வித்தை அறியும் ஆற்றல்.



வித்தை அறியும் ஆற்றல்.



வித்தை அறியும் ஆற்றல்.

 

 

பகவான் மகாவீரரின் சீடர்களில்  ஒருவன் கோசாலன் என்பான். கோசல நாட்டைச் சேர்ந்த இவன் அவரிடம் ஆத்ம தத்துவங்களை கற்றுத்தேறும் எண்ணத்தில் சீடராக பின்பற்றும் துறவியர்களுடன் சங்கமித்திருந்தான். (புத்தருக்கும் கூட கோசாலன் என்ற பெயருண்டு).

 

கூரிய புத்தி இருந்தாலும் அவனிடம் வித்யாகர்வம் சற்று மேலோங்கியே இருந்தது.  அதனை வெளிப்படுத்தும் முகமாக  பகவானிடம் குதர்க்கமாக ஏதாவது  வினாவை எழுப்பி விடை அறிய பணிவுடன் வேண்டுவது போல, அவரது ஞானத்தை அவ்வப்போது சோதனைச் செய்து வந்தான். குருவாக  ஏற்றவரை எக்கணமும் சீடர்கள் அக்காலத்தில் சோதித்துப் பார்ப்பதில்லை.  

 

அவர் ஞானியா! இல்லையா? என்று அவ்வப்போது அவன் குயுக்தியாய் பரீட்சை செய்து வந்ததினால், மஹாவீரரும் தனது அற்புத ஞானத்தை அவ்வப்போது வெளிப்படுத்தவே அக்கணங்கள் வகை செய்தே வந்தன. அதனால் அவர் புகழ் திக்கெட்டும் பரவத்தொடங்கியது.  அதனால் அக்காலத்தில் வாழ்ந்த பல அரசர்கள் பலரும் அவரது மேலான அறிவை கண்டு வியந்து அரை தெய்வாம்சம் நிரம்பியவராக ஏற்று மிகுந்த மரியாதை அளித்து சிரம் தாழ்ந்து அவர் தாள் பணிந்தனர்.

 

அவ்வப்போது கோசாலனின் அகம்பாவம் தலைக்கேறி அவரை சோதிப்பது வாடிக்கையான போழ்தில் ஓர்நாள்:

 

பகவான் மகாவீரர் அருகிலுள்ள சிற்றூர் நோக்கி வனப்பகுதி வழியே பாதயாத்திரையாய்ச் செல்லும் போது ஒரு முளைவிட்டச் செடியைக் கண்ட கோசாலன், தனது சகசீடர்களிடம் தான் ஒரு ஞானியைப் போல இச்செடி பின்னாளில் பூப்பதுமில்லை, காய்ப்பதுமில்லை என்று கூறியபடியே நகரும்வேளையில் அய்யன் அதைக்கேட்டு புன்னகையுடன் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்புன்னகையைக் கண்ட அவனும்,

ஐயனே! எனக்கு ஓர் ஐயம் ஏற்பட்டுள்ளது. இச்செடி பூக்குமா? பூக்காதா? காய்கனிகளை வழங்குமா? கூறுங்கள், நான் அறிய விரும்புகிறேன் என்று கைகூப்பி வணங்கி நின்றான்.

 

பகவான் அச்செடியை பார்த்தவண்ணம் சிறிது நேரம் கண்ணை மூடி தியானித்து அப்புத்கலத்தின் விதை, முளை, விருஷம், பூத்தல், காயத்தல்  என்ற தொடர் (ஜனன-மரண நியதி) பர்யாயத்தை ஆய்ந்து கண்டறிந்தார்.

 

அத்தாமதத்தைக் கண்ட கோசாலன் மகாவீரருக்கு தெரியவில்லை அதனால் மறைக்கவே இவ்வளவு நேரம் யோசிக்கிறார், என அகங்காரத்துடன் கேலியுடன் சிரித்துக் கொண்டிருந்தான்.

 

கண்விழித்த ஐயன்கோசல நாட்டவரே, அத்தாவரம் பூத்து பின் காய்க்கும் வகையைச் சார்ந்ததேஎனக் கூறினார். கோசாலனோ அச்செடி பூக்காது என்றே கணித்திருந்தான். ஒருவேளை அவர் கூறியபடி நடந்து விட்டால் தனக்கு தலைகுனிவே என்றெண்ணியபடி,  அச்செடி பூத்தால் என்ன! பூக்கா விட்டால் என்ன! எனக் கூறிக்கொண்டே அச்செடியை வேருடன் பிடுங்கி வீசினான். அவரும் அவனை மீண்டும் புன்னகை தவழ பார்த்தபடி அவ்விடம் இட்டு அகன்றார். அனைவரும் ஒருகணம் திகைத்து பின் பயணத்தை தொடர்ந்தனர்.

 

கிராமங்களுக்குச் சென்று சில நாட்கள் அறிவுரை வழங்கிய பின், மீண்டும் தே வழியில் திரும்பினர். இடைப்பட்ட நாளில் மழை பொழிந்ததால் அச்செடியின் வேரில் சேறு பூசி பிழைத்து, பின் பூத்தும் நின்றது.

 

அதன் அருகில் நெருங்கியதும், பகவான் இதழ்களிலும் அப்பூவினைப்போல் புன்னகை பூத்திருந்தது. அவர் அச்சீடனைப் பார்த்ததும் அவன் தனது தவறை மறைக்க சற்று கோபத்துடன் முகம் சுழித்திருந்தான். பிறர் காண்பதற்குள் அச்செடியை நெருங்கியபோது, தற்போதும் அச்செடியை பிடுங்கி எறிய எண்ணுகிறாய்? என்றதும்; அவனும் ஆம்... இல்லை.... என்றான் மூடனாக.

 

அவரோஉன் கேள்விக்கு அத்தாவரத்தில் என்று  பூ அரும்பியதோ அன்றே விடை கிடைத்து விட்டது. அதனை வீணே அழிக்க முனைவதால் யாது பயன்; அதனை அப்படியே விட்டு விடு. அதன் ஆயுள் முடியவில்லை. நீ மீண்டும் பிடுங்கி எறிந்தாலும் அங்கே துளிர்விடும் என்றுரைத்ததைக் கேட்டு வெட்கித்தலைகுனிந்த படி உடன்வரத்தொடங்கினான். அவனது அகங்காரமும் கணநேரத்தில் விலகியது.

 

அருகில்  இருந்த மற்றோரு சீடன் குருவே தாங்கள்  அதனை  எவ்வாறு உணர்ந்தீர்கள், நான் அறிய விரும்புகிறேன்என்று விழைய;

 

அவரும், ஆம் அச்செடியின் விதையிலிருந்து வீழும் காலம் வரை அதனுள் சென்று உற்று நோக்கிய போது பூவிடும் தாவரயினம் என்பதை உணர்ந்தேன். அதனால் என்றார் அத்தீர்க்கதரிசி.

 

ஆனால் கோசாலன் சஞ்சல மனமுள்ளவனாதலால் பிற்காலத்தில் அவர் போதனைகளை முழுவதுமாய் ஏற்காமல் சங்கத்தை விட்டு வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.

 

பகவான் கூற்றிலிருந்து ஒவ்வோர் உயிரும் வித்தை உற்று நோக்கும் ஆற்றல் பெற்றால் அனைத்து வாழ்நாளையும் நுட்பமாய் அறியலாம் என்பது புலனாகும்.

 

இதுபோன்ற கர்ணபரம்பரைக் கதைகள் குண்டலபுரத்தில் இன்றும் உலவி வருகின்றன.

 

பத்மராஜ் ராமசாமி._



1 comment: