே
 கருதரி யமுத்தித் திருகாரே
    கமல மிசையுற் றபதனீரே
 ஒருமொழி யிசைத்த வகைவாறே
      உலகில் பதினெட் டுமொழியாகத்
  திருமொழி சுரக்க வருள்வாயே
      சிறுபறை முழக்கி யருள்வாயே.   (71)

 இயல்வேலே- இயற்கையான வேலே, சிறுபறை விளையாட்டுப் பறை, இப்பறை கொட்டி விளையாடும் பருவம் இரண்டாமாண்டு.

குயிலின் முழக்க வொருபாலே
    குளிர்கட லொலிக்க வொருபாலே
 மயிலின நடிக்க வொருபாலே
      மங்கையர் கள்பாட வொருபாலே
 இயல்பெறு மயோத்தி வளநாடா
     இமையவ ரிருக்க வறிவோரும்
 செயதுதி முழக்க வருவாயே
      சிறுபறை முழக்கி யருள்வாயே.   (72)

பரசமயர் போல்சொற் பெருகாமே
    பகைகவி தலத்தை நலியாமே
 அருமுனித வத்தை யொழியாமே
      அணுவத மளித்த கனிவாயா
 திருமறுவி லுதித்த வனுநீயே
     உயர்கதி யளித்த வனுநீயே
 திருமறு வியல்புற் றொளிர் மார்பா
     சிறுபறை முழக்கி யருள்வாயே.  (73)

  கவிதலம் - புலவர் உலகம், அறிவர் உலகம், அறிவர்களில் முற்றறிவர்கள்,  பங்கு அறிவர்கள் என இருவகை.  முற்றறிவர்கள் அருகர், சித்தர்கள், பங்கறிவர்கள், ஆச்சாரியார், உபாத்தியாயர், சாதுக்கள், முற்றறிவனாகிய  தீர்த்தங்கருக்கு இடைப்பட்ட காலங்களில் அறன் வலியுறுத்தி யுலகை நல்வழியில் உய்ப்பவர் இப் பங்கறிவன்மார்களே. பல்வேறாகிய அறிவுத் துறையில் மிக்கவர்கள். சாரண இருத்திபெற்றவர்கள். குறனில் 'தென்புலத்தார்'    என்றது இவர்களைத்தான். அழகிய அறிவன்மார்கள்.

' இல்வாழ்வான், பிரம்மசாரி, பிக்கு, வானப்பிரத்தன். 

(வானப்பிரத்தன் - வானில் உலாவுவோன்,) 

சாரணர், பிரமத்தன் அப்பிரமத்தகுணத்தானத்தான். ஆசாரிய பரமேட்டி  உபாத்தியாய பரமேட்டிகளும் இவர்களே. 

சங்கங்களின் தலைவர்களும் இவர்களே. முற்றறிவனாகிய தீர்த்தங்கரோ அல்லது பங்கறிவன்மார்களோ எங்கேனும் திருவறங்  கூறுவதானால் அவ்வறம் கேட்கவேண்டி நியம விரதமாகப் பிரம்மசரியங்கொண்டு தன் மனைவியைப் பிரிந்துபோய் தமிழர் அறங்கேட்டல் மரபு. 

இதற்கு " ஓதற் பிரிவு" என்று பெயர் :--


"வரம்பில் கேள்விப் பெரும் பெயர்ப்பனுவல்
  பதினெண் மொழியிற் பயன்கொள விரிக்கும்
 மதிபுரை கேள்வி மதியோர் நசைஇப்

 பிரிவர் நங்காதலர் பிறபுலம் படர்ந்தே"   ---தமிழ் நெறி விளக்க சூத்திரம்.

தொடர்ச்சி,

தவமுனிவர் தக்க பெரு மானே
   தலமுழுது முற்றுமுணர் வோனே
 நவமணியின் முக்குடையோனே
     நணுகினர் பிழைக்க வருளாளே
 அவவினை யிலுற்று மெலியாமே
    அதிமதி ரமிக்க மொழியாலே
 திவதொனி முழக்கும் சிறுவாயா
    சிறுபறை முழக்கி யருள்வாயே. (74)

பவவினை துணித்த பெருமானே
     பலகலை யுரைத்த வருளோனே
 உவமை யினிலொப் பிலனுநீயே
    உயர்கதி யளித்த வனுநீயே
 நவைகெட மதித்த பெருவாழ்வே
    நணுகினர் துதிக்க வருளாலே
 சிவகதி கொடுத்த வருளோனே
     சிறுபறை முழக்கி யருள்வாயே.   (75)

பல்கலை - அறுபத்து நான்கு கலைகள். உவமையில் ஒப்பிலன். உபமாதீத சௌந்தரியன். தனக்குவமையில்லாதவன், (குறள்) உயர்கதியளித்தவனு நீயே. உலக மக்களுக்கு உயர்ந்த சிவகதி அளித்தவன் நீயேதான். நவை - காமம். வெகுளி - மயக்கம்.

ஒருநெ றியிலுல குதொழ
    அருள்ப ரவியினி தினியல்
     உகமை யினில்முத் திமுதலே
 கருநெ றியையக லவருள்
       அதிம துரமொழி கள்தரு
      கருணை யின்மிக் ககடலே
 துருநெ றியில்வரு சமயர்
        தொடர்வி னையில்மெலி வுபடு
         துட்டர் மதமிக் காமலே
 திருநெ றியுமடி யவரும்
      உயர வருள்பர னினிது
     சிறுபறை முழக்கி யருளே.     (76)


ஒருநெறியில் உலகுதொழ - மூவுலகத்தும் ஒரு பெருங்கடவுள் நீயே ஒரு முகமாகத் தொழ. அருள் பரவி - அகிம்ஸா தர்ம வித்தை பரவச் செய்தது.



வழுவி லுயர்கதி யுதவ
     வரிசை பெறவடி யவர்கள்
     வந்த கற்பகத் தாருவே
பழுதி லறமொழி யுதவி
      யிருள கலவுல குதனில்
     பரமா னந்ததற் சோதியே
 குழுபன் னிருவம ரர் துதி
      பொழிய வெயில்நடு வணுறை
     குணமா மதிக்கு ரிசிலே
 செழும றையினிரு வினைகள்
       தெரிய மொழிய ருள் தலை
     சிறுபறை முழக்கி யருளே.  (77)

அருகன் ஆகமங்களின்றிப் பிற ஆகமங்கள் காதி அகாதி என்ற வினைகளின் இயல்பை விளக்காமையின், செழு மறையின்....... யருள் தலைவ என்றார்.

அகமு ழுதுமொளிர் பொனிலும்
      அதிசய முமிக வுடைய
      ஆரருள் மிகுத்த பரனே
 செகமுழு துமடி பரவத்
     திமிர் வினை யினிரு ளகலத்
     தினகர னின்மிக்க முதல்வா
முகமு ழுதுமலர் கமல
     மிசையு லவியற மொழியும்
    முக்கு டைநிழற் போதனே
செகமுழு துநொடி யிலறி
      மணிகை யெனவுணர் முனைவ

      சிறுபறை முழக்கி யருளே.  (78)


உயவ கையுரைத் தருளி
      உலகி னிலெவர்க் குமுயர்
     குற்ற மாம்வினை தீரவே
 நயமு டனேழ்பங் கியெழு
       நற்பொ ருளாறைம் பதமு
     நவின்ற மெய்ப்பொருள் வேதனே
புயவி ழியோரா யிரமு
      முடைய வமரற் கிறைவன்
     போற்றி வந்தனை யேமிகச்
 செயது திமுழக் கவரு
      திவதொ னிமுழக் குபரன்
     சிறுபறை முழக்கி யருளே.   (79)

    உயவகை உரைத்தருளி - பிழைக்க வகை தெரியாது திகைத்த மக்களுக்குப் பிழைக்கும் உபயமாகப் பல்வேறாகிய தொழிற்கலைகளைக் காட்டியருளி. உலகினிலே..... தீர்வே - உலகிலுள்ள எத்தகையோருக்கும் அவர்களிடத்துள்ள பெருங் குற்றமாகிய வினைகளையும் வென்று விடுதலை யடைய.

அனக னெனஅம லனென
     அறிவ னெனவா தியென
     அருந்தவர் கள்தான் போற்றவே
 தினக ரனிலதி சயமுஞ்
      செகமு ழுதுமொளி சனங்கள்
      இருத யமன மாமெனும்
மனக மலமல ரவருள்
     பரனினிய சுரர் பரவ
    மன்னு மாமறை யோதியே
சிநமு னிவர்ப ரவித்துதி
     திவதொ னிமுழக் குபரன்
    சிறுபறை முழக்கி யருளே.   (80)


ஒழியாக் கற்பத்தரு மழுங்கி
       உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
       பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வாணிக வரைவு
        உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகைவந்தாட் கொண்டாய்
    அடியோஞ் சிற்றிலழி யேலே. (81)


     சிற்றில் பருவம் - பிள்ளைகள் சிறிய மணல் வீடு கட்டியும் சிதைத்தும் விளையாடும் பருவம். மூன்றாமாண்டு உலகம் போக பூமித்தன்மை மாறிக் கற்பத்தரு வளங்குன்றி யொழியவும் புதுமையாக மழை பனிகளாலும் திகைத்தனர். அவற்றைக்கண்டு பகவான் அயோத்தியைச் சூழக் காசி, கோசல முதலிய நாடு நகரங்களையும் கிராமங்களையும் வகுத்து, வீடு வாசல்களையும் கட்டிக் கொடுத்தார்.

 மக்கள் பிழைப்பதற்குரிய பல்வேறு கைத்தொழில்களைக் காட்டிக்கொடுத்தார். இங்ஙனம் யாவும் படைக்கப்பட்ட யுகம் கிரேதாயுகம். பண்பட்ட நாகரிக காலம். இதனால் பகவான் யுகாதி பிரம்மா எனப்பட்டார். மக்கள் பல்வேறு தொழில்களிலும் முனைந்து செய்வராயினர். 

தத்தம் தொழில் வருமானங்களை ஒருவர்க்கொருவர் பறிமாறிக்கொண்டு சரிநிகரான அமைதியுடன் வாழ வழிகாட்டினார். "பரஸ்பரோபகாரோ ஜீவானாம்" ஒருவர்க்கொருவர் உதவி செய்து கொண்டு   ஒற்றுமையாய் வாழ்வதே உயிர்களின் இயல்பு. அகிம்சா தருமம். இப்படைப்பின் அறிகுறியை இன்றும் பொங்கல் பண்டிகை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. அன்று பல்வேறு தொழிலாளிகளும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்கிறார்கள். 

விவசாயி நெல் கொடுக்கிறான் சேணியன் துணி கொடுக்கிறான். வைசியன் பணங் கொடுக்கிறான். குயவன் பாண்டம் தருகிறான். கொல்லன் அவரவர்க்கேற்ற சமையற் கருவிகளைக் கொடுக்கிறான். வண்ணான் முதியோர் தத்தம் கடமையைச் செய்கிறார்கள். நாடு நகரங்கள் வீடு வாசல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.  புத்தாடையுடுத்திப் புதுப்பாண்டத்திலே புதுநீர் மொண்டு, புத்தடுப்பேற்றுகிறார்கள். 

நீண்டநாள் உபவாசம் போக்கியது இஷாரசமானதால், அதன் அறிகுறியாக இக்குரசத்தை உலையில் ஊற்றி, புத்தரிசிப் பொங்கல் இடுகிறார்கள். படைக்கிறார்கள். அனைவரும் இன்புற நுகர்கின்றனர். 

ஒருவர்க்கொருவர் பால் பொங்கிற்றாவென உசாவுகின்றனர். இஷாரசமானதால் நன்றி செலுத்துமுறையாகப் பகவானுக்குப் பூஜை திருவிழா செய்கின்றனர். யுகாதி பிரம்மாவால் வழிகாட்டப்பட்டமையால், யுகாதிப் பண்டிகையன்று விவசாயிகள் நவதானியங்களைப் பிரம்மாவின் ஆலயங்களில் சமர்ப்பித்து நன்றி செலுத்தி வணங்கி இனி வருமாண்டும் இங்ஙனம் நன்கு விளையுமாவெனப் புதுப் பஞ்சாங்கம் படித்துத் தெரிந்து வருகின்றனர்.

 இவ்வாறு பிழைப்புத்தொழில் பலவற்றையுங்காட்டி மக்கள் அழியாவகை வந்தாட் கொண்டமை காண்க.


    ஒளிசனங்கள் - அறிவொளியுடைய சனங்கள். இருதய மனம் - பாவமனம். சிநமுனிகள், சினசமயர் என  கையாளுதல் மரபு. அரச குமாரனை அரசன் என்றாற்போல, வெற்றியடையு முனிவர்கள், வெற்றியடையுஞ் சமயத்தார் என்பது பொருள்.

திசையுங் கதியுங்குல நான்கும்
     திருமா மறைகள்சர ணான்கும்
பசையோ டுகங்களோர் நான்கும்
     பணித்தே யருளியுல கத்தே
முசியா வகையாய்முக நான்காய்
     முன்னே காட்டியுல கமெலாம்
அசையா வகைவந்தாட் கொண்டாய்
      அடியேஞ் சிற்றிலழி யேலே.   (82)

     சரண் நான்கு - அரகந்தா சரணம், சித்தா சரணம், சாது சரணம், தர்ம சரணம், பசை - துவர்ப்பசை. கஷாயம், குரோதம், மானம், மாயை, லோபம். முசியா வகையாய் - அழியா வகையாக, முகம் நான்காய் - சமவ சரணத்தில் தீர்த்தங்கரர் கிழக்கு முகமாய் வீற்றிருந்தாலும், அவர் முகம் நாற்றிசையுந் தெரிகிறது.

ஞாலத் தறமும்வினை யிரண்டும்
      நலமா மணியோடுல கமுடன்
காலத் தியல்பும்பால் மூன்றும்
     கனத்த பொருளுந்தொழி லாறும்
சீலத் தவமாகம முடனே
     சிந்தை யடக்கம்பனி ரண்டும்
ஆலித் தருளியாட் கொண்டாய்
    அடியோஞ் சிற்றிலழி யேலே. (83)

    ஆலித்தருளி - திருவாய் மொழிந்தருளி.  முன் 81-ல் பௌதிகத் துறையில் ஆட்கொண்டமையும் இக்கவியில் ஆன்மீகத் துறையில் ஆட்கொண்டமையும் கூறினார்.

படித்தார் பாடிப்புக ழோதும்
    பரமா கமத்தின்வழி யெல்லாந்
தொடுத்தா ரமருல கெய்தச்
      சொல்லும் பொருளே தனி யேற்றின்
கொடித்தா னுடையபெரு மானே
     குளிர்மா மதிமுக்குடை யோய்நீ
அடித்தா மரையின்முத்து ரைப்ப
    அடியோஞ் சிற்றிலழி யேலே.   (84)


     ஏற்றின் கொடி - இடபக் கொடி,  தொடுத்தார் - நன்கு கடைப் பிடித்தார்.


சோதித் தெமதுபாவ மெல்லாம்
    தொல்லைப் பிறவிமுத லாகப்
பேதித் தடியார் தமை யடிமை
    கொண்டே யருளும்பெரு வாழ்வே
வேதித் திறமேவிழிப் பொருளே
      வினையா மிருளையகன் றெரிக்கும்
ஆதித் தியனேதிரு மாலே
     அடியோஞ் சிற்றிலழி யேலே. (85)

       வேதித் திறமே - அறியுந் திறமே.  விழிப் பொருளே - கேவலஞானமாகிய கண்ணையுடைய பொருளே.

வழிபடு பத்த ரிடர்கெட
     வடதரு வுற்ற நிழலினை
தழியவு ரைத்த மறையினை
     சகலரு மெய்க்க வருளினை
பழியினில் மிக்க நமனோடு
      பகைபிணி மிக்க மதனனை
அழியவு தைத்த வடியினை
      அடியவர் சிற்றி லழியலே.  (86)

     வடதரு - ஆலமரம். தழிய - பலரும் நன்றென்று மேற்கொள்ள - சகலரு மெய்க்க - எல்லாரும் உண்மை நூல் இதுதான் என மெய்ப்பிக்க.

தலமுழு துற்ற வறிவினை
    தவமுனி சித்தி மனோன்மணி
குலமணி மிக்க வெயில்விடு
      குளிர்மதி யொத்த குடையினை
மலரின் மிகுத்த கமலநன்
      வகையினி தொத்தி தழ்மிகும்
அலரின் மிகுத்த வடியினை
     அடியவர் சிற்றி லழியலே.  (87)

      தலம் - உலகம். தவமுனி.... மணி - தவமுனிகளின் மன நாட்டமாகிய மோட்சத்தைத் தரும் இரத்தினம். குலம் - கூட்டம்.


கருதி நினைத்தோ ரிடர்கெடக்
     கரைய வுரைத்த பொருளினை
சுருதி மொழிக்கொ ருயர்நிலை
     சுரர்கள் துதித்த கழலினை
பருதி யுமிக்க மதியொடு
    பலகதிர் தொக்க ஒளியினை
அருமு னிவர்க்கோ ருறுநிலை
     அடியவர் சிற்றி லழியலே.    (88)

    இடர் - பிறவித் துன்பம். சுருதி பிரமாணம் என்பது சமஸ்கிருத நியாய நூற்களில் நேர்முகக் காட்சி முதலாகப் பகுக்கப் பட்டுள்ள அறுவகை உண்மைகளிலொன்று. ஓர் ஆப்தனாலோ அல்லது அப்பியாசப் பொருளாய், அதனால் அவன் அனுபவ பூர்வமாயறிந்த ஒரு பேராசிரியனாலோ செய்யப்படும் போதனையே, சப்தம், அல்லது ஸ்ருதிபிர மாணம் என விளக்கப் பட்டிருக்கிறது. அப்போதனை கோட்பாட்டிற்குரிய அறிவொன்று கொடுக்கிறது. பிறகு அப்பேராசிரியனுடைய அறிவின் அளவையடைய உண்மையான பரிசோதனை அல்லது அனுபவங்களால் அப்பியாச அறிவாக மாற்றப்படுகிறது. 'ரிஷி'என்னுஞ் சொல் ஓர் உண்மையான அறிவைச் சுய அனுபவங்களால் நேர்முகமாகப் பெற்றவனைக் குறிக்கிறது. அப்படிப்பட்டவனுடைய அனுபவ ஞான போதனையை முதலில் பண்டிதர்களால் சுருதி அல்லது கேள்வியாலறியப்பட்டுப் பிறகு அவர்கள் தாமே பயிற்சி செய்யப்பட்டுத் தம் தலைவனைப் போல் ரிஷி அல்லது தீர்க்கதரிசிகளாதற்குரிய அறிவாக மாற்றப்படுகிறது. ( Permanent History of Bharata Varsha. p. 28, 29. By K. N. Ayar.)


          " ஆரியர்கள் கங்கை அல்லது சரசுவதி நதி தீரத்தையடையப் பன்னெடுங்கால முன்னரே, கி. மு. 18, 19-ம் நூற்றாண்டுகளில் சரித்திரப் பிரசித்தி பெற்ற இருபத்து மூன்றாந் தீர்த்தங்கரர்  அல்லது போதகர் பார்சுவர நாதருக்கு முன்னர் ஜைனர்கள் 22 நிலையான போதகர்கள் அல்லது தீர்த்தங்கரர்களால் போதிக்கப் பட்டிருந்தனர். பார்சுவநாதர் அந்நீண்ட இடைக்காலங்களில் வாழ்ந்த புனித ரிஷிகளையும் வானப் பிரத்தர், அறிஞராகிய ரிஷிகள் இவர்களின் ஞாபக சக்தியில் பல யுகங்களாய்க் கொடுக்கப்பட்டு வந்ததுமாகிய புராதன தான பூர்வம், புராணம் முதலிய பல ஆகமங்களையும் நன்கறிந்திருந்தார். பொதுவாக இது அவர்களுடைய எல்லா போதகர்களாலும், சிறப்பாக கி. மு. 598--526-ல் இருந்த கடைசி இருபத்து நான்காந் தீர்த்தங்கராகிய 'மகாவீரராலும்' வலியுறுத்தப்பட்ட ஒரு ஜைன சங்கமுறை  "Short Studies in the Science of Comparative Religion" p. 243,  244  இதனால் 'சுருதி' தீர்த்தங்கரருடைய போதனைச் சொல் என்பது மெய்ப்பிக்கப் பட்டது. வேதம் எழுதாக் கேள்வி என்பது விளங்கும்.

சகல சிநர்க்கு மருளிய
    சதும றைமிக்க மொழியினை
இகலி லிடத்தில் விடமருள்
      இனிய தவத்தி லழிபடும்
பகலில் விளக்கி னொளியெனப்
     பரச மயத்தோர் நிலைகெட
அகல வுதைத்த யடியினை
   அடியவர் சிற்றி லழியலே.  (89)

    சிநர் - வெற்றியடைவோர். இகலில் இடத்தில் - பகையில்லாத இடத்தில்,  விடமருள் - நஞ்சைக் கொடுக்கிற - நட்பானவர்களுக்குத் தீங்கு செய்கிற.

சமச ரணத்தி லிறைவனே
   சகலர் துதிக்கு மறிவனே
கமல முகத்தி னுடையவர்
     கடிமலர் விடுத்த கதிரினை
விமல னெனச்சென் றடைபவர்
     வினைக ளுதிர்க்கு மிறைவனை
அமரர் துதிக்கு மடியினை
  அடியோர் சிற்றி லழியலே.  (90)


கமல முகத்தினுடையவர் - தாமரை மலர்மிசை யேகினான்.


10. சிறுதேர்ப் பருவம்

அகராதி யக்கர நன்முதலே அருட்கொடி
  யறவாழி மெய்ப்பரமனே
அவனி தலத்தவனீ சிவனீ தலத்தவனீ
   அலர்மீது தித்தவனுநீ
பகலா யுதித்தருளி வினையே யகற்றிமிகு
  பரமாக மத்தலைவனீ
பவமே யறுத்தவனீ சிவமே பொறுத்தவனீ
    பலபேர் துதிக்கவருநீ
மகரா லயத்தவனீ மனுநீதி யுற்றவனீ
   மறைநா லுரைத்தவனுநீ
மகமே பொறுத்தவனீ மணமா மலர்ப்பதனீ
   மகிழ்சோதி பெற்றவனுநீ
சிகரா லயத்துள்வளர் வினிதா நகர்க்கதிப
   சிறுதே ருருட்டியருளே
செகமூன் றினுக்கிறைவ திருஞான மெய்க்குழவி
    சிறுதே ருருட்டியருளே. (91)

    சிறுதேர் - நடை ண்டி, உருட்டி விளையாடும் பருவம் நாலாமாண்டு. அகராதியக்கர நன்முதலே - அகரத்தை முதலாகவுடைய பல்வேறு எழுத்துக்களின் படைப்பிற்கு முதல்வனே.

     இனி அகர முதல் னகர விறுதியாகிய தமிழ் நெடுங்கணக்கின் முதலுமீறுமாகிய முதல்வன் - அருகன்.  மகராலயத்துள் - கடல் சூழ்ந்த உலகில். மகம் - தேவர்கள் செய்யும் கல்யாணச் சிறப்பு.

மருமேவு நற்கமல மிசைநால் விரற்றலையின்
   வருமா மறைத்த லைவனே
மகரா லயத்துள்வளர் முதலான இக்குவநற்
    குலமா மணிக்குரிசிலே
பொருபா தகப்பிறவி யடர்கா டழித்துநிறை
    புலமே திருத்தியறநீர்
பொலிவா னதத்துவநல் விதையே விதைத்துவிளை
   புகழான முத்தி முதல்வா
கருமே தியிற்றிரள்கள் முலைப்பால் கினைத்தொழுகிக்
    கயல்தா விழப்பருகியே
கதிர்சாயச் செநெற்குலைகள் முடிசா யடித்துவிழக்
    கழுநீர் பெருத்த வயல்சூழ்
திருவா ரயோத்திநகர் செயல்நாபி மிக்கமனு
    மருதே விபெற் றபுதல்வா
செகமூன் றினுக்கிறைவ திருஞான மெய்க்குழவி
    சிறுதே ருருட்டி யருளே.  (92)


    பொரு - மாறுபடுகிற, பிறவிக்காடழித்துப் புலந்திருத்தி, அறநீர் பாய்ச்சி, தத்துவம் வித்தி முத்தி விளைவித்த முதல்வன்.

அசமே யடித்தழலின் நிணமே யுருக்கியுணல்
   அறமே யெனப்பகருவார்
அவகேடர் பொய்ச்சொல்கெட அருமா மறைத்தலைவன்
   அறிவே மிகுந்தபரனே
இசைமேவு முத்தமிழின் இசைபாடு நற்புதல்வர்க்
   கினிதான முத்தியருளும்
இறையே தவத்தலைவர் நிறையே யெனப்பெருகும்
   இறையே பிறப்பிலனுநீ
துசமே யெடுத்துமிகு குடையே நிழற்றமணி
   முரசே முழக்கிவரவே
சுரர்தூ ரியத்தினோடு இயல்பாய் நிருத்தமிடு
   சுடரான தற்பரனுநீ
திசைநான் முகத்தவனீ திருமாலு மிக்கவனீ
   சிவமான மெய்ப்பரமனீ
செகமூன் றினுக்கிறைவ திருஞான மெய்க்குழவி
   சிறுதே ருருட்டியருளே. (93)

   திசை நான்முகத்தவனீ.... மெய்ப் பரமனீ - - பிரம்மா, விஷ்ணு, சிவன்,  அருகனாகிய நீயே.வேறில்லை எல்லாம் உன் பரியாயப் பெயர்களே. "தெரிவில்லாவினை கெடுத்துத் தீவினையிற் றெரிந் தோங்கிச், சரிவில்லா இன்பத்தால் சங்கரனும்  முழுதுலகம், தெரிந்தொன்றி யுணர்ந்த நின் திப்பிய ஞானந்தன்னால், விரிந்தங்குஞ் சென்றமையால் விண்ணுமாய, மண்ணின் மிசைத் தேர்வுற்றவாரீட நான்மையினும் திரிவில்லாச் சார்வுற்ற நான்மையினுஞ் சதுமுகனா யுயர்ந்தனையே" என்ற யாப்பருங்கலச் சூத்திரத்தானுணர்க.

இருநால் வினைப்பகைவர் அறநூல் வகைச்சுரர்கள்
    மலர்மாரி யிற்பொழியவே
இயல்மா தவத்திறைவ சதுர்வே தமிக்கமொழி
    இசையே துதித்துவர
இருநா லுதிக்கதிரும் இசைபேரிசச்சரியும்
   ஒலிமே ளமிக்கதிரவே
ஒளிர்தா ளமத்தளமு மிசையா யிசைப்பநனி
   ஒளிமாதர் நிருத்தமிடவே
தெருநாற் சதுக்கநிறை யுலகோர் துதிப்பக்கொடி
   குடையால் வட்டமுடனே
திகழ்தீப மொத்தகிலுள் முளைபா லிகைக்குள்வளர்
   கொடியேறி நற்றிருவிழா
திருநாள் நடக்கமணி யொளிதே ரினிற்பரமன்
    சிறுதே ருருட்டியருளே
செகமூன் றினுக்கிறைவ திருஞான மெய்க்குழவி
    சிறுதே ருருட்டியருளே. (94)

   இயல் மாதவம் - இயற்கையான, பற்றற்ற சாதரூபமான சிறந்த தவம்.

"இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை உடைமை
   மையலாகு மற்றும் பெயர்த்து"

"மற்றுந் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்க
    லுற்றார்க் குடம்பு மிகை" 
                    - - - - - - குறள்.

சச்சரி - வாச்சிய வகை.


அறமேவு மச்சுநிலை யுருவாணிகைக் கொள்விரதம்
   அதிசீல மிக்குருளையாம்
 அணிசேர் தவப்பலகை சதுர்வேத நற்பவழ
   மணிகா வெனப்பிறழவே
 பொறைமேவு நற்கொடுகை நிலையான ரத்னதிரயம்
    புகழ்மா மணிக்கலசமாம்
புனைதா ரருட்கொடிசெய் ரதமே றித்தத்துவநல்
   துரகா ருடத்தினுடனே
இறைமேவு சுக்கிலநல் லதியான மிக்ககையின்
    நிழல்வாள் நிலச்சமரிலே
யமனோடு துட்டவினை யரசோட வெற்றியினில்
   இதழ்வாளிற் றொக்கமதனன்
திறமே யழித்தவிழப் பொருதே ருருட்டுப்பரன்
   சிறுதே ருருட்டியருளே
செகமூன் றினுக்கிறைவ திருஞான மெய்க்குழவி
     சிறுதே ருருட்டியருளே.  (95)

    ஆருடம் - ஏறியது. நல்ல தியானம் - நன்மையாகிய தியானம். சுக்லம் - வெள்ளை. சுக்கில தியானம் - வெள்ளை வாள்.

தாது திருந்தளிர் சோலை களெங்கணுந்
    தப்பில் அகலாமதில்
தத்தொளிர் பூவுடன் நற்கனி காய்கள்
   தழைத்து விளங்கிடவும்
கோத முடன்பகை யாமிரு கங்களும்
    கூடி யினங்களுடன்
குலவி வரும்படி யதிச யமுஞ்செய்த
   கோத மிலெண்குணனே
வேத முமங்கமும் ஆதி புராணமும்
    மிக்கறு பத்துடனால்
மேவி வரும்படி விற்ப னமாகிய
    மெய்ப்படு நற்கலைகள்
ஓது தலின்றி யுணர்ந்தருள் மைந்தனு
   முருட்டுக சிறுதேரே
உலகொரு மூன்றையு முணர்திரு ஞானா
     உருட்டுக  சிறுதேரே. (96)

     தப்பில் அகலாமதில் - அகாலங்களிலும் தப்புதலில்லாத, பூ, கனி, காய்கள் தழைக்கவும். கோதமுடன் - வைரமுடனே பகையாகிய மிருகங்கள் தம்முள் பகைமை மாறி நட்புடன் குலவி விளையாடிவர, மக்கள் பகைமாறி ஒன்றுகூடித் தொழவும். அதிசயம் - காதிவினைக் கேட்டினால் தோன்றிய அதிசயம். கோதமில் - குரோதமில்லாத.


        நவீன விஞ்ஞான பரிசோதனைகள் மின்சார சக்தியால் பெரும்பாலும் பயிர்த்தொழில் செய்யப்படுகின்றமையைக் காட்டியிருக்கின்றன. இம்முறையிலே காய் கனிகள் பருவந் தவறிய காலத்தும் அடிக்கடி செய்ய முடிகிறது.

மனிதனுடைய மனம் மின்சார சக்தியாலாக்கப் பட்டிருக்கின்றது. அவன் மின்சார சக்தியின் ஒரு பெருங் களஞ்சியமாக விருக்கின்றான். ஆத்மீக முன்னேற்றங்களால், மனிதனிடத்துத் தேக்கப்பட்டுள்ள மின்சார காந்த ஓட்டங்கள் நன்கு தொழிற்படுந் தகுதி வாய்க்கும்போது அவையதியற்புதங்களையும் தெய்வீக அதிசங்களையும் செய்கின்றன. உண்மையிலே அந்நூதனக் காட்சிகள் யாவும் மனித இயல்புக்கு அப்பாற்பட்ட தொன்றல்ல. இயற்கையாற்றல்களின் காரியமாகிய விளைவுகளே ஒரு சிறந்த துறவியினைச் சூழ்ந்துள்ள வாயுமண்டலங்கள் ஒரு நூதன மின்சார சக்தியால் தூண்டப் படுவதற்குக் காரணமாகிறது. ஆத்மீக முன்னேற்றத்தில் மிகவும் உச்ச நிலையடைந்துள்ள, 13 ஆம் குணத்தானமேறிய ஒரு முனிவரனைச் சூழ்ந்துள்ள அக்கம் பக்கங்களிலுள்ள உயிரினங்கள் யாவும், அவ்வற்புத மாற்றங்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய சிறந்த மின்சாரம் பாயப்படுவதால், அமைதி, நறுமணம், குளிர்காற்று வீசுதலாலோ ஆங்குள்ளவர்களின் உள்ளத் தளர்ச்சி உடல் தளர்ச்சிகளையும், பல பிணிகளையும் குணப்படுத்துகிறது. ஒரு தீர்த்தங்கரர் கேவல ஞானம் பெற்றவிடத்து, காலந்தவறியும் காய் கனி பூக்கள் தோன்றுகின்றன. சூழ்ந்துள்ள காற்று மண்டலம் இன்பமயமாகின்றன. கால இயல்பு சுகாதாரந் தருவதாக ஆகிறது. விலங்குகளும் மக்களும் தத்தம்மில் பகைமை நீங்கி அன்புமயமாகின்றன. பகைமை, கொடுமை, செற்றம், செருக்கு, வஞ்சனை, லோபம் முதலிய இழி குணங்களை நீக்கிவிடுகின்றன. ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு நல்ல பேர் எடுக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவும், அவனும் அவனைச் சூழ்ந்துள்ள உயிரினங்களும் நன்மையடைகின்றன. பேர் எடுத்தல் நாமகர்மம் எனப்படும். தீர்த்தங்கர மகாநாம புண்ணிய கர்மங்கட்டிய கேவல ஞானி தானும் தன்னால் தன்னைச் சூழ்ந்த உலகமும் எவ்வளவு நன்மையடையும் என்பதற்கோர் எல்லையுண்டோ!

        பௌதிக விஞ்ஞானம் அதியற்புதமாயிருக்கிறது. ஒரு விஞ்ஞானி அற்புத சக்தி வாய்ந்தவனாகக் கருதப்படுகிறான். ஆனால் அதைவிட அதி அற்புத சக்தியுடையது ஆத்மீக விஞ்ஞானம். ஆத்மீகத் துறையிலே பரிபூரணமாய்த் தன் தெய்வீகப் பண்புகளைத் தோற்றுவித்த மனிதன்தான், வழிபடுவதற்குரிய அருகன், பரமாத்மன், கடவுள், நற்செயற் களஞ்சியம். அவரிடத்து இச்சையின்றி இயல்பாகவே எல்லையற்ற உடல்நலம், ஐசுவரியம், அமைதி, இன்பம் முதலியன உண்டாகின்றன. J G. Vol. 32 No. 3.


   விற்பனமாகிய - பாண்டித்தியமாகிய கலைப்பண்பாடு நிறைந்த, மெய்ப்படு - உண்மையுடைய ஓதுதலின்றி..... யுணர்ந்தருள்மைந்தனும் - "ஓதாதுலகிற் பொருளனைத்தும் உடனேயுணர்ந்தான். உணர்ந்தவற்றை வேதாகமங்கள் ஆறேழால் விரித்தான் விமலன்."   திருகலம்பகம்.

அருமொழி நாயக னிவனெ னவேபுவி
    யரசர்கள் தாம்மகிழ
ஆதி முதற்திரு நாம மோராயிரத்
     தெட்டுடை நாயகனே
மறுமொழி யேபகர்ந் தார்பல வாயமை
    மாபிற விக்கடலின்
மருவிச் சதுர்க்கதி யேகி யிளைத்து
    மயங்கி யழுந்துவர்
குருமொழி யுங்கொடு துருநய மேகிடக்
    கோதறு மாகமநூல்
கொலைபொ யெனுங்களவு பிறர்மனை யும்பழி
    குரோத மகற்றுமினென்
றொருமொழி யேபல பொருளுரை வேந்தனு
      முருட்டுக சிறுதேரே
உலகொரு மூன்ற றியுந்திரு ஞானா
    உருட்டுக சிறுதேரே.  (97)

    அருமொழி - பெறுவதற்கரிய திருமொரு - நிறைமொழி, திவ்வியதொனி. ஆதிபகவனுடைய பண்புப் பெயர்கள் 1008. ஆதிமுதற் கடவுள் குணப்பேர் தூய ஆயிரத்தெட்டுடையவர். திருக்கலம்பகம்   குருமொழி - உபதேசமொழி, துருநயம் - துர்நயம், ஏகாந்த நயம்.

அருளி னருட்டரு மாரண மானதோர்
   ஆகம நற்பொருளே
ஆர்வமுடன் பகை செற்றமு மோக
     மகற்றி வரும்பரமே
இருளி னிருட்டெரி எழுநர கொடுவிலங்
   கேமுறு தேவர்களே
நரரு டனேத மியங்கு சதுர்க்கதி
   நவையகற் றும்மறிவே
மருளி மருட்டும் மதன்கணையோடு
   மானமு மாயமுடன்
மருவிய குற்றமு மொருபதி னெட்டுடன்
    வானவர் தாம்மகிழ
உருள வுருட்டு மனந்த நல்வீரிய
     உருட்டுக சிறுதேரே
உலகொரு மூன்ற றியுந்திரு ஞானா
     உருட்டுக சிறுதேரே. (98)

   ஆரணம் - எழுதாக்கேள்வி. ஆர்வமுடன்.... பரமே - பேராசை, பகை, தீராக்கோபம், மோகம் முதலியவற்றை நாட்டைவிட்டு வெகுதூரம் அகற்றிவரும் பரமாத்மனே.

குற்றம் 18 :-

பசித்தல் தாக பயசெற்ற மோடுவகை
மோகசிந்தனை பழித்தல் நோய்
நசித்தல் வேர்வினொடு கேதமோடு
மதம் வேண்டலீண்டதிசயித்தலும்.
புசிப்பு வந்திடு பிறப்புறக்கமிவை
விட்டொரட்ட குணபூதனாய்
வசித்தவன் னுலகின் மேலிருந்தொரு

சொல்விகலனுக்கருளு மென்றனன்.


பீடில் பிறப்பெனும் ஆழி தனைக்கரை
  யேற விடற்கருளாய்
பேரற நற்பல கைக்கு ருவாணி
   யெனத்திக ழைந்துவதம்
கூட மெனப்பிறழ் கப்பல் நிரப்பிய
   கொள்கைச் சரக்கெனவே
கூறிய வேதமு மாதி புராணமும்
   குற்றமில் தத்துவமும்
நீட நிரப்பிய நிச்ச நயம்பிர
    மாணமெனுங் கயிற்றால்
நேர்மை யெனும்விரி பாயு மருட்கொடி
    கட்டிமீ காமனென
ஓட நடத்தியே உயிர்க்கரை யேற்றுவன்
    உருட்டுக சிறுதேரே
உலகொரு மூன்ற றியுந்திரு ஞானா
    *உருட்டுக சிறுதேரே.  (99)

  பீடில் பிறப்பெனும் ஆழிதனைக்கரையேற
விடற்கருளாய்----

அறவாழியந்தணன் தான்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
     இறைவனடி சேரா தார்.

      இனிப் பிறவிக்கடலைக் கரையேற்றுமாறு கூறுகிறார் - இல்லறதுறவறம் - பலகை. அணுவிரதமாவிரதங்கள் - உருவாணி. வாழ்க்கை - கப்பல். சீலம் ஒழுக்கங்கள் - - - சரக்குகள், வேதம் ஆதிபுராணம், தத்துவம் - நீள நிரப்பியபொருள். நயப்பிரமாணங்கள் என்ற கயிற்றால், நேர்மையெனும் பாயும் அருட்கொடியுங் காட்டி, மீகாமன் என நடத்தி உயிரைக் கரையேற்றுபவன்.

தெளிதமிழ்ப் பாவினில் கவிமலர் மாலைநின்
   பதமலர் சாற்றிடவே
திருமகள் வாணியும் உடன்விளை யாடவும்
   சித்தமே முத்தியருள்
அளியின மர்ந்திடசோக நிழற்கண்
    ணருங்கல மும்மையருள்
ஆதிவி ராக நிரோக நிராயுதன்
  ஆனமுதற் பொருளே
களியம ரேச நரேச முனீசர்கள்
   கண்டு துதித்துமிகு
காவலர் பாவலர் தான வரும்புகழ்
    கர்த்த னெனப்பரவும்
ஒளிமதி முக்குடை நிழலுறை வேந்தனும்
    உருட்டுக சிறுதேரே
உலகொ ருமூன்றறி யுந்திரு ஞானா
     உருட்டுக சிறுதேரே.  (100)

   விராக - பற்றற்றவனே.  நிரோக - பாவப்பிணியற்றவனே, யுதனே - ஆயுதமில்லாதவனே.


 சிறு தேர்ப்பருவம் முற்றிற்று.


ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.

             சுபம்


இப்பதிவேற்றத்தில் சிறுசிறு பிழைகள் என் கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கும். பொறுத்து மன்னிக்கவும், மேலும் இந்த அறநூலை படிக்கவும் வாட்ஸ் அப் குழுவில் பகிர்விடவும், ஊக்கமளித்த மன்னை  திரு. பத்மராஜ்ராமசாமி அய்யா அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

             
              அன்புடன்,

        G. துரைராஜ்,
            செய்யாறு.
            23 - 10 - 2017.

1 comment:

  1. Detailed explanations will be helpful to understand each line . Good effort thanks

    ReplyDelete