சமதா பாவம்


சமதா  பாவம்







அனைத்துயிரும் ஒன்றென பாவிப்பதே ஆன்மீகம்.


எல்லா உயிரையும் சமமாக பாவித்தலே ஆன்ம தத்துவம். மனிதனில் உயர்வு தாழ்வை காண்பது மனிதாபிமானமற்ற செயலாகும். அது அவரது விருப்பு வெறுப்பினால ஏற்பட்டது. ஒருவர் படிப்பிலோ, பதவியிலோ, பணத்திலோ தாம் உயர்ந்தவர்  என்று எண்ணுவது ஆன்ம விடுதலைப் பயணத்தை தடுக்கும்.


அதிலும்  ஆன்மீகத்தில்  பயணிப்பதாக சொல்பவர் நடுநிலை உணர்வை தவறினால் அவர் ஆன்மீகவாதியே அல்ல. இக்கருத்தை வலியுறுத்தும் ஒரு சம்பவத்தைக் காண்போம்.


ஒரு சாமியாரின் ஆசரமத்திற்கு முன்னிரவில் ஒருவன் வந்தான். அவன் மிகவும் பசியோடு இருப்பதைக் கண்ட அவர்அவனுக்கு உணவளித்து மகிழந்தார்இரவு நல்ல  குளிரானதால்  இங்கு தங்கி, நளை காலை  செல்என்று அறிவுறுத்தினார்.


அவனும் அவ்வாறே தங்கியிருந்து காலையில் சென்று விட்டான். சாமியாருக்கு மனதிற்குள் நேற்று இரவு ஒருவனுக்கு சாப்பாடு போட்டு, போர்வை யெல்லாம் தந்து தங்க வைத்து அனுப்பினேன் என்றெண்ணி திருப்திபட்டுக் கொண்டார். அதன் வழியே பெரிய புண்ணியத்தை சம்பாத்துள்ளேன் என மன மகிழ்ந்தார்.


அன்று மாலை தினசரி நாளிதழில் அவன் ஒரு பக்கா திருடன்  என்றும், பல கொலைகளும் திருட்டும் செய்தவன், பிறரை நம்ப வைத்து பலநாள் ஏமாற்றி வந்தவன் இன்று காவலர்களால்  பிடிக்கப்பட்டான் என்று செய்தி வந்திருந்தது.


அய்யய்யோ ஒரு அயோக்கியனுக்கா நான் சாப்பாடு போட்டேன். ஒரு கொலைகாரனுக்கா போர்வையளித்தேன். ஒரு ஏமாற்றுக்காரனையா ஆசிரமத்தில்  தங்க  வைத்தேன். எவ்வளவு பெரிய தவறிழைத்துள்ளேன். இந்த மடத்தின் புனித்ததையே கெடுத்து விட்டேன். என்னை ஒரு போதும் கடவுள் மன்னிக்க மாட்டார் என்று புலம்பினார்.


அவன் தங்கி இருந்த இடத்தை எதைக்கொண்டு கழுவி தூய்மை செய்வது. கோமூத்திரத்தினை தெளித்தால் பாவம் கழுவப்படுமா! அல்லது வேறு ஏதேனும் பிராயச்சித்த பூஜை சடங்கினை  செய்யலாமா! எப்படி செய்தால் கழுவாய் கிடைக்கும் என சொல்லிச் சொல்லி அரற்றினார்.


இல்லையில்லை நான் இன்று இரவேல்லாம் ஜபம்  செய்தால்  தான் அப்பாவம் என்னைவிட்டு அகலும். இரவு  முழுவதும் ஜபம் செய்தாலும் காலையில்  சென்று  கங்கையில் நீராடினால்  அச்செயலால் வந்த பாவம் கரையும் என்று முடிவெடுத்து; இரவு முழுவதும் அமர்ந்து ஜெபம் செய்யத் துவங்கினார்.


நீண்ட நேரம் ஜெபம் செய்ததினால் களைத்து போய் தன்னை யறியாமல் சாமியார் தூங்கி விட்டார். ஆழ்ந்த உறக்கத்தில் அந்த சம்பவம் கனவில் வரத்தொடங்கியது. அப்போதும் அய்யய்யோ நான் ஒரு திருட்டுப்பயலுக்கு சோறு போட்டுபோர்வையும் கொடுத்து இங்கே தங்க வைத்து விட்டேனே! என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு ஒளி தோன்றியது அவ்வொளியில்  அவர் வணங்கும் கடவுள் தோன்றினார்.


பக்தனே நீ செய்த செயலுக்காக ஏன் புலம்புகிறாய் ஒரு நாள் உணவிட்டு தங்க வைத்ததிற்கே கங்கை வரை சென்று பாவத்தை கழிக்க  வேண்டும் என எண்ணுகிறாய். தினமும் என்னை  வணங்கி விட்டு திருடுவதும், கொலைசெய்வதுமாய் இருந்து இப்பூமியில்  வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறான்அதற்காக நான் எத்தனை நாள் கங்கையில்  பாவத்தை  கழுவுவது. அவனும், நீயும் இந்த பூமியில்  ஒன்றாய்த்தானே இருந்து வருகிறீர்கள்.


அவனவன் செயலுக்கு ஏற்ற  தண்டனை அவனவனுக்கு கிடைக்கும். இது இயற்கை விதி. நீ அவனை மேலானவனாக விரும்பி உணவளித்தாய், பின் அவனையே கீழானவனாக வெறுத்து பாவத்தை  கழவ எண்ண வேண்டாம். உன் விருப்பு, வெறுப்பே அதில் மறைந்துள்ளது. அது உனது நடுநிலை உணர்வற்ற தன்மை. அதுதான் உன் ஆன்மீக பயணத்திற்கு தடையாக உள்ளது.  அதனை  நீக்க முயற்சி செய்’ என்று  கூறி மறைந்தார்.


இந்தக்  கதையின் நீதி என்ன வென்றால் யாரையும் கீழாக எண்ண வேண்டாம். அதுவே பெரும் தவறுமேலோனாய், கீழோனாய்  இருப்பதாக யாரும் யாரையும் முடிவு செய்ய முடியாதுஅனைவரையும் சமமாக எண்ணுவதே உயர்வளிக்கும். அதுவே சமதாபாவம் எனும் நடுநில உணர்வு. அதுவே விடுதலை  பேற்றிற்கு வழி வகுக்கும்.


வேத, சாஸ்திரம் பயின்றவர்கள், அதனை அறியாதவர்களை  கீழாக எண்ணுவது உயரிய குணமான சமதா பாவத்தை அழிக்கும் தீக்குணமாகும். நான் அனைத்து சித்தாந்தங்களையும்  அரிந்தவன்;  இந்தந்த விரதங்களை அனுசரிக்கிறேன், அதற்குரிய உணவுகளை  ஏற்கிறேன் போன்ற உணர்விலும் அந்த  உயர்வு தாழ்வு மனப்பான்மை நடுநிலை உணர்வை அழிப்பதுண்டு.

அதுவே ஆணவத்தின் அஸ்திவாரம்எது வேதம், எது சாஸ்திரம் என்பது அவரவர் மன  நிலையே  முடிவு  செய்யும் அதற்குரிய பலனும் அவருக்கு கிடைக்கும். நாம் அனைவரையும் நடுநிலை உணர்வுடன் அரவணைத்து செல்வதே சமதா பாவம் ஆகும்.


இதையே ஞானார்ணவம் என்னும் நூல் இருபத்து நான்வாவது  சருக்கத்தில் விளக்குகிறது.


 அந்நூல் கூறுவதாவது :


விருப்பு, வெறுப்பு, மோகம் தோன்றாமையினால் சமதாபாவம்/ நடுநிலை உணர்வு உண்டாகிறது. 

இதன் பயனால் செல்வம் X வறுமை ; நண்பன் X பகைவன், புகழ்ச்சி X  இகழ்ச்சி; காடு X நகரம்; சுகம் X துக்கம்; பிறப்பு X இறப்பு; உயர்வு X தாழ்வு ஆகியவற்றின் மீது விருப்பு வெறுப்போ மற்றும் மமத்துவ (நான்,  எனது) உணர்வோ தோன்றுவதில்லை.


முரண்பட்ட இரு நிலையும் ஒப்ப என்னும் சமதா பாவத்துடன் (நடுநிலை) உணர்வுடன் இருக்கின்றவர்களுக்கே, மோட்சமார்க்கத்திற்குக் காரணமாக இருக்கும். தியானம் கைகூடுகிறது.



அதனால் விருப்பு வெறுப்பின் வழியே வரும் உணர்வே சமதா பாவத்தை  அழிக்கும் ஆயுதமாகும்.

1 comment: