மேரு மந்தர புராணம்.
சமண திருமறை வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஸ்ரீ குந்த குந்தாச்சாரியார். ஆன்மா, வினை, உலகம், அதன் இயக்கம், மக்களை வழி நடத்தும் அறவோர்கள் ஒழுக்கம் பற்றியும், என பல நூல்கள் எழுதியவர். இவரின் நூல்களுக்கு, பதவுரை, விரிவுரை, கருத்துரை எழுதியவர், ஸ்ரீ மல்லி சேன வாமன முனிவர். பன்மொழி அறிஞர். கி.பி 1300 –1350 ல், திருப்பருத்தி குன்றம் மடத்தில் வாழ்ந்தவர். பாகவதம், சமஸ்கிருத மொழிகளில் இருந்த தத்துவங்களை, உணர்ந்த இவர், முதல் முதலாக, முழுக்க, முழுக்க தமிழால் ஒன்றினைச் சொல்ல வேண்டும் என எழுதிய நூலே மேரு மந்தர புராணம். ஸ்ரீ புராணத்தில் வரும் மேரு, மந்தரர் ஆகிய கணதரர்களின் முற்பாவங்களின் வரலாறு. இந்நூல் தத்துவம், புவியியல், ஆன்மீகவியல், ஆலய நிர்மாணம், சமவ சரணம் பற்றி கூறும் நூல்.
இந்நூலில் உள்ள சருக்கங்களில் உள்ள 1406 செய்யுள்களைச் சுருக்கி 656 செய்யுள்களாக தர நினைத்தது, என் தமிழின் பலமின்மை என்றாலும், என் பேதமை என்றாலும், இரண்டுமே பொருந்தும். தத்துவங்கள் நிறைந்த மிகப் பெரிய நூலின் முதல் நுனியை, பயமறியா மழலை, பாம்பினை பிடித்தது போல், முதல் முதலாக பிடித்துள்ளேன், அருகனின் அடி தொழுது. விமர்சிப்பது உங்கள் உரிமை, திருத்திக் கொள்வது என் கடமை. பேராசிரியர் சிரே. தன்யகுமார் அவர்கள் பதிப்பாசிரியர் ஆகி, ஜைன இளைஞர் மன்றம், சென்னை, வெளியிட்ட புத்தகத்தை தழுவி எழுதியது. 13 அன்னாருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பொறியாளனாக முதன்முதல் நான் தொட்ட தத்துவ நூல். ஆன்றோரும், சான்றோரும் பிழை நீக்கி பொறுத்தருள வேண்டுகிறேன். தமிழ் அறிந்த புலவர்கள், தமிழறியா மழலையின் தமிழென எண்ணி, ஒதுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இது கதைய தெரிந்து கொள்ள எழுதியதே என் நோக்கம், என்பதால் நான் இயன்றவரை தத்துவங்களையும் கருத்தில் கொண்டு எழுதியது. அனைத்து வர்ணனைகள், தத்துவங்களை அறிய மூலத்தைப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
அன்புடன் உங்கள்,
முட்டத்தூர். அ. பத்மராஜ்.
1. வைஜயந்தன் முக்தி சருக்கம்.
முன்னுரை :
மேரு மந்தர காவியத்தின் நாயகர்கள் மேரு மந்தரர்
விமலநாத கணதரர்கள் ஈராறில் முதலிருவர்
மல்லிசேன மாமுனியின் மனங் கவர்ந்த இரட்டையர்கள்
அவர் யாத்த இந்நூலின் முதல் துவக்கம் வைஜயந்தன் 1
மல்லிசேன மாமுனிவர் பன்மொழியின் பெட்டகந்தான்
ஸ்ரீ குந்த குந்தர் நூல்களுக்கு பொருளுரைத்த வித்தகர் தான்
திருப்பருத்தி குன்றம் வாழ்ந்து திருமுனியாய் திகழ்ந்தவர் தான்
முதல் முதலாய் முத்தமிழில் மேரு மந்தரம் தந்தவர் தான் 2
நாட்டுச் சிறப்பு :
செம்பொன் மலை இறங்கும் வெள்ளி ஒத்த நீர் வீழ்ச்சி
மண் மகள் மேனி மூடி நெலிந்தோடும் நதியின் மாட்ச்சி
சிதைந்தோடும் சீற்றமெல்லாம் சிதோதகை நதி எழிலில்
வடகரை அமைந்தது தான் கந்தமாலினி எனும் நாடு 3
நாலு வகை தேவர்களும் ஐஞ்சிறப்பை ஆற்றி வர
ஏழு நிலம் சூழ்ந்திருக்கும் மும்மதிலின் காவலிலே
கால் சிலம்பு தாளமிட கன்னியர்கள் ஆடலிலே
கந்தமாலினி நாடு களித்திருக்கும் கர்வத்துடன் 4
( நாலு தேவர்கள் : பவணர், வியந்தரர், சோதிஷ்கர், கல்பவாசியர்.
ஐஞ்சிறப்பு : பஞ்சகல்யாணம், ஏழு நிலம் : 1.பிரசாத சைத்ய பூமி,
2. காதிகா பூமி, 3. வல்லி பூமி, 4. உத்யான பூமி, 5. துவஜ பூமி,
6. கல்ப விருட்ச பூமி, 7.கிருஹாங்கான பூமி. )
மணி கொண்ட மலைகள் உண்டு வளமான வனப்பும் உண்டு
கனி கொத்து மரங்களுண்டு கன்னல் விளை காடுமுண்டு
அணிகலங்கள் பூண்ட மக்கள் அகத்தூய்மை ஒழுக்கத்தோடு
களிப்போடு வாழும் இடமே கந்தமாலினி என்னும் நாடு 5
கருணையிலே தோய்ந்திருக்கும் கற்புடை மகளீருண்டு
சமணத்தின் சாரம் கொண்ட தர்மத்தோடு ஞானமுண்டு
ஈரிரண்டு கொடைகள் உண்டு இம்மையிலும் புனிதமுண்டு
கந்தமாலினி நாட்டில் கற்பக விருட்சமுண்டு 6
குழைகளும் மலரும் கொண்ட குளிர்ந்த நல் சோலையுண்டு
கட்டவிழ் கமலம் அல்லி கவிழ்ந்திட்ட பொய்கையுண்டு
கள்ளுண்ட வண்டினங்கள் கரைந்திடும் ஓசையாலே
கந்தமாலினி நாட்டில் சுரந்திடும் ஸ்வரங்கள் ஏழு 7
கல்வியில் தேர்ந்தோர் உண்டு கனி மொழி சொல்வோருண்டு
துறவிக்கு உணவு தந்து தாம் உண்ணும் நல்லோருண்டு
இருவேளை துதிப்போருண்டு எப்போதும் அகிம்சை உண்டு
கந்தமாலினி நாட்டில் கட்டவிழ்ந்த மகிழ்ச்சி உண்டு 8
சொற்பழி சற்றும் இல்லை துயர் தரும் மறமும் இல்லை
இழிதொழில் அறவே இல்லை இன்னல்கள் ஏதும் இல்லை
மிகுபொருள் விழைவும் இல்லை பிறன்மனை ஓம்பலிலை
கந்தமாலினி நாட்டில் களங்கங்கள் ஏதுமில்லை 9
ரத்தினம் வைரம் பசும்பொன் நறுமணம் கொண்ட அகிலும்
வேழங்கள் துஞ்சி பெற்ற வெண்நிறம் கொண்ட கொம்பும்
ஆடிடும் மயிலின் தோகை அவிழ்ந்திட்ட கவரி முடியும்
அளவின்றி நிறைந்திருக்கும் கந்தமாலினி நாட்டில் 10
ரத்தினம் பதித்த தரையும் நல்லொளி பளிங்குச் சுவரும்
பொன்னினால் வேய்ந்த் கூரை பொருளினால் அமைந்த கூடம்
மைந்தரும் மையலாரும் மகிழ்ந்திடும் வெண்மாடம் கொண்ட
இந்திரன் மாளிகைகள் இருந்தன கந்தமாலினி நாட்டில் 11
அறக்கொடை தந்து மகிழும் இறை தரும் அரண்மனையை
குறைவற்ற செல்வம் கொண்ட குடிமக்கள் ஊராரெல்லாம்
வெண்மதியை சுற்றியுள்ள விண்மீன்கள் கூட்டம் போல
எப்புறமும் சூழ்ந்திருக்கும் எழில் நாடம் கந்தமாலினியில் 12
நகர் சிறப்பு :
கந்தமாலினி நாட்டில் பல நகரில் ஒரு நகரம்
வைஜயந்தன் கோலோச்சும் வளமான எழில் நகரம்
தென்னங்கீற்றினை போல் நதி பாயும் அந்நகரம்
வீதசோகம் என்னும் வீங்கெழில் பெரு நகரம் 13
ஆயிரம் வாயில் உண்டு அந்நகரில் உள் நுழைய
ஆயிரம் விழிகள் வேண்டும் அந்நகரின் அழகு காண
சந்தனக் குழம்புடனே மென்மலர்கள் மிதந்து நிற்கும்
அகழிகள் சூழ்ந்திருக்கும் அரிவையர்கள் நீராட 14
மலையொத்த மதில் சுவர்கள் மாநகரை சூழ்ந்திருக்க
மன்னனவன் மாளிகையும் மாமேரை ஒத்திருக்க
மாளிகையின் மேல் முகட்டில் முகில் கூட்டம் படர்ந்திருக்க
பகலவனின் வழி மறிப்பால் பாதி இரவானதங்கு 15
கெண்டை மீன் விழியுடனும் கச்சை அணி தனத்துடனும்
பாவையர்கள் பந்தாட பார்ப்பவர்கள் நெஞ்சாட
ஐங்கணையான் மலரம்பு அவ்விடத்தை தாக்கி விட
வீதசோக நகரம் எல்லாம் வீழ்ந்ததங்கு இன்பத்தில் 16
காமவேள் ஒத்த மைந்தர் கடையினிலே பொருள் வாங்க
மாலையும், மாமணி, முத்தும் சாலையில் சறுக்கி விழ
வீழ்ந்ததை எடுப்பாரின்றி கிடந்ததே அவ்விடத்தில்
வீதசோகம் கொண்ட வைஜயந்தன் கோலருமை 17
கள் கக்கி இதழ் விரியும் கமலத்தை போல் முகமும்
களம் காணும் வேலைப் போல் கருவிழிகள் கொண்ட மாதர்
மதுவுண்ட வண்டினங்கள் மயக்கத்தில் ஆடுதல் போல்
மகர யாழ் இசைக்கு ஆடும் வீதசோக நடன சாலை 18
வைஜயந்தன் சரிதை :
பொன்னுலகம் விண் பெயர்ந்து மண்ணுலகம் வந்தது போல்
வீதசோக நகரத்தின் வெற்றி வேந்தன்
வைஜயந்தன் சாத்திரங்கள் முழுதறிந்த சமுத்திரமாய் இருந்திடுவான்
சத்துருக்கள் நெஞ்சினிலே கூற்றுவனாய் அமர்ந்திருப்பான் 19
பொய் நீக்கி மெய் காணும் நற்காட்சி உடையவன்
போரின்றி இன் சொல்லால் பகை நீக்கும் வல்லவன்
பொருள் தந்து கைசிவந்த பொன் மனம் கொண்டவன்
வையமே முன் வந்து வணங்கும் மா மன்னவன் 20
நல்லதோர் பழம்பெரும் குலத்தினில் பிறந்தவன்
சொல்லிலும் செயலிலும் விண்ணவர் போன்றவன்
பூமகள், நாமகள், பொருள் மகள் மூவர்க்கும்
புன்னகைப் பெருகிட புகலிடம் தந்தவன் 21
கம்பினைத் தழுவிடும் பூங்கொடி போன்றவள்
கருத்தினைக் கவர்ந்திடும் காவியத் திருமகள்
சர்வமும் ஸ்ரீ ஆன ஸ்ரீ தேவி பெற்றவள்
மன்னனைத் தழுவிடும் மாராணி சர்வஸ்ரீ 22
காவலன் கரங்களில் கட்டுண்ட சர்வஸ்ரீ
கமலத்தின் வண்டாக கள்ளுண்டு வாழ்ந்திட்டாள்
முல்லைக் கொடியீனும் முதல் அரும்பைப் போல
செல்வச் சிறு மழலை செவ்விதழாள் ஈந்திட்டாள் 23
பெயர் சொல்லும் பிள்ளைக்கு பெயர் வைக்கும் நந்நாளை
முறசறைந்து அறிவித்தான் முடி மன்னன் வைஜயந்தன்
குடிமக்கள் முடிமக்கள் பொருளோடு முன் வந்து
சஞ்சயந்தன் என்று மகவுக்கு பெயரிட்டு மகிழ்ந்தார்கள் 24
ஒரு மகவும் மகவல்ல ஒரு மரமும் தோப்பல்ல – என்று
வைஜயந்தன் சர்வஸ்ரீ வாழ்நாளில் முடிவெடுத்து
சயந்தன் என்றழைக்க சந்திர பிம்பம் போன்று
சஞ்சயந்த இளவளுக்கு சகோதரனைத் தந்தார்கள் 25
குஞ்சியின் பேரழகும் குன்று போல் தோளழகும்
குறு இடை வஞ்சியர்கள் குடிகொள்ளும் மார்பழகும்
களிறினை கட்டி வைக்கும் கல் கம்பத் துடையழகும்
கண்டவர்கள் கண் மயங்கும் காளையானான் சஞ்சயந்தன் 26
புண்ணியம் உதித்ததனால் போகமும் தளிர்த்ததனால்
இமையசையா விண்ணவரும் இமையசையும் பேரெழிலில்
இளையராணி என்றழைக்க சஞ்சயந்தன் மனம் களிக்க
திருமணத்தை செய்து வைத்தான் தோளழகன் வைஜயந்தன் 27
மதுமலரின் உள்புகுந்து மதுஅருந்தும் வண்டினை போல்
சஞ்சயந்தன் மனைவியுடன் தனை மறந்து வாழ்ந்திருந்தான்
இல்லறத்தின் இன்பவெள்ளம் இருவரையும் அடித்து செல்ல
குலம் தழைக்க ஓர் மழலை பெற்றதந்த பேரரசு 28
தந்தை என்ற பட்டத்துடன் தளர்ந்திருந்த வைஜயந்தன்
தாத்தன் என்ற புதுப் பதவி பொங்கியது புதுப்புனலாய்
பாட்டனின் பெயர் தனையே பேரனுக்கும் சூட்டியதால்
பேரின்ப மகிழ்ச்சியிலே பாட்டனும் மிதக்களுற்றான் 29
வைஜயந்தன் சமவ சரணம் சேர்தல் :
நன்மலர் நாற்றம் பொங்கும் நல்லெழில் பூவனத்தில்
அமைந்திட்ட சமவசரணம் அரசன் செவி நாடி வர
நிறைமதி கண்ட நாளில் பொங்கிடும் கடலைப் போல
நிதியறை திரந்து விட்டு நிறை பொருள் தானம் ஈந்தான் 30
எதிர்பாரா பெருஞ்செல்வம் ஏழை இல்லம் வந்தது போல்
எழுந்திட்டான் மகிழ்ச்சியிலே சமவசரணம் கேட்பதற்கு
வீதசோக மக்களுக்கு வேழத்தில் முரசு கொட்டி
சமவசரணம் வந்து சேர சடுதியில் செய்தி சொன்னான் 31
இந்திர தனுசை ஒத்த முதல் மதில் கடந்து சென்று
மானஸ்தம்பத்தின் முன்னே வலமது சுற்றி வந்து
மனதினில் கர்வம் போக்கி மலர்களால் வணங்கி நின்று
மும்மதில் தாண்டி உள்ளே முதலடி எடுத்து வைத்தான் 32
பத்தறை மாற்றுப் பசும்பொன் பதினாறு நல்மணிகள்
கொட்டியே இழைத்துக் கட்டி குளிர்ந்தொளிரும் கோயிலை
மாமத களிறு ஒன்று மலையினை வலம் வந்தாற் போல்
மலர்களைச் சொரிந்து கொண்டு மன்னனும் வலம் வந்தானே 33
இளங்கதிரோன் அழகினிலே இதழ் விரியும் கமலம் போல்
அணை அழித்து செல்லுகின்ற ஆற்று நீர் வெள்ளம் போல்
பக்தியின் மேல் காதலுற்று பாசுரங்கள் அத்தனையும்
பகவானை போற்றி போற்றி பரவசத்தில் பாடலானான் 34
நறுமலரால் தொடுத்தெடுத்த பூமாலை அணியா மேனியும்
விழிகளை ஒளியால் வீழ்த்தும் வெண்மதி போன்ற உடலும்
காதி கர்மங்கள் போக்கிய கடவுள் இவர் தானென்று
உள்ளத்தில் மகிழ்ந்து நிற்போர் உண்மையில் அரியவரே 35
( இதனால் உருவ நினைப்பு. ரூபஸ்தவம். சொல்லப்பட்டது )
அகத்தொளி படிகம் போல மூவொளி கொண்ட மேனி
ஆற்றலின் ஞானம் தன்னை அகத்தினில் இருத்தி கூறும்
அளப்பரிய ஒளியை தன்னுள் அடக்கி நீர் இருந்த போதும்
முற்றும் துறந்த உன்னை வணங்குவோர் ஞானவான்கள் 36
( மூவொளி : மனோ, வாக்கு, காய ஜோதி )
( இதனால் செயல் ஆற்றல் நினைப்பு, வாஸ்துஸ்தவம் சொல்லப்பட்டது )
பல் உயிர்க்கெல்லாம் நீங்கள் பரிவுடன் அருளுகின்ற
நால்குணம் அத்தனையும் தன்னுள்ளே பரந்து நிற்க
தாமரை மலரின் மீது தவழ்ந்திடும் உன் பாதந்தன்னை
வணங்கிடும் மக்கள் எல்லாம் வையத்தில் வெகுசிலரே 37
( நால்குணம் : அனந்த ஞானம், தர்சனம், சுகம், வீர்யம் )
(இதனால் குணத்தலைமை நினைப்பு, குணஸ்தவம் சொல்லப்பட்டது)
மாதவம் ஒன்றை மட்டும் மனதினில் ஏற்றிக் கொண்டு
மூவுலக முதல்வன் முன்னே ஐம்புலன் அடக்கி நின்று
உயிர் முதல் ஒன்பது பொருளின் குணங்களை எனக்கு நீங்கள்
உரைத்திட வேண்டும் என வேண்டினான் வேந்தன் அங்கு 38
வைஜயந்தன் தத்துவம் கேட்டல்:
மயக்கத்தில் தெளிந்து நிற்கும் நற்காட்சி உடைய வேந்தே
உயிரும் உயிரற்ற பொருளின் வினையூறி வரும் வழியும்
வினையுதிர்ந்து பந்தமற்று விண்ணுலகம் செல்நெறியும்
உனக்கு உரைத்திடுவேன் உயர்வாக நினைத்து கேளாய் 39
மனம் வாக்கு காயத்தோடு ஐம்பொறிகள் அமையப் பெற்று
மூச்சுடன் ஆயுள் சேர்ந்த இவ்வீரைந்தை ஜீவனெல்லாம்
ஞானத்தின் நற்காட்சியோடு வீடு பேறடையும் உயிர்கள்
மோட்சத்தின் உயிர்களாகும் மற்றவை சம்சார உயிர்கள் 40
எண்வினை முற்றும் கெட்டு எண்குணம் அடையப் பெற்று
ஞானத்தின் சீலத்தாலே நல்லவை மட்டும் செய்து
களங்கமும் கேடும் நீங்க பல் உயிர் பணிந்து வணங்கும்
பசும்பொன் போல ஒளிரும் மோட்சத்தின் உயிர்களெல்லாம் 41
மூவுலக உயிர்களெல்லாம் ஓரைந்து பரிவர்த்தனையால்
பிறப்போடு இறப்பின் ஊடே கர்மத்தின் வினைகள் கூட
கதி நான்கில் பிறந்து உழன்று கரைசேர துடித்து சிக்கி
சம்சார நெறியில் நிற்கும் சம்சார உயிர்கள் எல்லாம் 42
(ஐந்து பரிவர்த்தனை : திரவியம், காலம், சேத்திரம், பாவம், பவம் )
மானிட விலங்கின் கூட்டை துறந்திட்ட ஆன்மாவெல்லாம்
கதி நான்கில் சென்றடையும் அதனதன் கர்மம் போல
தேவ நரக உயிர்கள் எல்லாம் அதனதன் தன்மையாலே
மனித விலங்கு இரு கதியில் மறுபிறப்பின் சுழலெடுக்கும் 43
நால்வகை தேவரெல்லாம் நில நீர் நெருப்பு உயிர்களாவர்
நில நீர் நெருப்பு உயிர்கள் கூட மனித விலங்கின் பிறப்பெடுப்பர்
அருகன் தவம் செய்யாரெவரும் அகமிந்ர உலகம் செல்லார்
மாறிய மற்ற தவத்தோர் கீழ் முகத் தேவராவர் 44
போக பூமி விலங்கும் நரரும் நற்காட்சி உடையோரானால்
தேவலோகம் முதலகிய சௌதர்ம கல்பம் அடைவர்
மோகமும் மயக்கமும் நீங்கா பொய்காட்சி உடையோரானால்
பவண வியந்தர, சோதிட தேவராய் பிறப்பெடுப்பர் 45
நீரின உயிரும் ஆணும் நிறைந்திடும் நரகம் ஏழ்வரை
அணிகலம் ஏற்கும் மகளீர் அடைந்திடுவர் நரகம் ஆர்வரை
நான்குகால் விலங்கினங்கள் நாடிடும் நரகம் ஐந்து வரை
ஊர்ந்திடும் உயிர்கலெல்லாம் உழன்றிடும் நரகம் நால்வரை 46
வானத்தில் பறக்கும் உயிர்கள் வாழ்ந்திடும் நரகம் மூன்று வரை
தவழ்ந்திடும் ஆமைபோல் உயிர்கள் பிறந்திடும் நரகம் இரண்டுவரை
மனமில்லா ஓணான் போன்ற உயிர் சென்றிடும் நரகம் ஒன்று வரை
இவ்வேழு நரகந்தன்னில் இயங்கிடும் உயிர்கள் எல்லாம் 47
உருவத்தில் இல்லா உயிர்கள் மூடிய கை தீபம் போல் தான்
சிறு உடல் எடுக்கும் உயிர்கள் சிறியதாய் சுருங்களில்லை
பெரு உடல் எடுத்திட்டாலும் பெரிதாக விரிவதில்லை
எடுத்திடும் கூட்டுக்கெல்லாம் எப்போதும் ஓரளவே 48
ஐம்புலன் இச்சை எல்லாம் தூய்த்திட்ட இன்பத்தாலே
சேர்ந்திடும் வினைகள் எல்லாம் பதிந்திடும் ஆன்மா தன்னில்
மறுமையில் பிறப்பெடுக்க அக்கர்மத்தின் பலனையெல்லாம்
தூய்த்திடும் செய்கை அந்த உயிரினில் இயல்பாய் சேரும் 49
தன்மம்
தேருக்கு அச்சு வேண்டும் மீனுக்கு நீரும் வேண்டும்
அச்சின்றி ரதமும் ஓடா நீரின்றி கயலும் வாழா
அச்சு நீர் தேரும் மீனும் சேர்ந்திடும் தன்மத்தாலே
உயிரும் உயிரற்ற பொருளும் ஒன்றிடும் தன் முயற்சியின்றி 50
அதன்மம்
ஒன்பத்து ஏழு விண்ணுலக சொர்கத்தின் படலங்களும்
நரகங்கள் ஏழும் கூடி மாமேரு மலையும் பூமி
முடிவிலா நிலையை கொண்ட அதன்மத்தி திரவியத்தால்
அவையாவும் நிலைபெற்று அமைந்ததை அறிவாய் மன்னா 51
புண்ணியம்
தெளிந்த நல் உள்ளம் கொண்டு நாலிட பக்தியாலே
ஈராறு குணங்கள் கொண்ட புறத்தவம் அகத்தவத்தால்
சம்சார வாழ்வில் சேரும் கர்மத்தின் மாசு தனை
நீக்கினால் வீட்டை காட்டும் உயர்நிலை புண்ணியமாகும் 52
ஊற்று
காதி வினை உதயத்தாலும் கருணை சற்றும் இன்மையாலும்
கட்டி நிற்கும் துக்கமெல்லாம் பாவ புண்யம் இரண்டினாலே
கொல்லன் உலைகளத்து கொதித்து நிற்கும் இரும்பின் மீது
சேர்ந்த நீரின் தன்மை போல சேர்ந்தது தான் ஊற்று என்பர் 53
குறைந்த ஊற்று, நிறைந்த ஊற்று, துவர்பசையில்லா ஊற்று,
எண்ணெயில் படிந்த தூசாய் இருக்கின்ற ஊற்றும் ஒன்று
ஞானமும், ஞானமற்ற, பாவ, புண்யத்தோடு, மனோபாவ திரவியம்-என
ஈரைந்து உற்று உண்டு என்றறிவாய் வைஜயந்தா 54
செறிப்பு
மூன்றடக்கம், பத்தறமும், பன்னிரு சிந்தனையும்
ஈராறடக்கத்தில் இணைந்திட்ட தவங்கள், பரிசங்கள்
வென்றிட்ட ஒரு முனிவன் சென்றிட்ட தியானத்தால்
தீபத்தில் இருள்நிலை போல் வினைசெறிப்பு கிட்டிவிடும் 55
வீடு
நல்ல கெட்ட எண்ணத்தால் ஆன்மாவில் பதிந்த பாவம்
உறுதி பெற்ற தூய எண்ணம் உயிரிடத்தில் பதியும் போது
நல்ல கெட்ட எண்ணக் கர்மம் உயிரை விட்டு நீங்குதலே
பாவ மோட்சம் என்று அறிவாய் வீதசோக மா அரசே 56
அரசன் நகர் திரும்புதல் :
செங்கதிரோன் எழில் கண்ட செங்கமலப் பூப்போல
தீர்த்தங்கரை தொழுதெழுந்து திரட்டிய நல் ஞானத்தோடு
அரண்மனையை அடைந்த மன்னன் அனைவரையும் வரவழைத்து
சஞ்சயந்தனுக்கு அரசளித்து தன் துறவை உரைக்கலானான் 57
இளமையும் எழிலும் என்றும் வானவில் தன்மையாகும்
வளமையும் செல்வமும் உறவும் புதுமழை வெள்ளமாகும்
வெளியிலே வைக்கப்பட்ட விளக்கொளிபோல் ஆயுளாகும்
நமக்கிட்ட ஆயுளுக்குள் நாடுவோம் வீட்டை நோக்கி 58
மனிதனாய் பிறப்பெடுத்து கர்மத்தில் உழலும் போதும்
அச்சத்தில் துன்பம் தூய்த்து அலைகின்ற விலங்கு போலும்
தீயொத்த நரகம் தன்னில் தலை வீழ்ந்து அலரும் போதும்
அருகனே உன் அடிகள் அரணாக வேண்டும் என்றும் 59
முக்குற்றம், நான்கு கதிகள், ஐம்பொறி கர்மம் சேர
இரு மூன்று உடல்களிலே, ஓரேழு பரிவர்த்தனையால்
சேர்ந்திடும் கர்மம் எட்டால் வரும் சம்சார சுழற்சி தனை
நற்காட்சி உடையோரெல்லாம் கடந்திடும் மாற்றமாகும் 60
( முக்குற்றம் : விருப்பு, வெறுப்பு, மயக்கம்.
நன்கு கதிகள் : மனித, தேவ, விலங்கு, நரகம்.
ஆறு உடல்கள் : பிருத்வி, அப்பு, தேயு, வாயு, வனஸ்பதி, திரஸ.
ஏழு பரிவர்த்தனை : திரவிய, சேத்திர, கால், பவ, பாவ, ரூபம், நாமம். )
எலும்பொடு நரம்பைக் கட்டி குருதியில் ஊற வைத்து
சதையினை மேலே அப்பி தோல் எனும் போர்வை சாத்தி
மலத்தோடு புழுக்கள் சொரியும் ஒன்பது வாயில் வைத்து
உடம்பென்னும் குடிசை மேலே ஆசையால் அற்பமானோம் 61
பிறவியின் சுழற்சியாலே மூவுலக உயிர்கள் தம்மை
ஈன்ற நம் தாயைப் போல இதயத்தால் பேணி காத்து
மூவுலக நாதனான அருகனின் நிலையை நோக்கி
அழிவிலா சித்தப் பதவி அடைவதே அருமை என்றான் 62
வைஜயந்தன் வாய் மொழி புகுந்தது சஞ்சயந்தன் செவிவழி
அவன் சிந்தையில் பதிந்தது திருவறம் ஒன்று தான்
ஜினதர்மம் நிலை நீக்கி ஜெகம் ஆள நினைப்பது
பெரு விலை ரத்தினம் தந்து பிண்ணாக்கு பெறுவதென்றான் 63
மணி முடி மறுத்தனன் தனையனும் தம்பியும்
மகிழ்ந்தனன் மன்னவன் மகன்களின் நெறியினால்
மகன்களும் தந்தையும் மறுமையை வென்றிட
மாதவம் செய்திட மனம் ஒத்து சென்றனர் 64
பேரன் வைஜயந்தனுக்கு முடிசூட்டி மகன்களுடன் துறவெய்தல்.
பூமியின் நீரை நீக்கி பொழிகின்ற மழையை அருந்தும்
வானத்தில் பாடி வாழும் வானம்பாடி பறவை போல
புவியாளும் போகந் தன்னை புதல்வர்கள் புறத்தே நீக்க
குருவியின் பனங்காய் ஆக வைஜயந்தன் கிரீடம் பெற்றான் 65
மணி அணி பட்டும் நீக்கி மழை மேக குஞ்சும் போக்கி
மத யானைக்கொப்ப மூவர் ஐம்பொறி அடக்கி நிற்க
மும்மணி மனதில் ஏற்ற முனிவர்கள் கூட்டம் சேர்ந்து
இணையிலா மோட்ச நாட்டின் இளவல்கள் போல ஆனார் 66
ஆகம நூல்கள் கற்று அமைந்த நல்லொழுக்கம் ஏற்று
வைஜயந்த மாமுனிவன் வளர்ந்த மலை உச்சி சென்றான்
பனி, மழை, வெய்யில் தாங்கி மலைமிசை மலை நின்றார் போல்
தவத்தினில் தோய்ந்ததாலே சுக்கில தியானம் பெற்றான் 67
சித்தரசம் சேர்ந்த இரும்பு செம்பொன்னாய் ஒளிர்ப்பது போல்
வைஜயந்தன் மேனி எல்லாம் ஆன்ம ஒளி விரிந்து நிற்க
நறு நாற்ற மலர்களாலும் நறுமணப் பொடிகள் கொண்டும்
எண்திசையும் தேவர் சூழ்ந்து தூவி தூவி துதிக்களானார் 68
முக்குற்றம் உனக்கில்லை என்றால் முக்குற்றம் நீ உரைத்தாய்
பற்று உனக்கில்லை என்றால் மூவுலக ஞானப் பற்று
சுற்றம் உனக்கில்லை என்றால் அனைத்துயிரும் உனது சுற்றம் – என
சோர்வற்ற மாமுனியாய் முனிவர்களின் இறைவனானாய் 69
ஐங்கணையான் உடலழகும் முழு மதியின் முக அழகும்
செம்பொன் கழல் அணிந்த செங்கமல அடியழகும்
கார்கூந்தல் கன்னயர்கள் காதலுரும் வடிவழகும்
பவணலோக பார்த்திபனாய் தரணேந்ரன் விரைந்து வந்தான் 70
வீழ்ந்திடும் எழிலைக் கண்டு வீங்கிய தவத்தான் சயந்தன்
வருகின்ற பிறவி தன்னில் இவ்வழகில் பிறக்க எண்ணி
ஐம்பொறி அடக்கம் அசைய ஆனந்த மோட்சம் நீங்க
பவணலோகத்தில் சேர்ந்து தரணேந்திர தேவனானான் 71
மலையொத்த பெருமை கொண்டோர் மனதினில் ஊறும் ஆசை
சிறு துரும்பாய் இருந்திட்டாளும் தூசியிலும் சிறியர் ஆவார்
பெருந்தவத்தோன் சயந்தன் கொண்ட பிழை பெற்ற ஆசையாலே
வீடு கதி நீங்கியது வினை கலந்த ஆன்மாவாலே 72
நெய் சோற்று உருண்டைகளை நீட்டி நிற்கும் பாகர்களை
கருங்களிறு சினப்பதை போல் குணமுடையோர் வீடு செல்வர்
எச்சில் இலை சோற்றுக்கு எழுந்து நின்று வால் குழைக்கும்
நாய் குணத்தார் அனைவருமே பிறவி சுழல் பேதையரே 73
ஐம்புலன் அடக்கி வென்ற அருந்தவன் சயந்த முனி
ஆசையின் தாக்கத்தாலே அமிர்தமென்று நஞ்சை உண்டு
துஞ்சுவேன் என்று அஞ்சி துப்பிய நஞ்சை மீண்டும்
தூய்த்திட்ட நிலையை ஒத்தான் சுழற்சிக்கு துவக்கமானான் 74
நாகத்தின் வாய் கொட்டும் நஞ்சை நாம் அருந்திட்டால்
நாழிகையில் உயிர் பிரிந்து நமது உடல் பிணமாகும்-ஆனால்
ஐம்பொறிகள் என்கின்ற அரவம் நமை தீண்டிவிட்டால்
பிறவிச் சுழலில் சிக்கி பேதலிக்கும் ஆன்மாக்கள் 75
அருந்தவம் ஏற்றதாலும் நால்வினைகள் வென்றதாலும்
வைஜயந்த மாமுனியும் மறுமையின்றி அருகனானார்
சய்ந்தமுனி தவமிருந்தும் மனதில் வந்த இச்சையாலே
பவணலோக அமரனாகி மோட்சமின்றி அவதரித்தான் 76
வைஜயந்தன் முத்திச் சருக்கம் நிறைவுற்றது.
2. சஞ்சயந்தன் முக்திச் சருக்கம்.
மோட்ச கதி ஐந்தில் நின்ற வைஜயந்த பகவானுக்கு
தேவர்கள் சூழ வந்து தேங்கிய உடலைச் சுற்றி
பாவினால் துதிகள் பாடி பல மலர் தூவி நின்று
வணக்கத்தால் வாழ்த்திவிட்டு வானகம் திரும்பச் சென்றார் 77
மாயயை தூரத் தள்ளி மாதவத்தார் சஞ்சயந்த முனி
தந்தையின் மோட்சம் கண்டு தனிப் பெரும் முனிவனாக
ஒழுக்கத்தை உடையாய் ஏற்று ஒரு நிலை மனதில் கொண்டு
இராப் பகல் நேரமின்றி நின்றிட்டார் பதுமையாக 78
சஞ்சயந்தன் செய் தவத்தால் சார்ந்திருந்த சூழ்நிலையில்
மான் குட்டி புலியின் குட்டி மாறி மாறி முலையருந்த
காரம் பசுவின் கன்று களிறு பெற்ற குட்டியோடு
காட்டரசன் மழலையுடன் களித்து விளையாடியது 79
அரவத்தின் அழகு கண்டு அணைத்தது எலியும் அங்கு
கீரியும் பாம்பும் கூடி பகையினை விட்டு ஆட
கவரிமான் வால் பதிந்த கருவேல முல்லைப் போக்க
கடும் புலி அங்கு வந்து முள்லைக் கவ்வியது வாயினாலே 80
ஒரு நிலை ஆர்த்த மனதில் அகம் புறம் கொண்ட துறவும்
மூவகை அடக்கம் கொண்டு நால்வகை சன்னை நீக்கி
ஐம்புலன் நுகர்ச்சி போக்கி துறவிகள் கடமை ஆறால்
எழுவித பரிணாமத்தால் தோன்றினார் தியானத்தோடு 81
( 4 சன்னைகள் : ஆகார சன்னை,மகளீர் சன்னை, பய சன்னை, பொருட்பற்று)
ஓரெட்டு தூய்மை கொண்டு உயர்ந்திட்ட சஞ்சயந்த முனி
ஒன்பது யோகம் பெற்று ஐயிரண்டு ஊற்றைக் கட்டி
பதினோரு ஆகமங்கள் பயின்று பெற்ற ஞானத்தோடு
ஈராறு சிந்தனையில் பதின்மூன்று ஒழுக்கம் கற்றார் 82
காமமாம் வனத்தை தாண்டி காட்டரசன் சிங்கம் போல
சஞ்சயந்த மாமுனிவர் தவ நிலையில் ஆழ்ந்து நிற்க
வித்துதத்தன் வித்யாதரன் விமானத்தில் மேலே செல்ல
விமானமும் ஓடாதாகி ஒருநிலையில் நின்றதங்கு 83
நால்பிறவி தொடர்ந்த வினை இப்பிறவி பொங்கி நிற்க
சஞ்சயந்த முனியை தூக்கி தன் விமானம் ஓடச் செய்தான்
ஐந்தாறு நதிகள் கூடும் நறுமண சந்தனத் தோப்பில்
விமானம் நின்றதங்கு விரலிடையும் அசையவில்லை 84
விமானத்தை இயங்க வைக்க வீருகொண்ட பலத்தை சேர்த்தும்
முயற்சிகள் அறுந்த கோபம் முனியின் மேல் வந்து தங்க
சொல்லொண்ணா துன்பங்களை தொடுத்திட்டான் முனியின் மேலே
முனிவனும் பணிந்து ஏற்றான் ஊழ்வினை கர்மத்தாலே 85
பிணங்களை உண்டு வாழும் பெரியவாய் அரக்கன் வந்து
ஆதவன் மறைந்த பின்னே அழித்துண்ன வருவான் என்றான்
அரக்கன் எனும் சொல்லை கேட்ட அருந்தவம் அறியா மூடர்
கல் மலை கையில் ஏந்தி முனிவரனை சூழ்ந்து கொண்டார் 86
கருமுகில் இடித்துக் கொள்ள வெடித்திடும் இடியைப் போல
காற்றுடன் கையை கோர்த்து கொட்டிடும் மழையைப் போல
கருநிற வித்தியாதரர்கள் கல் மழை பொழிந்து நிற்க
மாமேரு மலையைப் போல சஞ்சயந்தர் தவத்தில் நின்றார் 87
வானமே மறையும் வண்ணம் வித்துதத்தன் கணைகள் வீச
வானவர் விழிகள் மூடி அதிர்ச்சியில் அங்கம் அதிர
அருகனின் குணத்தில் நின்று சாதுக்கள் தன்மை ஏற்ற
சஞ்சயந்த மாமுனியின் தவநிலை தடுத்தது அம்பை 88
காரிருள் மேனி கொண்டு கண்டவர் நடுங்கும் வண்ணம்
வித்துதத்தன் வீரு கொண்டு எண்திசை எல்லாம் நின்று
நெருப்பையும் மலையும் ஏந்தி தாக்கினான் புயலைப் பொல
சஞ்சயந்தன் வெகுளி போக்கி சுக்கில தவத்தில் நின்றார் 89
கார்கால மின்னல் போல போல் கொண்ட வித்துதத்தன்
போகமிகு ஆசையாளும் கூடிய சுற்றத்தோடும்
நாகபாசத்தால் கட்டி முனியை நடுகடலில் இடுவேன் என்றான்
உறவினர் துன்பமுற்றார் உடையும் கப்பல் பயணத்தார் போல் 90
கர்மவினை நான்கு அழித்து கடை ஞானம் புணர்ந்த முனிக்கு
தேவர்கள் சூழ்ந்து வந்து தேன் மலர் பூஜை செய்ய
துட்டதேவன் வித்துதத்தன் துன்பத்தில் திகைத்து நின்று
மலை ஒன்று சரிவதைப் போல் மண்ணிலே வீழ்ந்து விட்டான் 91
கீழ் திசை ஆதவன் போல் கீழுலக பவணர் வர
நடுவுலக வியந்திரரும் நாற்திசையும் வந்து நிற்க
மேலுலக தேவரெல்லாம் மேகம் போல் சூழ்ந்து வர
வினை அறுத்த சஞ்சயந்த முனி குன்றிலிட்ட விளக்கானார் 92
சந்தன குழம்பு கொண்டு தரை எல்லாம் மெழுகி விட்டு
நறுமண மலர்களாலே நாற்புறம் அழகு செய்து
பழவகை அனைத்தும் வைத்து பலகார வகைகள் வைத்து
மாமுனி சஞ்சயந்தன் மலரடி பணிந்து நின்றார் 93
அகிற் புகை தூபம் இட்டு ரத்தின தீபம் ஏற்றி
வெண்சங்கு நிறம் நிகர்த்த கூர்முனை அட்சதை கூட்டி
இந்திரன் சபையில் ஆடும் அரம்பையர் நடனம் முன்னே
பக்தியில் துதிகள் பாடி தேவர்கள் தொழுது நின்றார் 94
தேவர்கள் துதி :
நால் வினை அறுத்த தேவா நான்கு ஞானம் ஏற்ற தேவா
மதி நான்கை கடந்த தேவா வாலறிவு கொண்ட தேவா
கதி நான்கை துறந்த தேவா கல்பமோட்சம் பெற்ற தேவா
துதி நான்கை தாண்டி சென்று துறவு கொண்ட எம் தலைவா 95
(4 மதி : மதி, சுருத, அவதி, மனப்பர்ய. வாலறிவு : கேவலக் ஞானம்.
4 துதி : அரகந்த, சித்த, சாது, தர்மம் )
மூவுலகும் ஆட்கொள்ளும் முழு ஞானம் கொண்டவரே
அணு கொண்டு உலகளக்கும் அரும் ஆற்றல் உடையவரே
எவ்வுயிர்க்கும் அதன் இயல்பை தொழில் தெரிய செய்தவரே
இவை எதிலும் பற்றில்லா எண்குணத்து நாயகனே 96
கதி நான்கின் சுழற்சியிலே உயிர் அடையும் மகிழ்ச்சியையும்
ஐம்புலங்கள் தினம் நுகர்ந்து அனுபவிக்கும் இன்பத்தையும்
அத்தனையும் நீர் துறந்து அடைந்து விட்ட சுகத்தின் முன்னே
அற்பமாய் போனதை யாம் அறிந்திட்டோம் என் தேவா 97
புள்ளினங்கள் கூடி வந்து கனி மரத்தை சூழ்வது போல்
மூவுலக தேவர்களும் ஓரணியாய் விரைந்து வந்து
சித்தபரமேட்டியான சஞ்சயந்தன் பாதம் தன்னில்
சிரம் கொண்ட மலர் சொரிந்து சேவித்து நின்றார்கள் 98
அமிர்தத்தைப் பார்த்திடினும் அழகியது நஞ்சு என்று
அருந்தியவன் போல ஐம்புலனின் சலனத்தால்
சயந்ததேவன் தான் கொண்ட தரணேந்திர உருவத்தில்
சஞ்சயந்தன் தாள் தொட்டு தலைவணங்கி நின்றிட்டான் 99
உறவு என்று பிணைந்தவரும் மறுபிறப்பில் பகைவராவர்
பகைமிகுந்து வாழ்ந்தவர்கள் மறுமையிலே துணைவராவர்
இப்பிறவி உறவு பகை இடம் மாறும் மறுமையிலே
சம்சார சுழற்சியிலே எதிரி நண்பர் யாருமில்லை 100
கோலோச்சும் அரசர்களும் கொடும் நரகில் பிறப்பெடுப்பார்
கொடும் நரகில் பிறந்தவர்கள் புவியாளப் பிறப்பெடுப்பார்
நான்கு வகை தேவர்களும் தொழு நோய் பற்றி வாழ்ந்திடுவார்
மனிதனாக பிறப்பெடுத்தார் வரும் பிறவி நாயாவார் 101
இம்மையில் பிறப்பெடுத்த எழில் கொஞ்சும் மங்கையர்கள்
மறுமையில் பிறப்பெடுப்பார் மன்மதன் போல் ஆண்களாக
உடன் பிறந்து உடன் வளர்ந்த உயிர் போன்ற தங்கையர்கள்
உயிர் தந்து உடல் காக்கும் உத்தம தாய் பிறப்பெடுப்பர் 102
கடலலைகள் கொண்டு வந்து கரை சேர்க்கும் மணலை போல்
காற்றினால் கூட்டப்பட்ட காய்ந்த இலை சருகை போல்
நம் உடலின் தண்மை நிழல் நம்முடனே வருவது போல்
நம் வினைகள் தொடர்ந்து வரும் நிலையற்ற உறவு இன்றி 103
முடிவில்லா பிறப்புகளில் அருந்தவத்தான் சஞ்சயந்தன்
வித்துதத்தன் உறவினனாய் பிறப்பெடுத்து வரவுமில்லை
வித்துதத்தன் எடுத்து வந்த எத்தனையோ பிறவிகளில்
சஞ்சயந்த முனியின் மீது தான் கொண்ட பகையுமில்லை 104
வெஞ்சினமே நமக்கெல்லாம் தீங்கு தரும் பகையாகும்
தான் செய்த வினையனைத்தும் தீங்கு கதி சென்றடையும்
உடன் பிறப்பும் உறவுகளும் ஒரு சமய நேரத்தில்
பகையாக்கி பாழாக்கும் இழிதன்மை கோபத்தாலே 105
ஒரு பிறப்பில் சிம்மசேன அரசனான சஞ்சயந்தன்
வெஞ்சினத்தால் செய்த கர்மம் அவனிடத்தே தேங்கி விட
இப்பிறவி வரை வித்துதத்தன் உடன் தொடர்ந்த வைரபாவம்
அத்தனையும் கொடுஞ் செயலாய் அமைந்ததுவும் கர்மத்தால் 106
முன் நான்கு பிறப்பினிலே சஞ்சயந்தன் செய்த வினை
வித்துதத்தன் அப்பிறப்பில் வைரபவம் கொண்டதனால்
தேவலோகம் சென்றடைந்து திரும்பி வரா நிலை பெற்று
மோட்சகதி அடைந்துள்ளார் மும்மணியாம் சஞ்சயந்தர் 107
வித்துதத்தன் செய்த துன்பம் சஞ்சயந்த பட்டாரகர்க்கு
நிலைத்த புகழ் நிறை கீர்த்தி தப்பாமல் தந்தது தான்
அவன் செய்த இழி செயல்கள் அவன் தந்த நெடும்பழிகள்
அத்தனையும் பொறுத்ததனால் மோட்சகதி முனிவருக்கு 108
இத்தனையும் எடுத்து சொன்ன கல்பதேவன் ஆதித்யாபன் முன்
வித்துதத்தன் வேண்டி நின்றான் வேதனையில் மனம் கனக்க
கோபக் கனல் கொழுந்தை கருணை என்னும் நீர் கொட்டி
வினை வென்ற சஞ்சயந்தன் அடி பணிந்து தொழு என்றான் 109
கார் மாரி பொழிந்ததனால் கடும் நெருப்பு அழிந்தது போல்
கனியினிய சொல் மழையால் கர்வ மனம் தெளிவடைய
செங்கதிரோன் காதலிலே செங்கமலம் மலர்ந்தது போல்
ஜினேஸ்வரனின் தாள் அடியில் வித்துதத்தன் வீழ்ந்திருந்தான் 110
சஞ்சயந்தன் முக்தி சருக்கம் நிறைவு.
3. பத்திரமித்திரன் அறங்கேள்விச் சருக்கம்.
மாமேரு நடுவில் நிற்க ஈரேழு நதிகள் பாய
அல்லியும் கமலம் பூத்த அழகிய ஆறு பொய்கை
கடந்திடா அகழியை போல் கடல்களால் சூழப் பெற்ற
நாவலந் தீவினுள்ளே நாடுகள் அமைந்ததேழு 111
திங்களின் முழு வடிவில் திகழ்கின்ற பரத நாட்டில்
செம்பொன்னால் செய்திட்ட தேவலோக சுந்தரத்தில்
தருமங்கள் செழித்து நின்று தளராத நன்மை கொண்ட
உத்தம போக பூமியில் உள்ளதே சீயமாபுரம் 112
வான்வழி செல்லும் தேவர் விழி கண்ட அந்நகரை
தாண்டியே செல்லமாட்டார் துலங்கிய அழகை கண்டு
சோலையும் பொழிலும் கூடி சொர்க்கத்தை நமக்கு காட்டும்
சீயமாபுரத்தின் சிறப்பை செப்பவும் வார்த்தையில்லை 113
அந்நகரை ஆளும் அரசன் அரிமா நிகர் சிம்மசேனன்
கொடுப்பதில் கர்ணனில்லை அளிப்பதில் கற்பக விருட்சம்
கொவ்வை வாய் மது தளும்பும் கொடியிடை மகளீரெல்லாம்
மன்மதனை மறந்து நின்று மன்னனை தொழுது நிற்பார் 114
கார்குழல் கொண்ட சிரமும் கள் சிந்தும் செவ்விதழும்
வேலொத்த விழி இரண்டும் மாவொத்த கன்னம் கொண்ட
பாற்கடல் அமுதம் நிறைந்த பளிங்கொத்த தனங்கள் சுமையை
தாங்கொணா இடையை கொண்ட தனி ராணி ராமதத்தை 115
ஆகமங்கள் ஆய்ந்து கற்று வேதம் நான்கில் வித்தகனாய்
கூறுகின்ற சொல்லனைத்தும் குற்றமில்லா உத்தமனாய்
சத்தியத்தின் கோட்டில் நிற்க சத்தியகோடன் என்றழைக்கும்
ஸ்ரீபூதி அந்தணனே சீயபுரம் அமைச்சனாவான் 116
பத்மசண்டம் நகரினிலே பார் புகழும் வள்ளல் அவன்
சுதத்தன் பெயர் கொண்ட செல்வம் நிறை வணிகனவன்
மதியொத்த முகத்துடனும் மனம் கொண்ட கற்புடனும்
சுதத்தன் மனைவியாக சுமத்திரையும் சேர்ந்திட்டாள் 117
வந்து நின்று யாசிப்போர்க்கு வருத்தத்தைப் போக்கிவிட
கார் முகில் சூல் கொண்டு கடும் மழை பெய்வது போல்
அள்ளிக் கொடுத்ததனால் அவன் பெற்ற நல்வாழ்த்தால்
குலந்தழைக்க பிறந்த மகன் பத்திரமித்திரன் என்ற மகன் 118
பல கலை கற்றுத் தேர்ந்த நல்லறம் கொண்ட மனதும்
இல்லற இன்பம் தூய்க்க இந்திராணி ஒத்த துணையும்
மணி முத்தும் பொருளும் வானொப்ப வளரும் வணிகம்
நிறைவுடன் பெற்று நின்றான் சுதத்தனின் பத்திரமித்திரன் 119
வருநிதி குறையுமானால் மாதனம் தாழ்ச்சி கொள்ளும்
மாதனம் குறையா நிலைக்கு வணிகமும் பெருக வேண்டும்
பத்திரமித்திரன் நெஞ்சில் பதிந்திட்ட இந்த எண்ணம்
ரத்தின தீவை நோக்கி நாடினான் வணிகம் செய்ய 120
புண்ணியம் உதயமானால் பொற்குவி தானே வரும்-என்ற
அருகனின் அருள் மொழிக்கு பத்திரமித்திரன் சான்றானான்
மாமணி முத்து வைரம் மணம் தரும் சந்தனம் அகிலும்
பொன்னுடன் பொருளும் ஏற்றி புறப்பட்டான் சீயமாபுரம் 121
செவ்வானம் போன்ற மேனியும் சித்திரை மதியின் முகமும்
வைரத்தை ஒத்த வனப்பும் வரையிலா செல்வத்தோடும்
மித்திரன் நகரில் நுழைய அந்நகர் வணிகர் கூடி
பவழ கம்பளம் விரித்து பரிவுடன் வரவேற்றார்கள் 122
நாட்டிலே திருடர் இல்லை நா தவறும் பழக்க இல்லை
போட்டியில் பொறாமையுறும் புல்லர்கள் யாரும் இல்லை
வளையாத கோல் கொண்டு வளரும் நிறை அருளோடு
தாய் அன்பில் காக்கின்றார் தவ நெறியான் சிம்மசேனர் 123
வணிகர்கள் வாய் மொழியும் வளமான நகர் எழிலும்
பத்திரமித்திரன் நெஞ்சில் பசுமரத்து ஆணியாக
கொண்டு வந்த செல்வத்துடன் கூட்டி வரும் சுற்றத்துடன்
இந்நகரில் குடி வாழ இதயமதில் எண்ணலானான் 124
கொண்டு வந்த பெரும் நிதியை கருவறையில் வைப்பது போல்
கள்ளமில்லா ஒருவனிடம் கை பதித்து தான் சென்று
சுற்றத்தார் சூழ வந்து இந்நகரில் வாழ்வதற்கு
சீயபுர அமைச்சனான ஸ்ரீபூதியிடம் கேட்கலானான் 125
மிகு பொருள் விரும்பலும் பிறர் பொருள் ஓம்பலும்
பிறர் பொருள் கொண்டு தான் தூய்த்தலும் கொடுத்தலும்
அப்பொருள் மாற்றலும் அதன் மறைவிடம் சொல்தலும்
மாபெரும் பாவம் என்று மறையோன் இதழ் மலர்ந்ததன்று 126
மந்திரியின் மதி மொழியில் மாவணிகன் தாள் பணிந்தான்
அவன் கொணர்ந்த ரத்தினங்கள் சாட்சி இன்றி ஸ்ரீபூதி பெற்றான்
செப்பிலிட்ட செல்வம் எல்லாம் அமைச்சனிடம் தந்த பின்பு
பத்மசண்டபுரத்தை நாடி பத்திரமித்திரன் செல்லலானான் 127
உறவினர்கள் அனைவருடன் ஐந்து நிலம் கடந்த பின்பு
சிம்மபுரம் வந்து சேர்ந்தான் செம்மதியான் பத்திரமித்திரன்
அமைச்சனின் மாளிகை போய் அரிய சொற்கள் பல கூறி
செப்பில் தந்த ரத்தினத்தை திருப்பி பெற வேண்டி நின்றான் 128
ஊழ்வினை வந்து உறுத்த உள்ளம் மதி கெட்டதனால்
மிகு பொருள் ஆசையினால் தன் தகுதி தான் இழந்து
தான் கற்ற வேதங்களும் தன் அகத்து சத்தியமும்
தலை கவிழ வீழ்ந்ததனால் தனை மறந்து பேசலானான் 129
பத்திரமித்திரன் ஆன உன்னை நான் எப்போதும் பார்த்ததில்லை
செப்பு நிறை ரத்தினங்கள் நீ தந்ததற்கு சான்று எங்கே
செல்வம் கொழிக்கும் நாட்டின் சிறப்புள்ள மந்திரி நான்
என் பெயரைக் கெடுப்பதற்கு நீ பேதமையில் பேசுகின்றாய் 130
பிறர் அறியா சமயத்தில் பொருள் பெற்ற உம் மனதும்
பொருள் அன்று நான் தந்து புலம்புகின்ற என் மனதும்
சத்தியத்தின் வழி நின்று சத்தியகோடன் என்றழைக்கும்
உந்தன் எந்தன் உள்ளங்களே நீர் கேட்கும் சாட்சியாகும் 131
எளியவன் இயம்பும் சொல் என்றும் சபை ஏறாது
வஞ்சகன் வலியன் என்றால் வழிமொழிய பலருண்டு
பெருஞ்செல்வம் கொண்டோர்கள் பேசுகின்ற வார்த்தை என்றும்
சத்தியத்தின் வார்த்தையென்று சாதிக்கவும் ஆளுண்டு 132
செய்நன்றி கொன்றவர்க்கும் பிறன் மனை மகிழ்ந்தவர்க்கும்
எய்திடா பழி வந்து ஏழ் நரகம் சென்றடைவர்
கண் இமைக்கும் நேரத்தில் கடந்து விடும் இவ்வாழ்வில்
செல்வத்தின் ஆசையினால் புகழ் ஞானம் கெட்டழிவர் 133
இந்த நீதி அத்தனையும் நீர் அறிந்த அமைச்சராவீர்
என் செல்வம் கவர்வதனால் எல்லையற்ற பழியடைவீர்
என்றுறைத்த பத்திரன் மேல் எழுச்சி கொண்ட கோபத்தால்
மெய் வருந்த தண்டித்தான் மாளிகை விட்டகற்றிட்டான் 134
பாடுபட்டு சேர்த்த பொருள் பாம்பின் வாய் தேரையாக
ஸ்ரீபூதி நிலவறையில் சேர்ந்து விட்ட காரணத்தால்
வகையறியா பத்திரமித்திரன் விட்ட பொருள் மீட்டெடுக்க
சிம்மசேனன் செவி நுழைய தெரு எல்லாம் புலம்பலானான் 135
தன் குற்றம் காணாத தன் முகத்து கண்ணினை போல்
தான் செய்த பாவத்தை தன் நெஞ்சு அறியாமல்
பத்திரமித்திரனை பளிங்கு நகர் விட்டு அகற்ற
கள்ளனவன் கள்வர் கொண்டு கவர்ந்திட்டான்அவன் பொருளை 136
பணாமுடியில் காத்து வந்த ரத்தினத்தை இழந்த நாகம்
பணாமுடியும் இழந்து விட்டு பரிதவிக்கும் அரவம் போல
சேர்த்த பொருள் அத்தனையும் ஸ்ரீபூதி கயவன் கொண்டான்-என
பட்டினத்து வீதிகளில் பைத்தியம் போல் கூச்சலிட்டான் 137
சிம்மசேனன் செவிகளிலே சேர்ந்து விட்ட அவன் புலம்பல்
ஸ்ரீபூதி வேதியனை சபைக்கு அழைத்து கேட்க்கலானான்
அந்தணனோ அரசனுக்கு பித்தன் அவன் என்றுறைத்து
செப்பி நிறை செல்வம் கேட்டு எனை திருடன்என தூற்றுகிறான் 138
அறநூல்கள் கூறும் அறம் களவாடல் பெரும் பாவம்
இம்மை தவிர் மறுமைக்கும் இழுத்து செல்லும் ஏழ் நரகம்
அறம் கூறும் அந்தணன் நான் இந்நாட்டு அமைச்சனும் நான்
அவன் கூறும் இழிசெயலை அரசே நான் செய்வேனோ 139
வஞ்சகத்தை உள் அடக்கி வார்த்தைகளில் அமுதம் கூட்டி
வாய் நிறைந்த பொய்யனான வேதியனும் சொல் இறக்க
மண் ஆளும் மன்னவனும் மந்திரி சொல் உண்மையென்று
நம்பியதால் மௌனமானான் நடந்த செயல் அறிந்திடாமல் 140
கொடுமதியான் ஸ்ரீபூதி கொடிய தன் காவலர்க்கு
நெஞ்சு நிறை வஞ்சனையால் நிதி கவரும் ஆசையினால்
வெஞ்சினத்து வேழத்தையும் வெறி பிடித்த நாய்களையும்
வெள்ளை மன வணிகன் மீது விரட்டி விட ஆணையிட்டான் 141
உயிர் பிழைத்து வாழ்ந்திடவும் தன் உயர் செல்வம் பெற்றிடவும்
கருடனை கண்டு அஞ்சும் கருநாகப் பாம்பினை போல்
ஸ்ரீபூதி கட்டளையால் சிதைந்து விட்ட மனதுடனே
அதிகாலை மரம் ஏறி அனுதினமும் பிதற்றலானான் 142
பிறர் பொருள் ஓம்பலினால் பெறுகின்ற பழி வினையால்
குலதர்ம கீர்த்தியோடு புகழ் ஞானம் விட்டகலும்
திருமகளும் இடம் பெயர்வாள் தமக்கையவள் உட்புகுவாள்
என்றுறைக்கும் நீதியெல்லாம் ஸ்ரீபூதி மனம் ஏறவில்லை 143
பகை மிகு மன்னர்களை தந்திரங்கள் செய்து வீழ்த்தி
பட்டத்து யானை தனை பறிக்க வழி சொல்லும் மந்திரி
குற்றமற்ற நல் குடியர் கொடுத்துவைத்த கைபொருளை
கபடத்தால் கொண்ட இவன் சீயபுரம் அமைச்சன் இல்லை 144
மேண்மை குணமும் கொண்டு மேல் குலம் தனில் உதித்த
அமைச்சனின் இழி செயலை அரசன் முன் நிறுத்தி கேட்டால்
சீயமாபுர ரஜ்ஜியத்தின் சிறு மதியான் ஸ்ரீபூதியை
சிரம் கவிழ செய்திடுவேன் என பத்திரமித்திரன் புலம்பலானான் 145
வில்லொத்த இரு புருவம் வெண் நிலவின் பிறை நூதல்
சங்கு நிற மென் கழுத்து சாயாத பெருந் தனங்கள்
ஒடிந்து விடும் துடியிடையும் ஒளிர்கின்ற துடையும் கொண்ட
சிம்மசேனன் கரம் தவழும் ராமதத்தை செவியுற்றாள் 146
வணிகன் அவன் கூற்றினிலே வருகின்ற வார்த்தை எல்லாம்
முன் பின் முரண் இன்றி முட்டின்றி கொட்டியதால்
பித்தனல்ல இவன் என்று பெரும் கூர்மை பெற்ற ராணி
வணிகனை முன் அழைத்து வருத்தத்தை கேட்களுற்றாள் 147
தனி வணிகன் வாய் மொழியில் தவழ்ந்திட்ட வாய்மை தனை
தாய் நெஞ்சாள் ராமதத்தை தன் மனதில் பதிய வைத்தாள்
சத்தியத்தின் பெரு வணிகா தயங்காதே சிறு துளியும்
இந்நாட்டு மன்னனிடம் நீ எடுத்தியம்பு என்றுறைத்தாள் 148
நீதி நூல்கள் பல கற்ற நீதிமான் போல் வணிகனும்
தன் பக்க நியாயத்தை தவறின்றி கூறலானான்
பொருளிழந்த வணிகனுக்கும் பொய் கூறும் அமைச்சனுக்கும
சொக்கட்டான் தான் ஆடித் தீர்ப்பளிப்பேன் என்றுரைத்தாள் 149
அரசோச்சும் அரசன் அவன் அமைச்சனுக்கு அழைப்பனுப்ப
சீயபுர மந்திரி ஸ்ரீபூதி வந்து அவை வணங்கி அமர்ந்திட்டான்
மாராணி ராமதத்தை சபையில் மகிழ்ச்சியுடன் பல பேசி
சொக்கட்டான் ஆடுவதில் தனக்கு நிகர் யாரென்றாள் 150
சிம்மசேனன் விழிகளிலே தெரிந்திட்ட பொருள் அறிந்து
சிம்மபுர அமைச்சன் அவன் சித்தத்தில் மகிழ்வு கொண்டான்
அமைதி கொண்ட நதியினிலே அடியில் சுற்றும் சுழலை போல
ராமதத்தை மன நதியை ராஜ்ய மந்திரி அறியவில்லை 151
சகுனியின் சொக்கட்டான் பாண்டவர்க்கு தீங்கிழைக்க
ராமதத்தை சொக்கட்டான் வணிகனுக்கு வாழ்வளிக்க
முதல் இரண்டு ஆட்டத்தில் மூத்த மந்திரியை முறியடித்து
முத்திரை மோதிரமும் பூநூலும் முக நகையாள் கை கவர்ந்தாள் 152
மயிலோடு போரில் தோற்று மயங்கிய சிம்மத்தைப் போல்
மலைச்சாரல் தூறலைப் போல் மேனி எல்லாம் நீர் பொடிக்க
அவமானம் அவனைத் தாக்க அரசன் முன் தலை கவிழ்ந்தான்
அறம் கூறும் அமைச்சனான சத்தியகோடன் ஸ்ரீபூதி 153
கை கவர்ந்த கணையாழியை செவிலித்தாய் கரம் பதித்து
ஸ்ரீபூதி மாளிகை போய் செப்பெடுத்து வா என்றாள்
மென் தனத்தால் நிபுணமதி மென் நடையில் கருவூலம் போய்
கணையாழி காட்டி பெற்றாள் பத்திரமித்திரன் ரத்தன செப்பை 154
மண்ணோரை வசப்படுத்தும் மயக்கிடும் கூர்மை நோக்கால்
சிந்தித்து செயல் செய்தால் தேவர்களும் தப்பமாட்டார்
வஞ்சகன் அமைச்சன் கொண்ட வணிகனின் ரத்தின செப்பை
செங்கமல தேவி ஒத்த ராமதத்தை கை கொடுத்தாள் 155
கரந்த பாலை மடி சேர்க்கும் கைத்திரம் கொண்டவள் நீர்
நிபுணமதி என்னும் பெயர் நின் திறனுக்கு ஒத்த பெயர்
பாம்பின் வாய் தவளையினை தப்பிக்கச் செய்தது போல்
ரத்தின செப்பை மீட்டாய் கருவூலம் சென்று என்றாள் 156
கற்பக மரம் தழுவும் காமர் வல்லி கொடியைப் போல
கட்டவிழ் அழகு கொண்ட கனி முகத்தாள் ராமதத்தை
மன்னனை நெருங்கி வந்து மலர் கரம் கொண்ட செப்பை
காட்டிட வேந்தன் மகிழ்ந்து நீ சிந்தாமணி தேவி என்றான் 157
( சிந்தாமணி: நினைத்த பொருள் தரும் ரத்தினம் )
நஞ்சை ஒத்த வஞ்சகர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வதும்
நன்மையே செய்பவர்கள் நரக சோதனைக்குள் ஆவதும்
கலியுகத்தின் மாற்றத்தால் கட்டி இழுத்து சென்றாலும்
கடைசியில் கிட்டிவிடும் நல் வாழ்க்கை அறத்தார்கே 158
வணிகனுக்கு அமைச்சன் செய்த வஞ்சகத்தை உணர்ந்த மன்னன்
வணிகனின் குணம் அறிய வைத்திட்டான் ஒரு தேர்வை
ஸ்ரீபூதி கருவூல ரத்தினங்கள் பல கலந்திட்டான் வணிகன் செப்பில்
தந்திட்டான் வணிகனிடம் தன் பொருளை எடுத்து செல்ல 159
செப்பினை பெற்ற மித்திரன் திறந்திட்டான் அரசன் முன்னே
திகைத்திட்டான் விழி அகல தேர்ந்த பல ரத்தினத்தால்
பாலை விட்டு நீர் பிரிக்கும் அரிய திறன் அன்னம் போல
பத்திரன் பிரித்தெடுத்தான் தன் செல்வம் அத்தனையும் 160
பிறர் பொருள் விரும்பல் பெரும் பாவம் என்றுணர்ந்தும்
சத்தியத்தின் செயல்கள் மட்டும் தரணியிலே நிற்கும் என்றும்
தேடிப் பெற்ற தன் பொருள்கள் தன்னிடத்தே வந்ததனால்
ஆறாம் குண நிலையில் அவ்வணிகன் மகிழ்ந்து நின்றான் 161
( குணநிலை : 1 முதல் 5 வரை இல்லறத்தார்,
6 முதல் 12 வரை முனிவர்கள், 13, 14 கைவல்ய குணம்)
அறம் அறிந்த அமைச்சனான ஸ்ரீபூதி செய்த குற்றம்
அவன் பெற்ற தண்டனையாய் அனைத்தயும்பெற்றுக்கொள்-என
அரசன் இட்ட ஆணையினை அடக்கத்துடன் மறுதளித்து
வேந்தனிடம் கூறலுற்றான் வேதம் நிகர் பத்திரமித்திரன் 162
அடுத்தவர் பொருள் ஏற்றல் தானத்திற்கு உரியதன்று – அதை
என் உறவுக்கு ஈன்றிட்டால் இழி நிலைக்கு ஒப்பாகும்
சந்ததியை நான் இழப்பேன் சாய்ந்து விடும் குலப்பெருமை
நிச்சயமாய் பிறர் பொருளால் நேர்ந்து விடும் ஏழ் நரகம் 163
வணிகனின் வாய் மொழியால் வியப்படைந்த சிம்மசேனன்
புவியாளும் நிலை வரினும் பொய் கூறா மனம் உடையான்
மரணத்தைப் போக்கும் மருந்து மற்றவர் பொருள் என்றாலும்
ஏற்காத ஒழுக்கம் கொண்ட ஒப்பிலா வணிகன் என்றான் 164
மணிகளும் பொன்னும் வைரம் விளைந்திடும் நிலங்கள் பலவும்
மணிகளும் பொன்னும் வைரம் பதிந்திட்ட மாளிகை சிலவும்
மணிகளும் பொன்னும் வைரம் நிறைந்திட்ட ரத்தின செப்பும்
அத்தனையும் பரிசாய் தந்து அகமகிழ்ந்து வாழச் சொன்னான் 165
வல்லிய தோள்கள் கொண்ட மல்லரை சபைக்கு அழைத்து
சாட்டையை பெரிதும் சுழற்றி மூபத்து அடிகள் தந்து
சாணத்தை முச்சட்டி நிறைப்பி தலை மீது கொட்டச் செய்து
கயவன் அவன் ஸ்ரீபூதியை கடத்தினான் நாட்டை விட்டு 166
முன் பிறப்பில் ஸ்ரீபூதி செய்த வினைகளின் உதயத்தாலே
முற்பகல் தேவன் என்று மக்களால் புகழப்பட்டு
பிற்பகல் பேயன் என்று பெரிதும் அவன் இகழப்பட்டு
சிறுகன்று மான்களாளே வதைபடும் சிங்கமானான் 167
ஆசையினை ஆசையால் ஆசையாய் பற்றிக் கொள்ள
ஆசையே துன்பத்தை கூட்டி அதிவினைகள் செய்ய வைத்து
பிறவி எனும் பெருங்கடலை கடந்திடா நிலை நிறுத்தும்
ஆசையை அழித்துவிட்டால் அறுந்து விடும் பிறவிச் சுழல் 168
பிறவி சுழற்சிக்கு நல்வித்தாவது நம் போற்றும் ஆசைகள் தான்
கர்ம வினைகள் சேர்வதும் சலியா நம் ஆசையால் தான்
பழி பகையும் பற்றாகி விட்டது பற்றிட்ட ஆசையால் தான்
மோட்சகதியை முற்றும் தடுப்பது மோகத்தின் ஆசையால் தான் 169
விலங்கு நரக கதியில் வீழ்வதும் வெறி கொண்ட ஆசையால் தான்
வீடு அடைய துறவு செல்வதை தடுப்பதும் நம் ஆசையே தான்
மூன்றுலகிலும் வலிமையுடையது முடிவிலா ஆசை ஒன்றே
ஆசை வென்ற ஆன்மாக்கள் எல்லாம் அடைந்திடும் வீடு பேறே 170
மிகுபொருள்ஆசையால் பிறர்நிதி கவர்ந்திட்ட வேதியன் ஸ்ரீபூதி
மண் பொருள் பெண் எல்லாம் துறந்திட்டு வறியவனானான்
அரசதண்டனை தந்த கோபவினை அவன் மனதினில் ஊற்றெடுக்க
பிறவிச் சுழற்சிக்கு ஆளாகி பெற்றிட்டான் கர்ம வினை 171
காரிய களவினால் கடும்பழி ஏற்றிட்டான் சீயபுர அமைச்சன்
கற்றவை பெற்றவை அழிந்து பிறவியை துறந்திட்டான்
பொருளாசைப் பற்றினாலே விலங்குகதியில் பிறந்து
அரசனின் பொன்னறையில் அகம்பன் அரவமாய் பிறந்திட்டான் 172
காரியகளவோ காரணக்களவோ இரண்டுமே பெரும் பழி தான்
நரக விலங்கு பிறவி தருவது களவின் வழியினில் தான்
மனிதபிறவியில் இழிகுல உதயம் மறம் சேர்க்கும் களவினாலே
மண்ணுக்கு நமைத் தந்த தாயும் வெறுப்பது தவறான களவினாலே 173
ஆழி சூழ் நாட்டை ஆண்டிடும் அரசன் அரிமா சிம்மசேனன்
அழகு தளிர்கொடி ராமதத்தை அவன் இடதினில் அமர்ந்திருக்க
அந்தணன் தமிலன் இனி மந்திரி என அரசனும் ஆணையிட்டான்
தமிலனின் மதியினால் சீயபுரம் தழைத்தது மேன்மேலுமே 174
தன் பொருள் பெற்றிட்ட அந்த தருமத்தின் பத்திரமித்திரன்
தழைத்து மணம் வீசும் காடான அதிங்கவனம் புகுந்தான்
விண்ணினை தொட்டு நிற்கும் விமல காந்தாரம் மலையில்
வரதர்ம முனியின் முன்னே அவர் மலரடி பணிந்து நின்றான் 175
மும்மணி அடையப் பெற்று சன்னைகள் நான்கை நீக்கி
ஐம்புலன் அடக்கம் கொண்டு ஐந்து மா விரதம் ஏற்று
தவத்தினை தாங்கி நிற்கும் வரதர்ம முனிவரரிடம்
ஜினவற தர்மம் என்ன என்று செப்புவீர் எனக்கு என்றான் 176
நால்வகை தானங்களை பாத்திரம் அறிந்து தரலும்
காமம் மயக்கம் நீங்கிய கடவுலார் பாதம் வணங்களும்
ஐம்பொறி வென்று நிற்கும் கணதரர் தலைவன் கூறும்
அறத்தினை ஒழுகல் ஒன்றே சுழற்சியை நீக்கும் மருந்து 177
நற்காட்சி உடைய மக்கள் ஈராறு விரதம் ஏற்று
இவ்வுலக உயிர்களிடம் இதயத்தால் அன்பு கொண்டு
துன்பங்கள் காணும் போது வெந்தனல் வெண்ணெய் போல
இன்னா செய்தார்க்கும் இரங்கிடல் அபயதானம் 178
ஆதவன் ஒளியைக் கண்டு அழிந்திடும் ஒளியைப் போல
மும்மூடம் கொண்ட மக்கள் முழு ஞானம் பெறுவதற்கு
ஆகம நூல்கள் தந்து அறவுறை விரும்பிச் சொல்லி
அறிவினை வளர்த்தல் ஒன்றே ஆகம சாஸ்திர தானம் 179
( 3மூடம் : உலக மூடம், தேவமூடம், பாசாண்டி மூடம் )
ஞனமும் சீலம் கொண்டு சிதைத்திடும் மோகம் நீக்கி
பாவமும் பழியும் போக்கி பல் உயிர் இன்பம் நோக்கி
தருமமும் தயவும் சேர்த்து தரணியில் வாழும் உயிர்க்கு
உள்ளத்தால் அளிக்கும் உணவே உண்மையில் ஆகார தானம் 180
ஆகார தானம் ஒன்றில் அடைந்தது மூன்று கிளைகள்
தலையாய தானம் ஒன்று தவத்தோர்க்கு ஈனும் தானம்
இடையாய தானம் இங்கு நற்காட்சி உடையோர் ஏற்றல்
கடையாய தானம் என்றும் கிழங்குவகை உண்போர் பெறுதல் 181
ஆகார தானம் ஏற்றோன் ஊண் உண்ணும் புலையனானால்
உயிர்களைக் காப்பானாகில் அளித்தவர் சிறப்பில் மேலாம்
உயிர்களை வதைப்பானாகில் அளித்தவர் ஏழ் நரகத்தாரே
ஆகார தானம் இது தான் அறிந்திடு பத்திரமித்திரா 182
பரமாத்மா அந்தராத்மவும் பலன் தரும் பரம ஆகமமும்
குற்றத்தை நீக்கி தெளிந்த குன்றாத உயர் நெறியும்
மும்மூடம் அறுவினை எண்மதம் முற்றிலும் அழித்து நிற்கும்
தெளிந்த நல் தன்மை ஒன்றே செல்வழி மோட்சம் செல்ல 183
பெரிய கொலை பொய் களவு பிறன் மனையில் ஒருவல்
பொருள் வரைதல் மத்தம் மது புலசு உணவின் நீக்கல்
பெரிய திசை தண்டம் இரு போகம் வரைந்தாடல்
மரீஇய சிக்கை நான்கும் இவை மனை அறத்தார் சீலம். 184
( பொருள் வரைதல் : மிகு பொருள் விழையாமை.
மத்தம் : கள். மது : தேன். பெரிய திசை : திசை விரதம். தண்டம் :
( அனர்த்த தண்டம் ) பயனிலா செய்யாமை. 4 சிக்கை :
தேச விரதம், சமாயிக விரதம், பேசாத விரதம், உபவாச விரதம். )
பத்திரமித்திரன் அறங்கேள்வி சருக்கம் முற்றும்.
4. பூர்ணச்சந்திரன் அரசியற் சருக்கம்
வரதர்ம முனிவர் சொன்ன தர்ம உபதேசம் கேட்டு
மதிகண்ட அல்லி போல பத்திரமித்திரன் மனமகிழ்ந்து
இருள் ஒத்த கர்மவினையை இதயத்தை விட்டுத் தள்ளி
உள்ளத்தில் அமலன் அடியை ஊன்றியே தொழுதெழுந்தான் 185
வணங்கிய பத்திரமித்திரன் வளங்கள் சூழ் சீயபுரத்தை
நாடியே நடக்கலானான் தன் மாளிகை வந்து சேர்ந்தான்
கருமுகில் கொட்டுகின்ற கார்கால மழையினைப் போல்
வறியவர்க்கு தானம் தர அந்த வருத்தத்தில் தாயுரைத்தாள் 186
நல்குலமும், நற்குணமும், நல்ஞனம் குடிபிறப்பும்
கீர்த்தியுடன் பொன் பொருளும் கிட்டிடாது மிக எளிதில்
புகழ் கண்ட புருஷனவன் பொருளின்றி வசிக்கலானால்
நற்பண்பு மனையாளும் நா இகழத் தொடங்கிடுவாள் 187
தாய் உரைத்த பேச்சுதனில் தனி ஆர்வம் ஏதுமின்றி
சேர்த்த பொருள் அத்தனையும் தானம் தர துவங்கிவிட்டான்
செல்வமகன் செய்கையினால் சினங்கொண்ட சுமித்திரையும்
அம்மகனை கொல்ல எண்ண ஆன்மவினைக்கு ஆளானாள் 188
இப்பிறவி துறந்து விட்ட சுருள் குழலி அவன் தாயும்
அதிங்கவனம் காட்டில் புலி மகவாய் பிறப்பெடுத்தாள்
சேர்த்த செல்வ ஆசையாளும் சித்தம் கொண்ட மோகத்தாளும்
வினைகலந்த ஆன்மாவால் விலங்குகதி பெற்றுவிட்டாள் 189
விளக்கொளியின் ஜோதி நோக்கி விரைகின்ற விட்டில் போலின்றி
தான் சேர்த்த செல்வம் மீது தன் விருப்பம் நீக்கியதால்
தயவுடன் கருணை கொண்டு தானங்கள் செய்து விட்டு
மனநிறைவில் மித்திரன் சென்றான் அதிங்கவனம் காடு காண 190
முன் வினை கைகோர்த்து வர மென்நகை மங்கையரோடு
காட்டினுள் களித்து சென்ற கார்வள்ளல் பத்திரமித்திரன்
பூம்பொழில் சோலை கொண்ட மலை உச்சி சென்ற போது
முன் பிறவி தாயான இப்பிறவி புலியை கண்டான் 191
தொடர்ந்து வந்த வைரபாவம் துவக்கிவிட்ட பகையுணர்வும்
கடும்பசி உணர்வினாலும் பத்திரனின் வினை சேர்ந்ததாலும்
பளிங்கொளி விளக்கின் மீது பாய்கின்ற விட்டிலைப் போல்
பாய்ந்திட்ட தாய் புலி தன் மகனை கொன்றது அங்கு 192
பொருளாசை மிகுதியாலே புலி பிறவி கொண்ட தாயால்
வறுமை கொண்ட உயிர்களெல்லாம் வளம் பெற வாரி தந்த
இனிய மகன் பத்திரமித்திரன் இப்பிறவி தனைத் துறக்க
புலியுருவில் பெற்ற தாயால் புவிவிட்டு அகன்று போனான் 193
எல்லையற்ற பிறவிகளை எடுத்து உழலும் ஆன்மாவால்
தாயின்றி ஒரு சுற்றம் தரணியிலே இருப்பதில்லை
ஊண் உண்ணும் உயிரெல்லாம் பிற உயிரை உண்டு வாழும்
நெறியறிந்த சுமத்திரையும் தன் மகனை அங்கு தின்றால் 194
இச்சித்த பொருளை தரும் இந்திரலோக கற்பக விருட்சம்
இடி விழுந்து சாய்ந்தது போல் இனிய மித்திரன் சாய்ந்து விட்டான்
வேழங்களின் வேந்தனான சீயபுர மன்னன் ராணி
ராமதத்தை வயிற்றினிலே வாரிசாக உயிர் தரித்தான் 195
சூள் கொண்ட ராமதத்தை சுடர்விழி கருமை கொள்ள
இளம் தனங்கள் விம்மி நின்று நுண்ணிடையும் வெளி தெரிய
பவழ வாய் வெண்மையாக பசலை உற்ற மேனியாக
முழுமதி உதயம் பெரும் திக்கை போல் ஒளிரளானால் 196
சிம்மபுரம் பெற்றதொரு சீரிய நல் இளவரசன்
சிம்மசேனன் அகமகிழ்ந்து செல்வங்களை அள்ளித்தந்தான்
சிம்மச்சந்திரன் என் மகன் சீயபுரம் மன்னன் ஆவான் – என
திக்கெட்டு மன்னர்கட்கும் ஏடெடுத்து செய்தி சொன்னான் 197
இளமழலை வளந்திட்டான் இளங்காலை ஆதவன் போல்
அரசகுல வித்தைகளை ஐயமற அறிந்து கொண்டான்
எட்டெட்டு கலைகளையும் ஏற்றமுடன் கற்றறிந்தான்
ஏழுலக அழகிகளை இன்பமுடன் மணம் புரிந்தான் 198
மலரினில் தேங்கும் மதுவை மயக்கத்தில் உண்ணும் வண்டாய்
காமத்தின் ஆழம் சென்று களிப்புற்றான் சிம்மசேனன்
வேழம் நிகர் சிம்மசேனனும் வேண்மாள் ராமதத்தையும்
மலைமிசை மதியைப் போல மற்றொரு மகனை பெற்றார் 199
சிம்மசேனன் ராமதத்தை சேர்ந்து வைத்த சிறந்த பெயர்
சித்திரை முழு திங்களான செல்ல பெயர் பூர்ணச்சந்திரன்
கடலளவு சேனை கொண்ட காவலனின் குமாரர்களும்
சூரியன் சந்திரன் போல் சுகம் பெற்று வளர்ந்தார்கள் 200
பொன்னோடு மணி வைரம் புணைகின்ற நகைக் குவியல்
பொத்தி வைக்கும் பொன்னறைக்கு சிம்மசேனன் சென்றபோது
முற்பிறப்பின் ஸ்ரீபூதி இப்பிறப்பில் அகந்தன் அரவமாக
மின்னலென மன்னன் மீது பாய்ந்து தன் பல் பதித்தான் 201
நாகத்தின் கொடிய விஷம் நாட்டு மன்னன் உடல் பரவ
நன்மக்கள் இருவரும் சொல் மெய் சோர்ந்து விட
மயிலொத்த மாராணி ராமதத்தை மயங்கி மண் சரிய
கதிரவனின் ஒளியிருந்தும் காரிருள் சூழ்ந்ததங்கு 202
கருடதண்டன் மந்திரம் ஓதி கருநகங்களை வரவழைத்து
நெய் சொரிந்து தீ வளர்த்து நாகங்களைப் பாய செய்தான்
மன்னனின் மேனி தீண்டா மணி கொண்ட நாகமெல்லாம்
பூம்பொழில் செல்வது போல் தீ கடந்து சென்றதங்கு 203
அகந்தன அரவமான ஸ்ரீபூதி அந்நெருப்பில் புகுந்து வர
தீ எரிக்க உடல் கருகி வெண் சாம்பலாக மாறியது
தீ வினையின் காரணத்தால் காளம் என்னும் காட்டினிலே
மறுபடியும் விலங்கினமாய் மான் பிறவி எடுத்திட்டான் 204
ஆயுளும் அரச வாழ்வும் அரும்பெரும் சுற்றங்களும்
மாயமாய் நீங்கிவிடும் என மனிதர்கட்கு சொல்வதுபோல்
தாங்கொணா தீவினையால் சல்லகி காட்டினிலே
அசனிகோடம் யானையானான் முன் பிறப்பின் வேந்தனின்று 205
கார்குழல் விரிந்து தொங்க கண்களில் நீர் பெருக
நாயகனை பிரிந்ததனால் ராமதத்தை நினைவிழக்க
ஞானகுணம் கொண்டவர்கள் ராணியை கையிலேந்தி
ஆறுதல் மொழிகள் கூறி அவள் துக்கம் போக்கலானார் 206
நாம் கொண்ட செல்வங்கள் சில நாளில் சென்றுவிடும்
மண் ஆண்ட மன்னர்களும் இம்மண்னில் இப்போதிலை
அழுது புரண்டாளும் இங்கு மாண்டவர்கள் மீண்டதில்லை
வந்தவர்கள் தங்கிவிட்டால் இவ்வயகத்தில் இடமுமில்லை 207
மனிதகதி சுழற்சியிலே மாண்டவர்கள் எத்தனையோ
அத்தனை இறப்பினிலும் நம் சுற்றம் நட்பு எத்தனையோ
கணக்கெடுத்த துக்கத்திலே கதறியழ நாம் நினைத்தால்
யாருக்கென்று நாம் அழுவோம் ஆறுதல் கொள் ராமதத்தை 208
ஆறுதல் மொழியனைத்தும் அவள் மனதை தேற வைக்க
அருந்தவப் புதல்வர்களை அருகினில் அழைத்தணைத்தாள்
அன்புநிறை செல்வங்களே உம்மை அவணிக்கு தந்தது நான்
அரசனாக ஆக்கும் முன்னே என்னரசன் சென்றுவிட்டார் 209
என் வயிற்றில் முதலுதித்த என் அருமை சிமச்சந்திரா
என்றென்றும் மகுடம் சூடி இந்நாட்டை ஆண்டிடுவாய்
தமயனுக்கு தன் கரத்தை தந்துதவும் இளவளாக
பூர்ணச்சந்திரன் உனக்கு பூரணமாய் உதவிடுவான் 210
அன்னையின் மொழி அனைத்தும் அவ்விருவர் மனம் பதிய
எந்த ஒரு குறையுமின்றி நெறி மதியில் ஆண்டார்கள்
மன்னனின் மறைவு கேட்ட துறவு கொண்ட பெண்களான
சந்திரமதியும் இரண்யமதியும் சந்தித்தனர் ராமதத்தையை 211
ஆகமநூல் அறிந்து கற்று அற அமிர்த செற்களோடு
அனைவரிடம் அன்புகாட்டும் ஆர்யாங்கனைகள் கூறலானார்
ஆசையை மனதில் தேக்கி ஆவேசம் கொண்ட பகையால்
விலங்கிடை பிறந்து உழன்று வெவ்வினை சேரப்பெறுவர் 212
மனிதகதி ஆன்மாவெல்லாம் மனதிலூறும் திருவறத்தால்
மோகனீய கர்மம் வென்று மோட்சவீடு சென்றடைவர்
துவர்பசை நான்கை நீக்கி பஞ்சாணுவிரதம் ஏற்று
நிலையாமை தனை உணர்ந்து நின்றிடு தவத்திற்கென்றார் 213
அரசனை இழந்த ராணி அழைத்திட்டாள் தலை மகனை
நிறைசெல்வம் சுற்றம் உறவும் நீரின் மேல் குமிழியாகும்
சேர்ந்த எண் வினைகள் போக்க செல்கிறேன் துறவுக்கென்றாள்
செவியினில் கேட்ட மைந்தன் இடி கேட்ட நாகமானான் 214
அனிச்சைப் பூ மென்மையான கார்சுருள் குழலை நீக்கி
கவிழ்ந்த மென் கொங்கைகளை வெண்கச்சை துகிலால் கட்டி
கதிரவன் ஒளியைப் போன்ற கறையற்ற வெண்சீலயை
கட்டிய ராமதத்தை காட்சியில் ஆர்யாங்கனையானாள் 215
அன்னையின் உருவம் கண்டு இளையவன் பூர்ணச்சந்திரன்
அடிகளில் மல்ர் சொரிந்து சிரம் தொட தொழுது நின்றான்
பசும் பொன் காசுகளை பாதத்தில் தானம் ஆக்கி
சிறப்புடன் பூஜை செய்து திரும்பினான் தன் நகர்க்கு 216
தகர்த்திடும் வேழம் தன் துதிக்கையை இழந்தது போல்
தாய் துறவால் சிம்மசந்திரன் சம்சார விரக்த்தியுற்றான்
தேவிமார் குறுநகையும் சிற்றிடை தாங்கும் தனமும்
சித்தத்தை விட்டகல பித்தன் போல் பேதையானான் 217
குற்றமிலா உயர்நெறியார் பூர்ணச்சந்திர மாமுனிவர்
சீயபுரம் வருகை அறிந்த சிம்மச்சந்திர மா அரசன்
தேவியர்கள் புடை சூழ மதுமலர்கள் அடி பெய்து
வரவேற்று அழைத்து சென்றான் மன்னன் தன் மாளிகைக்கு 218
நறுமலர் கலச நீரால் நல் முனி பாதம் கழுவி
சந்தனம், சருவும், மலரும் சான்றோனின் முன்னே வைத்து
பொன் அடி மீண்டும் வணங்கி அறுசுவை உணவு படைத்து
தேவர்கள் சிறப்பு செய்ய தொழுதிட்டான் சிமச்சந்திரன் 219
சிறப்புறு தவத்தை உடைய சீர் பெரு மா முனியே
பிறவிச் சுழற்சிக்கு ஒரு முடிவுண்டா என்று கேட்க
அருந்தவ ஆன்மாவெல்லாம் அற்றிடும் சுழற்சி இன்றி
அத்தவமில்லா ஆன்மா முடிவின்றி சுழலும் என்றார் 220
கனிகளும் கனிந்து தொங்கும் காய்த்திடும் மரங்கள் தன்னில்
காய்களை கனிய வைக்க இலைகளில் பதைத்து வைப்பர்- அதுபோல்
குணத்திலே சக்தி பெற்ற குற்றமில்லா ஆன்மாக்கள் கூட
ஈராறு தவ இலையால் மோட்ச கனி கனிந்து போகும் 221
ஈரைந்து அறத்தினோரும் ஈராறு தவத்தினோரும்
நிர்கந்த நிலையை ஏற்று மனம் வாக்கு காயம் மூன்றில்
அகப் புற பற்று நீக்கி தன் மனம் பயின்று ஒழுகும்
மெய் காட்சி ஞானம் ஒன்றே மாதவ குணம் என்றறிவாய் 222
( அகப்பற்று 14 : பொய்மை, நகைப்பு, விருப்பு, வெறுப்பு,
அச்சம், கவலை, அருவருப்பு, பெண் ஆசை, ஆண் ஆசை,
அலி ஆசை, வெகுளி, மானம், மாயை புறப்பற்று 10 : லோபம்,
நிலம், வீடு, பொன், தனம், தான்யம், பணி ஆள், பணி பொண்,
ஆடை, அணிகலன். )
என் உயிர், எனது ஆன்மா, கடையிலா ஞானம் எனது
என்று நாம் உணரும் போது எண்வினை அறுந்து போகும் – அன்றி
என் உடல், எனது சுற்றம், என் பொருள், மனைவி, மக்கள்
என்ற நம் மனநிலையால் எண்வினை தொடரும் என்றார் 223
நெருப்பினில் இட்ட செம்பில் நீர் துளி கலந்ததை போல்
ஐம்புலன் அசைத் தீயும் ஆழமாய் மனதில் பற்ற
மனம் அது அவ்வழியே அடைந்திடும் இன்பமெல்லாம்
நெய் கொண்டு நெருப்பணைக்கும் நிலையினை ஒத்ததாகும் 224
முற்பிறப்பின் செய்தவத்தால் இப்பிறவி மானிடராய்
நல்குணமும், நல்குலமும், நல்லழகு அரசரானோம்
தவத்தோடு தானம் செய்து சீலத்துள் விரதம் ஏற்றால்
திருமகள் உடன் இருப்பாள் பகைவரும் பணிந்து நிற்பார் 225
சிம்மச்சந்திரன் இத்தனையும் செப்பிட்டான் தன் இளவளுக்கு
தன் சிரத்தின் மணிமுடியை தந்திட்டான் தம்பியிடம்
பூர்ணச்சந்திர மாமுனியை பூரணமாய் மனதிருத்தி
துறவு ஏற்று தவநெறியில் தீட்சை கொண்டு நின்றிட்டான் 226
கல் பதித்த கிரீடம் போக்கி கருமேக குஞ்சு நீக்கி
உடலினில் உடை ஒதுக்கி உள்ளத்தில் பற்றறுத்து
பணாமுடி ரத்தினத்தையும் பளபளக்கும் தோலினையும்
நஞ்சோடு நீக்கி நிற்கும் நாகத்தைப் போல் ஒத்தான் 227
அருளென்ற ஆரணங்கை ஆர்வமாய் அணைத்துக் கொண்டு
நல்லறம் என்ற நண்பன் தன்னுடன் இணைந்து நிற்க
மாசு என்னும் மயக்க மாதை மனதினால் வெறுத்து விட்டு
தவம் என்னும் ஏந்திழையை தன்னுடன் சேர்த்துக் கொண்டான் 228
அருந்திடும் உணவு மிகுந்தால் ஐம்புலன் உணர்வு கூடும்
கூடிடும் உணவு கூட்டும் குற்றமாம் கர்மவினையை
ஆகம நூல் சொல் உண்டால் ஐம்புலன் அடங்கி நிற்கும்
ஆவமோதுரியம் என்னும் புறத்தவம் இரண்டில் நின்றான் 229
( ஆவமோதுரியம் : குறைவாக உண்ணல். )
மூவுலகும் தர இயலா மும்மணியை மெய் தரித்து
சிந்தையும் செயலும் செய்யும் குற்றத்தை அறவே நீக்கி
வேண்டுதல் வேண்டாமை இன்றி விரதங்கள் மூன்றை ஏற்று
அகப்பற்றை அறவே உதிர்த்தான் அகத்தவன் சிம்மச்சந்திரன் 230
ஈராறு அடக்கம் பெற்று பற்றற்ற நிலையைப் பற்றி
வீங்கு தவன் சிம்மச்சந்திரன் விண்ணிலே செல்லும் நாளில்
கலசம் போல் தனத்துடனும் கண்களில் காமம் சிந்தும்
பூவொத்த பூவையருடன் பூர்ணச்சந்திரன் போகம் கொண்டான் 231
பிறை நூதல் விற்புருவம் பித்தம் தரும் கயல் விழிகள்
எள் பூவின் நாசியுடன் எழில் கொழிக்கும் இரு கொங்கை
ஒடிந்து விடும் இடையழகும் ஒய்யார மயிலை ஒத்த
பூங்கொடிகள் சூழ்ந்திருக்க பூர்ணச்சந்திரன் வாழ்ந்திருந்தான் 232
துறவு கொண்ட ராமதத்தை சிமச்சந்திர முனியை தொழுது
சிம்மசேன மன்னன் இடம் செப்பியதை செல்லலானாள்
ஐம்புல நுகர்ச்சியிலே அடைவதில்லை உண்மை சுகம்
அருந்தவத்தால் பெற்றிடலாம் ஆன்ம நலம் என்றுரைத்தேன் 233
நிலத்தில் விதை விதைத்தாலன்றி விதையில் இலை வளராது
மலையில் மழை பெய்தாலன்றி அருவியில் நீர் பெருகாது
ஐம்புலன் அடக்கமின்றி ஆன்ம சுகம் கிடைக்காது
அறிந்திடுவாய் பூர்ணச்சந்திரா என்று சொன்னேன் அரசனிடம் 234
காரணம் இல்லையெனில் எக்காரியமும் நடக்காது
முப்பிறவி செய்தவமே இப்பிறவி நீ முடி மன்னன்
மறுமையிலே பேறு அடைய இம்மையிலே புண்ணியம் செய்
என்றுரைத்த என்னை அவன் இகழ்ச்சியுடன் விட்டகன்றான் 235
என் மொழியை செவியறுத்து என்னை விட்டு நீங்கியதால்
ஐம்புலங்கள் உணர்ச்சியிலே அவன் வீழ்ந்து போவானோ
அருகன் சொன்ன அறமேற்று அடுத்த பிறப்பு அழிப்பானா
சிம்மச்சந்திர தவத்தாரே கூறிடுங்கள் எனக்கு அதை 236
ராமதத்தை ஆர்யாங்கனையே நாடிடாதே வருத்தமதை
பூர்ணச்சந்திரன் ஜினவறத்தை ஏற்றிடுவான் விருப்பமுடன்
நானுரைக்கும் சரித்திரத்தை நாட்டமுடன் நீ கேட்டு
எடுத்துரைப்பாய் அவனுக்கு என்று கூறி உரைக்கலானார் 237
பூர்ணச்சந்திரன் அரசியற் சருக்கம் முற்றும்.
5. நால்வரும் சுவர்க்கம் புக்க சருக்கம்.
நறுமணம் பரவி வீசும் நன் மலர் பூத்த சோலையில்
மாரி போல் மது சொரிய மயக்கத்தில் ஆடும் ஈக்கள்
பாங்குடன் இசைக்கும் பண்ணை முகில் மோதும் முழக்கம் என்று
செவியுற்ற மயில்கள் கூட்டம் சிறகு விரித்தாடும் இங்கு 238
முத்துக்கள் பதித்து நெய்த முந்தானைப் பூந்துகிலால்
முழுமேனி மூடி இருக்க மாலைகள் மார்பில் ஆட
மகர யாழ் மெல்லிசைக்கும் மங்கையர்கள் வாய் இசைக்கும்
ஜதியோடு நடனம் உண்டு தவறாமல் எந்நாளும் இங்கு 239
செல்வங்கள் கொழிக்கும் நாடு செழுமையில் இருக்கும் நாடு
விண்ணினை தொட்டு நிற்கும் மாளிகைகள் நிறைந்த நாடு
துன்பங்கள் துளியும் இல்லா இன்பங்கள் தூய்க்கும் நாடு
இப்புவி போற்றி கூறும் இணையிலா கோசல நாடு 240
கோசலை நாட்டினிலே குறையில்லா பல ஊரில்
அந்தணரும் அறவோரும் அமைதியில் வாழும் ஊராம்
விண்ணவரும் போற்றுகின்ற விருத்தக் கிராமந்தன்னில்
நல்லொழுக்க நற்குணத்தில் மிருகாயணன் வாழ்ந்திருந்தான் 241
அதிர்ந்திடும் நடை அறியாள் அலறிடும் பேச்சறியாள்
கனி சொற்கள் பேசுகின்ற கற்புடை மனம் உடையாள்
நல்லறத்தை தினம் போற்றும் இல்லறத்தாள் மதுரை அவள்
மிருகாயணன் மனைவியென மேம்பட்டு வாழ்ந்திருந்தாள் 242
முழுமதியின் முக அழகும் முத்துப் பல் ஒளியழகும்
மது சொட்டும் செவ்விதழும் மருள் கொண்ட மான் விழியும்
அடிபரந்து நிமிர்ந்து நிற்கும் அழகு தனம் கொண்டவளும்
வாருணி என்றழைகின்ற வஞ்சி அவள் மகளானாள் 243
செங்கதிரோன் பிரிவினிலே செங்கமலம் வாடுதல் போல்
மனைவி அவள் மதுரையும் மகளுமான வாருணியும்
மிருகாயணன் மறைவினிலே மிகு துயரம் கொண்டிருக்க
மறுபிறவி எடுத்து விட்டான் மண்ணுலகம் வந்தடைந்தான் 244
எதிர் வரும் பிறவியின்றி முக்தி பெற்ற ஆன்மாக்கள்
இடைவிடாமல் பிறப்பெடுக்கும் எழில் நகர் அயோத்தியை
ஆளுகின்ற அதிபலனுக்கும் அவன் மனைவி சுமதிக்கும்
மகளாகப் பிறப்பெடுத்தான் மரித்துப்போன மிருகாயணன் 245
இளமயில் நிகர்த்த சாயல் இளமையால் வீழ்த்தும் தோற்றம்
கொவ்வை வாய் செவ்விதழ்கள் குளிர்த்தென்றல் மென்விழிகள்
பார்ப்பவர் உள்ளமெல்லாம் பைத்தியம் ஆகும் நகையில்
இரண்யவதி என்ற பெயரில் இளவரசி வளர்ந்திருந்தாள் 246
சீர்பெறு சுரைமை நாட்டின் போதனபுரத்து ராஜன் அவன்
இளைய ராணி இரண்யவதியை கைபிடித்த பூர்ணச்சந்திரன்
சிற்றின்ப வெள்ளத்திலே திளைத்திருந்த இருவருக்கும்
மறுபிறவி எடுத்த மதுரை மகளானாள் அவள் நீயே ராமதத்தை 247
சிம்மச்சந்திர மாமுனியால் தன் பிறப்பறிந்தாள் ராமதத்தை
பத்திரமித்திரனே தன் தலைமகன் சிம்மச்சந்திரன் எனவும்
வாருணியின் முன்பிறவி பூர்ணச்சந்திரன் என்றும்
சிம்மச்சந்திர முனிவரனே மேலும் செப்பினார் ராமதத்தைக்கு 248
வினையென்னும் குயவன் நம்மை வேண்டிடும் உருவமாக்கி
ஆணையே மறுமையிலே அணைத்திடும் பெண்மையாக்கி
மனைவியை மகளுமாக்கி மகளையே மைந்தனாக்கி
சுப அசுப எண்ணங்களால் சுழற்சியுற்று வருவார்கள் 249
ராமதத்தை உன் தந்தை இன்று பத்திரபாகு முனிவனானான்
பாரோர்கள் வணங்குகின்ற பெருந்தவத்தான் ஆகியுள்ளான்
ஆகமத்தில் கூறுகின்ற அறநெறிகள் அத்தனையும்
அனைவருக்கும் கூறுகின்ற அரிய பெரும் குருவானார் 250
சீயபுர ராணியான உன்னை தரணிக்கு ஈந்த தாய்
ஆர்யாங்கனை சந்திரமதியை அடைந்து அறம் கேட்டு
அல்லவை எல்லாம் போக்கி அறம் பேணும் உள்ளத்தால்
ஆர்யாங்கனையானாள் அறிந்திடுவாய் ராமதத்தை 251
மலை உச்சி சென்ற என்னை மதங்கொண்ட அசனிகோடம்
கொன்றுவிடும் முயற்சியில் கோபத்தில் ஓடி வர
ஆகாச சாரணத்தால் நான் ஆகாயம் நோக்கி செல்ல
அசனிகோடம் என்ற வேழம் ஏமாந்து நின்றதங்கு 252
முன் பிறப்பின் பாவவினை உன் பிறப்பில் தொடர்ந்து வர
சீயபுர மன்னனான நீ அசனிகோடம் யானையானாய்
வேழமான நீ இன்று வெந்தனல் கோபங்கொண்டால்
தலைகீழாய் வீழ்ந்திடுவாய் தாங்கொணா நரகில் என்றேன் 253
சீயபுர அரசனான உன் செல்வமகன் சிம்மச்சந்திரன் நான்
இப்பிறவி விட்டகல அருகன் அறம் தழுவு என்றேன்
முப்பிறவி அறிந்து கொள்ளும் முழு ஞானம் கொண்ட வேந்தன்
தன் பிறவி அறிந்ததனால் தரை சாய்ந்தான் மலையினை போல் 254
விழுந்தவன் எழுந்து நின்று வெங்கனல் கோபம் நீங்கி
அருகனின் அறம் நான் கூற அமைதியாய் கேட்கலானான்
உடலும், உற்றாரும், உடன் பிறத்த உறவுகளும், சுற்றமும்
உலகினில் நிலைப்பதில்லை மறுமையிலும் வருவதில்லை 255
பிறப்பினில் சேருகின்ற பெருவினைகள் அத்தனையும்
நீக்கவும், ரட்சிக்கவும் அப்பிறப்பில் ஏதும் இல்லை
தீக்கதி நான்கினிலும் மாறி மாறி பிறப்பு எடுத்து
தீர்ப்பதற்கு உடன் துணையாய் சேருவதும் ஏதுமில்லை 256
வேண்டுதல் வேண்டாமை எல்லாம் வென்றிட்ட அருகன் சொன்ன
மும்மணி ஏற்று விட்டால் வரும் வினைகள் வழிகள் மூட
ஆன்மனில் முன்னே சேர்ந்த அறுவினைகள் அத்தனையும்
உதிர்ந்திடும் சருகு போல திறந்திடும் மோட்ச வாயில் 257
பயத்திலே துக்கமானால் விலங்குகதி இயல்பாய் உண்டு
மனிதகதி இயல்பாய் தோன்றும் குடும்பத்தை பேணிகாத்தல்
நரகத்தில் எழுந்து வீழ்தல் நரகர்கள் இயல்பாய் அமையும்
தேவகதி தேவர் எல்லாம் மரணத்தின் துக்கம் என்றேன் 258
பனையொத்த துதிக்கை கொண்ட மலையொத்த அசனிகோடம்
நான் சொல்லிய அறத்தையெல்லாம் முனியை போல் வணங்கி கேட்டு
பன்னிரு விரதங்கள் ஏற்று உடன் பல உயிர் பாதுகாத்து
முனி கொண்ட கருணையை தன் மனதினில் தாங்கியது 259
வாரணங்கள் தின்று மீந்த காய்ந்த புல் சருகனைத்தும்
உபவாசம் முடித்து உண்ணும் உணவாக ஏற்றுக் கொண்டு
உண்ணா விரதங்கொண்டு உணவாக தண்ணீர் ஏற்க
யூபகேசரி நதியை நாடினான் சீயமன்னன் அசனிகோடம் 260
வற்றிய உடலினோடும் பலம் அற்ற மனதினோடும்
நீரினை உறிஞ்சி ஏற்க நீட்டிய துதிக்கையோடு
ஆற்றினில் கால் பதிய சேற்றினில் சிக்கிக் கொண்டு
விடுபடும் சக்தி இன்றி விழி சோர நின்றது அங்கு 261
அகந்தனன் பிறவி நீங்கி சமரீ மான் பிறப்பெடுத்து
சமரீ மான் பிறப்பும் போக்கி மனிதகதி ஸ்ரீபூதி
மறுபடியும் கோழிப்பாம்பாய் மறுபிறவி எடுத்ததனால்
அசனிகோடம் மத்தகத்தில் பறந்து வந்து பல் பதித்தான் 262
மலையினை சூழ்ந்து கொண்ட மழை கொண்ட முகிலைப் போல
உடலினில் விஷம் பரவ உள்ளம் பஞ்சமந்திரம் சொல்ல
சிம்மச்சந்திர முனியான எந்தன் திருவடியில் சிரம் வைத்து
துஞ்சிய உடலை விட்டு தேவலோகம் நோக்கிச் சென்றான் 263
யானையின் உடலை விட்டு ரவி ப்ரபை விமானம் தங்கி
இந்திர தனுசை ஒத்த எழில் கொண்ட வடிவம் தாங்கி
தேவலோக மங்கையர்கள் சிந்தையில் மயக்கம் கொள்ளும்
ஸ்ரீதரன் என்ற பெயரில் தேவனாய் உருவில் சென்றான் 264
சிரசினில் மணி முடியும் செவியினில் பொன் குண்டலமும்
மார்பினில் முத்து பவழம் மலர் வாடா மாலைகளும்
கைகளில் வைரக் கங்கனம் கால்களில் வீரக் கழலும்
ஒளிர்ந்திடும் மேனி கொண்டு ஸ்ரீதரன் மஞ்சிலே வீற்றிருந்தான் 265
( மஞ்சில் : மெத்தை )
நஞ்சொத்த ஸ்ரீ பூதியை நாட்டை விட்டு துரத்திய பின்
அந்தணன் தமிலன் அங்கு அமைச்சனாக பதவி ஏற்க
சிம்மசேன மாமன்னன் பொன்னறையில் துஞ்சிய பின்
தமிலனான மந்திரியும் தரணியை விட்டு அகன்றான் 266
சல்லகி வனக் குரங்காக தமிலன் மறுப் பிறப்பெடுத்து
முற்பிறப்பில் மன்னன் மீது முழு அன்பு கொண்டதனால்
அசனிகோடம் வேழத்தை வேரறுத்த கோழிப்பாம்பை
கண்டதும் கடித்துத் துப்ப காலனிடம் சென்றது அரவம் 267
உயிரிழந்த கோழிப்பாம்பு ஊழ்வினை காரணத்தால்
மூன்றாம் நரகம் சென்று நரகனாய் பிறப்பெடுத்து
வரிசையின் முறைப்படி வெவ்வினைகள் தாங்கி நின்று
உதயத்தைக் கொடுத்ததால் பெருந்துன்பம் பெற்றதங்கு 268
கருநிறம் கொண்ட நரகர்கள் தடியொடும், தண்டம் வாளும்
கையினில் ஏந்தி வந்து கடையற புடைத்து நின்றார்
கற்செக்கில் உடலை நசுக்கி முள்ளிலவ மரத்தில் ஏற்றி
செம்பினை நீராய் உருக்கி வாயினில் ஊற்றி வதைத்தார் 269
வேழத்தை நாகம் கொத்த மோட்சத்தை வேழம் அடைய
கொத்திய நாகம் தன்னை குரங்கொன்று கடித்து கொல்ல
நாகமோ நரகம் அடைய யானையின் கொம்பும் மணியும்
நரியன் என்றழைக்கும் வேடன் நாடியே எடுத்து சென்றான் 270
வெண்ணிலவு தந்தங்களை விளைந்த நல் முத்துக்களை
தனமித்திரன் வணிகனிடம் அவன் விற்று பொருள் கொண்டான்
மண்ணாளும் மன்னனான பூர்ணச்சந்திரன் அடி தொழுது - அவனுக்கு
கொம்பு மணி தந்ததாலே தனமித்திரன் சிறப்படைந்தான் 271
களிற்றின் கொம்புகளை நாலு காலாய் கடைந்து எடுத்து
கட்டிலிலே பூட்டிவிட்டு கழுத்தினிலே மாலை கொண்டான்
ஆர்யாங்கனை ராமதத்தையே அரசனிடம் சென்று நீ
நான் சொன்ன அத்தனையும் நவின்றிடுவாய் என்றுரைத்தார் 272
சிம்மச்சந்திர முனிவரனின் அறம் அனைத்தும் கேட்ட பின்பு
ராமதத்தை மனம் மகிழ்ந்து நகரை நோக்கி நடை நடந்தாள்
அரண்மனையை அடைந்த அவள் அரசமகன் பூர்ணச்சந்திரனிடம்
சிம்மச்சந்திர முனிகள் சொன்ன சரித்திரத்தை சொல்லலானாள் 273
உனது தந்தை சிம்மசேனன் அருகன் அறம் மறந்ததாலே
விலங்குகதி சென்று அவர் அசனிகோட வேழமானார்
அசனிகோடம் யானையது அறத்தை மேவி வாழ்ந்ததனால்
தேவலோக தேவனாக மறுபடியும் பிறவி கொண்டார் 274
பிறர் பொருள் ஆசையாலே ஸ்ரீபூதி அகந்தன அரவமாகி
அரசன் மேல் பகையினால் சமரீ மான் கோழிப்பாம்பாகி
குரங்கினால் கொல்லப்பட்டு கொதித்திடும் நரகடைந்தான்
செப்புவேன் குமாரனே நீ திருவறம் ஏற்க என்றார் 275
அசனிகோட கொம்பினாலே கடைந்திட்ட கால்கள் நான்கை
அரசனான பூர்ணச்சந்திரன் அக்கினியில் போட்டெரித்தான்
பவழவாய் பைங்கொடிகள் பழக்கத்தை விட்டொழித்தான்
காதலையும் காமத்தையும் கழுவேற்றி கொன்று விட்டான் 276
நிலையற்ற சம்சார வாழ்வை நீக்கினான் மனதை விட்டு
ஐம்புலன் அடக்கம் கொண்டு அறநெறி போற்றலானான்
ஐவகை விரதத்தோடும் ஏழ்வகை சீலத்தோடும்
திருவறம் ஏற்றுக்கொண்டு திவ்விய சொரூபனானான் 277
மனம் வாக்கு காயம் மூன்றில் அருகனின் பொற்பாதம் ஏற்றி
மங்கலம் நான்கினையும் மனதினில் பதிய போற்றி
மாபெரும் பஞ்சபரமேட்டிகள் மலரடி தொழுது நின்று
மும்மணி கூடப் பெற்று முழுத்தவம் ஏற்று நின்றான் 278
தன்மகன் பூர்ணச்சந்திரன் தவத்தினை ஏற்ற பின்பு
ஆர்யாங்கனை ராமதத்தை அவனோடு சேர்ந்திருந்தாள்
வரும் பிறவி தொடர்ந்து இவனே மகனாக பிறக்க வேண்டி
மனிதகதி நீங்கியவள் தேவகதி சென்றடைந்தாள் 279
பாசுகர பிரபை என்ற விண்ணுலக விமானந்தன்னில்
பாசுகர ப்ரபன் என்னும் தேவனாக அவதரித்து
சாமானிய தேவரெல்லாம் தன்னை சுற்றி வணங்கி நிற்க
சித்திரப்பாவை ராமதத்தை தெய்வலோகம் சென்றடைந்தாள் 280
மின்னிடை மங்கையரின் கால் சிலம்பு ஓசையோடும்
மின்னிடும் ஒளியுடைய மேகலையின் மென்னொலியும்
நுண்ணிய நரம்பில் செய்த வீணை யாழ் இன்னிசையும்
தாளமும் சுரத்தினோடும் வாய் இசை மலர்ந்தது அங்கு 281
அருகனறம் ஏற்ற அரசன் பூர்ணச்சந்திரன் ஆயுள் முடிய
நல் ஞான, நல் தவத்தால் மனிதகதி துறந்த ஆன்மா
வைடூரியப் ப்ரபையிலே அவன் சேர்த்த புண்ணியத்தால்
வைடூரியப் ப்ரபன் என்னும் வானுலக தேவன் ஆனான் 282
வெண் தூயச் சந்திரனின் ஈரெட்டு கலைகளுமே
நாள்தோரும் வளர்வது போல் சிம்மச்சந்திரன் தவம் பெருக
துவர்பசை எண்ணங்களும் சுடர் ஒளிக்கும் தன் உடலும்
தேய்பிறை மதியைப் போல் தேய்ந்து வரத் துவங்கியது 283
நற்குணத்தார் நலிவை கண்டு எழுச்சியுறும் நீசரைப் போல்
மாமுனி மெய்யும் வாட நாடி நரம்பெல்லாம் வீங்கியது
அறவோர் விழியொத்த கண்கள் உள்ளழுந்தி ஒளி குறைய
அருந்தவ ஆற்றலினால் அங்கம் எல்லாம் காட்டியது 284
ஆன்ம பலம் கொண்ட வீரன் அருந்தவச் சிம்மச்சந்திரன்
அருகனின் திருவடியில் அமைதியில் சரணடைய
பிரீத்திங்கரம் என்னும் பொன்னெழில் விமானந்தன்னில்
பிரீத்தீங்கரன் என்னும் அகமிந்திர தேவனானார் 285
அரும்பெரும் தவத்தினாலும் அடைந்திட்ட சீலத்தாலும்
சிம்மசேன மன்னனும் அவன் தேவி ராமதத்தையும்
தலைமகன் சிம்மச்சந்திரனும் அவன் தம்பி பூர்ணச்சந்திரனும்
இணையில்ல பிறவியான தேவகதி சென்றடைந்தார்கள் 286
பகை என்ற உணர்வு என்றும் ஆன்மாவின் தீவினைதான்
நட்பென்ற உறவினாலே நாடிவரும் நல்வினைகள்
பகையினை அறவே போக்கி நட்பினை நாடிப் பற்றி
நரகத்தை நாமும் நீக்கி நாடலாம் தேவலோகம் 287
நால்வர் சுவர்கம் புக்க சருக்கம் முடிவுற்றது.
6. மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம்.
சிம்மசேன அரசனும் அவன் தேவி ராமதத்தையும்
பெற்றெடுத்த இரு மகன்கள் சிம்மச்சந்திரன் பூர்ணச்சந்திரன்
பெருந்தவத்தால் தேவராகி மீண்டும் மனிதகதிக்கு வந்த
மண்ணுலக சரித்திரத்தை மாண்புடன் உரைப்பேன் தரணேந்ரா 288
முற்பிறப்பின் ராமதத்தை பாசுகரப் பிரபன் தேவனாகி
முழு ஆயுள் முடிவதற்கு மூவைந்து நாளிருக்க
பாசுகரைப் பிரபை விமானம் கொண்ட கற்பகத்தருவானது
அவள் தேவலோகம் பிரிவதற்கு தேர் போல் குலுங்கியது 289
கற்பகத்தரு நடுநடுங்க சாமான்ய தேவ தேவியர்கள்
கலக்கத்தில் மனம் அதிர கண்களில் பயம் தெரிய
பாசுகரபிரபன் அணிந்திருந்த கற்பகப் பூ மணிமாலையும்
களையிழந்து ஒளியிழந்து களங்கத்தை கொண்டனவே 290
முழுமதியின் கலைகளெல்லாம் தினம் குறையும் தேய்பிறையாய்
சித்திரை திங்களைப் போல் தெளிந்த ஒளி பெற்ற உடல்
தினந்தினமும் களையிழக்க சித்தத்தின் கலக்கத்தால்
பாசுகரப்பிரப தேவன் மனம் பட்டென வாடியது 291
காட்டுத் தீயால் சூழ்ந்திட்ட கற்பக விருட்சம் போல
மனதினில் வருத்தம் கொண்ட பாசுகரப்பிரபன் முன்னே
தேவலோக தேவர்கள் கூடி அவன் சித்தத்தின் துயர் அகற்ற
ஆயுள் முடிந்த பின்பு அகன்றிடல் மரபு என்றார் 292
தேவர்கள் செய்தியெல்லாம் செவிவழி ஏற்ற பிரபன்
நெருப்பினில் இளகும் மெழுகு நீரினில் இறுகுதல் போல்
மனமது தெளிவு கொண்டு மாதவன் அடி வணங்கி
பூமியில் வந்துதித்தான் பூவையாய் பிறப்பெடுத்தான் 293
ஆழியும் தீவும் சூழ்ந்த அழகிய நாவலந் தீவில்
விண்ணினை தொடுவது போல் வெள்ளியம் மாமேரு உண்டு
கண்டங்கள் ஆறு உண்டு கரை புரளும் ஆறும் உண்டு
பாரத தேசம் என்னும் பண்பான நாடும் உண்டு 294
பாரத நாட்டினிலே பத்து பத்து யோசனையில்
வியந்திர தேவர்களின் வீங்கெழில் அழகு கொண்ட
உத்திர சிரேணி என்றும் தட்சண சிரேணி என்றும்
வியந்தர தேவர்களின் மனோகர நகரங்களாகும் 295
ஏழுமுழ உயரம் குறைவதில்லை ஐநூறு வில் மேல் உயர்வதில்லை
அகவை நூறு தாழ்வதில்லை ஐநூறு கோடிக்கு மேல் ஏற்றமில்லை
ஏறுகாலம் உத்சர்ப்பிணியும் இறங்கு காலம் அவசர்ப்பிணியும் உடைய
அந்நகர வித்யாதரர்கள் நம் குணத்தை ஒத்தவர்கள் 296
( உத்சர்ப்பிணி : 1. தீத்தீக்காலம், 2. தீக்காலம், 3. தீநற்காலம், 4. நற்றீக்காலம்,
5. நற்காலம், 6. நன்னற்காலம். அவசர்ப்பிணி : 1. நன்னற்காலம், 2. நற்காலம், 3. நற்றீக்காலம், 4. தீநற்காலம், 5. தீக்காலம், 6. தீத்தீக்காலம். )
மகரக் கொடி உடைய மன்மதன் இருப்பிடம் போல்
மலர்ந்து மணம் வீசும் மலர்கொண்ட பந்தலின் கீழ்
மென்மலர் படுக்கையிலே மெல்லிடை மகளீருடன்
சேர்ந்திருக்கும் வித்யாதரர்கள் உத்தரகுரு மனிதர் ஒப்பார் 297
( உத்தரகுரு : போகபூமி )
விஜயார்த்த மலையின் மேலே வடக்கு தெற்கு சேடியிலே
கோடிவூர்கள் சூழ்ந்திருக்கும் அதில் நூற்று பத்து நகரங்களில்
வித்யாதர அரசர்கள் வாழுகின்ற வளமான தென் சேடியில்
தரணி திலகம் பெயர் கொண்ட தனி நகரம் ஒன்றாகும் 298
நகரத்தின் வீதியெல்லாம் ராஜபாதை போலிருக்கும்
மான்கள் ஒத்த மகளீரும் மதயானை போல் ஆடவரும்
அடியெடுத்து விரைந்து செல்ல இயலாத அந்த கூட்டம்
நீர் நிறைந்த நதிகள் பல நெருங்கும் கடல் போல் இருக்கும் 299
சந்திரனை தொட்டுவிடும் தேற்றம் கொண்ட மாளிகையும்
சங்கநிதி பத்மநிதி தன் மாளிகையில் கொண்டவனும்
பகை அரசர் பதுங்கி வாழும் புஜவலிமை பெற்றவனும்
அதிவேகன் பெயருடைய ஆணழகன் அந்நாட்டரசன் 300
சாமுத்திரிகா லட்சணத்தில் சற்றும் குறை காணாத
மங்கலங்கள் முழுமை பெற்ற மலர்கொடியாம் மண்ணரசி
அதிவேகன் அரசனுக்கு அவன் பட்டத்து ராணியாக
சுலட்சணை என்னும் மங்கை சூடிக் கொண்டாள் பட்டமதை 301
அதிவேகன் சுலட்சணையும் இல்லறத்தில் களித்திருக்க
ஆதித்தன் ஒளியை ஒத்த முப்பிறப்பின் ராமதத்தை
செய்தவத்தாள் பாசுகரப்பிரபனாக விண்னுலகம் சென்ற அவள்
சுலட்சணையின் மணிவயிற்றில் சீதரையாய் பிறப்பெடுத்தாள் 302
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
சீதரை வளர்ந்து வந்தாள் ஸ்ரீ தேவி அழகுடனே
மலர்கணை மன்னன் போல் அளகையை ஆண்ட அரசன்
தர்சகனின் திண் தோளினை தழுவினாள் பொன் சீதரை 303
முன் தவப் பயனினாலே ராமதத்தை வேண்டியது
அவன் மகனாய் பூர்ணச்சந்திரன் வரும் பிறவி பிறக்க வேண்டி
வைடூரியபிரப தேவனான வானுலக பூர்ணச்சந்திரன்
சீதரையின் வயிற்றினிலே யசோதரையாய் பிறப்பெடுத்தான் 304
செவ்வரி படர்ந்த கண்கள் சிந்தையை மயக்கும் வனப்பு
மென்மலர் பாதம் கொண்டு மான் மருள் பார்வையோடு
கார்குழல் ஐம் பதிப்பும் கன்னல் நீர் கொண்ட சொல்லும்
மூங்கில் ஓத்த தோளுடனும் யசோதரை வளர்ந்து நின்றாள் 305
( ஐந்து பதிப்பு : குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை.
குழல் அளகத்தை வகுத்தும், கொண்டையை தொகுத்தும்,
பனிச்சை, துஞ்ச்சையை விரித்தும் அழகு படுத்துதல் )
நிறைமதி நிகர்த்த வனப்பன் நீதியை நெஞ்சில் கொண்டான்
அருகனின் பாதம் ஒன்றே அனுதினம் சிந்தை உடையான்
ஐம்பொறி உணர்வு மிகுந்தும் அறநெறி பிறழா மனத்தான்
பாசுரபுரத்தின் மன்னன் சூரியவிருத்தன் ஆவான் 306
பச்சை இலை பந்தலின் கீழ் மங்கல ஒலிகள் முழங்க
பாசுரபுரத்தின் மக்கள் படை போல சூழ்ந்திருக்க
அறநெறி வேதம் ஓத ஔபாசன விதிகள் செய்ய
முறைப்படி சூரியவிருத்தன் யசோதரையின் கைபிடித்தான் 307
ஐங்கணையான் மலர் அம்பு அவ்விருவர் மேல் பாய
எல்லையில்ல இன்பத்தில் இருவருமே திளைத்திருக்க
அருகன் அறம் கேட்ட யானை அழகு ஸ்ரீதரன் தேவனாக
ஆயுள் முடிந்த அவன் யசோதரையின் வயிற்றுதித்தான் 308
கிள்ளை ஒத்த மழலைக்கு கிரணவேகன் என பெயரிட்டார்
வித்தைகளை சொல்லித் தந்து வேங்கை போல் வளர்த்திட்டார்
இருள் நிறத்து குழலுடனும் எழில் ததும்பும் முகத்துடனும்
கம்ப நிகர் கரங்கள் கொண்டு காண்பவரை மயங்க வைத்தான் 309
எட்டெட்டு கலைகளிலே ஏற்றமுடன் திகழ்ந்திருந்தான்
மண்ணுலக இன்பத்தை மன்மதனுக்கு சொல்லித்தந்தான்
விசயந்த மலையில் உள்ள வேற்றரசர் கன்னிகளை
மணந்து மகிழ்ந்த நேரத்தில் அவன் தந்தை மனம் மாறியது 310
களிறுகளுக்கு அரசென்றாலும் கால் சேற்றில் புதைந்து விட்டால்
கால் எடுத்து வெளியேற களிற்றினால் முடிவதில்லை – அதுபோல்
சம்சார வாழ்க்கையிலே நாம் பதியும் காலத்தில்
கர்மத்தின் வினைகளினால் கட்டுண்டு வாழ்ந்திருப்போம் 311
உடலோடு சுற்றமும் உடன் உறையும் மாந்தர்களும்
தனத்தோடு பெரும் பொருளும் தான் பெற்ற பிள்ளைகளும்
சம்சார சாகரத்தில் நிலையற்ற தன்மை என்று
எண்ணியே மலையை விட்டு இறங்கினான் சூரியவிருத்தன் 312
தரை வந்த மாமன்னன் தவத்தலைவன் முனிச்சந்திரனின்
தாமரைப் பாதத்தில் தலை வைத்து சரணடைந்தான்
எண் ஜான் உடம்பினையும் ஈரடியில் குவித்துக் கொண்டு
எண்வினைகள் தரும் பலனை எனக்குரையும் என்று நின்றான் 313
ஞானத்தோடு தர்சனத்தையும் இருளாய் மறைக்கச் செய்யும்
பாவமும் புண்ணியமும் கூர் வாளின் இருபக்கம்
ஒரு பக்கம் நஞ்சை தடவி மறுபக்கம் அமிர்தம் கூட்டி
நாவினில் வைத்தல் ஒக்கும் தீய நல் வேதனீயம் 314
[ தீய நல் வேதனீயம் : பாவ, புண்ணியம். (அசாத வேதனீயம், ஸாதா வேதனீயம் ) ]
மோகனீய கர்மம் அது பைத்தியம் போல் மயக்கம் தரும்
ஆன்மா பெற்ற கர்மமது அடங்கா விலங்குக்கு ஒப்பாகும்
நாம கர்மம் எப்போதும் பல உரு கொள்ளும் சித்திரக்காரி
சிறிய பெரிய பாண்டம் செய்யும் குயவனாகும் கோத்ர கர்மம் 315
ஆசையும் கோபம் சேர்ந்த மயக்கத்தால் வினைகள் சேரும்
சேர்த்திட்ட வினைக்கு ஏற்ப செல்லுவோம் நான்கு கதிக்கு
கதிகளில் பிறந்த ஆன்மா காயங்கள் ஆறில் ஒன்றாய்
அவற்றினில் ஐம்பொறிகள் வரிசையில் தோன்றும் ஆங்கு 316
(6 காயம் : மண்னுடல், நீருடல், நெருப்புடல், காற்றுடல், நிலையுயிர்,
இயங்கும் உயிர் )
அருகநெறி கொண்ட அறவோர் சுழற்சியை வென்று நிற்பர்
அந்நெறி அறியாதவர்கள் கதிகளில் பிறந்து திரிவர்
பவ்யமுனி மொழிகள் கேட்ட பாசுரபுர நாட்டு மன்னன்
கிரீடத்தை கிரணவேகன் ஏற்க முனிவனாய் தீட்சை பெற்றான் 317
சூரியவிருத்தன் கொண்ட துறவினை கண்ட யசோதரையும்
சீதரை தாயை நாடி செப்பினாள் தன் துறவு தன்னை
தாயோடு மகளும் சேர்ந்து தவநிறியாள் குணவதியை நாடி
ஆகம விதிகளின் படி ஆர்யாங்கனை ஆகினார்கள் 318
தவக்கொடி தாயும் மகளும் தாங்கரும் ஒழுக்கம் ஏற்று
மகிழ்தலும் பகையும் இன்றி மனதினில் நல்லறத்தை கொள்ள
சம்சார போகம் எல்லாம் தாங்கொணாத் துயரம் எனறு
கிரணவேகன் மனதில் தோன்ற கீழ்திசை ஜினாலயம் சென்றான் 319
ஆலய மேடையெல்லாம் அழகிய தோரணங்கள் அசைய
ஜினப்படிமைகள் கொண்டு சேதிய மரங்கள் சூழ
எண்திசை எல்லாம் அங்கு எழில் தரும் மலர் வனங்கள்
நாற்திசை வீதிகள் தோரும் நான்கு பெரும் கோபுரங்கள் 320
நீளமோ ஒரு காதம் ஆகி அகலம் அரை காதமாக
மாசற்று வரிசையாக நூற்றெட்டு கந்தகுடி மண்டபங்கள்
மூன்று பெரும் வாயிலுடன் முன் எதிரில் மண்டபமும்
பார்த்தவர்கள் வியந்து நிற்கும் பாரோர் புகழும் சைத்யாலயம் 321
வைஜயந்தை என்றழைக்கும் மாபெரும் இந்ரத்துவஜம்
முறைபடி அளந்து அமைத்த கல் இழைத்த மானஸ்தம்பம்
ஆதவன் திசையினிலே நந்தை என்னும் தாமரைத் பூ தடாகம்
கோயில் உள்ளே வரிசையாக கோலங்கொண்டு இருந்ததங்கு 322
நடன நடை பரியின் மேலே கிரணவேகன் கோயில் வந்து
சித்தாயதன கூடம் முன்னே குதிரையை விட்டிறங்கி
தரையின் மேல் நடந்து வந்து தலை கோபுர வாயில் நுழந்து
கமல மொட்டாய் கைகுவித்து கனிந்துருகி வணங்கலானான் 323
கரங்களில் மலர்கள் ஏந்தி கருத்தினில் பஞ்ச மந்திரம் சொல்லி
மாமேரு மலையை சூழ்ந்து வலம் வரும் பரிதியைப் போல்
ஆலயப் பிரகாரம் தன்னை வலமது சுற்றி வந்து
கோயிலின் கதவு திறக்க கும்பிட்டு உள் நுழைந்தான் 324
அளவிலா ஞனத்தோடும் அனைத்தையும் அறிந்து உணர்ந்து
நித்திய சுவரூபமாகி நிலைத்து நில்லா தன்மையுடைய
இறைவனே உன்னை என் இதயத்தில் வைத்து போற்றி
முடிவிலா உனது ஆற்றல் முற்றிலும் உணரப் பெற்றேன் 325
மழையினால் வெள்ளம் மீது மருவிய நீர் குமிழ்கள் போல
தோன்றியும் மறைந்தும் போகும் துளி நேர வாழும் வாழ்க்கை
சம்சார சுழற்சி காட்டில் தந்திடும் துயரம் எல்லாம்
உன் செவ்விய பாதந்தன்னை பற்றிட நீங்கிப் போகும் 326
வெண்ணிற சாமரையும் வீழ்ந்திடும் மலர் மழையும்
அரிமா தாங்கும் ஆசனமும் அழகிய அசோக மரமும்
திவ்யத் தொனி முக்குடையும் தேவ துந்தூபிகளும்
எங்கள் தீவினை போக்குகின்ற சிறப்பான அம்சங்களே 327
வேங்கை நிகர் கிரணவேகன் வாலறிவன் திருவுருவை
சிந்தையில் பதித்து போற்றி ஜினாலயத்தை வலம் வந்து
மாமுனிகள் அரிச்சந்திரனின் மென்னடி தொழுது வணங்க
மணிமுடியை தரை இறக்கி மார்பழுந்த வணங்கினானே 328
தத்துவ உரை.
நித்தியம், அநித்தியம், அவாச்சியம், வேற்றுமை, ஒற்றுமை, சூன்யம்
இவை ஆறும் ஒருங்கே பொருந்திய தன்மையால்
ஒருவகையில் நித்தியம் ஒருவகையில் அநித்தியம்
என்று நினைப்பதுவே நிச்சய தத்துவமாம் 329
நித்தியமே தத்துவம், அநித்தியமே தத்துவம், அவாச்சியமே தத்துவம்
வேற்றுமையே தத்துவம், ஒற்றுமையே தத்துவம், சூன்யமே தத்துவம்
இவை ஆறும் எப்போதும் வேறு வேறான தன்மையாகும்
என நினைத்தால் அவை பொய்யான மித்யாத்துவமே 330
இவ்வுலகில் கடன் கொடுத்தான் கொடுத்த கடன் வாங்கமாட்டான்
வாங்கி கொண்ட ஒருவனும் மறுபடியும் தரமாட்டான்
பெற்ற பிள்ளை வளர்ந்திடாது கற்ற ஆகமம் உரைக்கமாட்டான்
திட்டம் மூன்றும் மாறிவிட முரண்படாத முரண்பாடாகும் 331
[ திட்டம் ( திருஷ்டங்கள் ) : 1. லோக ப்ரவர்த்தி, 2. புருஷ ப்ரவர்த்தி, 3. சாஸ்திர ப்ரவர்த்தி ]
சம்சாரப் பெருங்கடலில் பிறந்து இறத்தல் பேரலை ஆகும்
மூன்றுலக எல்லை எல்லாம் நான்கு கதி கரைகளாகும்
வெவ்வினைகள் பெருக்கெடுத்து கடல் கலக்கும் வெள்ளமாகும்
ஆசையும் மோகமும் ஊழித்தீ ரத்ன தீப தீவுகளாகும் 332
சம்சாரப் பெருங்கடலை தடையின்றி கடப்பதற்கு
முனிவரனின் அறவுரைகள் மூழ்கடிக்கா தோணியகி
ஏறுகின்றோர் அனைவரையும் மோட்சம் என்னும் நகர் இறக்கும் – என
மாமன்னன் கிரணவேகன் மனதினில் பதிந்ததன்று 333
மன்னனும் முனியை நோக்கி மலரடி தொழுது சொன்னான்
என் போகம் செல்வம் எல்லாம் வான்முகிலும் கடலலை போல்
நான் ஆளும் மண்ணும் வளமும் நாலைந்து நாளில் மறையும்
அறத்தினை தவமாய் கொண்டு கர்மத்தை வெல்வேன் என்றான் 334
அருந்தவம், விதானம் நான்கும், சீரிய ஒழுக்கம், பூஜை
நான்கையும் திருத்தி செய்யும் நற்குணம் உடையோரெல்லாம்
மோட்சமாம் வீடு செல்ல முதல் வழி ஒன்றே ஆகும்
நற்சிறப்போடு செய்ய நடந்திடு மன்னா என்றார் 335
தவம் என்னும் திருமகளை தன்னகத்தே சேர்த்தணைத்து
சிவந்த வாய் சிற்றடிகள் செம்மலர் கொடியிடையும்
கருநிற கூந்தல் கொண்டு கெண்டை மீன் விழ்கள் கொண்ட
தேவியர் அனைவரையும் துப்பினான் தாம்பூலம் போல 336
செவியணி குண்டலம் போக்கி தேர்ந்த மணி கிரீடம் நீக்கி
உடலினில் மணியும் முத்தும் பொன்மாலை பொருள் உதிர்த்து
பட்டோடு தோள் வளையம் பசும்பொன் நகைகள் ஒதுக்கி
சுருள்குழல் சிரத்தில் அழிய துறந்திட்டு முனிவன் ஆனான் 337
பனி மழை வெய்யில் தாங்கி நிற்கின்ற மலையைப் போல
ஒழுக்கத்தில் நீங்கா முனிவர் ஒருசேர வியக்கும் நிலையில்
ஆகாச சரணத்தன்மை அடைந்திட்ட கிரணவேக முனிவன்
காஞ்சன மலை குகையில் காட்டரசன் போலிருந்தான் 338
புடம் போட்ட பொன்னைப் போல ஒழுக்கத்தாள் யசோதரையும்
ஆர்யாங்கனையாகி ஆதவன் ஒளி போல் நிற்க
வாள் மேல் நடப்பதற்கொப்ப வலிய சீலத்தாள் சீதரையும்
ஆர்யாங்கனையாகி அன்னையுடன் சேர்ந்து இருந்தாள் 339
சுப அசுப வினைகளின் படி நான்கு கதி சுழலும் ஜீவன்
நல்லொழுக்க குணத்தை உடையோர் மக்களாய் வந்து தோன்றி
ஆண்களாய் பிறப்பெடுத்தோர் அளித்திடும் தானம் பூஜையும்
வீடடைய வாயில் காட்டும் பெண்கள் வீடடைய விதிகள் இல்லை 340
இந்திரன் தேவிமார்க்கும் இறைநிலை உயர்வதில்லை
மக்களில்லா மலடிதன்மையாளும் மக்கள் பெற்று அவர் இறப்பதாலும்
தன் கணவன் சேர்த்துக் கொண்ட சக்களத்தி உறவினாலும்
துக்கத்தை தாங்கியதால் மோட்சகதி கிடைப்பதில்லை 341
பஞ்ச அணுவிரதம் ஏற்று சிறப்புறும் சீலம் கொண்டு
தவத்தோர்க்கு தானம் செய்து அருகனின் அடிகள் தொழுது
கணவனை மேலாய் போற்றி கற்புடை மகளீர் ஆனால்
பெண் உரு நீங்கப் பெற்று கல்பவாசி தேவராவர் 342
கோழிப்பாம்பாய் பிறவி கொண்டு அசனிகோட வேழ்த்தை வீழ்த்தி
நரகம் ஒன்றில் அரவமுற்று நன்மை நாட வழியும் இன்றி
மீண்டும் மீண்டும் விலங்கினமாய் வேறு பிறவி ஏதும் இன்றி
மலைப்பாம்பாய் பிறந்து மலைக்குகையில் ஸ்ரீபூதி இருந்தான் 343
ஆர்யாங்கனை யசோதரைக்கும் அவள் மகள் சீதரைக்கும்
அறம் உரைத்த கிரணவேகன் அடி எடுத்து குகையில் செல்ல
கடுஞ்சின விழிகளோடு முன்பகை முனிவரன் மேல் பாய்ந்து
வாயினால் முனியை விழுங்க அருகா என்றழைத்தார் முனிவர் 344
முனிவரன் குரலைக் கேட்ட மும்மணி ஆர்யாங்கனைகள்
கிரணவேகன் முனியின் தோளை கெட்டியாய் பிடித்திழுக்க
அரவமோ முனியின் அங்கம் அனைத்தையும் உள்ளிழுக்க
முனிவனின் முகத்தை கண்டோர் மூவரும் விழுங்கப்பட்டார் 345
விழுங்கிய பாம்பின் மீது வெஞ்சினம் இல்லா மனதால்
கிரணவேக முனிவன் பிறந்தான் இரவி பிரபன் தேவனாக
அருங்குண மாதர் இருவரும் அரிய நல்தவப் பயனால்
சத்குணம் முழுதும் கொண்ட சாமான்ய தேவரானார் 346
குற்றமில்லா குணவோர் மூவரும் தேவலோக தேவனாய் பிறக்க
வைரபாவ தீவினையால் மலைப்பாம்பான சத்ய கோடன்
நான்காம் நரகம் அடைந்து நரகத்தின் பலனைத் தூய்த்து
உன்னத ஒப்பில்லாத ஒரு நரக உடலைப் பெற்றான் 347
மனிதகதி பெற்று விட்டு இம்மண்ணுலகில் வாழ்பவரே
அறத்தினைக் காட்டிலும் செல்வம் அவனியில் ஏதுமில்லை
மறத்தினால் வரும் கேடு வையகத்தில் பெரியதாகும்
மறத்தினை அறவே போக்கி அறத்தினை சேர்த்து வாழ்வீர் 348
மன்னனும், தேவியும், மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் நிறைவு.
7. சக்கராயுதன் முத்திச் சருக்கம்.
உலகம் என்று உரைக்கின்ற இம் மண்ணுலகம் மத்தியிலே
நாபியை போல் அமைந்துள்ள ஜம்பூத்தீபத் தலத்தினிலே
தருமங்களால் தழைத்தோங்கும் பாரத தேசந்தன்னில்
புலவர்களும் கவிஞர்களும் புகழும் ஊராம் சக்கராபுரம் 349
அந்நகரின் நாற்புறமும் ஆழி ஒத்த அகழிகளும்
நிலவினை தொட நினைக்கும் நீண்ட நெடு மதில் சுவரும்
பெரும் படையே வலம் வரும் பெரிய ராஜ வீதிகளும்
அரண்மனையை நடுவில் வைத்து அமைந்ததுவே அந்நகரம் 350
ஆண் மயிலின் சாயலிலே அழகு பொங்கும் கோதையர்கள்
கால் சலங்கை தாளமிடும் நடனசாலை ஒருபுறமும்
அட்டமி சந்திரன் போல் அழகு கொண்ட நூதலுடன்
பண்ணிசைத்து பாடிவரும் பாவையர் பாடலிசை ஒருபுறமும் 351
கருமேக நிறத்தை கொண்ட கார்மழையின் துடிப்பு கொண்ட
களிறுகளைக் கட்டி வைக்கும் வேழ சாலை ஒருபுறமும்
கமுகு மரத்தோப்புகளும் கன்னல் விளைக் காடுகளும்
சூழ்ந்திருக்கும் மருதநிலம் சொக்க வைக்கும் ஒருபுறத்தில் 352
பாய்ந்து சென்று விண்ணளக்கும் பரிகள் கட்டும் சாலைகளும்
பகைவர்களின் ஊன் குருதி படிந்த ஆயுத சாலைகளும்
வண்டுலவும் கூந்தல் உடைய பொது மகளீர் வீதிகளும்
வணிகர் தங்கி தொழில் புரியும் கடைகள் கொண்ட நகரமிது 353
கள் சொட்டும் மாலைகளும் மணம் வீசும் பொடிகடைகளும்
கடையிலா ஞானம் உடைய அருகன் உறையும் ஆலயமும்
குடிகாக்கும் கோல் கொண்ட முடிமன்னன் அரண்மனையும்
கொண்ட இந்த நகர் சிறப்பு கூறும் நிலை தாண்டியது 354
பகைவர்களும் பதுங்குகின்ற வீரத்திற்கு புலியை ஒப்பான்
பைங்கொடிகள் மயங்குகின்ற பேரழகன் மன்மதன் தான்
சக்கராபுரம் நகரின் தனித்தலைவன் அபராஜிதன் – அவன்
பட்டத்து ராணியாக வசுந்தரி அவன் தோள் அணைத்தாள் 355
கிள்ளை மொழியுடையாள் கேட்கத் தூண்டும் பேச்சுடையாள்
யாழ் குழலின் இனிமையுடன் கன்னல் சுவை சொல்லுடையாள்
ஆண் மயிலின் சாயலுடன் கயல் ஒத்த விழியுடையாள்
அபராஜிதன் மஞ்சை அலங்கரிக்கும் மலர்கொடியாள் 356
அகமிந்திர லோகத்தில் இருக்கும் பிரிதிங்கர சிம்மசேனன்
ஆயுள் முடிவு பெற்று அடுத்த பிறவி எடுப்பதற்கு
வாசமுள்ள குஞ்சுடையாள் வானோர் மயங்கும் வனப்புடையாள்
வசுந்தரி வயிற்றினிலே வாரிசாக பிறப்பெடுத்தான் 357
செந்நிற வானத்திலே திகழும் பிறை திங்களை போல்
அரசகுலம் தழைக்க வந்த அபராஜிதன் மகன் இளவரசன்
எண்வினையும் கெடுத்து வெல்லும் ஏற்றமிகு வீரனாவான்- என
தாய் தந்தை வைத்த பெயர் சக்கராயுதன் என்ற பெயர் 358
எட்டெட்டு கலைகளையும் எளிதாக கைக்கொண்டான்
ஐங்கனையான் மலர் அம்பு ஆசை கொள்ளும் வடிவானான்
கொஞ்சுகின்ற அழகுடனும் கொவ்வை வாய் இதழுடனும்
சித்திரப்பாவையான சித்திரமாலையை மணமுடித்தான் 359
மின்னலுடன் விளையாடும் கார்மேக கூட்டம் போல்
சித்திரமாலையுடன் சேர்ந்திருந்தான் சக்கராயுதன்
மலைப்பாம்பு விழுங்கியதால் தேவனான கிரணவேகன்
சக்கராயுதன் மகனாக சித்திரமாலை வயிற்றுதித்தான் 360
தேனினிய மொழியுடையாள் சித்திரைத் திங்கள் முகத்தாள்
சித்திரமாலை பெற்றெடுத்தாள் கல்பதேவன் கிரணவேகனை
ஆனந்தத்தில் சக்கராயுதன் அள்ளித் தந்தான் செல்வங்களை
வருங்கால ராஜனுக்கு வஜ்ராயுதன் என பெயர் இட்டான் 361
ஈரெட்டு கலை வளரும் இளம் பிறைச் சந்திரன் போல்
வஜ்ராயுதன் வளர்ந்தான் நாளொரு மேனியுடன்
மாமன்னன் கற்று உணரும் வாண் சிறப்பு வித்தைகளை
வஜ்ராயுதன் கற்று வாலிபனாய் வளர்ந்திட்டான் 362
ஐந்து நிலம் சேர்ந்து தரும் அளப்பரிய அழகுடனும்
தேவலோகம் இடம் பெயர்ந்து தேடி இங்கு வந்தது போல்
வானளவு மாளிகைகள் வண்டலையும் பூவனங்கள்
பார்ப்போரை கட்டி இழுக்கும் பளிங்கு நகர் பிருதிவிதிலகம் 363
பிருதிவிதிலக நகரத்தின் பேரரசன் அதிவேகன்
பேரரசன் பெருந்தேவி பேரழகி பிரியகாருணி
இல்லற தருமம் ஏற்று இணைந்திருந்த இருவருக்கும்
இரத்தினமாலை மகளானாள் முன்பிறப்பின் சீதரையாள் 364
இளமை துள்ளும் மெய்யுடனும் இளஞ்சிவப்பு இதழுடனும்
அன்னமொத்த நடையினாலே துவண்டு விடும் துடி இடையும்
திருமகளே இடம் மாறி புவிக்கு வந்த பேரழகாய்
இரத்தினமாலை வளர்ந்திருந்தாள் வானகத்து ஏந்திழையாய் 365
ஆண் மயிலின் சாயலுடன் பெண்மானின் மருள் விழியும்
வீணை யாழ் இசை போல வெளிப்படும் மென் மொழியும்
அரம்பையரும் ஆசை கொள்ளும் அளவிலா அழகுதன்னை
தூதரால் அறிந்த சக்கராயுதன் பெண் கேட்டு செய்திதந்தான் 366
அறநூல்கள் முறைப்படியும் அக்கினியின் சாட்சி கொண்டும்
வஜ்ராயுதன் கைபிடித்தான் வண்ணமயில் ரத்தினமாலையை
ஈருடல் ஓர் உயிராய் இமை சேர்ந்த இருவிழியாய்
தம்பதிகள் இருவருமே தனித்து இன்பம் கொண்டார்கள் 367
சம்சார இன்பத்திலே தடையின்றி வாழ்கையிலே
கருவுற்று களிப்பெய்தாள் இளையராணி இரத்தினமாலை
யசோதரையாய் முன் பிறந்து கல்பதேவனான பூர்ண்ச்சந்திரன்
இரத்தினமாலை வயிற்றுதித்தான் பூர்வ ஜன்ம வாஞ்சையாலே 368
பெற்றவர்கள் சுற்றத்துடன் இட்ட பெயர் இரத்தினாயுதன்
கல்பதரு கன்றினை போல் களிப்புடனே வளரலானான்
மணங்கமழும் கூந்தலாரை மனம் கவர்ந்த கன்னியரை
மணமுடித்து முத்தெடுத்தான் காமப்பெருங் கடலினிலே 369
அபராஜித மாமன்னனும் அவன் இளவல் சக்கராயுதனும்
சக்கராயுதனின் ஒரே மகன் செல்வன் வஜ்ராயுதனும்
வஜ்ராயுதன் பெற்றெடுத்த வல்லவன் இரத்தினாயுதனும்
சம்சார சுகத்தினிலே திளைத்து மகிழ்ந்து இருந்தார்கள் 370
தவத்தையே சொத்தாய் கொண்டு சகலமும் துறந்து விட்டு
அறத்தையே மனதில் ஏற்று ஆன்மனில் பற்று நீக்கி
அருகனின் தருமம் ஒன்றே சிந்தையில் செரிந்து நிற்கும்
முனிவர்கள் இருக்கும் இடத்தை நாடினான் அபராஜிதன் 371
தீவினைகள் ஆன்மா விட்டு சென்றிடும் உபாயம் தன்னை
முனிகளை வணங்கி கேட்டான் முடிமன்னன் அபராஜிதன்
கர்மத்தின் உண்மை இயல்பும் ஜீவனின் உண்மை இயல்பும்
ஜீவனில் சேருகின்ற பந்தத்தை உனக்கு சொல்வேன் என்றார் 372
பிறர்பொருள் ஒவ்வா நிலையும் எண்வினை அறுத்த செயலும்
பாவ திரவிய கர்மங்கள் ஆன்மனில் விலகி நிற்க
மோட்சத்தின் உண்மை இயல்பை ஞானத்தால் அறிந்து தெளியும்
ஜீவனின் தூய்மை ஒன்றே வீடு பேறடையும் வழியாம் 373
முனிவரின் சொல்லைக் கேட்ட முடிவேந்தன் அபராஜிதன்
நாடாளும் பெரும் பொறுப்பை மகன் சக்கராயுதனுக்கு தந்து
அறநெறி ஆட்சி செய்து நிலையாமை உணரும் போது
வஜ்ராயுதனுக்கு முடி சூட்டி வருவாய் தவ நிலைக்கு என்றான் 374
முடி துறந்த அபராஜிதன் முனி தீட்சை ஏற்றுக் கொண்டான்
ஐம்பொறி புலன் இன்பத்தை தீயிலிட்ட விறகாய் வெறுத்தான்
தரணி ஆண்ட சக்கராயுதன் தருமநெறி வழுவிடாமல்
அறம் சிறக்க ஆட்சி செய்து அன்பு நிலை காக்கலானான் 375
சம்சார சுகத்தினாலே சார்ந்து வரும் வினைகளையும்
ஆன்மாவில் இயல்பில் சேரும் பாவ திரவிய கர்மங்களையும்
தவநீதி கொண்டு இனி தடைசெய்ய நினைத்த சக்கராயுதன்
வஜ்ராயுதனுக்கு முடி தந்து ஜின தீட்சை கைகொண்டான் 376
அபராஜித முனிவரனின் மலரடியை தொழுது எழுந்து
சக்கராயுதன் முனிவனாகி ஜினதீட்சை ஏற்ற பின்பு
கடும் வினைகள் கழிந்துவிட முக்கால யோகத்துடன்
அரைத்திங்கள் ஒருத்திங்கள் அன்ன உபவாசம் பழகினான் 377
புலன் வழி சேர்க்கையாலே பொறி ஆறின் செயலை நீக்கி
நல்லொழுக்க சக்தியாலே புலன் அடக்கம் கொண்டதனால்
அறுவகை உயிர்களையும் அருளோடு காத்து ஓம்பும்
குற்றமற்ற தர்ம தியானம் கொண்ட தவ திவ்யனானான் 378
அகத்துப் பரிசங்கள் பதின்மூன்றை நீக்கி விட்டு
புறத்துப் பரிசங்கள் ஒன்பதையும் போக்கி விட்டு
ஆன்ம பல தியானத்தாலும் நல்லறிவு தெளிவினாலும்
வீடு கதி பெறுவதற்கு வீரனாக தவம் இருந்தான் 379
(13கப்பரிசங்கள் தாகம், பசி, நோய், யாசித்தல், வேண்டியதை பெறாமல் இருத்தல்,
தளர்தல், உணவு போன்றவற்றிக்கு செல்லுதல், படுத்தல், ஆடை, காட்சி இன்மை, அறிவு, ஞானமின்மை, சேர்தல். புறபரிசங்கள் 9 : வெப்பம், குளிர், மாசு உணர்வு, புகழ்ச்சி இகழ்ச்சி, கடுஞ்சொல், வதைத்தல், கடிதல், திணவு, பெண் ஆசை. )
எண் வினை உதயத்தாலே ஏற்படும் உயிரில் குணக்கேடுகள்
தந்திடும் வினைகள் எல்லாம் சிந்தித்து மனதில் கொண்டு
சம்சார இன்பம் நீக்கி வஜ்ராயுதன் தவம் மேற்கொள்ள
மனதினால் விலக்கலானான் மாராணி ரத்தினமாலையை 380
ஆசையை துறந்த அவன் அனுபவித்த போகம் எல்லாம்
புதிதாய் கண்முன் வந்து புதிய இன்பங்களாய் தோன்ற
மோகமும் செல்வமும் ஆயுளும் மின்னலைப் போல் அழியும் – என
அத்தனையும் விட்டொழிக்க அருகன் தவம் ஏற்பேன் என்றான் 381
செல்வமகன் ரத்னாயுதனை வாஞ்சையில் அழைத்த வேந்தன்
வைரங்கள் பதித்த முடியை வஜ்ராயுதன் அவனுக்கு சூட்டி
மோகத்தில் மூழ்கி சென்றால் முடிவில்லா பாவ வினைகள்
உதயத்தை கொடுப்பதோடு உறைந்திடும் ஆன்மனில் என்றார் 382
முன் பிறப்பின் நல்வினையால் முத்து மணி ரத்தினத்துடன்
வெண்குடையின் குளிர் நிழலில் வேழத்தின் மீது அமர்ந்து
வலம் வருவோர் எல்லோர்க்கும் நல்வினைகள் உதிரும் காலை
பகைவருக்கு அடிமைகளாய் படுந்துயரில் உழல்வார் என்றான் 383
ரத்தினம் பவழம் கொண்டு நாட்டிய கட்டிலின் மேல்
ஐவகை பொருள்கள் சேர்த்து அமைத்திட்ட மெத்தை மீது
உறங்குவோர் பாவ வினைகள் உதயத்தைக் கொடுக்கும் போது
வெறுநிலம் தங்கி படுப்பார் துஞ்சினார் நிலையில் என்றான் 384
பாற்கடல் அமுதம் ஒத்த பலவகை உணவு கொண்ட
பொற்கலம் கையில் ஏந்தி பூவையர்கள் தாங்கி வேண்ட
வெறுப்புடன் உண்பவர்கள் நல்வினை அவிந்த போது
மண்கலம் கையில் ஏந்தி பிச்சை கேட்டு உண்பார் என்றான் 385
இத்தனையும் எடுத்து சொல்லி வஜ்ராயுதன் தன் தனயனுக்கு
நல்குண ஒழுக்கத்தோடு நாடாள்வாய் என்று உரைத்த பின்
தந்தை சக்கராயுத முனியை தபோவனம் நாடி சென்று
தாமாரை மலரை ஒத்த தவமணி பாதம் பணிந்தான் 386
வினைகளின் பிடியில் உள்ள சம்சார வாழ்க்கை பற்றி
மனமது நடுக்கத்தாலே தர்மத்தின் வழியை நோக்கி
ஈராறு அடக்கம் ஏற்று எண் வினைகள் வெற்றி கொண்டு
மீளாத வீட்டை அடையும் உறுதியில் வந்தேன் என்றான் 387
வஜ்ராயுதன் வாய்மொழியும் வல்லிய பொறுமையும் கண்டு
ஆன்மாவின் மாசுபோக்க அருகனின் மும்மணிகள் ஏற்று
அறுவகை உடலின் உயிரை அருளோடு போற்றி பார்க்கும்
மாபெரும் தவத்தை நீ மகிழ்வுடன் ஏற்று செய் என்றார் 388
செயற்கரிய செய்வோரெல்லாம் சிந்தையில் குணவோராவர்
அக்குண வரிசை தன்னில் அபராஜித மாமன்னனும்
அவன் மகன் சக்கராயுதனும் அவனிளவல் வஜ்ராயுதனும்
பூமியாளும் போகம் நீங்க போற்றுகின்ற பெரியோரானார் 389
மாமேரு மலையைச் சூழ்ந்த திக்கஜ மலையைப் போல
தியானத்தை செம்மை செய்து சிலகாலம் சங்கத்தில் நின்று
தீயென ஒளிரும் பரிதியாய் சக்கராயுதன் தனித்து வந்து
மாமலை உச்சி சென்று மனவினை ஒழிக்கலானார் 390
பொறிகளின் புலன்வழி தடுத்து சித்தர்கள் வடிவந் தன்னை
புருவங்கள் நடுவே ஏற்று நாசியின் நுனியில் நிறுத்தி
மனம் வாக்கு காயம் ஒன்றிய மாபெரும் தியானத்தாலே
எண்வினை கர்மங்களும் இளம்பரிதியின் இருளானது 391
முகிலிடை இருந்து விலகும் வெந்தனல் ஆதவன் போல்
ஆன்மனின் கர்மவினைகள் கட்டோடு அழியப் பெற்று
அனந்த நான்கும் அணி செய்ய சக்கராயுத பட்டாரகர்
மூன்றுலக உச்சியான சித்த சேத்திரம் சென்றடைந்தார் 392
ஒரு பிறப்பில் வணிகனான உத்தமன் பத்திரமித்திரன்
மறு பிறப்பில் மன்னனான சீயபுர சிம்மசேனன்
அருந்தவத்தால் அகமிந்திர தேவனாகி அங்கு ஆயுள் முடிவுற்று
சக்கராயுதனாய் பிறந்து தவத்தினால் சித்தர் ஆனார் 393
சக்கராயுதன் முத்திச் சருக்கம் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment